முகப்பு வலைப்பதிவு பக்கம் 30

என் கனம் எங்கே

ஏப்ரல் 18

“என் கனம் எங்கே” மல்கியா 1:6

கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல மிகுந்த அன்பிலும், பவுலைப்போல இரத்த சாட்சியிலும், உருக்க பாரத்திலும் அவரைக் கனப்படுத்த வேண்டும்.

அன்பர்களே, தேவனைக் கனப்படுத்துவது உங்களுக்கு பிரியமா? அப்படியானால் அவர் செயலை நம்புங்கள். அவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறாரென்று நினைத்து நடவுங்கள். எல்லாரையும்விட அவர் ஜனத்தை அதிகம் நேசியுங்கள். அவர் ஊழியம் சிறந்து நடக்க எது வேண்டுமானாலும் செய்து உதவுங்கள். தேவனுக்காய் காரியங்களைச் செய்யாவிட்டால் அவர் உங்களைப் பார்த்து என் கனம் எங்கேயென்று நன்றாகக் கேட்கலாம். தேவன் விரும்புகிறபடி அவரைக் கனப்படுத்த வேண்டுமானால் அவரின் தன்மைகளை அறிய வேண்டும். இயேசுவின்மூலம் நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர் சமுகம் முன் நிற்கிறதாக எண்ணவேண்டும். அவர் அதிகாரத்துக்குக் கீழ் அடங்க வேண்டும். அவரின் நேசத்தின் ஆழத்தை ருசித்து, அவரின் சித்தம் செய்ய வேண்டும். அவர் விரும்புகிறதைப் பார்த்து அதன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், உங்களுக்கு நல்ல சமாதானம் தந்து வேண்டிய யாவையும் கொடுத்து, எந்தத் துன்ப வேளையிலும், சகாயத்தையும் தந்து, அன்பாய் உங்களை அடிக்கடி சந்தித்து, எந்தச் சத்துருவையும் கடைசியிலே வெற்றி சிறக்க சத்துவத்தையும், கொடுத்து உங்களைக் கனப்படுத்துவார்.

தேவன் எனக்குப் பிதாவா?
நான் அவரின் பிள்ளையா?
அவரைக் கனப்படுத்தி
அவர் சித்தம் நடப்பேன்.

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

ஏப்ரல் 17

“கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” 2.கொரி. 5:14

நேசிக்கிறவர்களுடைய குணத்துக்கும் தன்மைக்கும் தக்கபடியே அவர்களின் நேசமும் இருக்கும். இயேசு கிறிஸ்து நிறைவுள்ளவரானபடியால் மேலான குணங்கள் எல்லாம் அவரிடத்தில் இருந்தது. அவருடைய அன்பு அதிசயமானது, மகிமையானது. அதில் பாவிகளுக்காக உருகும் உருக்கமும் நீதிமான்களுக்கா மகிழும் மகிழ்ச்சியும் இருக்கிறது. பிதா அவரை நேசிக்கிறதுபோலவே நம்மை அவர் நேசிக்கிறார். பிதா அவர்மேல் வைக்கும் அன்பு எவ்வளவு அதிகமென்று நமக்குத் தெரியாததுப்போலவே அவர் நம்மேல் வைக்கும் அன்பின் அளவு தெரிந்துக்கொள்ள முடியாது.

அன்பு அவர் இருதயத்தில் வாசம்பண்ணி அவர் கண்களில் விளங்கி, தமது கைகளினால் கிரியை செய்து, அவர் நாவில் பேசி அவரால் சகலத்தையும் சம்பாதிக்கிறது. இயேசு எந்த நிலைமையும் தாழ்வாக எண்ணவில்லை. எந்தச் செயலையும் கேவலமாய் நினைக்கவில்லை. எந்தக் குறைவையும் பார்த்துவிட்டுப் போகவில்லை. எந்த ஈவையும் பெரியதாக எண்ணவில்லை. எந்தத் துன்பத்தையும் சகிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. தமது ஜனத்தின் மத்தியில் கண்ட எந்த நன்மையையும் அற்பமாய் எண்ணவில்லை. அவர்களுக்கு நன்மை செய்ய எந்தப் பேதமும் பார்க்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு, சொல்லுக்கும் நினைவுக்கும் அடங்காதது. இந்த அன்பால் ஏவப்பட்டு நான் அப்போஸ்தலர்கள் உழைத்தார்கள். துன்பத்தைச் சகித்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து சகலத்தையும் வீணென்று தள்ளுவோம். அவருக்காக எதையும் சகிக்க, உழைக்க, மரிக்க கொடுக்க அவரின் அன்பே நன்மை ஏவிவிடுகிறது. கிறிஸ்துவின் அன்பு ஜாக்கிரதைக்கும், வைராக்கியத்துக்கும், உதாரகுணத்துக்கும் உன்னை ஏவி விடுகிறதா?

