தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11

இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.

நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.

நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்

டிசம்பர் 15

“நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்” (எரேமி.3:19)

கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்பார். எப்படிப்பட்டவராயினும் பிதாவை நேசிக்க முடியும். எந்த இனத்தவராயினும், எப்பேர்ப்பட்ட பாவியாயினும் பிதா ஏற்றுக்கொள்ளுவார். அவர்களின்மேல் தேவன் தயவைக் காட்டுகிறார். அவர் பொறுமையாய் இருக்கிறார். அவர் நமக்குத் தம்மிடம் சேர்த்துக் கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கிறார். அதனால் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

தேவன் சர்வ வல்லவராயிருந்து பெலவீனராகிய நாமெல்லாம் அவரைப் பிதாவே என்று அழைக்க வேண்டுமென்று விரும்புகிறார். இது தேவன் நம்மேல் வைத்திருக்கும் பாசத்தைக் குறிக்கிறது. ஆகவே, நம் தகப்பனாக அவரை நினைத்து, அவரை நோக்கி ஜெபிப்போமாக. தகப்பனுக்குப் பணி செய்வதுபோல அவருக்கு உழைப்போமாக. தகப்பனிடம் நன்மையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பபோல அவரையே நாம் எதிர்பார்திருப்போம். நமது நம்பிக்கை முழுவதுமாக அவர்மேலேயே இருக்கட்டும் நாம் அவரையே நேசிப்போம். நம்மைப் புத்திரராக அவர் எற்றுக்கொண்டதை எண்ணி அவரைப் போற்றுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று சாட்சி கூறுவதற்காக, அவர் நமக்கு அப்பா, பிதாவே என்று அவரை அழைக்கக்கூடிய உறவையும் உரிமையையும் தந்திருக்கிறார். அவருடைய உறவில்லாமல், நாம் அவருடைய பிள்ளைகளாக முடியாது. பிரியமானவனே, தேவனைப்பற்றி இவ்வெண்ணத்திற்காக மகிழ்வோம். அவரைப் பிதாவே என்றழைத்துப் போற்றுவோம். என்றும் இவ்வுரிமைக்குப் பாத்திரராயிருக்கப் பாடுபடுவோம்.

அப்பா, பிதாவே, என்று
உம்மை அழைக்கும்பேறு
உம்மாலே எங்கட்குக் கிடைத்ததால்
உம்மைப் போற்றுகிறோம், பிதாவே.

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04
“அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது” உன். 2:3

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.

பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19

“கிறிஸ்துவினுடைய அடிமை” 1.கொரி.7:22

கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதால் கிறிஸ்துவின் அடிமைதான். அவன் தனக்கு இருக்கும் தாலந்துகளை ஆண்டவருக்கென்று பயன்படுத்தவேண்டும்.

இந்த இரவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்வென்றால், „நான் கிறிஸ்துவினுடைய அடிமையா? அவர் எனக்கு எஜமானா? எப்பொழுதும் நான் அவரை அவ்வாறு ஏற்றிருக்கிறேனா? என்னைத் தேவன் பார்க்கிறார் என்று நினைத்து, தெயவ்பயத்துடன் நடக்கிறேனா? நான் செய்கிறது எதுவானாலும், இது என் எஜமானுடைய சித்தமா? அவருக்குப் பிரியமானதா? நான் அவருடைய பணியாள். அவருடைய கட்டளைகளுக்கேற்ப யாவற்றையும் செய்கிறேனா? என்பதே.

பரிசுத்த ஆவியானவர் தினமும் „நீ கிறிஸ்துவின் அடிமை. அவர் உனக்கு ஞானமும் புத்தியும் தயாள குணமுமுள்ள எஜமான்“ என்று சொல்லுகிறார். இதை நீ கேட்கிறாயா? அவருக்குப் பிரியமாக நடப்பதே எனது வேலை. உலகம் எனக்கு வேண்டாம். சாத்தானுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை“ என்று நீ சொல்லக்கூடுமா? அவருடைய அடிமையாக அவருடைய வார்த்தையைக்கேள். அவருடைய கிருபையைத் தேடு.

உம்மைக் கர்த்தர் என்பேன்,
உள்ளத்தாலும் நேசிப்பேன்.
உம் சித்தமே செய்வேன்
உம்மிலேயே இளைப்பாறுவேன்.

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது

டிசம்பர் 27

“ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” (சங்.36:9)

தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான். அவருடைய சுத்தக் கிருபையினால்தான் நாம் வாழ்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவன் வருவது அவரிடத்திலிருந்துதான். இந்த ஜீவனே நமக்கு உயிர்கொடுக்கும் மருந்து. நாம் தேவனால் பிறந்ததனால்தான் வல்லமையோடு வாழ்கிறோம். அவர்தான் நமது ஆத்துமாக்களை உயிரோடு காப்பவர். அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார். நம்மை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வைக் கொடுப்பவர் அவர்தான்.

நண்பனே, நீ ஆண்டவர்மீது வைத்த அன்பு குறைந்திருக்கிறதா? ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைந்துவிட்டாயா? அவருடைய சமுகத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறாயா? ஒன்றைமட்டும் மறவாதே. தேவனுடைய ஊற்று உன்னிடம்தான் இருக்கிறதென்பதை மறவாதே. அந்த ஊற்று உன் ஆத்துமாவுக்குள் பாயும் ஊற்று. ஒருகணப்பொழுதில் அது உங்களுக்கு உயிரைக் கொடுக்க வல்லது. அந்த ஊற்று தேவ திருமுகப் பிரகாசத்தை உங்கள்மேல் வீசப்பண்ணுகிறது. அவருடைய மன்னிப்பையும், சமாதானத்தையும் உனக்குக் கொண்டு வருகிறது. தூய ஆவியானவரை அளவில்லாமல் கொண்டுவருகிறது. இந்த ஊற்றில் பருகுவோருக்கு மறுபடியும் தாகம் ஏற்படாது. இது ஆத்தும தாகத்தைத் தீர்க்கக்கூடியது. இந்த ஊற்று வேண்டுமென்று ஜெபி. அப்பொழுது நீ பெற்றுக்கொள்ளுவாய். தாகம் தீருமட்டும் அதில் பருகு. அவர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் ஆத்துமாவும் அவரைத் துதிக்கும்.

ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என் ஆத்ம தாகம் தீருமே
நீரே ஜீவ அப்பமுமாதலால்
என் பசியையும் தீர்த்திடும்.

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

Popular Posts

My Favorites

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய...