முகப்பு வலைப்பதிவு பக்கம் 21

மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்

ஓகஸ்ட் 05

“மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” எபேசி. 6:6

தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் அறியவேண்டும். ஒவ்வொரு பாவியும் தம்மை விசுவாசித்து, நேசித்து தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தேவ சித்தம். ஒவ்வொரு தேவ பிள்ளையும் தேவனுடைய அதிகாரத்தை மதித்து, தம் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தம் கொள்கிறார். தேவன் தம் சித்தத்தை வெளிப்படுத்துவதைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். நமது வாழ்க்கைக்கு அதுவே சட்டம். நமக்கு இது கடமையாகவும் தேவனுடைய சித்தம் செய்யும் பொறுப்பாகவும் இருக்கிறது. மனிதர் நம்மை விரோதித்தாலும், நமது பிரியத்துக்கு அது விரோதமாய் கண்டாலும், நாம் பிதாவினுடைய சித்தம் செய்ய வேண்டும்.

எஜமானுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அரசருடைய சட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும். இரட்சகருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சித்தத்தை மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். பாவம் இருக்கும் இருதயத்திலிருந்து எல்லா தீமையும் வருகிறதுப்போல், கிருபையால் புதுப்பிக்கப்பட்ட இருதயத்திலிருந்து நன்மையான காரியங்கள் வெளிப்படுகிறது. இந்த நன்மையான கிரியைகள் தேவனுடைய சித்தம் செய்பவையாகவும் இருக்கவேண்டும். முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். உற்சாகமாய் தேவனுக்குரியவைகளை நிறைவேற்ற வேண்டும். பிரியமானவரே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்ய உங்களுக்கு மனம் உண்டா? உங்களுக்கு இருக்கிற அறிவுக்குத்தக்கதாக செய்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படிதல் மனப்பூர்வமானதா?

கிறிஸ்துவே என் மாதிரி
அவரையே நான் பிடிப்பேன்
அவர் அடி பின் செல்லுவேன்
அவர் சாயல் அணிவேன்.

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்

ஓகஸ்ட் 03

“எப்பொழுது என்னிடத்தில் வருவீர்.” சங். 101:2

தேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஜீவனும் அவரே. அவர் இருந்தால் எல்லாமே இன்பம்தான். அவரின்றி அவர்களுக்குத் திருப்தியே கிடையாது. ஆத்துமாவிற்கு அமைதியே கிடையாது. இதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவருடைய தயவுதான் அவர்களுக்கு ஜீவன். அவரோடு ஐக்கியப்படுவதுதான் அவர்களுக்குப் பொக்கிஷம். அதுவே அவர்கள் சமாதானம். நேசரின் சமுகத்தில் நிறைவான சந்தோஷமும், இளைப்பாறுதலும், ஜெயமும் உண்டு. அவர் இருந்தால் அவர்களின் பரிசுத்தம் விருத்தியடையும். அவர்களின் விசுவாசம் பெருகும். கிருபை என்னும் கனி பழுக்கும். அவர்களின் பக்தி மேன்மையானது என்று அது ரூபிக்கிறது. அப்படிப்பட்ட நேரங்களில்தான் கர்த்தர் தமது ஜனத்தை சந்திக்கிறார். ஆனால் அவர்கள் சில சமயங்களில் அவருடைய சமுகத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அனுபவித்தபடியால் அதன்மேல் திரும்பவும் வாஞ்சை கொள்கிறார்கள். அப்படி வாஞ்சித்து, கெஞ்சி வருத்தப்படுகிற ஆத்துமா திருப்தியடையாமல் போகாது.

என் சிநேகிதரே, தேவ சமுகத்தை நீ ருசித்ததுண்டா? அதை அனுபவித்ததுண்டா? இன்று அதில் நீ இருந்ததுண்டா? இதைவிட உனக்கு உதவி செய்வது தேறொன்றுமில்லையே. தாவீதுபோல் என் ஆத்துமா உம்மை தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறதென்றும்ஈ என்னிடத்தில் எப்போது வருவீர் என்றும், நான் பிழைத்து இருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. உமது வேதம் என் மனமகிழ்ச்சி என்று நீர் சொல்கிறவரா? இப்படி ஒருவேளை நீர் தேவ சமுகத்தைக் குறித்து கவலையற்றவரானால் நீர் தேவனுக்கு அந்நியனே.

