தினதியானம்

முகப்பு தினதியானம்

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25

“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)

இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.

இறைவன் மானிடனானது
இகத்திற்கு மகிழ்ச்சியாம்
இகத்தில் சமாதானமும்
இறைவன் நாட்டில் மேன்மையாம்

ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்

டிசம்பர் 28

“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15

இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.

தேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தூயோர் என்றும்
தூயவர் முன்னிலையில்
துயரமேதுமின்றி
துதித்திடுவர் தேவனை

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது

டிசம்பர் 27

“ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” (சங்.36:9)

தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான். அவருடைய சுத்தக் கிருபையினால்தான் நாம் வாழ்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவன் வருவது அவரிடத்திலிருந்துதான். இந்த ஜீவனே நமக்கு உயிர்கொடுக்கும் மருந்து. நாம் தேவனால் பிறந்ததனால்தான் வல்லமையோடு வாழ்கிறோம். அவர்தான் நமது ஆத்துமாக்களை உயிரோடு காப்பவர். அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார். நம்மை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வைக் கொடுப்பவர் அவர்தான்.

நண்பனே, நீ ஆண்டவர்மீது வைத்த அன்பு குறைந்திருக்கிறதா? ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைந்துவிட்டாயா? அவருடைய சமுகத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறாயா? ஒன்றைமட்டும் மறவாதே. தேவனுடைய ஊற்று உன்னிடம்தான் இருக்கிறதென்பதை மறவாதே. அந்த ஊற்று உன் ஆத்துமாவுக்குள் பாயும் ஊற்று. ஒருகணப்பொழுதில் அது உங்களுக்கு உயிரைக் கொடுக்க வல்லது. அந்த ஊற்று தேவ திருமுகப் பிரகாசத்தை உங்கள்மேல் வீசப்பண்ணுகிறது. அவருடைய மன்னிப்பையும், சமாதானத்தையும் உனக்குக் கொண்டு வருகிறது. தூய ஆவியானவரை அளவில்லாமல் கொண்டுவருகிறது. இந்த ஊற்றில் பருகுவோருக்கு மறுபடியும் தாகம் ஏற்படாது. இது ஆத்தும தாகத்தைத் தீர்க்கக்கூடியது. இந்த ஊற்று வேண்டுமென்று ஜெபி. அப்பொழுது நீ பெற்றுக்கொள்ளுவாய். தாகம் தீருமட்டும் அதில் பருகு. அவர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் ஆத்துமாவும் அவரைத் துதிக்கும்.

ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என் ஆத்ம தாகம் தீருமே
நீரே ஜீவ அப்பமுமாதலால்
என் பசியையும் தீர்த்திடும்.

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

ஓகஸ்ட் 25

“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்” எபி.10:23

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இலவசமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவன் உண்மையுள்ளவர். ஆகவே அவர் அவைகளைச் சொன்னபடியே நிறைவேற்றுவார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு நித்திய ஜீவனையும் பாவ மன்னிப்பையும், இருதயசுத்தத்தையும், சமாதானத்தையும், கிருபையையும், வாக்களித்திருக்கிறார். இவைகளை நாம் நம்பி அவர் அப்படியே நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவர் தம்முடைய வாக்குகளுக்கு உண்மையுள்ளவர். அது அவருடைய தன்மை. அவர் அளவற்ற சம்பூரணமுள்ளவராயிருப்பதனாலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட அவர் உடன்படிக்கை உறுதியாய் இருப்பதினாலும், அவர் ஆணையிட்டு இருப்பதினாலும், அவர் தன் அன்பான குமாரனைக் கொடுத்ததினாலும், பரிசுத்தவான்களின் சாட்சியினாலும், சபையின் சரித்திரத்தினாலும், வாக்குகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தினாலும் இது தெரிய வருகிறது.

அவர் அப்படியே செய்வார் என்பது கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். கர்த்தர் உண்மையுள்ளவர். ஆகையால் அவர் எல்லா பொல்லாங்கினின்றும் விலக்கி காப்பார் என்று விசுவாசியுங்கள். நாம் நன்மை செய்து, உண்மையுள்ள சிருஷ்டிகராகிய அவரண்டை நம் ஆத்துமாக்களை ஒப்புவிக்க வேண்டும். அவருடைய வார்த்தை நிறைவேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. வானமும் பூமியும் ஒழிந்துபோம். அவர் வார்த்தை மாறவே மாறாது. அவருடையத் தன்மையைப்போல அதுவும் மாறாது. தேவனுடைய வாக்கைப்போல உறுதியுள்ளது ஒன்றும் இல்லை.

தேவன் உரைத்த சொற்படி
குமாரனைத் தந்தார்
அவர் வாக்குபண்ணினதெல்லாம்
அவ்வாறே நிறைவேற்றுவார்.

மரணபரியந்தம் நம்மை நடத்துவார்

செப்டம்பர் 11

“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14

இந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா? நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.

நாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.
அவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.

என்றும் மாறாதவர் நமது தேவன்
நித்தம் நம்மை நடத்துவார் அவர்
மரணம் மட்டும் நம்மைக் காப்பார்
நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29

“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” மத்தேயு 15:8

இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம்.

அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிறீர். „அவர் எனக்கு இரங்குவார், காப்பாற்றுவார், நன்மைசெய்வார், விடுவிப்பார் என்று அவரையே நம்பியிருப்பீரானால், உமது இருதயம் அவருக்கு அருகிலேயே இருக்கிறது. மனிதருக்குமுன் வசனத்தின்படி நடந்து, ஆண்டவர் சொன்னபடியே செய்து, சற்றும் மாறாமல் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீரானால், உமது இருதயம் அவருக்கு சமீபமாகவே இருக்கும். மாய்மாலத்தைத் தேவன் வெறுக்கிறார், நாமும் வெறுப்போமாக. அவருக்கருகிலேயே வாழ்ந்து, அவரோடே நடந்து, அவர்மேல் அன்பு வைத்து நடப்போமாக. வேஷமாகப் பெயருக்கென்று நாம் இவ்வாறு நடந்தால் பரிதாபத்திற்குரியவர்களாவோம்.

ஆண்டவர் அன்பைப்போல்
இனியது ஏதும் உண்டோ
இதைவிட்டு வேறெதையும்
உனதாவி விரும்பலாமோ, பாவி.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது

யூலை 23

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறதே” 2.கொரி. 1:20

சூரியனில் வெளிச்சம் எல்லாம் இருப்பதுப்போல கிருபை எல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசுவில் ஒன்று சேர்கின்றன. வாக்குத்தத்தங்கள் தேவனுடைய தன்மைகளையும் அவரின் மகத்துவங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவை கிருபையிலிருந்துத் தோன்றி அளவற்ற தயவுக்கு அத்தாட்சி ஆகின்றன. அவை அளவற்ற இரக்கத்தை வெளிப்படுத்தி நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறனது. அவை கிறிஸ்துவில் இருக்கின்றன. உண்மையான சாட்சியாக அவருடைய வாயிலும், உடன்படிக்கைக்கு அவர் கையிலும், சபையில் மணவாளனாக அவருடைய மனதிலும், சகலத்திற்கும் சுதந்தரவாளியாக அவருடைய சுதந்திரத்திலும் அவை இருக்கின்றன.

சகலமும் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரக்கமாக அவரில் அடங்கியிருக்கிறது. தீர்க்கதரிசியாக அவைகளை வெளிப்படுத்தி, ஆசாரியனாக அவைகளை உறுதிப்படுத்தி, இராஜாவாக அவைகளை இயேசு நிறைவேற்றுகிறார். இவைகளில் சில உலகத்திற்கு அடுத்தது. சில சபைக்கு மட்டும் உரியது. சில சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் அடுத்தது. எந்தக் காலத்திற்கும் உதவும், நித்தியத்திற்கும் ஏற்றது. கிறிஸ்துவில் எந்த வாக்குத்தத்தமும் கிரேக்கனுக்கு ஆம் என்றும், யூதனுக்கு ஆமென் என்றும் இருக்கிறது. அதாவது யூதனானாலும், கிரேக்கரானாலும் விசுவாசிகள் யாவருக்கு அவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அன்பர்களே, அவைகளை விசுவாசித்து, ஜெபத்தில் பயன்படுத்தி நம் ஆத்துமாக்கள் அவைகளின் மேல் இளைப்பாறும்படி செய்வோமாக. அவை நமக்காகக் கொடுக்கப்பட்டவை. அதை அவர் நமக்காக நிறைவற்றுவார். ஏனெனினில் தேவன் உண்மையுள்ளவர்.

இதுவே என் நம்பிக்கை
இதன்மேல் நிற்பேன்
உமது வாக்கு உண்மை
உமது வார்த்தை சத்தியம்.

எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்

யூலை 26

“எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்.” 1தெச 5:16

ஒவ்வொரு தேவபிள்ளையும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷப்பட்டு, பாக்கியவான் என்று சொல்லப்படுகிறான். அவன் எப்போதும் பாக்கியவானாய் இருக்க வேண்டியவன். எப்போதும் சந்தோஷமாய் இருங்கள் என்று வசனம் சொல்லுகிறது. சந்தோஷம் ஆவியின் கனிகளில் ஒன்று. இது விசுவாசத்தின் பலனாய் நம்பிக்கையோடு சேர்க்கிறது. ஆகவே நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள். இது தைரியம் உள்ள, சேனைத் தலைவன் அடையும் வெற்றியில் போர் சேவகன் அடையும் சந்தோஷம். கப்பலில் பிரயாணம்பண்ணும் ஒருவன், புத்திசாலியும், அனுபவசாலியுமான கப்பலோட்டியைக் குறித்து அடையும் சந்தோஷம். மன்னிப்பைப் பெற்று தேவகிபையை அடைந்தவனுடைய சந்தோஷம். அன்பும், பட்சமுள்ள தகப்பனைப்பற்றி வீடு திரும்பிய குமாரன் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷம் சொல்ல முடியாது. மகிமை நிறைந்தது. இது எப்பொழுதும் பரிசுத்தமான சந்தோஷம்.

