விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ

டிசம்பர் 12

“விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ” (ஏசா.50:2)

இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து வரும் உன் துன்பங்களைச் சந்திப்பார். பிறகு விடுவிப்பதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ என்று கர்த்தர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும், பிசாசின் வல்லமையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே, தேவனுடைய காரியத்தில் வரும் எப்பிரச்சனையிலிருந்தும் உன்னை விடுவிக்க அவர் வல்லவரே.

உன் தேவனால் உன்னை விடுவிக்க முடியாதா? உன்னை இரட்சிக்கக் கூடாதபடி அவருடைய கரங்கள் குறுகிப்போகவில்லை. உன் விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்க முடியாதபடி அவருடைய செவிகள் மந்தமாகிப்போகவில்லை. இல்லையென்றால் ஏன் சந்தேகப்படுகிறாய். தேவனிடத்தில் நம்பிக்கை வை. இதற்கு முன்னே அவர் உனக்குச் செய்தவைகளையெல்லாம் எண்ணிப் பார். உன்னைக் காத்தார், மீட்டார், நடத்தினார், ஆசீர்வதித்தார். இவைகளுக்காக அவரைப் போற்று, அவரைத் துதி. இனிமேலும் அவர் உன்னை நடத்துவார். அதை நம்பு. உன் அவிசுவாசத்தை விலக்கு. அவரை நோக்கிக் கூப்பிடு. அவருடைய வல்லமை உன்னை நிரப்பட்டும். என்னை நோக்கிகக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

விடுவிக்கிறவர் வல்லவர்,
ஞானம் ஆற்றல் உள்ளவர்,
நித்தியத்தின் மீது அதிகாரம்
உள்ளவர், அவரைப் பற்று, பெலன் கொள்.

உனக்கு விசுவாசம் இருந்தால்

டிசம்பர் 21

„உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22

விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம் இல்லைத்தான். இப்போது உனக்கு விசுவாசம் இருக்கிறதென்றால், அது தேவன் கொடுத்தது என்பதை மறக்காதே. உன்னில் அவிசுவாசம் இருக்குமானால், அதனோடு நீ போர் செய்து, ஜெபித்து, விசுவாசத்தைப் பெற்றுக்கொள். „கிறிஸ்துவின்மீது உனக்கு விசுவாசம் உண்டா? அவர் சொல்வது, செய்தனைத்தும் சரியானவைகளே என்று விசுவாசிக்கிறாயா? அவருடைய வார்த்தைகள் உண்மை. அவர் செய்த தியாகம் இவைகளின்மூலமாக, தமது கிருபையினால் உனக்கு நித்தியமான இரட்சிப்பைத் தந்தருளினார் என்று மனப்பூர்வமாக விசுவாசிக்கிறாயா? அவருடைய வேதத்தை முழுவதும் நம்புகிறாயா? அவர் செய்த அற்புதங்களை ஐயங்கொள்ளாமல் விசுவாசிக்கிறாயா? என்பதையெல்லாம் சோதனை செய்.

தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நீ, உன் ஆத்துமா அவர் கைகளில் ஒப்புக்கொடுக்கப் போதுமான விசுவாசம் உன்னில் உண்டா? அவருடைய ஊழியங்களை உனக்குச் சொந்தமாக்கி, நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று சொல்லும் தைரியம் உனக்கு உண்டா? உன்னுடைய பிதாவாகிய தேவனைமட்டும் விசுவாசிக்கிறாயா? உன்னுடைய தேவைகளைச் சந்தித்து, உன்னைப் போஷித்து, உன்னை வழிநடத்தும் கர்த்தர் உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவார் என்கிற விசுவாசம் உனக்கு உண்டா? உன் எதிர்காலத்தை அவருடைய கரத்தில் வைத்து நம்பிக்கையோடு காத்திருக்கிறாயா? அப்படியானால், மகிமையெல்லாம் தேவனுக்கே. இல்லையானால், தேவனை விசுவாசி, அவரையே நம்பு. தேவவார்த்தையினால் உன் விசுவாசத்தைப் பெலப்படுத்திக்கொள். கவனமாயிருந்து அவிசுவாசத்திற்கு இடம் கொடாதிரு.

விசுவாச இருதயத்தை
வன்மையுள்ளதாய்க் காத்திடும்
உமது சுவிசேஷத்தைப் பற்றியே
உறுதியாய் நிற்க உதவி செய்யும்.

தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

டிசம்பர் 09

“தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்” ரோமர் 6:23

நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு உண்டு என்றும் பாவம், துக்கம், துன்பத்தினின்று நாம் விடுதலையாகி, எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். எல்லா நாளும் சந்தோஷமாக அவருக்குப் பணிவிடை செய்வது அவர் நமக்குக் கொடுத்த பாக்கியம். அது இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஆண்டவரின் கிருபைதான். அது நமக்குக் கிடைத்தது. இதிலேதான் அவருடைய கிருபையின் மகத்துவம் விளங்குகிறது.