கர்த்தாவே உமதுமேல்
என் ஆவி வாஞ்சைக் கொள்கிறது
நீரே என்னை நிரப்பும்
என் தாகத்தைத் தீர்த்திடும்.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்

ஓகஸ்ட் 01

“கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.” 2.சாமு. 12:13

தாவீது இராஜா உரியாவின் மனைவியிடம் பாவம் செய்தது பெரிய பாவம். உரியாவைக் குடிக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்து இது தேவனால் நடந்தது என்று காட்டி கவலையற்றவனாய் நாள்களைக் கழித்தான். பிறகு பாவ மயக்கத்தை விட்டெழுந்து தான் செய்த அக்கிரமத்தைத் தாழ்மையோடு கர்த்தரிடம் அறிக்கையிட்டான். அவன் உணர்ந்து அறிக்கையிட்டபடியினாலும், மனவேதனையோடு ஜெபித்தபடியினாலும் அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். பாவமானது தேவனுக்கு முன்பாக பாவியைக் குற்றம் சாட்டுகிறது. பாவத்திற்கு விரோதமாக நமக்காகப் பரிந்து பேசும் ஒருவர் வருகிறார். அவரே இயேசுவானவர்.

இயேசு கிறிஸ்துவே கொடிய பாவங்களுக்கு மன்னிப்பளிக்கிறார். பாவத்தை மன்னித்தும் மறந்து விடுகிறார். நம் தேவனைப் போல் மன்னிக்கிறதற்கு அவருக்கு இணையாக ஒருவருமில்லை. தன் பாவங்களைத் தாராளமாய் அறிக்கையிடுகிற மனிதனுக்குத் தேவன் மனப்பூர்வமாய் இலவசமாய் மன்னிக்கிறார் என்பதை நினையில் கொள்ள வேண்டும். தேவனானவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது நமது சத்துருக்கள் அதைத் தேடியும் கண்டுபிடிக்க மாட்டார்கள். உன்னுடைய பாவங்களைத் தேவனுடைய முதுகிற்குபின் எறிந்துவிட வேண்டுமானால் நீ அடிக்கடி அவற்றை அறிக்கையிட்டு சரிசெய்துக் கொள்ள வேண்டும். அவருக்குமுன் உன்னைத் தாழ்த்தி உன்னை சரிசெய்து கொள். உன் ஆத்துமாவில் அன்பையும் நன்றியறிதலையும் தேவ மன்னிப்பு ஊற்றிவிடும். தாவீதும் இப்படியே ஜெபித்தான். என் பாவம் எப்போதும் எனக்கு முன் நிற்கிறது என்றான். மன்னிப்பு தேவையானால் ஒரு பாவி பாவத்திற்காகத் துக்கப்பட்டு மனஸ்தாபப்பட வேண்டும். நீயும்கூட பாவத்திற்கு விரோதமாய் விழித்திரு. அப்போது பாவம் செய்யமாட்டாய்.

மன்னிப்புத் தரும் இயேசுவே
என் பாவம் மன்னியுமே
நீர் என் பரிகாரியே
காயம் கட்டி ஆற்றுமே.

பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்

யூலை 31

“பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” யோவான் 15:21

இயேசு நேசிக்கிற சகலரையும் தேவன் நேசிக்கிறார். அவர்கள் யார்? அவருடைய வசனத்தைப் பிடித்து, அவர் புண்ணியத்தின்மேல் சார்ந்து, அவருடைய நாமத்தை நம்பி, அவரின் நியமங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரே தங்கள் ஆத்துமாவுக்கு அருமையானவர் என்று காண்பிப்பவர்கள். இப்படிப் பட்டவர்களையே பிதாவானவர் நேசிக்கிறார். இந்த அன்பில் இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் அளவற்ற எண்ணமும், பிரியமும், அதிகம் அடங்கியிருக்கிறது. இவர்களைச் சிநேகித்து நன்மை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர் எவ்வளவோ மனதுள்ளவராயிருக்கிறார். தேவன் இப்படி நோக்கங்கொண்டு சிநேகித்து குமாரன் முடித்த மகிமையான கிரியையில் இதை நிறைவேற்றினார்.

அவர் அன்பு நித்தியமானது. மாறாதது. சுயாதீனமுள்ளது. அதற்கு சாட்சியே அவர் செய்த உடன்படிக்கை. தமது குமாரனைத் தந்த ஈவு, ஆவியானவரைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தம், ஆவிக்குரிய நன்மையான வேதவசனம், மகிமையின் நாம் ஜெபிக்கும்போது இதை மறக்காது நம்புவோமா. அவர் சித்தம்படி செய்யவும், சகிக்கவும் மனதாயிருப்போமா, கர்த்தர் சிநேகிக்கிற சகலத்தையும் நாடி, பாவிகள்மேல் மனதுருகி, அவர்களோடும், அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோமாக. தேவனை தேடுகிற ஒவ்வொருவரையும் பார்த்து அவர் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லி உற்சாகப்படுத்துவோமாக. தேவன் நம்மை நேசிக்கிறபடியால் சபையில் விருத்தியையும் ஐக்கியத்தையும் பரம சித்தத்தையும் நாடித் தேடுவோமாக.

நாம் கெட்டுப்போய் இருக்கையில்
சுதனைக் தந்தவர் பிதா
ஆவியும் அவர் ஈந்ததால்
அவரை என்றும் போற்றுவோம்.

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்

யூலை 30

“பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” 1.சாமு.15:22

சடங்குகளைப் பெரிதாக எண்ணுவது மனித இயற்கை. இஸ்ரவேலரும் அப்படியே செய்தார்கள். எண்ணிக்கையற்றோர் இன்றும் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதைவிட கிறிஸ்து முடித்த கிரியையினால் ஜீவனும் சமாதானமும் கிடைக்கும் என்று நம்பி, தேவனை நேசிக்கிற நேசத்தால் உந்தப்பட்டு வேதப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுவதே தேவனுக்குப் பிரியம். கீழ்ப்படிகிறதுதான் பலியைப் பார்க்கிலும் உத்தமம். கீழ்ப்படியும்போது நமக்கு நியாயமாய் தோன்றுகிறதை தள்ளி, மனட்சாட்சியின்படி தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அதற்கு இணங்கி முழுமனதோடு அந்த அதிகாரத்திற்கு கீழ் அடங்க வேண்டும். அப்படிப்பட்ட கீழ்ப்படிதல்தான் எல்லா பலியைப் பார்க்கிலும் உயர்ந்தது. இப்படி கீழ்ப்படியும்போது அவர் ஞானமும், தயவும் உள்ளவர் என்று அறிக்கையிட்டு அவருடைய சித்தத்திற்குச் சந்தோஷமாய் இணங்குகிறோம்.

இப்படி நாம் கீழ்ப்படிவது தேவனுக்குப்பிரியமாய் இருக்க வேண்டுமானால் நாம் தேவ வசனத்துக்கு ஒத்து, உத்தமமாயும், தாழ்மையாயும் எப்போதும் மாறாமலும் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் செலுத்தும் எந்தக் காணிக்கையிலும் நாம் சிக்கக்கூடிய எந்த வருத்தத்திலும் அது அதிக நலமாய் இருக்கும். பிதாவைப்போல நாம் இயேசுவை நேசித்தாலும் அவருக்கு மனப்பூர்வமாய் கீழ்படிய வேண்டும். அவர் அருளிய வாக்குத்தத்தங்களை நம்புகிறதோடு அவர் அதிகாரத்தையும் மதிக்க வேண்டும். பிதாவின் நேசத்தை ருசிக்கிற பிள்ளைகளைப்போல் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் நமக்குச் செய்யும் நன்மைகளுக்குப் பதிலாக நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்பதற்கு சாட்சியாகவும் அவரோடு ஐக்கியப்படுகிறோம் என்பதற்கு நற்பலனாகவும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பரம ஞானம் தந்தும்மை
பிரியப்படுத்தச் செய்திடும்
விருப்பத்தோடு செய்கையும்
என்னில் உண்டாக பண்ணிடும்.

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29

“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36

நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா?

நியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.

கர்த்தாவே இரங்குவேன்,
கடைக் கண்ணால் பாருமேன்
பாவப் பேயைத் தொலைத்திடும்
உம்மைச் சேரச் செய்திடும்.

நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்

ஜீலை 28

“நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்” யோவான் 13:18

விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும் ஊழியர்களாகவும், சாட்சிகளாகவும் இருக்கத் தெரிந்துகொண்டார். அவர் இவர்களைத் தெரிந்துகொண்டதால்தான் இவர்கள் அவரைத் தெரிந்துக்கொண்டார்கள். அவர் தாம் தெரிந்துக் கொண்டவர்களை அறிவார். ஆகவே அவர்களுடைய மனம், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, பயம், துக்கம், குறைவு இவைகளையெல்லாம் அறிந்திருக்கிறார். தேவன் இவர்களைத் தெரிந்துக்கொண்டதால் ஆறுதல் அடைகிறார்கள். இவர்களை அங்கீரித்து மற்றவர்களினின்று இவர்களை வித்தியாசப்படுத்துகிறார்.

