முகப்பு வலைப்பதிவு பக்கம் 27

விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்

யூன் 07

“விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்.” 1.தெச.5:8

எப்பொழுதுமே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். சத்துருக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தார்கள். இரட்சிப்பின் அதிபதி நமக்கு ஆயுதங்களைச் சவதரித்து தந்திருக்கிறார். அந்த ஆயுதங்கள் முழுவதையும் எடுத்து அதைக் கொண்டு நம்மைத் தற்காக்க வேண்டும். அன்பு விசுவாசம் இவைகளால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை எடுத்து இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஆவியானவருடைய சிறப்பான கிருபைகள். விசுவாசம் என்பது தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கை. அன்பென்பது தேவனைப்பற்றும் பாசம். இவை வெவ்வேறானாலும் ஒன்றாய் சேர்ந்திருக்கிறது. தம்மையில் வேறுபட்டாலும் இணைந்திருக்கிறது.

விசுவாசம் எப்போதும் அன்பைப் பிறப்பிக்கும். அன்பு விசுவாசத்தை உறுதிப்படுத்தும். இவ்விரண்டும் இருந்தால் ஒரு கிறிஸ்தவன் எந்தச் சத்துருவையும் எதிர்க்கலாம். விசுவாசம் எப்போதும் கர்த்தராகிய இயேசுவைப் பாவிகளின் இரட்சகராகவும் சிநேகிதனாகவும் ஆண்டவராகவும் பிடித்துக்கொள்கிறது. அன்போ கண்பளுக்குத் தோன்றின தேவனாகவும் கிருபை ஊற்றாகவும் பிடித்துக்கொள்ளுகிறது. விசுவாசம் வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொண்டு அவைகளை நம்புகிறது. அன்பு அதிசயத்து அவைகளுக்காய் துதி செலுத்துகிறது. விசுவாசம் நீதிமானாக்கிக் கொள்ள கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக் கொள்ளுகிறது. அன்போ மகா மகிமை நிறைந்ததாகக் கிறிஸ்துவில் களிகூறுகிறது. விசுவாசம் அனுதின சுத்திகரிப்பாக திறந்த ஊற்றண்டைக்கு நம்மை நடத்திச் செல்லுகிறது. அன்போ ஐக்கியப்பட்ட நம்மை அவர் சிங்காசனத்தண்டை நடத்துகிறது. விசுவாசம் ஆதரவுக்காகக் கிறிஸ்துவை நோக்குகிறது. அன்போ, அவருக்காய் உழைக்கவோ துன்பப்படவோ ஆயத்தமாயிருக்கிறது. விசுவாசம், மோட்சம் நம்முடைய வீடு என்று நமடக்குச் சுட்டிக்காட்டுகிறது. அன்போ அங்கே சீக்கிரம் போக நம்மை ஏவிவிடுகிறது.

விசுவாசம் அன்பும்
எனக்கிருந்தால் போதும்
அப்போது வெற்றி பெற்ற
மோட்ச இன்பம் அடைவேன்.

சிலுவையைப்பற்றி வரும் இடறல்

யூன் 06

“சிலுவையைப்பற்றி வரும் இடறல்.” கலா. 5:11

சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூதனாலே இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் பெரிய இடறலாய் இருந்தது. அதனால் அநேகர் இடறி விழுந்து கெட்டுப்போனார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்மட்டும் நிறைவான இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் இன்னும் அநேகருக்கு இடறலாய்த்தான் இருக்கிறது. சுபாவ மனுஷன் தான் விசேஷத்தவன் என்றும் தான் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றும், தன்னை எல்லாரும் மேன்மையாக எண்ணவேண்டுமென்றும் ஆசைக்கொள்ளுகிறான். ஆனால் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்த உபதேசத்திற்கு முன்பாக மனுஷன் ஒன்றுமில்லை.

என்றும் கிறிஸ்துதான் எல்லாவற்றிற்கும் எல்லாம் என்றும், சிலுவையில் அறையப்பட்டவர்தான் நாம் விசுவாசிக்க தக்க இலக்கு என்றும், இது நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்றும், இதுவே எல்லாம் ஆசீர்வாதமும் பாய்கிறதற்கு வாய்க்கால் என்றும் நமக்கு முன்னிருத்துகிறது. தேவ அன்பு நம்மை சிலுவையைப் பார்ம:மு கவனித்து, அதையே வாஞ்சிக்கும்படி செய்கிறது. இச்சிலுவை யோக்கியனையும், அயோக்கியனையும், ஞானியையும், வைத்தியக்காரனையும், ஏழையையும், ஐசுவரியவானையும் ஓரே வகையாய் இரட்சித்து ஆண்டவர் முடித்த கிரியைகளை எல்லாரும் ஒன்றுபோல் பற்றிப்பிடிக்கச் செய்து தேவ சமுகத்தில் எந்த மனிதனும் மேன்மைப் பாராட்ட கூடாதென்றே போதிக்கிறனது. சிலுவை மனிதனுடைய பெருமைக்கு பெரிய இடறல். மனுஷீகத்தின்படி சுவிசேஷம் ஒருவனையும் நிதானியாமல் இயேசுவைச் சுட்டிக்காட்டி, நெருக்கமான வாசல் வழியாய், இடுக்கமான பாதையில் நடத்தி, இரட்சிப்புக்குத் தன்னை வெறுத்தல், ஒழித்தல் அவசியமென்று போதித்து, ஒன்று கிறிஸ்துவை விசுவாசி, அல்லது கெட்டுப்போ என்கிறது. இதுவே சிலுவையின் இடறல்.

எவ்வசை நல் ஈவும்
இயேசுவாலே வரும்
அவர் சிந்தின இரத்தம்
நீங்கா தேவ வருத்தம்.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

யூன் 05

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” 2.கொரி. 1:20

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், அவர் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று கொடுத்த உறுதி மொழிகள் ஆகும். அவர் சுயாதிபதியான தேவனானபடியால் அவரிடத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள் அவருடைய அன்புக்கு அடையாளங்கள். அவைகள் வாக்குப்பண்ணினவரை ஒரு கட்டுக்குள்ளாக்குகிற திவ்ய தயவான செய்கைகள். அவர் பிதாவின் அன்பால் நமக்காக கவலை;படுகிறார். அவருடைய உண்மையும் உத்தமுமாகிய மாறாத அஸ்திபாரத்தின்மேல் அவைகள் நிற்கின்றன.

வாக்குத்தத்தங்கள் அவர் ஜனங்களி;ன் சொத்தாகவே இயேசுவில் பத்திரப்பட்டிருக்கின்றன. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சகலமும் அவைகளுக்குள் அடங்கி நமக்கு ஏற்றவைகளாய் இருக்கின்றன. இது தேவனுடைய இருதயத்தை அவைகள் திறந்து, விசுவாசியினுடைய விசுவாசத்தை வளர்த்து, பாவியின் நம்பிக்கையை உயிர்ப்பிக்கின்றன. கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்தை அவை அதிகப்படுத்துகின்றன. ஏனென்றால் தீர்க்கதரிசியாக அவைகளை முன்னுரைக்கிறார். ஆசாரியராக அவைகளை உறுதிப்படுத்துகிறார். அரசனாக அவைகளை நிறைவேற்றுகிறார். அவைகளெல்லாம் விசுவாசத்திற்குச் சொந்தம். நம்முடைய நன்மைக்காகத்தான் அவைகள் கொடுக்கப்பட்டன. யோகோவாவின் கிருபையைத் துதிப்பதே அவைகளி; முடிவு. அவைகளெல்லாம் கிறிஸ்துவின் ஊற்றாகிய நிறைவுக்கு நம்மை நடத்தி எச்சரிப்பு, நன்றியறிதல், துதி ஆகியவற்றைப் பிறப்பிக்கும்.

தேவவாக்கு உறுதியானது
இதுவே என் நம்பிக்கை
அவர் சொன்னது எல்லாம்
நிறைவேற்றுவார் அன்றோ.

வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்

யூன் 04

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” அப். 20:35

கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகள் இவை. நித்தியத்தில் அவரை ஏவிவிட்டதும் பரத்தை விட்டு பூமிக்கு வரும்படி செய்ததும் இன்னும் அவரைத் தூண்டிவிடுகிறதும் இந்த வசனத்தில் உள்ள பொருள்தான். தமது சீஷர்களுக்கு இதை அடிக்கடி சொன்னதால் இது ஒரு பழமொழியாய் மாறி இருக்கலாம். நம்முடைய போதகத்துக்கும் எச்சரிப்புமாக இது எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனிதர் இதன்படி செய்ய முடியாமல் போனாலும் இது ஒரு சரியான சட்டவாக்காகும்.

வாங்குகிறது என்பது குறைவையும் திருப்திபடாத ஆசையையும் காட்டுகிறது. கொடுக்கிறதென்பது மனநிறைவையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. கொடுக்கிறதில் உதார குணமும் மற்றவர்களின் நன்மைக்கடுத்த கவலையும் வெளிப்படுகிறது. இது தெய்வீகத்தன்மை. அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியே நமக்குக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்கு கொடுக்கத்தான் தேவன் நம்மை மீட்டார். நம்மை மகிமைப்படுத்துகிறார். தூய இன்பத்துக்க இது ஊற்று. நாம் அவர் சமூகம் போய், இவ்வார்த்தைகளால் தைரியப்பட்டு, மேலானவற்றை நம்பிக்கையோடு அடிக்கடி கேட்க ஏவப்படும்போது இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைத்துக்கொள்ளக்கடவோம். இதை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தி அவரண்டைப் போக ஏவிவிடுவோமாக. இந்தச் சட்டவாக்கின்படி விவேகமாயும், கபடற்ற விதமாகவும் செய்ய, தடையாயிருக்கும் எல்லாவற்றையும் வெற்றி பெற்று வாழ்வோமாக.

இயேசு தம்மைத் தந்தார்
நமக்குக் கிருபை ஈந்தார்
அவரைப் பின்பற்றிப் போ
அவரைப் போல வாழப்பார்..

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03

“தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு….” 1.கொரி. 15:28

யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற ஞானத்தால் ஏற்படுத்தப்பட்டு, மகாவல்லமையால் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இரட்சிப்புக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டோமெனில் அது இயேசு கிறிஸ்துவினால் தேவனுக்குள் ஆயிற்று. நாம் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்டோமெனில் அதைச் செய்தவர் பிதா. நித்திய ஜீவனுக்கென்றுக் குறிக்கப்பட்டோமெனில் அது உன்னத தேவனின் செய்கை. எல்லா பரம ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமெனில் அது இரக்கங்களின் பிதாவால் அப்படியாயிற்று. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோமெனில் அவர் அப்படிச் செய்ய பிதாவினால் முன் குறிக்கப்பட்டார்.

நாம் உயிர்ப்பிக்கப்பட்டோமெனில் அது தேவனால் ஆயிற்று. நாம் தேவனால் போதிக்கப்பட்டோமெனில் அதுவும் தேவனால் ஆயிற்று. நமக்கு விசுவாசமும் மறுபிறப்பும் கிடைக்கிறதா? அதுவும் தேவனுடைய சுத்த ஈவு. நாம் சாத்தானை மேற்கொள்ளுகிறோமா? சமாதானத்தின்தேவன் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கினபடியால் அப்படிச் செய்கிறோம். நாம் அதிகம் உழைக்கிறோமா? அது நமக்குள் வல்லமையாய் கிரியை செய்கிற அவருடைய சத்துவத்தினால் ஆயிற்று. நாம் பரிசுத்தராய் இருக்கிறோமா? அது தேவ கிருபைதான். நம்முடைய சத்துருக்கள் யாவரையும் மேற்கொள்கிறோமெனில் அது அவர்மூலம்தான். இவ்வுலகில் அவர்தான் சர்வவல்லவர். நாம் மோட்சம் சேர்ந்து வாழப்போகிறதும் அவரால்தான். தேவ நேசமும், நேசத்தின் தேவனுமே நமது நித்திய ஆனந்தத்திற்குக் காரணம். என்றுமுள்ள நிறைவான இரட்சிப்பில் தேவன்தான் சர்வவல்லவர்.

