நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்

யூன் 25

“நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.” 1.கொரி. 3:23

யார் கிறிஸ்துவினுடையவர்கள்? தமக்கென்று தேவன் பிரித்து வைத்த பரிசுத்தவான். அவரைத் தங்கள் தேவனாகவும், இரட்சகராகவும் தொழுது கொள்ளுகிறார்கள். அவர் நாமத்தை விசுவாசித்து அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் செய்கிறவர்கள். எந்த ஒரு தேவ பிள்ளையானாலும், வளர்ச்சியில் குறைவுள்ளவர்களானாலும், பெலவீனர்களானாலும், பயங்களானாலும், சந்தேகங்களானாலும் சோர்ந்து போய் இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடையவர்களாகும்போது பிதா அவர்களுடையவர்களாகிறார். பரிசுத்தாவியானவரும் அவர்களுடையவரே. தேவநீதி அவர்களுடையதாகிறது. அவருடைய சமாதானமும் அவருடையயதே. அவருடைய சகல ஐசுவரியமும் அவர்களுடையதாகிறது. அவரும், அவருடையதெல்லாம் அவர்களுடையது.

தேவன் கிறிஸ்துவினுடையவர்களைத் தமது சொத்தாகப் பாதுகாக்கிறார். தம்முடைய பிள்ளைகளாக அவர்களை ஆதரிக்கிறார். தம்முடைய மணவாட்டியாக அவர்களை அரவணைக்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் அவர் பேசும்போது, முற்றிலும் அவருக்குச் செவி கொடுக்க வேண்டும். அவர் கட்டளையிடும்போது நாம் சந்தோஷமாய்க் கீழ்ப்படியவேண்டும். சாத்தானும் அவன் மக்களும் அவருக்கு விரோதமாய்ச் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எப்போதும் அவரை நம்முடைய ஆண்டவரும் எஜமானுமாய் பாவிக்க வேண்டும். அடிக்கடி கிருபாசனத்தண்டையிலும், திருவிருந்திலும், தேவாலயத்திலும் அவரைச் சந்திக்க வேண்டும். வருங்காலத்தில் நித்தியமாய் அவரோடு வாழுவோம் என்ற நம்பிக்கையோடு, இப்போது அவரோடு ஜீவனம்பண்ண வேண்டும். நீர் கிறிஸ்துவினுடையவர் என்பதற்கு அத்தாட்சி உண்டா? உமக்கு அனுதினமும் வேண்டிய ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு இவைகளுக்காக நீர் அவரிடத்தில் கேட்கிறீரா?

எனக்குத் தேவை யாவையும்
அளிப்பவர் உண்டே
மன்னிப்பும் சமாதானமும்
அவர் அளிக்க வல்லவரே.

கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

யூன் 24

“கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.” சங். 61:2

இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவே அடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு இளைப்பை அருளும் கன்மலை இவர். துன்பப்படுகிறவர்களை ஆதரிக்கும் கன்மலை இவர். பயந்து கலங்கினவர்கள் ஒதுங்கி நிற்கும் பிளவுண்ட கன்மலை இவர். இந்த கன்மலையின்மேல் நாம் சுகமாய்த் தங்கலாம். இந்தக் கன்மலையின்மேல் நின்று தூரத்திலுள்ள சியோனைப் பார்க்கலாம். இந்தக் கன்மலையில் இருந்தால் பூயலுக்கு பாதுகாக்கப்படலாம். சூரிய வெப்பத்துக்கு நிழலாய் தங்கலாம். ஆனால் நாமோ, இதன் அருமையை தெரிந்துக்கொள்ளாமல் அலைந்து திரிகிறோம். தூரத்தில் இருக்கும்போது இதன் பயனை உணர்ந்து இதனால் கிடைக்கும் சிலாக்கியத்துக்காக பெருமூச்சு விடுகிறோம்.

நாம் எங்கே இருந்தாலும் இந்தக் கன்மலையிடம் வரலாம். நம்மை நடத்த உள்ள துணையும் உதவி செய்யும் சிநேகிதனும் நமக்குத் தேவை. ஆகவே நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சங்கீதக்காரனைப்போல் என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என்று சொல்லுவோமாக. இயேசுவானவர் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார். நமக்கு வேண்டியதெல்லாம் அவரிடம் உண்டு. எப்பொழுதும் ஜெபம் பண்ணலாம். தேவன் ஜெபத்தை ஏற்று தைரியப்படுத்தி, பதில் அளிக்கிறார். அவரிடத்தில் போவோமானால் பயங்களை வென்று சத்துருக்களை ஜெயித்து, நாம் எதிர்பார்க்கிறதிலும், அதிகம் பெறுவோம். நாம் கேட்கிறதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அவர் செய்ய வல்லவர்.

சேர்ந்துப்போகும் தருணம்
இயேசுவினிடம் செல்லுவோம்
எந்தத் துன்பம் வந்தாலும்
கன்மலையை விடோம்.

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்

யூன் 23

“நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.” நீதி. 11:28

இவர்கள் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது நீதியைக் கொடுக்கிறார். அவர்களில் அவர் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவினால் நீதிமான்களாய் தேவ சமுகத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மனிதர்முன் நேர்மையாய் நடந்து தேவ மகிமைக்காக கனி கொடுக்கிறவர்கள். மரத்தின் வேருக்கும் கிளைகளுக்கும் உள்ள உறவுப்போன்று அவர்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டு, ஐக்கியம் கொள்கின்றனர். அவரால் ஆதரிக்கப்பட்டு, அவருடைய நிறைவிலிருந்துத் தங்களுக்குத் தேவையானதப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஜீவன், அழகு, பெலன், செழிப்பு ஆகியவைகளுக்கு அவர்தான் ஊற்று. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தால் அவர்கள் கனியற்று வாடிப் பட்டுப்போய்விடுவார்கள்.

அத்திமரச் சாறானது எப்படி கிளைகளுக்கு போகிறதோ அப்படியே அவர்களுக்கு வேண்டியதை அவர் கொடுக்கிறார். மேலும் தமது கிருபையாகிய பனியையும், ஆசீர்வாதமாகிய மழையையும், அவர்கள்மேல் பொழியப்பண்ணுகிறார். ஆகவே, இவர்கள் செழிப்பாகி கனி கொடுத்து வளர்கிறார்கள். அவர் அவர்களைத் துன்பத்தினால் நெருக்கினாலும் அதிக கனிகளைக் கொடுக்கும்படித்தான் அப்படி செய்கிறார். கோடைக்காற்று கிளைகளை ஒடித்து, மூடுபனி அவைகளை முறித்தாலும், அவர்களின் ஜீவனோ வேரில் இருக்கும். அது கிறிஸ்துவோடு தேவனில் மறைந்திருக்கிறது. அன்பர்களே! கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதனால் நாம் செழிப்புள்ளவர்களாகிறோம் என்பதை கவனியுங்கள். நமது மார்க்கம் மெய்மார்க்கம் என்பதற்கு இது அத்தாட்சி.

நீதியின் விருட்சங்களாய்
ஒங்கி வளருவோம்
விசுவாசம் அன்போடு
பரதீசில் கனிகொடுப்போம்.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

கர்த்தரிடத்தில் கிருபை உண்டு

யூன் 21

“கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.” சங். 130:7

கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனி அவர் இருக்கப்போவதுமில்லை. தேவன் கிருபையில் அதிக உருக்கமானவர். அதிக இரக்கமுள்ளவர். பலவகைகளில் அவர் கிருபையை நம்மீது காட்டுகிறார். எல்லாருக்கும் தேவையானது அவரிடத்தில் உண்டு. பின்வாங்கிப்போனவர்களைச் சீர்ப்படுத்தும் கிருபை அவரிடத்தில் உண்டு. விசுவாசிகளைப் பாதுகாக்கிற கிருபை அவரிடத்தில் உண்டு.