இப்படி இயேசு தம்முடைய ஜனங்கள் எல்லாரையும் அறிந்திருக்கிறபடியால் அவர் தேவனாய் இருக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு யாரும் எண்ணமுடியாத இக்கூட்டத்தாருடைய தொகை, பேர், இருப்பிடம், எண்ணம், மனநிலை எல்லாவற்றையும் திட்டமாய் அறிந்திருக்க முடியும். அன்பர்களே நம்முடைய பெருமையைத் தாழ்த்த, விசுவாசத்தை கனம்பண்ண, குறைகளை நிறைவாக்க நம்முடைய வழிகளை உறுதிப்பண்ண, நற்கிரியைகளுக்குப் பலன் அறிக்கத்தக்கதாக அவர் நம்மை அறிவார். இயேசு நான் எங்கிருந்தாலும், வீட்டிலும் வெளியிலும், தேவாலயத்திலும் எப்படி நடக்கிறேன் என்று அறிவார். தகப்பன் தன் பிள்ளையை அறிந்திருக்கிறதுப்போலவும், கணவன் தன் மனைவியை அறிந்திருக்கிறதுபோலவும், அவர் தாம் தெரிந்துகொண்டவர்களை அறிவார். இவ்விதமாய் என்னையும் அறிவார்.

தேவன் நம்மை மீட்டது
நித்திய சந்தோஷ கிருபையே
நேசத்தால் சேர்த்தார்
இலவசமாய் மீட்டார்.

இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு

யூலை 27

“இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு” லூக்கா 15:2

இதுதான் நமது இரட்சகருக்கு விரோதமாய் சொல்லப்பட்ட வழக்கு. அவர் பாவிகளை ஏற்றுக்கொண்டார் என்ற வார்த்தை நமக்கு எவ்வளவோ ஆறுதலைத் தருகிறது. அவர் பாவிகளாகவே நம்மை ஏற்றுக்கொண்டார். இன்றும் அவர் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் பாவங்கள் நிமித்தமே அவர்களை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் எவ்வளவு கெட்ட பாவிகயாய் இருந்தாலும், எவ்வளவு அற்பரும் மற்றவர்களால் புறக்கணக்கப்பட்டவர்களாய் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு தாழ்வானவர்களாய் இருந்தாலும் இன்னும் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். எந்த இடத்திலும் எக்காலத்திலும் பாவிகளை வித்தியாசமின்றி ஏற்றுக்கொள்கிறார். எவ்வளவு தீட்டுள்ள கெட்டப் பாவியாய் இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும் அவர்களைக் கிருபையாய் ஏற்றுக்கொள்கிறார்.

அவர்களின் பாவங்களை மன்னித்து அசுத்தத்திலிருந்து கழுவி, குற்றங்களைப் பரிகரித்து, நீதிமான்களாக்கி, காயங்களைக் கட்டி, புது சிருஷ்டிகளாய் மாற்றி, தமது மகிமைக்கென்று உபயோகப்படுத்த அவர்களை ஏற்றுக்கொள்கிறார். விசேஷித்த ஜனங்களாய் பூமியில் நற்கிரியைக் குறித்து வைராக்கியராகவும், தம்மோடு மோட்சத்தில் என்றைக்கும் மகிமைப்படுத்தவும் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். பிரியமானவேர, தேவனிடத்தில் பரிசுத்தனாய் போக முடியாதென்று கண்டால் இயேசுவினிடத்தில் பாவி என்று போ. இந்த நிமிடமே அவர் உன்னை ஆசீர்வதிக்கக் காத்து நிற்கிறார். ஆகையால் போ.

இயேசுவின் இரத்தம் கழுவி
குற்றம் நீக்கிடும்
ஆத்துமாவை அலங்கரித்து
பேரின்பத்தில் சேர்த்திடும்.

Popular Posts

My Favorites

நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

ஏப்ரல் 06 "நீதிமான்களின் உயிர்த்தெழுதல்." லூக்கா 14:14 கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து,...