நவம்பர்

முகப்பு தினதியானம் நவம்பர்

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23

“அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து” எசேக். 7:16

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விசுவாசி தன்னை நேசிக்கிற தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது பரிசுத்தமும், நீதியும் நன்மையுமான தேவனுடைய கட்டளையை மீறினேனே என்று துக்கித்துப் புலம்புவான். அவன் தனக்குள்ளே இருக்கும் பாவத்தைக் குறித்து துக்கிப்பான். அந்தப் பாவம் அவனுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கும். தன் பாவத்திற்காக அவன் விசனப்படுவான். அவன் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறானோ அப்பொழுதெல்லாம் விசனமடைவான். அந்நேரங்களில் அவன் சந்தோஷத்தைக் காண முடியாது. ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனல்ல.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று அவன் அறிவான். தன்னை நேசிக்கும் தேவன் மனந்திரும்பும் பாவியை அங்கிகரிப்பாரென்று அவனுக்குத் தெரியும். ஒருவன் தேவனை எவ்வளவாய் நம்புகிறானோ, எவ்வளவாய் அவரின் அன்பை ருசிக்கிறானோ, அவ்வளவாக அவன் பாவம் செய்தபொழுதெல்லாம் அவனுடைய துக்கம் அதிகரிக்கும். தான் அவரோடு சஞ்சரித்த நாள்களையெல்லாம் நினைத்து, நினைத்துச் சஞ்சலப்படுவான். அவன் படும் துக்கம் அவனுக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் கொண்டு வரும்.

நண்பரே, நீர் உமது பாவங்களுக்காக துக்கப்படுகிறதுண்டா? பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு, அதன் சந்தோஷத்தை அடைந்த அனுபவம் உமக்கு உண்டா? அப்படி துக்கிக்கவில்லையென்றால், இப்பொழுது உம் பாவத்திற்காய் கண்ணீர் சிந்தும், அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.

என் பாவங்களுக்காகவே
நான் துக்கித் தழுவேனாக
துயரப்படுவோர் யாவரும்
பாக்கியராவார் பின் நாளில்.

எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்

நவம்பர் 25

“எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்” யோபு 7: 16

ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வடைந்து, நாம் மரணத்தை விரும்புகிறோம். துன்பப்படுபவர்கள்தான் ஜீவனை வெறுத்து உயிர் வாழ விரும்பவில்லை. என்பர். நாமும் இவ்வாறு கூறியிருக்கிறோம். நாம் உயிரோடிருக்குமளவும் பாவம் செய்யத் தூண்டப்படுவோம். அதனால் வருத்தம் அடைவோம்.

தன் சொந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் அந்நியனாகப் குடியிருக்க யார்த்தான் விரும்புவார்? நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுதான். இப்பூமி நமது நிரந்தர உறைவிடமில்லை. நெடுநாள்களும் நாம் வாழப்போவதில்லை. இவ்வுலகில் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்று கவலை கொள்ளாமல் பயனுள்ளவர்களாக, மகிழ்ச்சியுடள் நமது காலங்களைச் செலவிடுவோமாக. ஆத்துமாக்களுடைய நன்மைக்கென்று, சபையின் வளர்ச்சிக்கென்று, கிறிஸ்து நாதரின் மகிமைக்கென்று, நாம் பாவத்தை வெறுத்து சாத்தானை எதிர்த்து நமது வாழ்க்கையை நடத்துவோம். நித்திய ஜீவன் நமக்காகக் காத்திருக்கிறது. அப்படி நாம் வாழ்ந்தால் வாழ்க்கையின் மன நிறைவடைவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம். கிறிஸ்துவின் மேல் சார்ந்து அவருக்காக, கூடியமட்டும் அவரைப்போல வாழ்வோம். அவருடைய மகிமையில் வளர்ந்து, அவருடைய பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள அவரோடு சஞ்சரிப்போம்.

