செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர்

நான் உமது சத்தியத்திலே நடப்பேன்

செப்டம்பர் 20

“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11

தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.

ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.

அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை

செப்டம்பர் 15

“அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை” தானி. 4:35

தேவனுடைய கை என்பது அவருடைய செயல். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் விளங்கும் அவருடைய ஞானம், வல்லமை, மகத்துவம் போன்றவைகளே. அவுருடைய நோக்கத்தை அறிந்து கொள்ள ஒருவனாலும் கூடாது. அவர், தமது நோக்கத்தை உறுதியாய்ச் கொண்டு செயல்படுகிறார். எக்காரியமாயினும் அவர் மிகவும் எளிதாக முடித்துவிடுவார். அவர் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய கரங்களில் இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் பாதுகாப்பாக இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் கிரியை செய்கிறபடியால் சேதமின்றி வாழ்கின்றனர். அவர் தம்முடைய வசனங்களுக்கேற்பத் தமது செயல்களை நடப்பிக்கிறார்.

அவர் சொன்னது சொன்னபடி நிறைவேற வேண்டும். நாம் நம்மை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டால் சுகபத்திரமாயிருக்கலாம். அன்பானவர்களே, தேவனுடைய கரம் உங்கள்மேல் உயர்ந்திருக்குமானால், உங்களுக்கு ஒரு குறைவும் வராது. அவருடைய கைகள் உங்களைத் தாங்குகிறபடியால் நீங்கள் விழமாட்டீர்கள். அவருடைய கரத்தின் செயல்கள் யாவும் உங்களுக்கு நம்மையாகவே முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய சத்துருக்களிடமிருந்து அவருடைய கை உங்களை மீட்கும். உங்களை ஆதரித்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கும் வனாந்தரத்தில் நடந்தாலும் அவருடைய கரத்தால் நீங்கள் காக்கப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அனைத்தையும் அவருடைய கரம் ஒழுங்குபடுத்தும். சொல்லிமுடியாத அன்பினால் அவருடைய உள்ளம் நிறைந்திருக்கும். உங்களுக்காக அவர் செயல்படும்பொழுது, எவராலும் அவரைத் தடுத்து நிறுத்தமுடியாது.

தெய்வ கரங்கள் தாமே உனை
பெலப்படுத்தி என்றும் காக்கும்
தம் வாக்குகளை நிறைவேற்றி
எப்போதுமவர் வெற்றிதருவார்.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

உண்மையுள்ள தேவன்

செப்டம்பர் 30

“உண்மையுள்ள தேவன்” உபா. 7:9

மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில் யாவற்றையும் மனம் திறந்து சொல்லலாம். அவர் உண்மையுள்ளவராகையால் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறார். நம்மைக் கண்டிக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்கு அறிவிக்கிறார். துன்பங்களில் நம்மை ஆதரித்து, நம்முடைய கஷ்டங்களில் நம்மை மீட்கிறார். நமது பகைவரை வென்று அடக்குகிறார். நமது இருளான நேரங்களில் நமக்கு வெளிச்சம் தருகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பது நமக்குக் கிடைக்கும் தேவ இரக்கத்திலும், நம்மைப் பாதுகாக்கும் கிருபையிலும், நமது குறைகளிலும், நாம் சுமக்கும் சிலுவையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மகத்துவங்களை நமக்குக் காண்பிக்கவும், தமது வசனத்தை அதிகாரத்துடன் செலுத்தவும், நம்முடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவும் தமது சித்தத்தைச் செயல்படுத்தவும், நமக்கு சகல நன்மைகளைப் பொழியவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏதேன் தோட்டத்திலிருந்து பாவம் செய்த ஆதாமை வெளியேற்றினதாலும், பெருவெள்ளங்கொண்டு பாவிகளான மக்களை நோவாவின் காலத்தில் அழித்ததினாலும், பாவ மக்களை மீட்கத் தமது குமாரனையே தந்ததினாலும், நமது ஆன்மீக வாழ்க்கையில் நம்மைத் தாங்கி திடப்படுத்தத் தம் ஆவியானவைர அருளினதாலும் அவருடைய நீதியும் உண்மையும் விளங்குகின்றன. அவர் நமது அடைக்கலம். கன்மலை. இளைப்பாறுதல். அவர் உண்மையுள்ளவராதலால் நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக.

கர்த்தர் மேல் வைத்திடு
உன் பாரமனைத்தையும்
உண்மையுள்ள அவர் தாம்
உன் பளு நீக்கிக்காப்பார்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?

செப்டம்பர் 16

“மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மல். 3:8

இந்த கேள்வி மிகக் கேவலமானது. மனிதன் தேவனை வஞ்சிப்பதென்பது எத்தனை துணிகரமான செயல்! நாம் தேவனை எவ்வாறு வஞ்சிக்கிறோம். அவருக்குச் சொந்தமானவைகளை நாம் எடுத்துக்கொள்ளாமற்போனாலும், நாம் அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தாமலிருந்து அவரை வஞ்சிக்கிறோம். ஆதலால், அவர் நம்மைப் பார்த்து, நீங்கள் என்னை வஞ்சித்தீர்கள் என்கிறார். அவருடையவைகள் யாவற்றிலும் நாம் அவரை வஞ்சிக்கிறோம். அவருக்காகச் செலவிட வேண்டிய அவருடைய நேரத்தை எடுத்துக்கொண்டோம். அவருடைய பொருளைத் திருடிக்கொண்டோம். பிறருக்குக் கொடுக்க வேண்டியவைகளை நமக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டோம். அவருடைய ஊழியத்தை நாம் செய்வதில்லை.

நம் இருதயம் அவருக்குச் சொந்தம். நாம் அதைக் கொடுக்கவில்லை. மாறாகச் சிலுவைகளுக்குக் கொடுத்தோம். உலகத்தையே அதிகம் நாடி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நேசித்தோம். அவர் தந்த திறமைகளை அவருக்கென நாம் பயன்படுத்தவில்லை. அவருடைய பணிகளை விட்டு நமது பணிகளையே செய்தோம். இப்படி நடப்பது பாவம். அவரை வஞ்சிப்பது கொடுஞ்செயல். நம்மால் அவருடைய கோபத்திற்குமுன் இமைப்பொழுதுகூட நிற்கமுடியாது.

பிரியமானவர்களே, தேவனை நாம் வஞ்சித்துக்கொண்டிருக்கிறோமா? இவ்வாறானால் உடனே நமது குற்றத்தை அறிக்கை செய்துவிட்டு விடுவோம். நமது மீறுதல்களை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்வோம். முதலாவது தேவனுக்குரியவைகளை அவருக்குச் செலுத்துவோம். நமது உள்ளத்தில் உண்மையும், நடக்கையில் உத்தமமும் இருந்தால் எத்தனை நலமாயிருக்கும்.

நான் உம்மை வஞ்சித்தேன்
நாதா என்னை மன்னியும்
கிறிஸ்துவின் இரத்தம் மீட்டதால்,
என்னைக் கடாட்சித்தருளும்.

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்

செப்டம்பர் 25

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7

சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.

தேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.

தயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்
தம் மக்களை ஒருபோதும் மறந்திடார்
அவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து
அவர் நாமம் போற்றித் துதிப்பேன்.

Popular Posts

My Favorites

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29 "நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்" 1.சாமு 14:36 நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான்...