பாவம் விட்டொழிக்க
கிறிஸ்துவின் அன்பு ஏவுது
அவருக்கு என்னை ஒப்புவிக்க
அது என்னை நெருக்குது.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்

ஏப்ரல் 16

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்” யோபு 19:25

மரணத்துக்குரிய உலகில் நாம் வாழ்கிறோம். சிநேகிதரும் இனத்தாரும் ஒவ்வொருவராய் மரித்துக்போகிறார்கள். ஓர் இனத்தான் மட்டும் மரிக்கிறதேயில்லை. இயேசுவே அந்த இனத்தான். நம்மை மீட்கும் சுதந்தரம் அவருக்குண்டு. நம்மை மீட்கும் பொருளைக் கொடுத்ததுமல்லாமல் முற்றும் விடுதலையாக்க உயிரோடிருக்கிறார். தேவ வலது பாரிசத்தில் நமது தன்மையைத் தரித்தவராயிருக்கிறார். மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக இருக்கிறார். என்றும் இருக்கிறவராகவே இருக்கிறார். அவரின் இவ்வேலையை வேறு ஒருவரும் செய்ய முடியாது. அவர் நமக்காக மன்றாடி நம்முடைய சத்துருக்களை ஜெயித்து, கிருபைகளைப் பூரணப்படுத்தி மரணத்தினின்று நம்மை மீட்டுக் கொள்வார். அவர் இரண்டாம் முறை பாவமில்லாமல் வருகையில் நம்மை இரட்சித்து மகிமைப்படுத்துவார்.

வேத வசனத்தின்மூலமும், பரிசுத்தாவியானவரின் போதனை மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம். நாம் நம்பியிருக்கும் வண்ணமே அவரை அறிந்துக்கொள்ளுவோம். நான் என் மீட்பராக அவரை அறிவேன். அவர் என்னைச் சாத்தானிடமிருந்தும், பழைய பாவத்திலிருந்தும், பொல்லாத உலகத்திலிருந்தும் மீட்டுக் கொண்டார். அவர் கரத்தில் என் ஆவியை ஒப்புவித்திருக்கிறேன். அவர் என்னை மீட்கும்படி உயிரோடிருப்பதால் நானும் பிழைத்திருப்பேன்.

என்றென்றும் நம்மை நேசித்து என்றுமே நம்மை பிழைப்பிக்கிற ஒரு நண்பன் நமக்கு இருப்பது எத்தனை மகிழ்ச்சி? நாம் அவருக்குப் பிரியமானவர்களானபடியால் நம்முடைய காரியம் அவருடைய கரத்தில் பத்திரமாயிருக்கும். இயேசுவே நான் இன்னும் அதிகம், உம்மை நேசித்தால் எவ்வளவு நலம்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
எனக்காகப் பேசுகிறார்
அவர் அளிப்பது இரட்சிப்ப
ஜீவன் சுகம் பூரிப்பு

தம்மைத்தாமே தாழ்த்தினார்

ஏப்ரல் 15

“தம்மைத்தாமே தாழ்த்தினார்” பிலி. 2:8

இவ்வாறு தம்மைத் தாழ்த்தினவர் யார்? மகிமையின் பிரகாசமானவர், பிதாவின் அச்சடையாளமானவர் தேவனோடிருந்தவர். தேவனாயிருந்தவர். வல்லமையுள்ள தேவனும், நித்திய சமாதானப் பிரபுவுமானவர், எப்படி அவர் தம்மைத் தாழ்த்தினார்? நம்முடைய தன்மையை எடுத்து அடிமையின் ரூபம் எடுத்து, மரண பரியந்தம் கீழ்ப்படிந்து தம்மைத் தாழ்த்தினார்.

