செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர் பக்கம் 2

அதனால் என்னை மறந்தார்கள்

செப்டம்பர் 19

“அதனால் என்னை மறந்தார்கள்” ஓசியா 13:6

ஆண்டவர் இஸ்வேலரை ஏன் கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தார்? அவர்களுக்கு ஏன் வளமான, செழிப்பான வாழ்வைத் தந்தார்? அவர்கள் அவருடைய மக்கள் என்பதற்காகவே. ஆனால் அவர்கள் தன்னலத்திற்கு இடம் கொடுத்து, பெருமையையும், மேட்டிமையையும் அடைந்தார்கள். அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகளைச் செய்த தேவனை மறந்தார்கள். நாம் எப்பொழுதும் துன்பத்தை அல்ல நன்மையையே நாடித் தேடுகிறோம். ஆனால் சோதனைகளை அனுபவித்து வெற்றி பெற்றவர்களோ, நன்மையோ தீமையோ எது வந்தாலும் ஒரே சீராக இருப்பார்கள். நம்முடைய இதயம் தேவனைவிட்டு வழுவிக் கீழான காரியங்களில் பாசம் வைக்கிறது. மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்கும்பொழுது ஆவிக்குரிய கடமைகளுக்கும், முயற்சிகளுக்கும் தகுதியில்லாதவர்களாகிறோம். பரத்துக்கடுத்த காரியங்கள் நமக்கு மகிழ்வளிப்பதில்லை. மாம்சத்தைப் பெரிதுபடுத்துவதில் பலன் இல்லை.

தேவ கிருபையையும், அவர் நமக்குச் செய்த சிறப்பான நன்மைகளையும் மறந்துவிடுகிறோம். தேவனுக்குரிய கடமைகளைச் செய்யத் தவறிவிடுகிறோம். நமது இருதயம் கடினமாகிறது. தேவ அன்பை மறந்துவிடுகிறோம். நமது மனட்சாட்சி மழுங்கிவிடுகிறன. மனம் கடினமாகிறது. இவ்வாறு நாம் ஆவதற்குச் சாத்தானும் துணை செய்கிறான். வேதவசனங்களையும், வேதவசனங்களையும், தேவனுடைய கிருபாசனத்தையும் வெறுக்கிறோம். ஜெபவாழ்வு மறைகிறது. உலகப்பற்று அதிகமாகிறது. அன்பரே, நமக்கு ஆண்டவர் காட்டின அன்பையும், நாம் அவருக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் மறவாதிருப்போம். நம்முடைய தவறுகளை உணர்ந்து, விழிப்புடன் இருப்போம். நன்றியறில் உள்ளவர்களாக வாழ்வோம். மரணபரியந்தம் நம்மை நடத்தவல்ல ஆண்டவரை மறவாதிருப்போம்.

உம் நல்ல பாதைதனை விட்டேன்,
சமாதானமின்றிக் கெட்டேன்
இயேசுவின் பாதம் இனிப்பிடிப்பேன்
மீண்டும் சுகித்து வாழ்ந்திடுவேன்.

மரணபரியந்தம் நம்மை நடத்துவார்

செப்டம்பர் 11

“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14

இந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா? நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.

நாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.
அவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.

என்றும் மாறாதவர் நமது தேவன்
நித்தம் நம்மை நடத்துவார் அவர்
மரணம் மட்டும் நம்மைக் காப்பார்
நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.

நான் உமது சத்தியத்திலே நடப்பேன்

செப்டம்பர் 20

“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11

தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.

ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்

செப்டெம்பர் 07

“அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்…… என்கிறார்கள்” யோபு 21:14-15

அக்கிரமக்காரர் இப்படிச் சொல்லுகிறார்கள். தேவ சமுகம் அவர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. தேவன் இல்லாமல் வாழ்வது இவர்களுக்கு அதிக பிரியம். தேவன் ஒருவர் இருக்கிறபடியால், அவர் தங்களைவிட்டுத் தூரமாய் இருக்க வேண்டும் என்கிறார்கள். நீங்களும் அப்படியே இருந்தீர்கள். உங்கள் முன்னிலைமையும் அப்படியே இருந்தது. இப்பொழுதுதோ தேவ சமுகத்தை விரும்புகிறீர்கள். இது தேவனுடைய அன்பினால் உண்டானது.

தேவனுடைய மகிமையைக் கண்ட நீங்கள், அவரின் அடைக்கலத்திற்குள் இருக்கிறபடியால் உங்களுக்கு ஒன்றும் கேடானதுநேரிடாது என்று அறிந்திருக்கிறபடியால் உலகிற்கு வெளிப்படுத்தாத விதமாய் உங்களுக்குத் தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறீர்கள். நீங்கள் ஆண்டவரைப் பார்த்து எங்களை விட்டு விலகி இரும் என்று சொல்லாமல், என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாய் இருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்பீர்கள். தேவனே, எங்களைவிட்டு விலகி இரும் என்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டு பிசாசுக்கும், அவன் தூதருக்கும், ஆயத்தம் பண்ணப்பட்டு இருக்கிற நித்திய அக்கினிக்கும் போங்கள் என்று அவர் சொல்வதை ஒரு நாள் அவர்கள் கேட்பார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கும் எங்கள் இருதயத்துக்கும் அவர் வந்து தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களைப் பார்த்து, வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலக தோற்றத்துக்கு முன்னே உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள் என்று அவர் அழைப்பார்.

தேவனைப் பார்த்து நான்
என்னிடம் இருப்பேன் என்பேன்
என் இருதயத்தில் வாசஞ்செய்து
என்னை முழுதும் ஆண்டுக்கொள்ளும்.

நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்

செப்டம்பர் 12

“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9

நோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.

அவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா? அவரோடுகூட நடக்கிறோமா? அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா? இன்று அவரோடே நடந்ததுண்டா? தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா? அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா? தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.

லோகம் ஆளும் ஆண்டவர்தாம்
என் உயிர் நண்பராம்.
அவரோடு சஞ்சரிப்பேன்
என்றும் பெரும் பேறு பெறுவேன்.

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.

நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

செப்டம்பர் 10

“நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” சங். 86:11

கர்த்தருக்குப் பயப்படுகிறதென்றால் அவர் வார்த்தையே நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துகிறதே ஆகும். அவருடைய நாமத்தில் பக்திவைராக்கியம் கொள்வது, அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்து, அவரை விசனப்படுத்தாமல் இருப்பது அவரைத் தொழுவது ஆகும். ஆராதனை என்பதில், துதி, தோத்திரம், ஜெபம் ஆகியவை அடங்கும். முழு உள்ளத்தோடு செய்யாத ஆராதனை ஒன்றுக்கும் உதவாது. தேவனைத் தொழுதுகொள்ளும்பொழுது, நமது சிந்தனை அவர்பேரில் இல்லாது சிதறிப்போவதுண்டு. இதனால்தான் நாமும் சங்கீதக்காரனைப்போல், உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இதயத்தை ஒரு முகப்படுத்தும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.

அதாவது, சமாதானமாய் இருக்கவும், தேவ சமுகத்தில் களிகூர்ந்து ஆராதனை செய்யவும் இது முக்கியம். இவ்வாறு நாம் ஜெபிக்கும் பொழுது, நாம் தேவ ஆராதனையில் பிரியம் கொள்வோம். பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஊழியம் செய்யத்தக்க கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தேடுவோம் என்று காட்டுகிறோம் பரிசுத்தவான்கள்கூட இருதயத்தை அலையவிடுவதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தடைப்படுகிறார்கள். சில நேரங்களில் நாமும் அவ்வாறு உணர்வதுண்டு. இந்நிலையிலுள்ளவர்கள், மந்தமனமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் உற்சாகமில்லாமல், இரண்டுங்கெட்டானாயிருப்பார்கள். அவர்கள் தாவீதைப்போல ஜெபிக்க வேண்டும். அப்பொழுது மேலான தேவசமாதானம் இவர்களுடைய சிந்தையை ஆளும். இருதயத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்குப் பயந்திருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளருங்கள்.

என் இதயம் அலைந்து
திரியாமற் செய்திடும்
உம்மையே பற்றி நிலைத்து
வாழ்ந்திருக்க உதவிசெய்யும்.

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

செப்டம்பர் 18

“அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்” கலா. 5:13

தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எக்காரியமானாலும் அதன் வேர் அன்புதான். அன்பு விசுவாசத்திலிருந்து ஆரம்பமாவதால், எல்லா நற்கிரியைகளையும், பிறருக்கு நாம் செய்கிற எச்செயலையும் அன்பில்லாமல் நாம் செய்தால் அதில் பலன் இருக்காது. கிறிஸ்தவத்தில் அதிமுக்கியமான காரியம் அன்புதான். வரங்கள் மேன்மைகள், புகழ், தியாகம் இவை யாவுமே இருக்கலாம். ஆனால் அன்பு இல்லாவிடில் வெறும் கைத்தாளம்போலவே இருப்போம். சப்தமிடுகிற வெண்கலம் போலத்தானிருப்போம். மனித இயற்கை பிறர்மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறது. உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எத்தனையோ பேருக்கு நன்மை செய்திருக்கக்கூடும். பிறருக்கு உதவி செய்ய உங்களுக்கு மனம் வந்ததா? அவர்கள் உயர்ந்து விடுவார்களோ என்று நீங்கள் நினைக்கவில்லையா? எங்கே உங்கள் அன்பு? அன்பு காட்டாத நீங்கள் கிறிஸ்தவர்களா?

அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது. இதுதான் நற்செய்தியின் சிறப்பு. தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பு அவரைப் போன்றது. அன்பு நோயாளிகளை குணமாக்கும். துயரத்தில் ஆறுதல் தரும். ஆடையற்றோருக்கு ஆடையளிக்கும். பசித்தவர்களைப் போஷிக்கும். வறியவர்களை வசதியுள்ளவர்களாக்கும். வனாந்தரமான இவ்வுலகம் அன்பினால் செழிக்கும். அன்பினால் ஏவப்பட்டுக் கைமாறு கருதாது நன்மைகளைக் செய்யுங்கள். தூய்மையான மனதுடன் ஓருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? அன்பில் வளருகிறீர்களா? அல்லது பெருமை, பொறாமையில் வளருகிறீர்களா? தூய அன்போடு அன்புகூருங்கள். கிறிஸ்துவின் மக்களிடம் அன்புகூர்ந்து, அவர் தம்மைப் பகைத்தவர்களிடம் அன்புகூர்ந்ததுபோல் நடவுங்கள். அப்பொழுது பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

ஓர் இடம் போய்ச்சேருவோர்
ஒரே நம்பிக்கையுள்ளவர்கள்
அன்பின் கட்டால் ஒருமித்து,
மகிழ்ந்து வாழ்வார் சுகித்து.

Popular Posts

My Favorites

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது

யூலை 23 "தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்... ஆமென் என்றும் இருக்கிறதே" 2.கொரி. 1:20 சூரியனில் வெளிச்சம் எல்லாம் இருப்பதுப்போல கிருபை எல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசுவில் ஒன்று சேர்கின்றன....