பாவம் செய்தே வாழ்ந்திடேன்
பாவம் விட்டுப் பரிசுத்தமாக வாழ
பரிசுத்தரே உம்திரு தயவால்
பாவியேன் முயல்வேன் என்றும்.

தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.

என்ன செய்தேன்

நவம்பர் 12

“என்ன செய்தேன்?” எரேமி. 8:6

ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.

நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.

குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.

தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

நவம்பர் 07

“தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்” அப். 28:15

பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும் நாம் நன்றி கூற வேண்டும். நன்மையான எதுவானாலும் தேவனிடத்தில் இருந்துதான் வருகிறது. சகல நன்மைகளுக்கும் அவர்தான் காரணர். ஆகவே, ஒவ்வொரு நாளும் அவருக்கு துதிகளைச் செலுத்த வேண்டும். அவர் நம்மை மோசங்களிலிருந்து காத்து, துன்பங்களிலிருந்து விடுவித்து, தயவாக நன்மைகளைக் செய்கிறார். ஆகவே இப்போது நாம் அவருக்கு நன்றி சொல்லுவோம்.

இனிமேல் நமக்கு நேரிடும் குறைவுகளில் நமக்குத் தேவையானதைத் தருவார். நமக்காக சிறப்பான வாக்குகளைக் கொடுத்திருக்கிறார். சகலமும் நமது நன்மைக்காக கிரியை செய்ய நிச்சயம் செய்திருக்கிறார். தேவன் நம்மைக் கைவிடுவதில்லை என்று வாக்களித்திருக்கிறார். ஆகவே, தைரியமடைந்து துதி செலுத்தி, நன்றியுள்ளவர்களரிருப்போம். நமது வழி கரடு முரடானதாக இருக்கலாம். சத்துருக்கள் நிறைந்ததாக இருக்கலாம். துன்பங்கள் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும், நம்முடைய பெலன் அதைத் தாங்க போதுமானதாக இருக்கலாம். நமக்குத் தேவையானது கட்டாயம் கிடைக்கும். நமது காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார். இனி சாத்தான் சொல்வதைக் கேளாதே. அவிசுவாசத்திற்கு இடங்கொடாதே. நமக்கு இனி என்ன நடக்கும் என்று பயப்படாதே. இதுவரையில் நம்மை விடுவித்தவர் இன்னும் நம்மை விடுவிப்பார். இதுவரை கர்த்தர் செய்தவைகளை எண்ணிப்பார். உனக்கு அவர் காட்டின இரக்கத்தை சிந்தி. அவர் வாக்குகளை நினை. அதற்காக நன்றி கூறு.

இயேசுவே மீட்டு வழிநடத்தும்,
உம்மை நம்பி நடப்பேன் உம்மோடு
உம் நடத்துதலுக்காக நன்றி
உம் வாக்குகளுக்காக நன்றி.

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24

“கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” ரோமர் 5:6

பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும் அவர் மரித்தார். இவ்வாறானவர்களுக்காக மரிப்பதுமான் மிகப் பெரிய தயவு. நல்லவர்களுக்காகவும், பக்திமான்களுக்காகவும் மரித்திருப்பாரானால், இப்பாவிகளாகிய நமக்காக மரிக்கவில்லையென்று நாம் சொல்லி விடலாம். ஆனால் இயேசுவோ அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் இப்படிப்பட்ட அக்கிரமக்காரரே. நாம் அவரை விசுவாசிப்போமானால், நமக்காகவேமரித்தார் என்று அறிவோம். நமக்குப் பதிலாக, நமக்கு பிணியாளியாக அவர் மரித்தார். நான் மரணத்தை அனுபவியாதிருக்க அவர் மரித்தார். நாம் அவருக்குள் நீதியாகும்படிக்குப் பாவமில்லாத அவர் பாவிகளான நமக்காக மரித்தார்.