மாட்டு தொழுவத்தைப் பார், தச்சுப் பட்டரையைப் பார், நாசரேத்தூர் குடிசையைப் பார், யோர்தான் நதியைப் பார், தலை சாய்க்க இடமின்றி அலைந்தவரைப் பார். கெத்செமனேயைப் பார், கொல்கொதாவைப் பார், யோசேப்பின் கல்லறையைப் பார், இவைகயையெல்லாம் பார்த்தான் அவர் எவ்வளவாய் தன்னைத் தாழ்த்தினார் என்பது விபரிக்க வேண்டி இராது. எல்லாம் உனக்குத் தெரிந்ததே. ஏன் இப்படி தன்னை தாழ்த்தினார் என யோசி. அவர் நம்மை நேசித்தபடியினால் தம்மைத் தாழ்த்தினார். அளவற்ற அன்பினால் ஏவப்பட்டு மகத்துவமானவர் தம்மைத் தாழ்த்தினார். மனுஷரோடு பழகி, நமது குறைகளையும், பெலவீனங்களையும் அறிந்ததினால், நமக்கு பெலன் தர தம்மைத்தாழ்த்தினார். நமக்கு உதவிடும்படி மரணம் மட்டும் பணிந்து தாழ்த்தினார். நமக்கு உயர்த்த தம்மைத் தாழ்த்தினார். நம்மை மேன்மைப்படுத்த தம்மைச் சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். நாம் பிழைக்க அவர் மரித்தார். நாம் சிங்காசனம் ஏற அவர் சிலுவையில் ஏறினார். ஆச்சரியமான தாழ்மை. அதிசயமான அன்பு.

பாவிக்காய் மனதுருகி
தேவன் இரத்தம் சிந்தினார்
இது என்ன அதிசயம்
எவர்க்கும் விளங்கா இரகசியம்.

நீங்கள் அசதியாயிராமல்

ஏப்ரல் 14

“நீங்கள் அசதியாயிராமல்” ரோமர் 12:11

அதியாயிருந்தால் சத்தியத்தைப் புரட்டி நன்மைகளை அவமதித்து கர்த்தரைக் கனவீனப்படுத்தி, அந்தகாரப் பிரபுவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவோம். அசதி, அவகீர்த்தி, உலக காரியங்களிலும், பரம காரியங்களிலும் ஒன்றே. நம் கடமைகளில் நாம் அசதியாயிராமல் சுறுசுறுப்பாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நல்ல நோக்கத்தோடு, நல்ல சிந்தையோடு, வைராக்கியத்தோடு நம் வேலையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்படி தன் வேலைகளைச் செய்வது அவனது கடமை.

இந்த வசனத்தில் அப்போஸ்தலன் பரம காரியங்களைக் குறித்துதான் பேசுகிறோம். பரம நன்மைகளைத் தேடுவதில், தாலந்துகளைப் பயன்படுத்துவதில், கிரியைகளை முயற்சி செய்வதில் நல் மாதிரிகளைப் பின்பற்றுவதில் நாம் அசதியாயிருக்கக் கூடாது. விசுவாசித்தின்மூலம், பொறுமையின்மூலம், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்தவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். முற்பிதாக்களின் நடத்தை உங்களை உட்சாகப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவ வேண்டும். சுவிசேஷத்திலுள்ள பரிசுத்த கற்பனைகள் உங்களை நடத்த வேண்டும். கிருபையின் மகிமை நிறைந்த வாக்குத்தத்தங்கள் உங்களை உயிர்ப்பிக்க வேண்டும். ஆகவே சோம்பலுக்கு இடங்கொடாதீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்கள் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். உலகம் அதிக ஜாக்கிரதையாயிருக்கிறது, உங்களுக்காக பணி செய்ய தேவதூதர்களும் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். தேவ சமுகத்தில் உங்கள் காரியம் முடிக்க இயேசுவும் ஜாக்கிரதையாய் இருக்கிறார். காலம் இனி செல்லாது. கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. நமக்குக் கிடைக்கும் கடைசி தருணம் சீக்கிரம் வரும்.

