முகப்பு வலைப்பதிவு பக்கம் 8

விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

டிசம்பர் 12

“விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ” (ஏசா.50:2)

இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து வரும் உன் துன்பங்களைச் சந்திப்பார். பிறகு விடுவிப்பதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே, தேவனுடைய காரியத்தில் வரும் எப்பிரச்சனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே.

உன் தேவனால் உன்னை விடுவிக்க முடியாதா? உன்னை இரட்சிக்கக் கூடாதபடி அவருடைய கரங்கள் குறுகிப்போகவில்லை. உன் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்க முடியாதபடி அவருடைய செவிகள் மந்தமாகிப்போகவில்லை. இல்லையென்றால் ஏன் சந்தேகப்படுகிறாய். தேவனிடத்தில் நம்பிக்கை வை. இதற்கு முன்னே அவர் உனக்குச் செய்தவைகளையெல்லாம் எண்ணிப் பார். உன்னைக் காத்தார், மீட்டார், நடத்தினார், ஆசீர்வதித்தார். இவைகளுக்காக அவரைப் போற்று, அவரைத் துதி. இனிமேலும் அவர் உன்னை நடத்துவார். அதை நம்பு. உன் அவிசுவாசத்தை விலக்கு. அவரை நோக்கிக் கூப்பிடு. அவருடைய வல்லமை உன்னை நிரப்பட்டும். என்னை நோக்கிகக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

விடுவிக்கிறவர் வல்லவர்,
ஞானம் ஆற்றல் உள்ளவர்,
நித்தியத்தின் மீது அதிகாரம்
உள்ளவர், அவரைப் பற்று, பெலன் கொள்.

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11

“மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” 1.யோவான் 2:8

இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின் ஒளிமட்டுமே அவைகளை நீக்க முடியும். தேவாலயங்களில் பிரசங்கிக்கப்படும் வசனத்தின்மூலம் அவ்வொளி பிரகாசிக்கிறது. நமது இருதயத்திலும் அவ்வொளி வீசுகிறது. இப்படி வந்த பிரசங்கத்தினால் இரட்சிப்பின் வழியையும், மெய்ச் சந்தோஷத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்பொழுதும் அவ்வொளி நம்மை சூழ தெளிவாகவும், அழகாகவும் பிரகாசிக்கிறது. இந்தப் பிரகாசம் தேவனுடைய சுத்த தயவை விளக்குகிறது. மகிழ்சியாய் இருக்கவும், ஆறுதலாக நடந்து நம்பிக்கையோடு போர் செய்யவும், தீமையை விட்டுவிலகவும், மனநிறைவோடு பரலோகம் சேரவும் நமக்குப் பெலன்தருகிறது. நம்மில் மெய்யான ஒளி பிரகாசிக்கிறதென்றால், கோடானகோடி மக்கள் கண்டு கொள்ளாத ஒளியை நாம் கண்டு கொண்டோமே. ஆகவேதான் நம்முடைய தேவன் ஒளியில் இருக்கும்பொழுது நாமும் ஒளியில் நடந்து, உயிருள்ளவர்களாய் அவரோடு ஐக்கியப்பட்டு, நமக்குக் கிடைத்துள்ள சிலாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

மனிதனை மீட்கவே
தெய்வ ஒளி பிரகாசித்தது
பாவிகளை இரட்சிக்க
அதன் ஜோதி வீசுது.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

டிசம்பர் 09

“தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்” ரோமர் 6:23

நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு உண்டு என்றும் பாவம், துக்கம், துன்பத்தினின்று நாம் விடுதலையாகி, எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். எல்லா நாளும் சந்தோஷமாக அவருக்குப் பணிவிடை செய்வது அவர் நமக்குக் கொடுத்த பாக்கியம். அது இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஆண்டவரின் கிருபைதான். அது நமக்குக் கிடைத்தது. இதிலேதான் அவருடைய கிருபையின் மகத்துவம் விளங்குகிறது.

பாவம் செய்த தேவதூதர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆனால், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அவர் நமக்கு நிரந்தர வாழ்வைத் தருகிறார். எந்த மனுஷனுக்கும் இந்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றவர் கிறிஸ்து நாதரோடு உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுக்கென்று பிழைத்திருக்கிறான். இவ்வாறான மரணமில்லா வாழ்வை எதிர்பார்த்து நாம் இவ்வுலகில் வாழ்வோம். அந்த அனுபவத்தைப் பெற வாஞ்சை கொண்டு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்க்கையில் முன்னேறுவோம். அருள்நாதர் தம் ஆடுகளுக்கு யாவும் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதும் இல்லை என்பது அவர் வாக்கு.

பரம வாழ்வைத் தாரும்
பரிசுத்த பிதாவே
தேவ கிருபையும் பரிசுத்தமும்
தேவனே தந்தருளும்.

எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.

இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது

டிசம்பர் 07

“இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது” ஆதி. 42:36

எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்தினால், உன் தேவனுக்கு உன்னைப் பகைவனாக்கினால், உனக்கு அவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகளைத் திருப்பினால், இவைகளெல்லாம் உனக்கு விரோதிகள் எனலாம். ஆனால், இவை உன்னை உலகத்தை வெறுக்கும்படி செய்து, உன் தேவனண்டைக்கு உன்னை அழைத்துச் சென்று, இரட்சகராக நல்லவராகக்காட்டி, அவருடைய வசனங்களை மதிக்கச் செய்து, பரலோகத்தின்மேல் உன்னை வாஞ்சை கொள்ளச் செய்தால் இவை உனக்கு விரோதமானவை அல்ல. அனுகூலமானவைகளே.

கிருபைகள் நிறைந்த தெய்வ செயலின் ஒழுங்குப்படி, அவைகள் நடக்கின்றனவென்றும், அவைகளை உன் பரம பிதா உன் நன்மைக்கென்றே அனுப்புகிறார் என்பதையும் மறந்துவிடாதே. ஆகவே, முறுமுறுக்காதே. நீ முறுமுறுப்பது வேத வசனத்தை அறியாததினாலும், உன் பாவங்களை மறந்துவிடுவதினாலும் அவிசுவாசத்தினாலும் ஆகும். முறுமுறுப்பது, தேவனின் கிருபையும், அவர் கருத்து உள்ளவர். இரக்கம் உள்ளவர் என்பதையும் மறுப்பதாகும். உலகில் துன்பங்கள் வரத்தான் செய்யும். சோதனைகள் சூழும். விரோதங்கள் எழும். ஆனாலும், உனக்கு நன்மைகளைக் கொண்டு வரவே அவை அனுப்பப்படுகின்றன. அன்பானவனே, துன்பங்கள், சோதனைகள் வரும்போது தேவனைக் குறித்து தவறான எண்ணங்கள் கொள்ளாதே. யாவும் நன்மைக்கென்றே நடக்கின்றன. நாம் தவறான எண்ணங்கொண்டு அவர் வாக்குகளை மறக்கிறோம். இனி அவ்வாறு செய்யாதிருப்போமாக.

பக்தருக்கு பயம் ஏன்?
அவன் முறுமுறுப்பதேன்?
எத்துன்பம் வரினும் அதில்
தேவனிருப்பார். அஞ்சாதே.

நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

டிசம்பர் 06

“நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்” வெளி 1:8

இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும் அவர் அப்படியே வெளிப்படுத்துகிறார். கிரேக்க மொழி பேசுகிறவர்கள் தங்கள் உரையாடலில் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையாக இருப்பவர். நம்முடைய இரட்சிப்புக்கும், ஆறுதலுக்கும், மேன்மைக்கும், கனத்திற்கும் அவசியமானதெல்லாமே அவரிடம் உண்டு. அவரில் ஞானமும் அறிவும், மேன்மையும் கனமும், ஐசுவரியமும் நித்தியமும் நிறைவாக அடங்கியுள்ளது. அவரே இரட்சிப்பின் முதலும் முடிவுமாக இருக்கிறார். அவரிலிருந்து கிருபையின் ஊற்று பாய்கிறது. அது நாம் அவரையே மையமாகக் கொண்டு அவரையே சூழ்ந்திருக்கச் செய்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமும், நித்தியமுமாய் இருக்கிறவர் அவரே. தேவனுக்குரிய அனைத்து கர்த்தத்துவங்களும் அவர் கொண்டவர். நன்மையும், கிருபையும் அவரிடத்தில் எப்பொழுதும் உண்டு. எனவேதான் தேவனுடைய பிள்ளைகள் அவரைப் புகழ்வதிலும், பிரசங்கிப்பதிலும் ஒய்வதே இல்லை. பாவிக்கு தேவையான சகல தயவும் அவரிடம் உண்டு. இத்தன்மையில் இயேசுவைக் காண்பது எவ்வளவு இனிமை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் இவ்வசனத்தில் நான்கு முறைகள் கூறப்பட்டுள்ளது. இதைத் தியானித்து நமது ஆன்மீன உணவைப் பெறுவோம்.

கிறிஸ்துவே ஆதியும் அந்தமுமாம்
அவரே கிருபையும் ஆனந்தமுமாம்
கிறிஸ்து தரும் நன்மைகள் யாவும்
அவர் தரும் பேரின்பங்களாம்.

தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்

டிசம்பர் 05

“தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்” பிர. 9:7

நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத் தேவன் கொடுத்த ஈவாகவும், இரட்சகராகவும் நமக்குக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்த ஈவைத்தான் அசட்சை செய்கிறோம். இந்த இரட்சகரைத்தான் புறக்கணிக்கிறோம். ஆனால், தூய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாக்களை உயிர்ப்பித்து நமக்கு ஒளி தந்தார்.

அவர் நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டு பண்ணினபோதோ, நாம் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். தேவனுடைய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டதால், நம்மை அவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் அவரில் மகிமை உள்ளவர்களாக மாற்றுப்படுகிறோம். அவருடைய அருமையான பிள்ளைகளாக மாறுகிறோம். அவருக்காக ஏதாவது நாம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நமக்கிருந்தால், அவர் அதையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். இது எத்தனை இன்பமான காரியம்! எவ்வளவு மகத்துவமானது! எத்தனை மேன்மையானது! இதை நாம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாகும்படி தூய ஆவியானவர்தாமே நம்மை நடத்துவாராக.

இயேசு என்னை ஏற்றுக்கொண்டார்
என்னை அவர் அங்கீகரிப்பார்
இயேசுவுக்காய் என்றும் உழைப்பேன்
என் இயேசுவின் நாட்டை சேருவேன்.

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04
“அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது” உன். 2:3

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.

பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.

தேவனே எங்களைச் சோதித்தீர்

டிசம்பர் 03

“தேவனே எங்களைச் சோதித்தீர்” சங். 66:10

நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்பது சாதாரணம். ஆனால் அந்தந்த நேரத்தில் வரும் சோதனைகளைச் சந்திப்பதுதான் கடினம். வீண்பேச்சுப் பேசுகிறவர்கள் அதிகம் தவறு செய்பவர்கள். வீழ்ச்சிக்கு முன் அகந்தை வரும். இந்நேரத்தில் நமது தகுதியை முற்றிலும் தள்ளிவிட்டு, தேவனுடைய உண்மையான வாக்கை நம்பினால் மட்டுமே நன்மை கிடைக்கும். நமது வாழ்வில் இருண்ட நேரங்களில், சாத்தானாகிய விரோதி, இயற்கை உபாதைகளான நெருப்பு, வெள்ளம், பூமியதிர்ச்சி, நமது மனதிலுண்டாகும் திகில், வாழ்வில் துன்பம், இழப்பு ஆகியவை சோதனைகளாய் வரும். சோதனைகளில்லாதபோது சிலர் தேவனை மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றனர். ஆனால் சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.

இளம் கிறிஸ்தவர்களில் சிலர் ஆரம்பத்தில் தங்களது கிறிஸ்துவ வாழ்க்கையில் அனலுள்ளவர்களாயிருக்கும்போது, வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களிடம் குறைகளைக் காண முயற்சிக்கின்றனர். ஆனால், தாங்களும் மற்றவர்களைப்போலவே பெலவீனர்தான் என்று தாங்கள் சோதிக்கப்படுகையில் அறிந்து கொள்ளுவர். நம்முடைய தன்மையை தேவன் நமக்குக் காட்டினால்தான் நாம் அதை மெய்யாகத் தெரிந்து கொள்ள முடியும். நமது இருதயம் திருக்குள்ளது. பெலவீனமானது. ஆண்டவர் நமக்கு தரும் சோதனைகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேவ கிருபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அவர் நம்மை சோதித்து நம்மைத் தம்மிடம் நெருக்கமாக சேர்க்கிறார்.

கர்த்தாவே, உமது வழிகள் எல்லாம்
ஆச்சரியமானவை, என்னைப் புடமிட்டு
என்னைத் தூய்மையாக்கியருளும்
என்னை உம்மிடம் சேர்த்தருளும்.

Popular Posts

My Favorites

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21 "கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்" கொலோசெயர் 1:28 விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து...