பாவம் செய்த தேவதூதர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆனால், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அவர் நமக்கு நிரந்தர வாழ்வைத் தருகிறார். எந்த மனுஷனுக்கும் இந்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றவர் கிறிஸ்து நாதரோடு உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுக்கென்று பிழைத்திருக்கிறான். இவ்வாறான மரணமில்லா வாழ்வை எதிர்பார்த்து நாம் இவ்வுலகில் வாழ்வோம். அந்த அனுபவத்தைப் பெற வாஞ்சை கொண்டு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்க்கையில் முன்னேறுவோம். அருள்நாதர் தம் ஆடுகளுக்கு யாவும் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதும் இல்லை என்பது அவர் வாக்கு.

பரம வாழ்வைத் தாரும்
பரிசுத்த பிதாவே
தேவ கிருபையும் பரிசுத்தமும்
தேவனே தந்தருளும்.

தேவனே எங்களைச் சோதித்தீர்

டிசம்பர் 03

“தேவனே எங்களைச் சோதித்தீர்” சங். 66:10

நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்பது சாதாரணம். ஆனால் அந்தந்த நேரத்தில் வரும் சோதனைகளைச் சந்திப்பதுதான் கடினம். வீண்பேச்சுப் பேசுகிறவர்கள் அதிகம் தவறு செய்பவர்கள். வீழ்ச்சிக்கு முன் அகந்தை வரும். இந்நேரத்தில் நமது தகுதியை முற்றிலும் தள்ளிவிட்டு, தேவனுடைய உண்மையான வாக்கை நம்பினால் மட்டுமே நன்மை கிடைக்கும். நமது வாழ்வில் இருண்ட நேரங்களில், சாத்தானாகிய விரோதி, இயற்கை உபாதைகளான நெருப்பு, வெள்ளம், பூமியதிர்ச்சி, நமது மனதிலுண்டாகும் திகில், வாழ்வில் துன்பம், இழப்பு ஆகியவை சோதனைகளாய் வரும். சோதனைகளில்லாதபோது சிலர் தேவனை மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றனர். ஆனால் சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.

இளம் கிறிஸ்தவர்களில் சிலர் ஆரம்பத்தில் தங்களது கிறிஸ்துவ வாழ்க்கையில் அனலுள்ளவர்களாயிருக்கும்போது, வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களிடம் குறைகளைக் காண முயற்சிக்கின்றனர். ஆனால், தாங்களும் மற்றவர்களைப்போலவே பெலவீனர்தான் என்று தாங்கள் சோதிக்கப்படுகையில் அறிந்து கொள்ளுவர். நம்முடைய தன்மையை தேவன் நமக்குக் காட்டினால்தான் நாம் அதை மெய்யாகத் தெரிந்து கொள்ள முடியும். நமது இருதயம் திருக்குள்ளது. பெலவீனமானது. ஆண்டவர் நமக்கு தரும் சோதனைகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேவ கிருபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அவர் நம்மை சோதித்து நம்மைத் தம்மிடம் நெருக்கமாக சேர்க்கிறார்.

கர்த்தாவே, உமது வழிகள் எல்லாம்
ஆச்சரியமானவை, என்னைப் புடமிட்டு
என்னைத் தூய்மையாக்கியருளும்
என்னை உம்மிடம் சேர்த்தருளும்.

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04
“அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது” உன். 2:3

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.

பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.

எல்லாம் புதிதாயின

டிசம்பர் 20

“எல்லாம் புதிதாயின” 2.கொரி.5:17

புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை அவர்கள் புசிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் புதிதானவை. பரிசுத்தமான நடக்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். புது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பினால் அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். புதிய நோக்கங்களை அவர்கள் பெறுகிறார்கள். தேவமகிமையைக் கண்டு அதில் வளருகிறார்கள். புதிய புதியதான நண்பர்களோடு ஐக்கியம் கொள்ளுகிறார்கள். காரணம் என்வென்றால், எல்லாம் புதிதாயின“.

அப்படிப்பட்டவர்களுக்கு தலையாயிருப்பவர் கிறிஸ்து. இரண்டாம் ஆதாம் அவரே. அவர்தாமே இவர்களைத் தேவனோடு ஒப்புரவாக்கிப் புதிய பரதீசிக்குள் அழைத்துச் செல்கிறார். இவர்கள் எல்லாரும் புது உடன்படிக்கையின்கீழ் இருக்கிறார்கள். இது கிருபையின் உடன்படிக்கை கிரியையின் உடன்படிக்கையல்ல. தேவனே இவர்களுக்குப் பிதா, தேவதூதர்கள் பணிவிடையாள்கள். கிறிஸ்து இவர்களுக்கு மூத்த சகோதரர். தூய ஆவியானவர் இவர்களுக்குத் தேற்றரவாளர். தேவனுடன் இவர்களுக்கு உண்டாயிருக்கும் உறவு புதியது. இவர்கள் உலகத்துக்குச் சாட்சிகளாய் இருப்பவர்கள். கிறிஸ்துவின் ஊழியர்கள். இவர்கள் ஆவியானவர் தங்கும் ஆலயம். இவர்களுடைய ஆசைகள், நம்பிக்கை, நோக்கம் எல்லாம் புதியவைகள். புதிய வானம் புதிய பூமியின் சிருஷ்டிகள் இவர்கள். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின.