தேவனை அறியப்பார்
அவர் தன்மையை தியானி
நீதி அன்பு உள்ளவர்
மகா மகிமை நிறைந்தவர்.

தேவனுடைய வீட்டார்

யூன் 02

“தேவனுடைய வீட்டார்.” எபேசி. 2:13

கர்த்தர் தமக்குச் சொந்தமான ஒரு விசேஷித்த குடும்பத்தை வைத்திருக்கிறார். அது ஆவிக்குரிய குடும்பம். ஏனென்றால் அதைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தேவனால் பிறந்து, ஆவியானவரால் போதிக்கப்பட்டு ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்து, ஒரே சரீரமாக அவரில் ஞானஸ்நானம் பெற்றவர்கள். இக்குடும்பம் அவர் நோக்கத்திலிருந்து தோன்றியது. இது அவருடைய சித்தம் எது என்று காட்டுகிறது. அவர் வல்லமையால் உண்டானது. தேவனுடைய வீட்டார் என்பது அதன் பெயர். உலகத்திலிருந்துப் பிரிக்கப்பட்டதால் தேவனுடைய வீட்டார். அவர் நடத்திச் செல்லும் மந்தை.

அவர் ஒவ்வொருவரைப் பாதுகாத்து, குறைவையெல்லாம் நீக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் வேலை தந்து, நேசித்து, மகிழுகிறதால் பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறார். இக்குடும்பத்தைச் சேர்ந்த யாவரும் சகோதரர்கள். இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய கிருபையைப் பிரஸ்தாபப்படுத்த, அவருடைய காரியத்தை நடத்த, அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே இக்குடும்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பத்தில் அவர் அறியப்பட்டு, நம்பப்பட்டு, துதிக்கப்படுகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்து, நேசித்து, அவருக்குள் மகிழுகிறார்கள். நீ இக்குடும்பத்தைச் சேர்ந்தவனா? இந்தக் குடும் விருந்துக்கு நீ செல்கிறாயா? இந்தக் குடும்பத்தின் ஆராதனைகள் உனக்கு இன்பமா? இந்தக் குடும்பத் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் நீ உண்மையாய் நேசிக்கிறாயா? இந்த கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டு.

தேவனே, என்னிடம் வாரும்
என் உள்ளத்தில் தங்கும்
உமது குடும்பத்தில் என்னைச் சேர்த்து
இரட்சியும் கண் பார்த்து.

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

திட அஸ்திபாரம்

மே 30

“திட அஸ்திபாரம்.” ஏசாயா 28:16

மகிமை நிறைந்த இயேசு இரட்சகர் நிறைவேற்றின பூரண கிருபையானது பாவிகளின் நம்பிக்கைக்கு அஸ்திபாரம். மற்ற வேறு ஏதாவது ஒன்றின் பேரில் கட்டுவோமானால் நாம் நாசம் அடைந்துவிடுவோம். நமது நம்பிக்கைக்கு ஆதாரமாக கிறிஸ்துவோடு வேறெதையாவது சேர்ப்போமானால், அவரால் நமக்கு எவ்வித பயனும் இராது. கிறிஸ்து மட்டும்போதும். அவர் நமக்காக் கீழ்ப்படிந்து சம்பாதித்த புண்ணியம், அவர் பிராயச்சித்த பலி, காரிய சித்தியான அவர் மன்றாட்டு ஆகியவைகள்மேல் நித்தியத்திற்காக நாம் கட்ட வேண்டும். இவைகள் எல்லாம் ஒரே அஸ்திபாரம். இவைகளின்மேல் கட்டுவோமானால் பயம் இல்லை. இதுதான் உறுதியான அஸ்திபாரம்.

இரட்சகருடைய மகத்துவமும், அவருடைய குறைவற்ற குணாதிசயங்களும், அவர் செய்த புண்ணியமும், அவர் வாக்கின் உண்மையும் அஸ்திபாரத்தை இன்னும் பலமுள்ளதாக்குகிறது. கடந்த காலத்தில் அது உறுதியாய் நின்றது. இப்போதும் உறுதியாய் நிற்கிறது எப்போதும் அப்படியே நிற்கும். இயேசுவே அஸ்திபாரம். அவர்மேல் கட்டின எந்தப் பாவியும், எந்தக் குறையையும் கண்டதில்லை. எந்தப் புயலும் அதை அழிக்காது. எந்த வெள்ளமும் அதைக் கரைக்காது. பூமியதிர்ச்சியும் அதைச் சேதப்படுத்தாது. தேவனைப்போன்று அது உறுதியானது. நித்தியத்தைப்போல் நிலையுள்ளது. அதன்பேரில் மட்டும் கட்டுவோமாக. அப்படிக் கட்டி நம்முடைய அஸ்திபாரத்தைப் பார்த்து மகிழக்கடவோம். தீயமனிதரும் கேடு செய்கிறவர்களும் திரும்பத் திரும்ப தாக்கலாம். சாத்தான் அதை இடிக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவன்மேல் கட்டிய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கும். கர்த்தர் தம்முடையவர்களை அறிவார் என்பதற்கு இது முத்திரையாகிறது. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவையல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

எல்லாம் ஒழிந்துப் போனாலும்
இயேசு கன்மலை நிற்கும்
இதன்மேல் நிற்போம் எல்லோரும்
வாழ்வதென்றும் நிலைக்கும்.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.

மே 29

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.” யாக் 1:3

தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர் தேவன். தமது வசனத்தில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் குமாரனில் மட்டும் பூரண இரட்சிப்படைய நாம் விசுவாசிக்கிறோமா என்றும், அவருடைய வாக்கை நிறைவேற்றுவார் என்றும் அவருடைய உண்மையில் விசுவாசம் வைத்து எதிர்பார்க்கிறோமா என்றும் நம்மை அவர் சோதிக்கிறார். நம்முடைய விசுவாசம் தேவனால் உண்டானதா, அது வேர் கொண்டதா என்று சோதித்தறிகிறார். நமது நம்பிக்கையின் துவக்கத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறோமா என்று நம் உறுதியை சோதித்தறிகிறார். இப்படி சோதிப்பது நமது சொந்த நன்மைக்கும் நலனுக்கும். அவரின் சொந்த மகிமைக்கும் ஆகும். நம்மை கவனிக்கிற மற்றவர்களுக்காகவும், நமது அனுபவத்தின் பிரயோஜனத்திற்காகவும் இப்படிச் சோதித்தறிகிறார்.

இப்படிச் சோதிப்பது பொறுமையை உண்டாக்கும். இத்தகைய சோதனை பொறுமையை உண்டாக்கும். அடிக்கடி வருத்தமில்லாமல் இருக்கிறதற்குப் பதிலாக பொறுமையையும், ஐசுவரியத்திற்குப் பதிலாக மனதிருப்தியையும் நமது சொந்த பெலனுக்குப் பதிலாக கிறிஸ்துவின் பெலனை நம்பவும் செய்யும். ஆகவே விசுவாசம் பரீட்சிக்கப்பட வேண்டும். துன்பங்கள் விசுவாசத்தைச் சோதிக்கும். தேவாசீர்வாதம் பெற்ற துன்பங்கள் நம்மைப் பொறுமையுள்ளவர்களாக்கும். பொறுமை நிறைவாகும்போது சோதனைகள் அற்றுபோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. ஆகையால் நீங்கள் பொறுமையுள்ளவர்களாய் இருங்கள்.

சோதனை வரும் அப்போ
என் பக்கம் வந்திடும்
சாந்தம் பொறுமை அளியுமே
உமக்கடங்கச் செய்யுமே.

Popular Posts

My Favorites

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31 தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11 இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும்,...