தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 20

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.

அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்

யூன் 15

“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14

தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.

இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.

அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

யூன் 14

“அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.” மத். 27:35

பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். யூதாஸ் காட்டிக்கொடுத்தான். அப்போதுதான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரின் மரணத்தில் தேவன் கொண்ட நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். தமது நீதிக்குத் திருப்தியுண்டாக தம்முடைய இரட்சிப்பில் தம் ஜனங்களுக்கு பங்கம் வராது காக்க, தம் ஞானத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த நம்முடைய பாவங்களை நீக்கி அன்பின் ஆச்சரியங்களை விளக்க வேண்டுமென்பதே அவர் நோக்கம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் நமக்குக் காட்டினது என்ன? அவர் குழந்தைப்போன்ற கீழ்ப்படிதல், பிதாவினிடத்தில் அவர் உறுதியாக வைத்த நம்பிக்கை, துன்பத்தில் காட்டின பொறுமை. சாந்தத்தோடு கூடிய மன்னிக்கிற குணம். தம் மக்கள்மீது வைத்த ஆச்சரியமான அன்பு. தேவ சித்தத்திற்கு அவர் கீழிருந்த விதம் போன்ற பலவற்றை நாம் பார்க்கிறோம்.

இவற்றிற்குப் பதிலாக மனிதனிடத்திலிருந்து இவருக்கு கிடைத்ததோ, கொடிய நன்றி கேடு. சொல்லி முடியா கொடுரம். அளவுக்கு மீறிய பெருமை. மிக மிஞ்சின அறிவீனம். உறுதியற்ற குணம். இவைகளைத்தான் தேவனுக்கு முன் காட்டினார்கள். பொருளாசையின் வலிமையும், தன்மையும் யூதாசினிடத்தில் பார்க்கிறோம். சுய நீதிக்குள் மறைந்துக்கிடக்கிற பொறாமையும், கொடுமையும் பரிசேயரிடத்தில் பார்க்கிறோம். மனுஷனுக்குப் பயப்படுகிற பயத்தால் உண்டாகும் கேட்டைப் பிலாத்துவிடம் பார்க்கிறோம். நல்லோரிடத்தில் காணப்படுகிற பெலவீனம் அவருடைய சீஷர்களிடத்திலும் காணப்படுகிறது. பாவத்தின் தன்மை மனிதரிடத்தில் தௌவாய்க் காணப்படுகிறது. மனிதருடைய சரியான தன்மையும் வெளியாகிறது.

ஜீவாமிர்தம் இதுவல்லோ
அளவில் அடங்கா அன்பு
பாவிக்கடைக்கலம் இதுவல்லோ
தூதர் பாடும் பாட்டு.

நீ விசுவாசத்தால் நிற்கிறாய்

யூன் 13

“நீ விசுவாசத்தால் நிற்கிறாய்.” ரோமர் 11:20

இயேசுவில் வைக்கும் விசுவாசம் மகா விசேஷமானது. அதை அவருக்குமேல் வைக்காமல் மற்ற எதன்மீது வைத்தாலும் அதை அதிக மேன்மைப்படுத்திவிடுகிறோம். நாம் நீதிமான்களாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தனாலாகிறது. நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தினால் நம் இதயத்தில் இடம் பெறகிறது. நாம் போராடுகிறோமா? அது விசுவாசப் போராட்டம். நமது விசுவாசம் தான் உலகை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசத்தினால் இயேசுவை நோக்கிப் போர்க்கிறோம். அவரை ஏற்றுக்கொள்ளுகிறோம். அவரோடு சஞ்சரிக்கிறோம். அவரில் நிலைக்கிறோம். ஏனெனில் விசுவாசத்தின் மூலமாய் தேவ வல்லமையினால் காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்து நமக்கு எப்படியிருக்கிறார்? அவர் நமக்காக எதையெல்லாம் செய்தார்? அவர் நமக்கு என்னத்தைக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறதினால்தான் நாம் நிற்கிறோம். வருத்தமான பாதையில் நடக்க கிறிஸ்துவிடமிருந்து வெளிச்சத்தையும், போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் வேண்டிய பெலனையும், அவசரமான எந்தச் சூழ்நிலைக்கும் தேவையான கிருபையையும், விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்கிறோம். ஜீவனுள்ள தேவனை விட்டுப் போவதால் அவிசுவாசமாகிய பொல்லாத இருதயத்தை அடையாதபடி எச்சரிக்கையாய் இருப்போமாக. சந்தேகங்களுக்கு விரோதமாகப் போராடி தேவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தைரியம் அடைவோமாக. நாம் பொதுவாக தேவனுடைய வசனத்தில் அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. இரட்சகர் முடித்த கிரியையில் மிதமிஞ்சி நம்பிக்கை வைப்பவர்களுமல்ல. தேவனுடைய உண்மையையும் அவ்வளவு உறுதியாய்ப் பிடிப்பவர்கள் அல்ல. ஆயிலும் விசுவாசத்தில் வல்லவர்களாகி, ஆபிரகாமைப்போன்று தேவனுக்கு மகிமை செலுத்துகிறவர்களாய் இருப்போமாக.