உமக்கர் உழைக்கும்போது
நாங்கள் என்றும் பாக்கியர்
உழைப்பெல்லாம் அன்பினால்
இன்பமாகும் அதனால்.

உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது

ஏப்ரல் 13

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது” லூக்கா 10:20

எத்தனை பெரிய பரம சிலாக்கியம் இது. தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுதலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டு ஜீவபுத்தகத்தில் பேர் எழுதப்பட்டிருத்தலும், எருசலேமில் உயிருள்ளோருடன் சேர்க்கப்படுவதும்தான் எத்தனை பெரிய பாக்கியம். தெரிந்துக் கொள்ளப்படுதலே கிருபையின் முதல் காரியம். நாம் கிறிஸ்துவில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். நாம் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டோம். நமது இரட்சிப்பு அவர் கையில் ஒப்புவிக்கப்பட்டது. நமது செயல்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறது. நமது பெயர்களும் தேவனுடையவர்களோடு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவன் நம்மீதும் நினைவுக்கொண்டிருக்கிறாரென்று நாம் சந்தோஷப்பட வேண்டியவர்கள். தேவன் நம்மை நினைத்தார். நித்திய ஜீவனுக்கென்று நம்மை நியமித்தார். நமது குறைகளுக்காக உடன்படிக்கையில் நிறைவுகளை சேர்த்து வைத்திருக்கிறார். விலையேறப் பெற்றதும், பெரியதுமான வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார்.

அவருடைய பட்டயம் நமது பாதுகாப்பிற்கு நீட்டப்பட்டிருக்குpறது. அவருடைய நாமம் நமது ஞாபகத்தில் எப்போதும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவருடன் எப்போதும் இருக்க வேண்டியதால் பரிசுத்தமே நமது வாழ்க்கையின் கடமையென்றிருப்போம். எவரும் தான் தெரிந்துக்கொள்ளப்பட்டவர் என்றால், அதினால் உண்டாகும் கனியினால்தான் அறிந்துக்கொள்ள முடியும். அந்தக் கனிகளில் பரிசுத்தம் மிக விசேஷித்தது. நாம் பரிசுத்தமாய் இல்லாவிட்டால் நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு பொருள் இராது. நமது மனமும், நம்பிக்கையும், விருப்பமும் பரலோகத்தைப்பற்றி இல்லாது இருக்குமானால், நம் பெயர் அங்கு இருப்புதைப்பற்றி சந்தேகப்பட வேண்டும்.

அநாதி சிநேகத்தால் என்னை
மீட்டு முற்றும் இரட்சித்தீர்
ஜீவ புத்தகத்தில் என் பெயரை
எழுதி முத்திரையிட்டீர்.

கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது

ஏப்ரல் 12

“கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது” அப். 21:14

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும் உண்டாக்குவது அவர் சித்தமானால், நாமும் இப்படியே அனுதினமும் சொல்ல வேண்டாமா? இந்த விருப்பம் நமது இருதயத்திலும் வளர விட வேண்டாமா? அவர் ஞானம் அளவற்றது. அவர் ஞானமுள்ளதை விரும்புகிறார். அவர் நமது ஷேமத்தையே விரும்புகிறார். நோக்கம் வைத்தே தேவன் கிரியை செய்கிறார். அவர் என்னதான் நமக்குச் செய்தாலும் நாம் நமது சொந்த சித்தப்படியே நடக்கப் பார்க்கிறோம். இப்பொழுது இருக்பிற நிலைமையிலும் வேறுவிதமாய் இருந்தால் நல்லது என்கிறோம். நமது தேவனுடைய சாமர்த்தியம், உண்மை, தயவு இவைகளில் குறைவுபடுகிறோம். எத்தனை மதியுPனம் இது. சில வேளைகளில் யோசனை இல்லாமைதான் இதற்குக் காரணம். விசுவாசக் குறைவினாலும் இது உண்டாகலாம். ஆனால் தன்னயப் பிரியமாகிய பாவந்தான் இதற்கு முக்கிய காரணம். இதற்குக் காரணம் சுய இஷ்டமே. அதனால் வருத்தமும் அடைகிறோம்.