பாவத்தை மன்னிக்கிற இரக்கம், சுவிசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கச் செய்கிற சிலாக்கியம், ஜெபிக்கிற ஆத்துமாவுக்கு இரங்குகிற இரக்கம் இந்தக் கிருபையில்தான் உண்டு. அவர் கிருபை நிறைந்தவர் மட்டுமல்ல, அதைக் காட்ட, கொடுக்க அவர் பிரயாசப்படுகிறார். அந்தக் கிருபையை மேன்மைப்படுத்த மகிமைப்படுத்த, வேண்டுமென்பதே அவர் முழு நோக்கம். அவரில் கிருபையிருப்பதினால் நிர்பந்தர் தைரியமாய் அவரிடம் சேரலாம். அது பயப்படுகிறவர்களைத் தைரியப்படுத்துகிறது. தேவனிடமிருந்து நன்மையைப் பெற அவர்கள் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. இந்தக் கிருபை பின்வாங்கிக் கெட்டுப்போனவர்களைத் திரும்ப வரும்படி அழைக்கிறது. Nhதனையில் அகப்பட்டு கிறிஸ்தவனை எல்லா துன்பத்திலும் வருத்தத்திலும் மகிழ்ச்சியாக்குகிறது. அவரின் கிருபை தேவனைப்போலவே நித்தியானது, அளவற்றது என்பதை மறக்கக்கூடாது. கிருபை எப்பொழுதும் சிங்காசனத்தில்மேல் ஆட்சி செய்கிறது. எந்தப் பாவியும் இரக்கம் பெறலாம்.

கர்த்தரை நம்பு பாவி
அவர் இரக்கம் மாபெரிது
அவர் கிருபை நாடு
அவர் பெலன் பெரியது.

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு

யூன் 20

“‘கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு.” உபா. 32:9

தேவன் என் பங்கு என்று சொல்லும்போது நாம் நன்றியறிதலாலும், சந்தோஷத்தாலும் நிரப்பப்படுகிறோம். தேவன் தம் ஜனங்களுடைய பங்கென்பதே நம்மை அதிசயத்தினாலும், ஆச்சரியத்தினாலும், நிரப்பத்தக்கது. அவர் எவ்வளவோ பெரியவர். இவர்கள் எவ்வளவோ அற்பர். அவர் எவ்வளவோ பரிசுத்தர். மகிமை நிறைந்தவர். இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள். ஆனால் பூமியில் எல்லாரயும் பார்க்கிறவர் இந்த ஜனத்தை மட்டும் தனக்காகத் தெரிந்துகொண்டார். கொடுர பகைவன் வலையிலிருந்து மீட்டு தம் பக்கம் இழுத்து, தமது நேசத்தை அவர்கள்மேல் வைத்து, தமக்குச் சொந்தம் பாராட்டுகிறார். தம்முடைய ஆலயமாக அவர்களில் வாசம்செய்து அவர்களைத் தம் பிள்ளைகளாக ஆதரித்து, அவர்களை மோட்சகரை சேர்ப்பார். அவர்கள் கர்த்தருடைய பங்கு. அவருடைய சுதந்தரம். அவருடைய திராட்சத்தோட்டம். அவருடைய பூங்கா.

விசுவாசியே! கர்த்தர் உன்னைத் தம் பங்கென்று நினைத்து உன்மேல் கவனம் வைத்ததை நினைத்துப்பார். முன்னே நீ திரிந்து அலைந்த ஆடாய் இருந்தாய். இப்போது உன் ஆத்தும மேய்ப்பனும், கண்காணியுமானவரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாய். தேவதூதர்களையே அவர் தம் பங்கென்றும் ஆபரணங்களென்றும் சொல்லவில்லை. ஆனால் உன்னை அப்படி சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே அவரோடு உண்மையான மணவாட்டியாக அவருடன் ஐக்கியப்பட்டு நடந்து பரமவீடு போய்ச்சேர கவனமாயிரு. அவரின் கிருபைக்குச் செலுத்தவேண்டியதைச் செலுத்து. ஏனென்றால் தேவனின் சுத்த தயவால் நீ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறாய்.

தேவ பக்தர்கள் அவர் பங்கு
இராப்பகல் அவர்களைக் காப்பார்
அதே இயேசுவின் களிப்பு
அதில் அவர் மகிழ்வார்.

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.

Popular Posts

My Favorites

வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்

மார்ச் 22 "வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்." எபி. 6:17 சுபாவத்தின்படி மற்றவர்களைப்போல நாமும் கோபாக்கினையின் புத்திரர். மற்றவர்களைப்போலவே அக்கிரமக்காரர். எது மற்றவர்கள். கெட்டுப்போனவர்கள். தேவனுக்கு விரோதமாகவும் அவருடைய இராஜ்யத்திற்கு விரோதமாகவும் கலகம்பண்ணினார்கள். எந்த நற்கிரியைகளையும் தேவன்...