சத்துருக்கள் சீறி வந்தாலும்
இயேசுவே என் கன்மலை
அவர் கொடுக்கும் பலத்தால்
நிற்பேன் அவரே துணை.

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்

யூன் 12

“கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்.” எபேசி. 4:32

ஆசீர்வதாங்களிலே மிகவும் முக்கியமான ஒன்று தேவன் கொடுக்கும் பாவ மன்னிப்பு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு போயிற்றென்று அறிந்து உணருவது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். நம் தேவன் மன்னிக்கிறவர். இலவசமாய் மன்னிக்கிறவர். அடிக்கடி மன்னிக்கிறவர். மனதார மன்னிக்கிறவர். சந்தோஷமாய் மன்னிக்கிறவர். நியாயப்படி மன்னிக்கிறவர். அவர் மன்னிக்கிறதால் மன்னிக்கப்பட்ட பாவம் மறைக்கப்பட்டுப் போகிறது. இந்த மன்னிப்பு கிறிஸ்துவினால் மட்டுமே கிடைத்த ஒன்றாகும். இது மனந்திரும்புதல், விசுவாசம், நற்கிரியைகள், இவைகளினால் நாம் பெற்றவைகளல்ல. கிறிஸ்துவின் நிமித்தம்மட்டுமே நாம் மன்னிக்கப்படுகிறோம்.

இயேசுவானவர் நம்மை தேவனிடம் சேர்க்கும்படி அக்கிரமகாரருக்காய் நீதிமானால் ஒருதரம் நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக நிறைவும், பூரணமும் நித்தியமுமான பிராயச்சித்தத்தை உண்டுபண்ணி, தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்து பாவத்தைத் தொலைத்தார். ஆகவே நாம் இயேசுவை விசுவாசித்து, தேவன் தம் குமாரனை குறித்து கொடுத்த சாட்சியை ஏற்றுக்கொண்டு, கிருபாசனத்தைக் கிட்டிச்சேர்ந்து, அவர் நாமத்தைச் சொல்லி பாவ மன்னிப்புக்காக கெஞ்சும்போது தேவன் நமக்கு மன்னிப்பளித்து, தம் குமாரனை மகிமைப்படுத்துகிறார். எந்த விசுவாசிக்கும் மன்கிக்கிறார். எந்த அக்கிரமத்தையும் மன்னிக்கிறார். அவர் பாவங்களையெல்லாம் குலைத்துப்போடுகிறார். எல்லா குற்றங்கக்கும் பாவியை நிரபராதியாக்குகிறார். தேவன் மன்னித்தவரை ஆக்கினைக்குள்ளாக்குகிறவன் யார்? தேவன் தம்மை நீதிமானாக்கினாரே? கிறிஸ்து மனதார நமக்காக மரித்தார். நித்திய மீட்பைச் சம்பாதித்தார். அவர் நிமித்தம் இன்று நாம் தேவனுக்கு முன்பாக மன்னிப்புப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பாவிகளாக நிற்கிறோம்.

என் பாவம் மன்னிக்கப்பட்டதை
என் நேசத்தால் ரூபிப்பேன்
எனக்குரியது யாவையும்
அவருக்கே படைப்பேன்.

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

யூன் 11

“உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” சங்.94:19

நாம் அடிக்கடி வருத்தப்படுகிறோம். நம்முடைய நினைவுகள் கலங்கி சோர்ந்துப் போகிறது. நம் தேவன் இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க அதிக கவனமுடையவராயிருக்கிறார். நிறைவான, எக்காலத்திற்கும் ஏற்ற ஆறுதல் அவரிடத்தில் உண்டு. அருமை வாக்குத்தத்தங்களினாலும், கிறிஸ்துவின் பூரண கிரியைகளிலும், நித்திய உடன்படிக்கையினாலும், பாவம், துன்பம், துக்கம் இவைகளினின்று முற்றிலும் என்றைக்கும் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையிலும் நமக்கு எவ்வளவு ஆறுதல் அடங்கியிருக்கிறது.

நமக்கு நாமே ஆறுதல்படுத்த அற்றவர்களாய் இருக்கிறோம். நம்முடைய தேவனிடத்தில் நம்மைப் பாக்கியவான்களாக்கத் தக்க தகுதி இருக்கிறது. நமது சொந்த நினைவுகள்கூட அடிக்கடி நமது துக்கத்திற்குக் காரணம். நம்முடைய தேவனைப்பற்றிய நினைவுகளோ, அன்பு, சமாதானம், சந்தோஷம் இவைகளால் நிறைந்திருக்கிறது. அவர் எக்காலத்திலும் நம்மை நேசிக்கும் சிநேகிதன். கண்ணீரைத் துடைக்க நமக்காகப் பிறந்த சகோதரன் நமக்கிருப்பது எத்தனை ஆறுதல். இவர் எப்போதும் பிதாவண்டை பரிந்து பேசும் மத்தியஸ்தர். இதனால் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு வருத்தங்களில் வருத்தப்பட்டு தம்மைப்போல் நம்மை முற்றிலும் மாற்றி, தாம் இருக்கும் இடத்தில் நம்மை சேர்க்கத்தக்கதான அவ்வளவு நெருங்கிய ஐக்கியம் உண்டென்று அறிவது எவ்வளவு ஆறுதல். இவர்தான் நமக்குத் தலையானவர். நாம் அவருக்குச் சரீரம். கிறிஸ்துவும் அவர் சபையும் ஒன்று என்ற சத்தியம் எத்தனை அருமையானது. எத்தனை பரிசுத்த ஆறுதல் நிறைந்தது. அவநம்பிக்கைக்கும் மனமடிவுக்கும் எத்தனை நல்ல மருந்து. உள்ளும் புறமும் எல்லாம் துக்கமும், துயரமும் வியாகுலமுமாய் இருக்கும்போது, அவருடைய ஆறுதல்களைப்பற்றி ஜீவனம் பண்ணுவோமாக.

துயரம் பெருகும் போதும்
துக்கம் நிறையும் போதும்
உமதாறுதல் அணுகி,
என்னைத் தேற்றும் அப்போது.

அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

யூன் 10

“அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்…” எபி. 2:11

ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்பந்தர். அவர் சர்வ ஞானி. நாம் அறிவீனர். அவர் மகத்துவமானவர். நாம் அற்பர். அவர் வாழ்த்துக்குரியவர். நாம் இழிவுள்ளவர்கள். இவ்வளவு வேறுபாடுகளிருந்தாலும் அவர் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நமக்கும் அவர்களுக்கும் ஒருவகை ஒற்றுமை இருக்கிறது. நம் இருவருக்கும் பிதா ஒருவர்தான். அவர் தேவன்.

நேசருக்கு இருக்கிற சுபாவமும், ஆவியும் சாயலும் நமக்கும் ஒருவாறு உண்டு. அவருக்கும் நமக்கம் இருக்கும் ஒரே வேலை வேதனை மகிமைப்படுத்துவது மட்டும்தான். கர்த்தருடைய வேலைகளில் இயேசுவுக்கும் நமக்கும் இருக்கும் வாஞ்சை ஒன்றுதான். அவரின் நேக்கமே நமது நோக்கம். அவரின் வாசஸ்தலம்தான் நமக்கும் வீடு. நாம் அவரைக் குறித்தும் மற்ற தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அடிக்கடி வெட்கப்படுகிறோம். ஆனால் இயேசுவோ நம்மைக் குறித்தும் வெட்கப்படுவதே இல்லை. இவர் இப்பொழுதும், பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும் நம்மைச் சொந்தம் பாராட்டுகிறார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். வருங்காலத்தில் பிதாவினால் ஆசீhவதிக்கப்பட்டவர்கள் என்றும், சகோதரர் என்றும் அழைப்பார். ஆண்டவரே நம்மைச் சகோதரர் என்று அழைக்கும் போது நாம் சில காரியங்களில் வித்தியாசப்பட்டாலும் ஒருவரைக்குறித்து ஒருவர் ஒருக்காலும் வெட்கப்படாதிருப்போமாக.

நீசப் புழுவை இயேசு
சகோதரர் என்கிறார்
தேவ தூதர்களுக்கும் அவர்
இம்மேன்மையை அளியார்.

Popular Posts

My Favorites

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19 "நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்." மத். 6:34 வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல்...