தேவனை எதிர்க்கிறதுpனால் நம்மை வருத்தப்படுத்திக்கொள்கிறோம். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய சித்தம் நிறைவுள்ளதென்றும் மேன்மையானது என்றும் சொல்கிறோம். ஆனால் நம் பிரியப்படி நடவாவிட்டால், தேவன் நம்மை சோதித்தால், நம்மை பரீட்சித்தால், நாம் முறுமுறுக்கிறோம் அல்லது சோர்ந்து விடுகிறோம். விசுவாசியே, நீ பரிசுத்தமாய் இருக்கவேண்டும். பாக்கியவானாய் இருக்கவேண்டும். நித்திய நன்மையை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் சுய இஷ்டத்தை உடனே உதறித் தள்ளி எப்பொழுதும் அவர் சித்தம் ஆகக்கடவது என்று சொல்லிப்பார்.

என் ஜீவ காலமெல்லாம்
தேவை எதுவோ தருவீர்
உமது சித்தமே நலம்
அதுவே என் பாக்கியம்..

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்

ஏப்ரல் 11

“நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்” எசேக். 20:3

இந்த ஜனங்கள் தங்களை உத்தம மார்க்கத்தாரென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்டோர் தேவனுடையப் பார்வையில் மகா அருவருப்பானவர்கள். இவர்களைத் தேவன் தம்முடன் ஐக்கியப்பட இடங்கொடார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை வைத்தேனானால் தேவன் எனக்குச் செவி கொடார். வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது.

உன்னுடைய இருதயம் உத்தமமாய் இருக்கிறதா? உன் நடக்கை உண்மையுள்ளதா? நீ பாவத்தை நேசித்து, அதைச் செய்து, சாக்கு போக்குச் சொல்லுவாயானால் தேவன் உன்னுடன் ஐக்கியப்படார். உன்னைக் கழுவி சுத்திகரி என்பார். பாவம் ஆத்துமாவிற்குத் தீட்டு. பரிசுத்தம்தான் ஆத்துமாவிற்கு சுத்தரங்கம். பாவிகள் தீட்டுள்ளவர்கள். தேவன் அவர்களை வெறுக்கிறார். தன்னைப் பரிசுத்தவானென்று சொல்லி பாவம் செய்பவரைப்போல் அருவருப்பானவர்கள் வேறு யாரும் இல்லை. பாவம் உனது ஊழியத்தை கெடுத்துப் போடும். குறிப்பாய் நீ ஒரு பாவத்தை இன்னும் விடாதிருப்பாயானால், உன் ஊழியத்தை இன்னும் தள்ளிப்போடுவார். பாவத்தோடு உன் ஜெபத்தைக் கேளார். பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனானபடியால் அவர் உன்னை அருவருத்துத் தள்ளுவார். இயேசுவானவர் பாவத்திற்கு ஊழியம்செய்ய மாட்டார். அக்கிரமத்துக்கு உடந்தையாக தம் கிரியையைபை; பிரயோகிக்கமாட்டார். நாம் கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டு, சத்தியத்தினால் பரிசுத்தராக்கப்படகிறோம். நம்முடைய இருதயம் பாவத்திற்கு பகையாக இருக்கும்போதுதான் நம் ஜெபம் கேட்கப்படும். அன்பர்களே! பாவத்துக்கு இணங்க சோதிக்கப்படும்போது நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று தேவன் சொல்வதை நினைத்துக் கொள்வோமாக.

கர்த்தாவே என்னைக் கழுவும்
உள்ளத்தைச் சுத்திகரியும்
கிருபையின் ஆவி அளித்து
என்னைப் பரிசுத்தமாக்கும்.

நீ என்னை மகிமைப்படுத்துவாய்

ஏப்ரல் 10

“நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங். 50:15

துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம் அவரைத் துதித்துப் போற்றுவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். அபாத்திரராகிய நமக்கு அவர் காட்டும் தயவைத் துதிக்கும்போது அவர் வார்த்தைகள் உண்மையாகிறது. ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரைக்குறித்து அவர் சிங்காசனத்தண்டைக்குப் போகிற யாவருக்கும் இதை நாம் சொல்லும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம். வேத வசனத்தை நம்பி, அவர் பிள்ளைகள்போல் வாழந்து, அவர் சொன்னபடியே செய்வாரென்று எதிர்பார்த்து, சோதனையிலும், வேதனையிலும் அவர் பாதத்தண்டையில் சேர்ந்து அமர்ந்து அவரைத் தொழும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.