அக்கிரமக்காரர்களும், பாவிகளுமான நாம் பிழைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை நினைத்து ஆறுதல் அடைவோமாக. நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவரே, நமது சரீரத்தில் நம் பாவங்களைச் சுமந்தார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம். இனி நாம் மரிப்பதில்லை. நமது பாவங்களுக்காகப் பிரதிபலன் செய்தாயிற்று. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தாயிற்று. அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்தார். என்னிடத்தில் விசுhசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். மாட்சிமை நிறைந்த மீட்பரே உமது அளவற்ற அன்புக்காக எவ்வாறு உம்மைத் துதிப்போம்.

சிலுவையில் என்க்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்துவே
உம் அன்பிற்காகவென்றும்
உம்மைத் துதி செய்வோம்.

அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்

நவம்பர் 28

“அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” யோபு 13:15

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பதைத்தவிர நாம் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. இவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பதே நலமாகும். நம்பியிருப்பதையன்றி நாம் வேறு ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் என் சொத்துக்களை என்னைவிட்டு அகற்றி, என் சுகத்தை நோயாகமாற்றி, என் நண்பர்களை எனக்கு பகைஞராக்கிக் கர்த்தர் தமது முகத்தை எனக்கு மறைத்துக் கொண்டால், நான் என்ன செய்வது? ஆம் அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும். இவைகள் போதாதன்றி பட்டயம் கரத்திற்கொண்டு அவர் என்னைக் கொல்லு முயற்சித்தால் என்ன செய்வது? அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும்

உனக்கு அவருடைய வாக்குகள் இருக்கிறன. அவ்வாக்குகளை அவர் மாற்றார். நிறைவேற்றாது போகார். அவர் உண்மையுள்ளவர். அன்புள்ளவர். அழுகிற குழந்தையைத் தாய் அணைப்பதுபோல், உன்னை அவர் அணைத்துக் கொள்வார். அவருடைய சிம்மாசனத்தின்முன் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி கேட்கும்போது, அவர் தமது வாக்குகளை நிறைவேற்றியே தீருவார். அவரை நம்பியிரு. அவர் உன் விசுவாசத்தை சோதிக்கிறார். இனி அவர் உனக்குத் தரவிருக்கும் பாக்கியங்களை எண்ணி மகிழ்ந்திரு. அவர் அனுப்பிய சோதனைக்காக நீ ஒரு நாள் அவரைத் துதிப்பாய். அவர் உன்னை சோதித்தபின் நீ பொன்னாக விளங்குவாய். எப்பொழுதும் கர்த்தரையே நம்பியிரு. என்ன நேரிட்டாலும் அவர்மீது கொண்ட நம்பிக்கையை விடாதே.

தேவனே, உம் கரம் என்னை
எவ்வழி நடத்தினாலும் நலமே
உம் அன்பே எனை நடத்துவதால்
உம்மை நம்பி நிற்பேன்.

இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்

நவம்பர் 16

“இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்” எபி. 13:8

தேவனுக்கிருக்கும் முக்கியமான தன்மைகளின் ஒன்று அவர் மாறாதவர் என்பது. இப்பண்பு அவருக்கு மட்டுமே பொருந்தும். இதைக் கொண்டே அவர் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால், யாக்கோப்பின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை என்கிறார். கர்த்தராகிய இயேசுவும் தெய்வத்தன்மை உடையவர். ஆகவே, அவர் என்றும் மாறாதவராகவே விளங்குகிறார். தமது மகத்துவமான தன்மையிலும், உள்ளான நோக்கங்களிலும், உபதேசங்களிலும், தமது அளவற்ற அன்பிலும், முழு வல்லமையிலும், இரக்க உருக்கத்திலும், கிருபை நிறைந்த புண்ணியத்திலும், பாவத்தை அவர் வெறுக்கும் வெறுப்பிலும், அவர் என்றும் மாறாதவர்.