இந்த சந்தோஷம் பாவம் செய்தால் சேதமடைந்து குறைந்துபோம். தேவ பிள்ளையே, உன் தேவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படு என்கிறார். பழங்கால தேவபக்தர்கள் துன்பத்திலும் சந்தோஷப்பட்டார்கள். தேவனுடைய பரிசுத்த வசனமும், அருடைய கிருபை நிறைந்த உடன்படிக்கையும், இயேசுவில் இருக்கும் பரிபூரணமும், தேவனுடைய மகிமையான தன்மைகளும் இந்தச் சந்தோஷத்திற்கு அஸ்திவாரம். இது நம்முடைய அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலையும் குறித்து நாம் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷத்தை அடிக்கடி கெடுத்துக்கொள்ளாமல் நாம் பத்திரப்படுத்த வேண்டும். நம்மைச் சேதப்படுத்தி தேவனை வருத்தப்படுத்துகிற நம்முடைய அவிசுவாசம், பாவம், கிறிஸ்துவைப் பற்றின எண்ணம், தகாத சிந்தை, உலகத் தொல்லைகள், தப்பான நடத்தை, தன்னயம் இவைகள் யாவும் நமது நித்தியமான சந்தோஷத்தைக் கெடுத்துப்போடுகின்றன. தேவ பிள்ளையே, நீ சந்தோஷமாய் இருக்க வேண்டும்.

கர்த்தரில் என்றும் மகிழ்ந்திரு
அவர் உன் பரம நேசர்
அவர் மகிமை அளிப்பார்
பரம ராஜ்யமும் தருவார்.

மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்

யூலை 07

“மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்.” 1.தெச.5:6

தூக்கம் இங்கே உவமானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீர இளைப்பாறுதலைப்பற்றியல்ல, மனதின் தன்மையைப்பற்றியே அப்போஸ்தலன் இப்படிச் சொல்கிறார். விசுவாசித்து ஜெபிக்கிற பரிசுத்த விருப்பங்களுக்குரிய வல்லமை நின்றுப்போயிருப்பது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. வேலைசெய்ய வேண்டிய நேரத்தில் தூங்குவது தவறல்லவா? இது மரணத்துக்கு ஒப்பானது. பேர் கிறிஸ்தவர்கள் தூங்குகிறார்கள். ஆனால் நாமோ மற்றவர்கள் தூங்குகிறதுப்போல் தூங்கக்கூடாது. அப்படி நாம் தூங்கினால் உவாட்டர்லூ என்னும் போர்க்களத்தில் கொடிய சண்டை முடிந்த பிறகு காணப்படும் செத்தவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோர் நடுவே தூங்குவதுப்போல, ஒரு பட்டணத்தில் பெரிய கொள்ளை நோய் வந்தபோது அந்த நோய்க்கு மாற்று மருந்து நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம்.

ஒரு தீவில் அநேக அடிமைகள் இருக்க அவர்களை விடுதலையாக்கும் விடுதலை சாசனம் நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். அதிக பைத்தியக்காரர்கள் இருந்தும் ஊரில் நாம் அவர்களைக் குணப்படுத்தக்கூடிய திறமை இருந்தும் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். போதுமான உணவு இருந்தும் பட்டினியால் சாவதுப்போல் இது இருக்கும். பகலில் அறுவடை நேரத்தில் தூங்குகிற சோம்பேறிபோல இருப்போம். அறுவடை நேரத்தில் பெரும் புயல் அடித்து எஜமானுடைய விளைச்சல் நாசமாகும் சமயத்தில் தூங்கும் வேலைக்காரனைப்போல இருப்போம். இது சத்துரு போர்களத்தில் இருக்கும்போது விழித்திருக்கவேண்டிய போர்ச்சேவகன் தூங்குகிறதுபோல இருக்கும்.

கிறிஸ்துவர் என்று சொல்பவர்
தூங்குகிறதைப் பார்
எழுந்து கீழ்ப்படிந்து
ஓட்டத்தை ஓடிமுடி.

Popular Posts

My Favorites

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19 "நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்." மத். 6:34 வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல்...