நஷ்டங்களில் அவருக்குக் கீழ்ப்படிந்து, சோதனைகளில் அவருக்கு நம்மை அர்ப்பணித்து, தினமும் நமது இருதயத்தை அவருக்குப் பலியாக சமர்ப்பித்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று ஆசைக்கொண்டு, அவர் ஊழியத்தை கருத்தாய் செய்து, அவரின் ஜனங்களை மனமார நேசித்து, நம் விருப்பப்படியல்ல, அவர் சித்தப்படி என்று நடக்கும்போது அவரை உண்மையாய் மகிமைப்படுத்துகிறோம். இது ஒன்Nறு நமது தலையான கடமையாகட்டும். ஒவ்வொரு காலையிலும் நாம் நமது ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே, நீ இன்றைக்கு உன் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று திட்டமாய் கற்பித்து ஒவ்வொரு மாலையிலும் அந்நாள் முழுவதும் கர்த்தருடைய மகிமையையே முக்கியமாகக் கருதி வாழந்தோமா என்று நம்மையே சோதித்துப் பார்ப்போமாக.

தேவ நாமத்தைப் போற்று
அவர் துதியை என்றும் சாற்று
அவர் சொல்லையே தியானித்து
உன் நடையைச் சீர்ப்படுத்து.

உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது

ஏப்ரல் 09

“உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது” 2.தெச. 1:3

இந்தப் பாக்கியம் தெசலோனிக்கேய சபையாருக்குக் கிடைத்த சிலாக்கியம். அவர்களின் விசுவாசம் அதிக அதிகமாய் பெருகிற்று. விதை செடியாகி செடி விருட்சமாயிற்று. குழந்தை வாலிபனாகி, வாலிபன் கிறிஸ்துவுக்குள் பெரியவனாவான். விசுவாசம் சத்தியத்தில் வேர் விடுகிறது. அது கன்மலைய உறுதியாய் பிடித்திக்கிறபடியால் என்ன புயல் அடித்தாலும் அறுந்துவிட முடியாது. அது உடன்படிக்கையின்மேலும், மாறாக தேவ சத்தியத்தின்மேலும் பலமாய் நிற்கிறது. முயற்சித்து அது வளருகிறது. சுவிசேஷம் செம்மையாய்ச் செய்வதனால் அது வளருகிறது. நமது விசுவாசம் வளருமேயானால் கிறிஸ்து நமக்கு அதிக அருமையானவராய் இருப்பார். அப்போது அவரைப்போலிருக்க அதிக வாஞ்சை கொள்ளுவோம். விசுவாசத்திற்கும் உணர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இன்னதென்று அறிவோம்.

கர்த்தர் வாக்கு தந்தார் என்று பிரசித்தப்படுத்தி நம்புவோம். பரிசுத்தவான்களின் மேலிருக்கிற வாஞ்சை பலப்பட்டு உறுதியாகும். தேவனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நமக்கிருக்கும் வைராக்கியம் பெரியதாகும். தேவ வசனத்தின்மேல் அதிக வாஞ்சையும் ஆசையும் உண்டாகும். தேவ வசனத்தின்மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். பரம சிந்தை நம்விசுவாசத்திற்குத்தக்கதாய் வளரும். விசுவாசம் வளர வேண்டியது மிக முக்கியம். உங்கள் விசுவாசம் வளருகிற விசுவாசமாய் இருக்கும்படி பாருங்கள்.

விசுவாசித்து நடப்பேன்
கர்த்தர்மேல் பாரம் வைப்பேன்
அவர் சொல்வதை நம்புவேன்
அதுவே போதுமென்றிருப்பேன்.

Popular Posts

My Favorites

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்

ஜனவரி 20 "கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்." நீதி. 2:6 ஞானத்தைத் தருமுன்னே அது நமக்குத் தேவை என்று, அதன் மேல் வாஞ்சைக்கொண்டு அவருடைய பாதத்தருகில் அமர்ந்து கருத்தாய் கேட்கவேண்டும். நாம் பயபக்தியாய் நடக்கவும், சோதனைகளை வெல்லவும்,...