எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக

டிசம்பர் 17

“அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக” (மத்.1:21)

இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவர் யாவரையும் இரட்சிக்க வல்லவர். எல்லாரையும் இரட்சிக்க மனதுள்ளவர். இயேசுவின் மூலமாக தேவனிடம் வரும் யாவரையும் அவர் இரட்சிக்கிறார். எல்லாப் பாவங்களையும் நீக்கி அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்படியாய் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். தம்முடைய மக்கள் ஒருக்காலும் கெட்டுபோகாதபடிக்கு அவர்களை மீட்டுக் கொள்கிறார். தேவனுடைய வல்லமைக்கு எல்லாம் கூடும் என்பதால் எல்லாரையும் இரட்சிக்கிறார். தேவ ஆளுகைக்கு குறை ஏற்படாவண்ணம் அவர் அப்படிச் செய்கிறார்.

தேவன் தம் இரட்சிப்பின் செய்கையில் பட்சபாதம் காட்டுவதில்லை. பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படியாமல், வழி தப்பித்திரிந்த தமது ஜனங்கள் எல்லாரையுமே அவர் இரட்சிக்கிறார். பூமியில் தேவன் தமது மகிமைக்காக, தமது அன்பினால், இரட்சிக்கும் பணியைச் செய்கிறார். ஆகவே, ஆத்துமாவே இயேசு இரட்சகர் என்று அழை. இயேசு சகலரையும் இரட்சிக்கக்கூடியவர் என்று கூறு. இரட்சிப்பதே அவருடைய முக்கிய வேலை, இதுவே அவருக்கு மகிழ்ச்சி. அவர் ஒருவரே இரட்சகர். அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர். நரகத்தின் எதிர்ப்பையும் அவர் பொருட்படுத்தாது இரட்சிக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார். அப்பணியில் அவர் தொடர்ந்து செயல்ப்படுகிறார். நமக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் அளிக்க இப்போது தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

அவரை நம்பி நீ இருந்தால்,
உன் பாவம் நீங்கிப்போகும்.
அதுவே இகத்தில் மோட்சம்,
அதுவே இன்ப வாழ்வாம்.

நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்

டிசம்பர் 15

“நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்” (எரேமி.3:19)

கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்பார். எப்படிப்பட்டவராயினும் பிதாவை நேசிக்க முடியும். எந்த இனத்தவராயினும், எப்பேர்ப்பட்ட பாவியாயினும் பிதா ஏற்றுக்கொள்ளுவார். அவர்களின்மேல் தேவன் தயவைக் காட்டுகிறார். அவர் பொறுமையாய் இருக்கிறார். அவர் நமக்குத் தம்மிடம் சேர்த்துக் கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கிறார். அதனால் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

தேவன் சர்வ வல்லவராயிருந்து பெலவீனராகிய நாமெல்லாம் அவரைப் பிதாவே என்று அழைக்க வேண்டுமென்று விரும்புகிறார். இது தேவன் நம்மேல் வைத்திருக்கும் பாசத்தைக் குறிக்கிறது. ஆகவே, நம் தகப்பனாக அவரை நினைத்து, அவரை நோக்கி ஜெபிப்போமாக. தகப்பனுக்குப் பணி செய்வதுபோல அவருக்கு உழைப்போமாக. தகப்பனிடம் நன்மையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பபோல அவரையே நாம் எதிர்பார்திருப்போம். நமது நம்பிக்கை முழுவதுமாக அவர்மேலேயே இருக்கட்டும் நாம் அவரையே நேசிப்போம். நம்மைப் புத்திரராக அவர் எற்றுக்கொண்டதை எண்ணி அவரைப் போற்றுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று சாட்சி கூறுவதற்காக, அவர் நமக்கு அப்பா, பிதாவே என்று அவரை அழைக்கக்கூடிய உறவையும் உரிமையையும் தந்திருக்கிறார். அவருடைய உறவில்லாமல், நாம் அவருடைய பிள்ளைகளாக முடியாது. பிரியமானவனே, தேவனைப்பற்றி இவ்வெண்ணத்திற்காக மகிழ்வோம். அவரைப் பிதாவே என்றழைத்துப் போற்றுவோம். என்றும் இவ்வுரிமைக்குப் பாத்திரராயிருக்கப் பாடுபடுவோம்.

அப்பா, பிதாவே, என்று
உம்மை அழைக்கும்பேறு
உம்மாலே எங்கட்குக் கிடைத்ததால்
உம்மைப் போற்றுகிறோம், பிதாவே.

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02

“தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்” அப். 27:25

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.

அவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார் என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்க் கூடியவர்களாயிருக்க வேண்டும்.

அன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா? நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.

எந்நிலையிலும் தவறாது
அன்பர் சித்தத்தையே பிடி
கண்டல்ல, காணாமல்
விசுவாசிப்பதே பாக்கியம்

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11

“மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” 1.யோவான் 2:8

இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின் ஒளிமட்டுமே அவைகளை நீக்க முடியும். தேவாலயங்களில் பிரசங்கிக்கப்படும் வசனத்தின்மூலம் அவ்வொளி பிரகாசிக்கிறது. நமது இருதயத்திலும் அவ்வொளி வீசுகிறது. இப்படி வந்த பிரசங்கத்தினால் இரட்சிப்பின் வழியையும், மெய்ச் சந்தோஷத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்பொழுதும் அவ்வொளி நம்மை சூழ தெளிவாகவும், அழகாகவும் பிரகாசிக்கிறது. இந்தப் பிரகாசம் தேவனுடைய சுத்த தயவை விளக்குகிறது. மகிழ்சியாய் இருக்கவும், ஆறுதலாக நடந்து நம்பிக்கையோடு போர் செய்யவும், தீமையை விட்டுவிலகவும், மனநிறைவோடு பரலோகம் சேரவும் நமக்குப் பெலன்தருகிறது. நம்மில் மெய்யான ஒளி பிரகாசிக்கிறதென்றால், கோடானகோடி மக்கள் கண்டு கொள்ளாத ஒளியை நாம் கண்டு கொண்டோமே. ஆகவேதான் நம்முடைய தேவன் ஒளியில் இருக்கும்பொழுது நாமும் ஒளியில் நடந்து, உயிருள்ளவர்களாய் அவரோடு ஐக்கியப்பட்டு, நமக்குக் கிடைத்துள்ள சிலாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

மனிதனை மீட்கவே
தெய்வ ஒளி பிரகாசித்தது
பாவிகளை இரட்சிக்க
அதன் ஜோதி வீசுது.

Popular Posts

My Favorites

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

யூன் 14 "அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்." மத். 27:35 பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். யூதாஸ் காட்டிக்கொடுத்தான். அப்போதுதான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரின் மரணத்தில் தேவன் கொண்ட நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். தமது நீதிக்குத்...