ஒகஸ்ட்

முகப்பு தினதியானம் ஒகஸ்ட்

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

மகா பிரதான ஆசாரியர்

ஓகஸ்ட் 28

“மகா பிரதான ஆசாரியர்” எபி. 4:14

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஊழியஞ் செய்கிறவராயிருக்கிறார். அவர் நமக்கு ஆசாரியர். நமக்காகவே பிரதான ஆசாரியராக அபிஷேகம்பண்ணப்பட்டு அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்காக அவர் பிராயச்சித்தம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அந்தப் பிராயச்சித்தமே தேவ மகிமையால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது மதிப்புக்கு அடங்காதது. என்றும் பிரசித்தி பெறத்தக்கது. அது நம்முடைய குற்றங்களையும் பாவங்களையும் நிராகரித்துவிட்டது. இப்போதும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இதற்காகவே அவர் பிழைத்தும் இருக்கிறார். எப்போதும் அதைச் செய்துக் கொண்டு வருகிறார்.

தம்முடைய கிருபையினால் பலவித ஊழியங்களையும், நம் ஜெபங்களையும், பெலவீனங்களையும், சுகந்த வாசனையாக்குகிறார். இந்தப் பரிந்து பேசுதல் நமதுமேல் வரும் துன்பங்களை விலக்கி நமக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் சம்பாதித்து தம்முடைய தயவுகளை நம்மேல் பொழிகிறது. இப்போதும் நமக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். இரத்தத்தை தெளித்து தூபத்தைச் செலுத்துகிறார். அவர் ஆசாரியர் மட்டுமல்ல. பிரதான மகா பிரதான ஆசாரியர். அவர் மகத்துவத்திலும் வல்லமையிலும் மகிமையிலும், இலட்சணங்களிலும் அவர் ஊழியங்களின் பலனிலும் அவருக்கு மேலானவர் ஒருவரும் இல்லை. இவரே நம்முடைய மகா பிரதான ஆசாரியர். இவர் தேவக் குமாரனாகவும் நமக்கு இருக்கிறார். நமக்காக அவர் தேவ சமுகத்தில் நிற்கிறார். இன்று இரவு அவர் நமக்காகத் தம்முடைய இரத்தத்தைச் சமர்பிக்கிறார்.

அவர் பிதாவின் சமுகத்தில்
நமக்காகப் பரிந்து பேசுவார்
அவரிடம் ஒப்புவித்ததெல்லாம்
நலமாய் முடிப்பார்.

இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே

ஓகஸ்ட் 26

“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11

நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.

கிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.
இவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.

தேவ ஞானம் நடத்தும்
தேவ கிருபை தாங்கும்
ஒன்றும் அறியா பாவி நான்
தேவ சித்தம் என் பாக்கியம்.

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06

“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5

தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.

இப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன? அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.

உமது சமுகம் தரிசிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
கர்த்தரைத் தேடிய
இஸ்ரவேலர் வெட்கப்பட்டதில்லை.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து….

ஒகஸ்ட் 10

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து…..”  1.நாளா.22:18

விசுவாசிக்குக் கிடைத்திருக்கும் பெரிய சிலாக்கியம் கர்த்தர் எப்போதும் அவனோடிருப்பதுதான். நான் உன்னோடிருப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் தகப்பனைப்போல உனக்காக கவலைப்படும் சர்வ வல்லமையுள்ள தேவனாக உன்னை பாதுகாக்க உன்னோடு இருக்கிறார். வருத்தத்தில் உனக்கு ஆறுதல் தரவும், கலக்கத்தில் உன்னை நடத்தவும், பெலவீனத்தில் உன்னைப் பெலப்படுத்தவும், மோசத்திலிருந்து உன்னைத் தப்புவிக்கவும், அவர் உன்னோடிருக்கிறார். தேவன் சொன்னபடியே இப்பொழுதும் செய்து வருகிறார். சோர்ந்த ஆத்துமாவே, சோதிக்கப்பட்ட துன்பப்பட்ட கிறிஸ்தவனே, வியாதிப் படுக்கையில் கிடைக்கும் பக்தரே, தேவன் உன்னோடு இல்லையா? உன் தேவனேயன்றி உனக்குதவி செய்தது யார்? உன்னைத் தாங்கி உனக்குச் சவரட்சணை செய்வது யார்? நம்பிக்கையற்றுப் போகாதபடிக்கு உன்னைக் காப்பாற்றுகிறது யார்? அவர் உன்னோடு இருக்கிறார்.

அப்படியானால் ஏன் நீ பயப்படுகிறாய்? ஏன் முறையிடுகிறாய்? அவரை நோக்கிப் பார். அவரை நோக்கிக் கூப்பிடு. அவரிடம் கெஞ்சு, அவரை நம்பி, கர்த்தர் உன்னோடிருப்பாரானால் சாத்தானையும், உலகத்தையும் மரணத்தையும்கூட எதிர்த்து அவைகளை மேற்கொள்வாய். இன்றிரவு, தேவன் உன்னோடிருக்கிறாரென்று உணர்ந்துகொள். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். ஆகவே, நான் பயப்படேன் என்று சொல், நான் நம்பி பயப்படாமல் இருப்பேன். ஏனென்றால் கர்த்தராகிய யோகோவா என் பெலனும் என் கீதமுமானவர். அவர் என் இரட்சிப்புமாய் இருக்கிறார்.