நான் உம்முடையவன், மற்றும்
நான் உம்மால் புதிதாக்கப்பட்டேன்.
புது வானம் பூமியின் புது சிருஷ்டி
புதுப் பரதீசின் புதுக் குடிமகனே.

தன் காலத்தை மனுஷன் அறியான்

டிசம்பர் 16

“தன் காலத்தை மனுஷன் அறியான்” (பிர.9:12)

வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது எதிர்காலம் நமக்கு மறைக்கப்பட்டுள்ளதால், நாம் அது குறித்து யாதும் செய்ய முடியாது. சாத்தான் நம்மிடம் வரும் நேரத்தையும், நமக்குச் சோதனைகள் வரும் காலத்தையும் நாம் அறியோம். நமது வீழ்ச்சியும், எதிரிகளின் வெற்றியும், எதிரியின் திட்டமும் நமக்குத் தெரியாதவை. நமது மரண நாளும் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான். வெகு அண்மையிலேயே நமது மரணம் இருப்பினும் நாம் அதை அறிய மாட்டோம்.

இதனால் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். அவருடைய காரியங்களை அறிய நாம் இன்னும் தாழ்மையைக் கற்கவேண்டும். அவரையே முழு மனதோடு நேசிக்க வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், எதிர்த்து நிற்கக் கூடாது. நாமிருக்கும் இந்நிலை நமக்கு எச்சரிப்பையும், பயத்தையும் கொடுக்கிறபடியால், நாம் மனமேட்டிமை அடையாமல் அவருக்குப் பயந்து இருக்கவேண்டும். அவருடைய பணிகளைக் கருத்தாகச் செய்ய வேண்டும். நமது வாழ்க்கையில் அவரது நோக்கங்கள் நிறைவேறுமாறு ஜெபிக்கவேண்டும். தேவனுடைய திட்டத்தை நாம் அறிந்துகொள்ள நாம் துதிகளோடும், ஜெபங்களேயாடும் எப்போதும் கருத்தாயிருக்க வேண்டும். பயம், கவலை, வெறுப்பு, ஆகிய பெலவீனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நம் கால்கள் சாத்தானின் கண்களில் அகப்பட்டிருந்தாலும், சீக்கிரம் அவர் வந்து விடுவிப்பார். நம்மை நித்திய காலத்திற்குமாகத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, சீக்கிரம் இரண்டாம் முறை வரப்போகிறார். அதுமட்டும் வழித்திருந்து ஜெபம் செய்வோம்.

எங்கள் நாமம் உமது கரங்களில்
எங்கள் நாட்களை நாங்கள்
அறியோமாதலால் எங்கள் நாட்களை
அறியும் அறிவைத் தாரும், கர்த்தாவே.

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19

“கிறிஸ்துவினுடைய அடிமை” 1.கொரி.7:22

கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதால் கிறிஸ்துவின் அடிமைதான். அவன் தனக்கு இருக்கும் தாலந்துகளை ஆண்டவருக்கென்று பயன்படுத்தவேண்டும்.

இந்த இரவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்வென்றால், „நான் கிறிஸ்துவினுடைய அடிமையா? அவர் எனக்கு எஜமானா? எப்பொழுதும் நான் அவரை அவ்வாறு ஏற்றிருக்கிறேனா? என்னைத் தேவன் பார்க்கிறார் என்று நினைத்து, தெயவ்பயத்துடன் நடக்கிறேனா? நான் செய்கிறது எதுவானாலும், இது என் எஜமானுடைய சித்தமா? அவருக்குப் பிரியமானதா? நான் அவருடைய பணியாள். அவருடைய கட்டளைகளுக்கேற்ப யாவற்றையும் செய்கிறேனா? என்பதே.

பரிசுத்த ஆவியானவர் தினமும் „நீ கிறிஸ்துவின் அடிமை. அவர் உனக்கு ஞானமும் புத்தியும் தயாள குணமுமுள்ள எஜமான்“ என்று சொல்லுகிறார். இதை நீ கேட்கிறாயா? அவருக்குப் பிரியமாக நடப்பதே எனது வேலை. உலகம் எனக்கு வேண்டாம். சாத்தானுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை“ என்று நீ சொல்லக்கூடுமா? அவருடைய அடிமையாக அவருடைய வார்த்தையைக்கேள். அவருடைய கிருபையைத் தேடு.

உம்மைக் கர்த்தர் என்பேன்,
உள்ளத்தாலும் நேசிப்பேன்.
உம் சித்தமே செய்வேன்
உம்மிலேயே இளைப்பாறுவேன்.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

Popular Posts

My Favorites

எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்

நவம்பர் 25 "எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்" யோபு 7: 16 ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம்...