இவ்வாறு அவர் மாறாதவராய் இருப்பதினால்தான், அவரை நாம் மாறாத தேவனாகப் போற்றுகிறோம். அவரையே நாம் நம்ப வேண்டும். அவருடைய சுவிசேஷத்திலுள்ள அருமையான சத்தியங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இம்மைக்குரியவற்றை வெறுத்து, மேலான வாழ்வுக்கரியவைகளை நாடவேண்டும். மாறாத நமது தேவன் ஒளியில் இருக்கிறபடியே இருளிலும் இருக்கிறார். அவர் நமது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்பதுபோலத்தான் நமது துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறார். நம்மையாயினும் தீமையாயினும் இயேசு மாறாதவர். அவர் என்றும் அன்பும் கிருபையும் நிறைந்த கிறிஸ்துதான். முதன் முதல் அவருடைய அன்பை நாம் ருசித்தபடியே இன்றும் நாம் ருசிக்கலாம். அன்று அவரில் களிகூர்ந்தவாறே இன்றும், இனிமேலும் நாம் களிகூரலாம். மாறாத இயேசு உன் ஆண்டவராயிருப்பதற்காக நன்றித் துதி அவருக்கு ஏறெடு.

யாவும் மாறிடினும்
இயேசு என்றும் மாறார்
என்றும் மாறா இயேசுவாதலால்
என்றும் அவரை நம்பிடுவேன்.

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

எபெனேசர்

நவம்பர் 19

எபெனேசர்” 1.சாமு.7:12

சிருஷ்டிகளாகிய நாம் மோசத்தில் விழக்கூடியவர்கள். வலிமையில்லாதவர்கள். அறிவீனர். நமக்கு எந்த நேரத்திலும் நமது பகைவனான சாத்தானாலும்,  அவன் வைக்கும் கண்ணிகளாலும் ஆபத்து எந்நேரமும் ஏற்படும். நாம் சிறுக சிறுகத் தவறிப்போகிறவர்கள். அச்சத்தால் பீடிக்கப்படுகிறவர்கள். இவ்வாறான நேரங்களில் நமக்கு உதவி செய்திடவே எபெனேசராக தேவன் இருக்கிறார். அவர் நம்மோடே இருந்து, தேவைப்படும்பொழுதெல்லாம் நமக்கு உதவி செய்கிறார். தேவனுடைய ஒத்தாசையினால்தான் நாம் நமது அவிசுவாசத்தையும், பாவ வாழ்க்கையையும் மேற்கொண்டோம். நமது சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்கிறோம். துன்பமும், சோதனையும் வந்தபோதும், எத்தகைய புயலுக்கும் அஞ்சாதிருந்தோம். தேவ ஒத்தாசையாலேயே இம்மட்டும் காக்கப்படுகிறோம்.

ஆகவே, நம்முடைய எபெனேசராகிய தேவனை நம்முன் நிறுத்தி நமக்கு அவர் செய்த உதவியை அறிக்கை செய்வது நமது கடமை. எல்லா உதவிகளையும் நமக்குச் செய்பவர் நமது கர்த்தரே. அவரே ஏற்ற நேரங்களில் உதவியவர். எப்போதும் அவர் நமக்கு உதவி செய்பவராயிருக்கிறபடியால், அவரைத் துதிப்போம். அவரிடத்திலிருந்து நாம் உதவிகளைப் பெற்றதால், நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவை? அவரைத் துதித்து, ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்துவோம். இவ்வாறு செய்யும்பொழுது நாம் முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். அவருடைய உதவியும் பிரசன்னமும், என்றும் நம்மோடிருக்கும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். நன்றி செலுத்தும் ஜெபங்களைத் தவறாது ஏறெடுக்க வேண்டும். எபெனேசர் இம்மட்டும் தேவன் நமக்கு உதவி செய்தார். இனிமேலும் செய்வார் என்று அவருடைய உதவிக்காகப் பொறுமையோடு காத்திருப்போம். அவர் செய்த உதவிக்கு சாட்சி சொல்லுவோம்.

இம்மட்டும் காத்தார் தேவன்
எபெனேசர் ஆதலால் போற்றுவேன்
இம்மையிலெல்லாம் நம்புவேன்
இம்மை விட்டவரில்லம் சேருவேன்.

Popular Posts

My Favorites

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03 "அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்." மீகா 7:18 தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது...