ஒகஸ்ட்

முகப்பு தினதியானம் ஒகஸ்ட்

இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே

ஓகஸ்ட் 26

“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11

நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.

கிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.
இவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.

தேவ ஞானம் நடத்தும்
தேவ கிருபை தாங்கும்
ஒன்றும் அறியா பாவி நான்
தேவ சித்தம் என் பாக்கியம்.

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

ஓகஸ்ட் 25

“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்” எபி.10:23

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இலவசமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவன் உண்மையுள்ளவர். ஆகவே அவர் அவைகளைச் சொன்னபடியே நிறைவேற்றுவார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு நித்திய ஜீவனையும் பாவ மன்னிப்பையும், இருதயசுத்தத்தையும், சமாதானத்தையும், கிருபையையும், வாக்களித்திருக்கிறார். இவைகளை நாம் நம்பி அவர் அப்படியே நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவர் தம்முடைய வாக்குகளுக்கு உண்மையுள்ளவர். அது அவருடைய தன்மை. அவர் அளவற்ற சம்பூரணமுள்ளவராயிருப்பதனாலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட அவர் உடன்படிக்கை உறுதியாய் இருப்பதினாலும், அவர் ஆணையிட்டு இருப்பதினாலும், அவர் தன் அன்பான குமாரனைக் கொடுத்ததினாலும், பரிசுத்தவான்களின் சாட்சியினாலும், சபையின் சரித்திரத்தினாலும், வாக்குகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தினாலும் இது தெரிய வருகிறது.

அவர் அப்படியே செய்வார் என்பது கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். கர்த்தர் உண்மையுள்ளவர். ஆகையால் அவர் எல்லா பொல்லாங்கினின்றும் விலக்கி காப்பார் என்று விசுவாசியுங்கள். நாம் நன்மை செய்து, உண்மையுள்ள சிருஷ்டிகராகிய அவரண்டை நம் ஆத்துமாக்களை ஒப்புவிக்க வேண்டும். அவருடைய வார்த்தை நிறைவேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. வானமும் பூமியும் ஒழிந்துபோம். அவர் வார்த்தை மாறவே மாறாது. அவருடையத் தன்மையைப்போல அதுவும் மாறாது. தேவனுடைய வாக்கைப்போல உறுதியுள்ளது ஒன்றும் இல்லை.

தேவன் உரைத்த சொற்படி
குமாரனைத் தந்தார்
அவர் வாக்குபண்ணினதெல்லாம்
அவ்வாறே நிறைவேற்றுவார்.

முழுக்குடும்பத்துக்கும்

ஓகஸ்ட் 24

“முழுக்குடும்பத்துக்கும்” எபேசி. 3:14

கிறிஸ்துவின் சபை ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்தின் ஒரு பங்கு பூலோகத்திலும், மறுபங்கு பரலோகத்திலும் இருக்கிறது. ஒரு பங்கு இன்னும் தோன்றவில்லை. இக்குடும்பம் முழுவதற்கும் பிதாவானவரே தேவன்.தேவன் தன் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் காப்பாற்ற அவர்கள்மேல் மனதுருகுகிறார். ஒவ்வொருவரையும் அருமையானவர்களாய் எண்ணுகிறார். ஒருவனையும் அவர் தள்ளமாட்டார். இயேசு எல்லாருக்கும் பரிகாரியாக இருப்பதால், பிணையாளி ஒருவன் இல்லை என்று முறையிட அவசியம் இல்லை. ஒரு குடும்பமாக நம்மை ஏற்றுக்கொள்ள நாம் பரலோகத்தின் தூதர்களிலும் மேற்பட்டவர்களல்ல. அவர் முழு குடும்பத்தையும் ஒன்றுபோல் நேசித்து, மீட்டு, புத்திரசுவிகாரமாக்கினார்.

தமது சபையை முழுவதும் பரிசுத்தமும், பாக்கியமுமாக்கும்படி நிர்ணயத்திருக்கிறார். குடும்பத்தினரின் ஒவ்வொருவருடைய பேரும் ஜீவ புத்தகத்தில் எழுதியிருக்கிறது. இவர்களை இரட்சகர் தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். பரலோகமே இந்தக் குடும்பத்தின் வசந்த மாளிகை. நம்முடைய பிதாவின் வீடு. பிதாவானவர் நமக்குக் கொடுத்த ஈவு. நமக்காக உலகம் உண்டாகும்முன்னே அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அதைச் சந்தோஷமாக நமக்குக் கொடுக்கிறார். நாம் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்று. ஒரே குடும்பம். இந்த ஆவியின் ஐக்கியத்தைச் சமாதானத்தோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குச் செய்தது நமக்குச் செய்ததென்று இரட்சகர் சொல்கிறார்.தேவ பிள்ளைகளைச் சேதப்படுத்துவது இரட்சகரையே சேதப்படுத்துவதாகும். தலையானது அவயங்களோடு சேர்ந்து துன்பத்தைச் சகிக்கிறது. பிதாவானவர் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

கர்த்தாவே நான் உம்முடையயோன்
என்று சொல்ல செய்யும்
நீர் என் சொந்தம் என்
ஆத்துமா பிழைத்து வாழ்ந்திடும்.

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23

“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3

தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.

அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.

மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.

உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்

ஓகஸ்ட் 22

“உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்”  வெளி 3:8

பாவிகள் பெலன் இல்லாதவர்கள். பரிசுத்தவான்கள் பெலவீனராய் இருந்தாலும் பெலன் அவர்களுக்கு உண்டு. இந்தப் பெலன் இயேசுவின் நாமத்தில் கிடைக்கிறது. அவர் பெலவீனருக்கு பெலன். வேதத்தில் தேவன் நான் உன்னைப் பெலப்படுத்துகிறேன் என்று வாக்களித்திருக்கிறார். கர்த்தரிலும் அவரின் சத்துவத்திலும் பெலப்படுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் பிரவேசித்து நமக்கு உள்ளதை இயேசுவோடு ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்த ஐக்கியப்படுகிறதினால், பெலவான்களாகிறோம். நமக்கு குறைந்த பெலன்தானுண்டு. அதிக பெலனுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவை இறுகப்பிடித்து முன்னேறி செல்லவேண்டும். நமக்குள் இருக்கும் பெலனைக் கொண்டு சாத்தானுக்கும். பாவத்துக்கும் உலகத்துக்கும் விரோதமாயும், தேவனுக்கும் அவருடைய காரியத்துக்கம் அனுகூலமாயும் போர் செய்ய வேண்டும்.

இன்னும் அதிகமான பெலனுக்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். தேவன் கொடுப்பதில்லை என்று சொல்கிறதில்லை. அவர் தம்முடைய வாக்குக்கு விரோதமாக நடப்பதில்லை. நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. இப்போதிருப்பதைக் காட்டிலும் நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. அந்தப் பெலனை தேவன் நமக்குச் சம்பூரணமாய்த் தருகிறார். இது பெரிய தேவனுடைய இரக்கம். முன்னே நாம் பெலவீனர்கள். இப்போதோ கொஞ்சம் பெலன் உண்டு. போதுமான அளவு கிடைக்கும் என்று வாக்களித்துள்ளார்.. தேவன் சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவத்தைக் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சந்தோஷமானக் காரியம். அவர் பாதத்தில் காத்திரு. அவர் உன் ஆத்துமாவில் பெலனைத் தந்து உன்னைப் பெலப்படுத்துவார்.

கிறிஸ்துவில் பெலன்படு
போர் செய்து எதிர்த்து நில்
சர்வாயுத வர்க்கம் அணிந்து
பேய், பாவம் யாவும் வெல்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்

ஓகஸ்ட் 20

“என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்” ஏசாயா 51:5

இந்த நம்பிக்கை நல்லது. ஏனென்றால், அந்தப் புயம் சர்வ வல்லமையில் பலப்பட்டு, சர்வ ஞானத்தால் நடத்தப்பட்டு, உருக்கமான அன்பினால் பிரயோகிக்கப்படுகிறது. நாம் சாயும்படி நம்மை ஆதரிக்க அப்புயம் உள்ளது. நமக்காக கிரியை செய்யவும், நமக்கு வேண்டியதை சேர்த்து வைக்கவும், அது நீட்டப்பட்டிருக்கிறது. நமக்காகப் போராடவும், சத்துருவின் கையிலிருந்து விடுவிக்கவும், பெலவீனத்தின்போது நம்மை ஆதரிக்கவும், வியாதியிலும், கண்ணீரிலும் இருந்து நம்மைத் தூக்கி விடவும், இந்தக் கரம் நமக்கு நீட்டப்பட்டிருக்கிறது. இது பிதாவின் சர்வ வல்லமையான கரம். இந்தப் புயம் வானத்தையும், பூமியையும் தாங்கும் புயம்.

நம்முடைய சகோதரனுடைய புயமானாலும், பாதாளத்தின் வாசல்களை அடைத்து, துஷ்ட ஆவிகளைப் பிடித்து அடக்குகிற புயம். இந்தப் புயத்தின்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது கரத்தின்மேல் நம்பிக்கை வைப்பது வீண். மற்று எதிலும் நமது நம்பிக்கை வளர்ந்துவிட கூடாது. எப்போதும் எதிலும் கர்த்தரின் புயத்திலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தேவ வசனம் இப்படிச் சொல்கிறது. தேவன் அதுதான் சரி என்று கட்டளையிட்டிருக்கிறார். அவர்கள் அந்தகாரத்திலும், வருத்தத்திலும் என்னை நம்புவார்கள். என்னுடைய வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும். அது அவர்களுக்குத் தேவையென்று அறிவார். மற்றவை எல்லாம் அவர்களை மோசப்படுத்திவிடும். தேவன் கூறியுள்ளார். அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தேவனுடைய வல்லமையான கரத்தில் நம்பிக்கை வைத்து அவருடைய மகத்துவமான செயலைப் பின்பற்றி, அவரின் கரத்தின் கிரியையை நம்பியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பாக்கியராய் இருக்கமாட்டோம்.

சகலத்தையும் சிருஷ்டித்த
தேவனுடைய கரமே
எங்கள் பெலன் அடைக்கலம்
என்றும் எங்கள் துணையே.

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19

“என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று” சங்.77:2

கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஆறுதல் மொழிகளைக் கேட்க மறுக்கின்றனர். ஒருவேளை தேவன் அவர்கள் விக்கிரமாகப் பாவித்த ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துப்போட்டிருப்பார். விசுவாசத்தினால் ஜீவனம்பண்ணும்படி தம் முகத்தை மறைத்திருக்கலாம். அல்லது இவ்வுலக காரியங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தாங்கள் நம்பியிருந்தவற்றின்மேல் மாயை என்று எழுதி இருக்கலாம். யோனாவைப்போல் இவர்கள் கோபத்திற்கு இடம் கொடுத்து இருப்பார்கள்.

அல்லது பெருமை தங்களிலே ஆளும்படி இடம் கொடுத்திருப்பார்கள். ராகேலைப்போல கவலைக்கும் அதிகம் இடங்கொடுத்திருப்பார்கள். அல்லது சோதனைக்குள் விழுந்திருப்பார்கள். தவறுகளை அதிகம் செய்திருப்பார்கள். இது முழுவதும் தவறு. சுவிசேஷத்தில் உனக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார். மோட்சத்தின் மேன்மையைப் பார். சங்கீதக்காரன் இவ்வாறு தன்னையே நோக்கி, தன்னைத் தேற்றிக் கொண்டான். தன் பாவத்திற்காகத் துக்கப்பட்டான். தன் எண்ணத்தையும், நடத்தையையும் சீர்திருத்திக் கொண்டான். நமக்குப் போதனையாகவும், எச்சரிப்பாகவும் விழிப்பு உணர்ச்சி ஏற்படவும் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கிறான். ஆறுதலைப் பெறக்கூடியவர்களும் தங்குள் தவறுகளால் ஆறுதலை அனுபவியாமல் போகிறார்கள். கர்த்தரின் ஜனங்கள் அடிக்கடி தங்களையே வாதித்துக் கொள்கிறார்கள். ஆறுதலின் பாத்திரத்தைத் தங்களைவிட்டு அகற்றி தாங்கள் அதற்குப் பாத்திரர் அல்ல என்கிறார்கள்.

சகல நன்மைக்கும் ஊற்றே
துக்கம் நீங்கி ஆற்றிடும்
மறுமையில் சேரும்போது
வாழ்ந்தென்றும் சுகிப்பேன்.