தேவன் நம்மோடிருக்கிறார்
சேனையின் கர்த்தர் அவரே
அவர் நமக்குத் துருகம்
அவரே நமது அடைக்கலம்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

ஓகஸ்ட் 17

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” கொலோ. 4:2

எப்போதும் ஜெபம் அவசியம். அது எப்பொழுதும் பயனுள்ளதுதான். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபத்தை சுருக்கி விடுகிறோம். இது பாவம். இது தேவனைக் கனவீனப்படுத்தி, நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஜெபிக்கும்போது தேவ குணத்திற்கு ஸ்தோத்திரம் சொல்லுகிறோம். அவர் எங்கும் இருக்கிறதை விசுவாசிக்கிறோம். நமது தேவைகளைச் சந்திக்கும் தஞ்சமாக நுழைகிறோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு உண்மையைத் தெரிந்தெடுக்கிறோம். ஜெபத்தில் உள்ளான எண்ணங்களைத் தேவனுக்குச் சொல்லுகிறோம். நமக்கு இருக்கும் சந்தோஷத்தையும், துக்கத்தையும், நன்றியையும், துயரத்தையும் விவரித்துச் சொல்லுகிறோம். நமது குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று தேவனிடம் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நமது விருப்பங்களை வெளியிட்டு நம்முடைய நிலையை அவருக்கு முன்பாக விவரிக்கிறோம்.

ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் நடுவே செல்லுகிற வாய்க்கால். அதன் வழியேதான் நாம் தேவனுக்கு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தெரிவிக்கிறோம். அவர் நமக்கு அறிவையும், பலத்தையும், ஆறுதலையும், கிருபையையும் அனுப்புகிறார். ஜெபிப்பது நமது கடமை. இது பெரிய சிலாக்கியம். நமது வேலைகள் ஜெபத்தை அசட்டை செய்யும்படி நம்மை ஏவும். ஆனால் ஜெபத்தில் உறுதியாயும், கருத்தாயும், நம்பிக்கையாயும், விசுவாசமாயும், விடாமுயற்சியுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் ஜெபத்தை விரும்புகிறார். சாத்தானோ அதைப் பகைக்கிறான். நாம் எப்பொழுதும் முழங்காலில் இராவிட்டாலும் ஜெபசிந்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது அவசியம், பிரயோஜனமானது. தேவன் அங்கிகரிக்கத்தக்கது. மெய்க் கிறிஸ்தவன் அதை மதிக்கிறான்.

ஜெபியாவிட்டால் கெடுவேன்
கிருபைத் தாரும் கெஞ்ச
உம்மைச் சந்திக்க வருகையில்
என்னிடம் நீர் வாரும்.

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07

“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11

இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.

எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.

தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்

ஓகஸ்ட் 16

“உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்” சங்கீதம் 89:16

இவர்கள் தேவனுடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நமக்கென்று ஒரு நீதியே கிடையாது. அவரே நமக்கு நீதியைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்த நீதியை இலவசமாய்த் தருகிறார். இந்த நீதியை விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம். நமது கிறிஸ்தவ மார்க்கம் விசேஷமானது. நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் ஞானத்தினால் நாம் ஞானிகளாகிறோம். நம்முடைய மூத்த சகோதரன் இயேசுவால் நாம் ஐசுவரியவான்களாகிறோம். நம்முடைய இரட்சகரின் நீதியால் நாம் நீதிமான்களாகிறோம். இந்தச் செய்தி நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்தி, ஆத்துமாவைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது. இந்த நீதியில் நாம் குற்றவாளி என்று தீர்க்கிற நியாயப்பரமாணத்தின் வல்லமைக்கும் சாத்தானுடைய பொல்லாத தந்திரத்திற்கும், கொடிய உலகத்துக்கும், மரணத்தின் பயங்கர வேதனைக்கும் மேலாக உயர்த்தப்படுகிறோம்.

இது சமாதானத்திற்கும் தேவ நேசத்திற்கும் புத்திரசுவிகாரத்திற்கும் தேவ சமுகத்து நம்பிக்கைக்கும், கிறிஸ்துவோடு உன்னத ஸ்தலத்தில் உட்காருகிறதற்கும், நித்திய மகிமைக்கும் நம்மை உயர்த்துகிறது. இது தேவனுடைய தன்மைபற்றியும், கிறிஸ்துவின் அன்பான கிரியைபற்றியும் மேலான எண்ணம் கொள்ளச் செய்கிறது. நாம் இந்த நீதியை மதித்து, நித்தம் தரித்துக் கொண்டு தேவன் நம்மை அங்கீகரிக்கிறதற்கு நன்றி சொல்வோமாக. இந்த நீதி நம்முடைய கலியாண வஸ்திரம், அழியாத கேடகம், பரம வாழ்வை நம்மை சுதந்தரிக்கச் செய்யும் பத்திரம். இந்த நன்மை நம்மை ஷேமப்படுத்தி, ஆறுதல்படுத்தி, பலப்படுத்தி, மேன்மைப்படுத்துகிறது.

எல்லாரும் பட்டு வஸ்திரம்
உடுத்தி மகிழட்டும்
என் போர்வை கிறிஸ்துவின் நீதியே
இது என்றும் எனக்குள்ளதே.

Popular Posts

My Favorites

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04 "உன் சத்தத்தை நான் கேட்கட்டும்" உன். 2:14 இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர்...