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18

“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்.1:4

சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி. உத்தமமானவர்கள் எப்பொழுதும் தேவனுடைய கண்கள் தங்கள் பேரில் இருக்கிறதென்றும், தாங்கள் தேவ வசனத்தின்படி நமக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும், தாங்கள் தேட வேண்டியது, தேவ தயவு என்றும், அவர் நிதானிப்பே மிகவும் முக்கியம் என்றும் எண்ணுவார்கள். உத்தமர்கள் ஆண்டவர் இயேசுவை வெகுவாய் நேசித்து அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்துவார்குள். உத்தமமாய் தேவனை நேசித்து, அதற்கு சாட்சியாக அவர் சமுகத்தில் சந்தோஷித்து சகலத்திலும் அவரில் பிரியமாய் நாடி வாழ்வார்கள்.

உத்தமர்கள் தேவனைக் குறித்து எப்போதும் சந்தோஷமாய் பேசப் பிரயாசப்பட்டு, அவருக்காக எதையும் செய்யவும், உலகத்தையும் பாவத்தையும், வெறுத்து தேவனுக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி அவரைக் கனம்பண்ணுவதைவிட வேறு எதையும் மிகவும் முக்கியமானதாய் நினைக்கமாட்டார்கள். அன்பரே, நீ உத்தமனா? இயேசுவை நேசிக்கிறாயா? உத்தம இருதயத்தோடு அவரை நேசிக்கிறாயா? எல்லாவற்றிலும் அதிகமாய் நேசிக்கிறாயா? நீ அவரை நேசிக்கவில்லையென்றால் நீ உத்தமன் அல்ல. ஒருவன் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவில் அன்பு கூராவிட்டால் அவர் சபிக்கப்பட்டவன். கர்த்தர் வருகிறார். என்று அப்போஸ்தலன் இடும் சாபம் எவ்வளவு பயங்கரமானது.

இயேசுவே என் நோவில் நீ
சஞ்சீவி, மரணத்தில் ஜவீன்
உமது வாயின் வார்த்தைகள்
என் ஆத்துமாவுக்கு அமிர்தம்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

ஓகஸ்ட் 17

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” கொலோ. 4:2

எப்போதும் ஜெபம் அவசியம். அது எப்பொழுதும் பயனுள்ளதுதான். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபத்தை சுருக்கி விடுகிறோம். இது பாவம். இது தேவனைக் கனவீனப்படுத்தி, நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஜெபிக்கும்போது தேவ குணத்திற்கு ஸ்தோத்திரம் சொல்லுகிறோம். அவர் எங்கும் இருக்கிறதை விசுவாசிக்கிறோம். நமது தேவைகளைச் சந்திக்கும் தஞ்சமாக நுழைகிறோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு உண்மையைத் தெரிந்தெடுக்கிறோம். ஜெபத்தில் உள்ளான எண்ணங்களைத் தேவனுக்குச் சொல்லுகிறோம். நமக்கு இருக்கும் சந்தோஷத்தையும், துக்கத்தையும், நன்றியையும், துயரத்தையும் விவரித்துச் சொல்லுகிறோம். நமது குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று தேவனிடம் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நமது விருப்பங்களை வெளியிட்டு நம்முடைய நிலையை அவருக்கு முன்பாக விவரிக்கிறோம்.

ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் நடுவே செல்லுகிற வாய்க்கால். அதன் வழியேதான் நாம் தேவனுக்கு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தெரிவிக்கிறோம். அவர் நமக்கு அறிவையும், பலத்தையும், ஆறுதலையும், கிருபையையும் அனுப்புகிறார். ஜெபிப்பது நமது கடமை. இது பெரிய சிலாக்கியம். நமது வேலைகள் ஜெபத்தை அசட்டை செய்யும்படி நம்மை ஏவும். ஆனால் ஜெபத்தில் உறுதியாயும், கருத்தாயும், நம்பிக்கையாயும், விசுவாசமாயும், விடாமுயற்சியுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் ஜெபத்தை விரும்புகிறார். சாத்தானோ அதைப் பகைக்கிறான். நாம் எப்பொழுதும் முழங்காலில் இராவிட்டாலும் ஜெபசிந்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது அவசியம், பிரயோஜனமானது. தேவன் அங்கிகரிக்கத்தக்கது. மெய்க் கிறிஸ்தவன் அதை மதிக்கிறான்.

ஜெபியாவிட்டால் கெடுவேன்
கிருபைத் தாரும் கெஞ்ச
உம்மைச் சந்திக்க வருகையில்
என்னிடம் நீர் வாரும்.

Popular Posts

My Favorites

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24 "உக்கிரம் என்னிடத்தில் இல்லை" ஏசாயா 27:4 தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து,...