தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 3

நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

டிசம்பர் 06

“நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்” வெளி 1:8

இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும் அவர் அப்படியே வெளிப்படுத்துகிறார். கிரேக்க மொழி பேசுகிறவர்கள் தங்கள் உரையாடலில் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையாக இருப்பவர். நம்முடைய இரட்சிப்புக்கும், ஆறுதலுக்கும், மேன்மைக்கும், கனத்திற்கும் அவசியமானதெல்லாமே அவரிடம் உண்டு. அவரில் ஞானமும் அறிவும், மேன்மையும் கனமும், ஐசுவரியமும் நித்தியமும் நிறைவாக அடங்கியுள்ளது. அவரே இரட்சிப்பின் முதலும் முடிவுமாக இருக்கிறார். அவரிலிருந்து கிருபையின் ஊற்று பாய்கிறது. அது நாம் அவரையே மையமாகக் கொண்டு அவரையே சூழ்ந்திருக்கச் செய்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமும், நித்தியமுமாய் இருக்கிறவர் அவரே. தேவனுக்குரிய அனைத்து கர்த்தத்துவங்களும் அவர் கொண்டவர். நன்மையும், கிருபையும் அவரிடத்தில் எப்பொழுதும் உண்டு. எனவேதான் தேவனுடைய பிள்ளைகள் அவரைப் புகழ்வதிலும், பிரசங்கிப்பதிலும் ஒய்வதே இல்லை. பாவிக்கு தேவையான சகல தயவும் அவரிடம் உண்டு. இத்தன்மையில் இயேசுவைக் காண்பது எவ்வளவு இனிமை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் இவ்வசனத்தில் நான்கு முறைகள் கூறப்பட்டுள்ளது. இதைத் தியானித்து நமது ஆன்மீன உணவைப் பெறுவோம்.

கிறிஸ்துவே ஆதியும் அந்தமுமாம்
அவரே கிருபையும் ஆனந்தமுமாம்
கிறிஸ்து தரும் நன்மைகள் யாவும்
அவர் தரும் பேரின்பங்களாம்.

தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்

டிசம்பர் 05

“தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்” பிர. 9:7

நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத் தேவன் கொடுத்த ஈவாகவும், இரட்சகராகவும் நமக்குக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்த ஈவைத்தான் அசட்சை செய்கிறோம். இந்த இரட்சகரைத்தான் புறக்கணிக்கிறோம். ஆனால், தூய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாக்களை உயிர்ப்பித்து நமக்கு ஒளி தந்தார்.

அவர் நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டு பண்ணினபோதோ, நாம் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். தேவனுடைய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டதால், நம்மை அவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் அவரில் மகிமை உள்ளவர்களாக மாற்றுப்படுகிறோம். அவருடைய அருமையான பிள்ளைகளாக மாறுகிறோம். அவருக்காக ஏதாவது நாம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நமக்கிருந்தால், அவர் அதையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். இது எத்தனை இன்பமான காரியம்! எவ்வளவு மகத்துவமானது! எத்தனை மேன்மையானது! இதை நாம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாகும்படி தூய ஆவியானவர்தாமே நம்மை நடத்துவாராக.

இயேசு என்னை ஏற்றுக்கொண்டார்
என்னை அவர் அங்கீகரிப்பார்
இயேசுவுக்காய் என்றும் உழைப்பேன்
என் இயேசுவின் நாட்டை சேருவேன்.

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04
“அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது” உன். 2:3

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.

பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.

தேவனே எங்களைச் சோதித்தீர்

டிசம்பர் 03

“தேவனே எங்களைச் சோதித்தீர்” சங். 66:10

நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்பது சாதாரணம். ஆனால் அந்தந்த நேரத்தில் வரும் சோதனைகளைச் சந்திப்பதுதான் கடினம். வீண்பேச்சுப் பேசுகிறவர்கள் அதிகம் தவறு செய்பவர்கள். வீழ்ச்சிக்கு முன் அகந்தை வரும். இந்நேரத்தில் நமது தகுதியை முற்றிலும் தள்ளிவிட்டு, தேவனுடைய உண்மையான வாக்கை நம்பினால் மட்டுமே நன்மை கிடைக்கும். நமது வாழ்வில் இருண்ட நேரங்களில், சாத்தானாகிய விரோதி, இயற்கை உபாதைகளான நெருப்பு, வெள்ளம், பூமியதிர்ச்சி, நமது மனதிலுண்டாகும் திகில், வாழ்வில் துன்பம், இழப்பு ஆகியவை சோதனைகளாய் வரும். சோதனைகளில்லாதபோது சிலர் தேவனை மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றனர். ஆனால் சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.

இளம் கிறிஸ்தவர்களில் சிலர் ஆரம்பத்தில் தங்களது கிறிஸ்துவ வாழ்க்கையில் அனலுள்ளவர்களாயிருக்கும்போது, வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களிடம் குறைகளைக் காண முயற்சிக்கின்றனர். ஆனால், தாங்களும் மற்றவர்களைப்போலவே பெலவீனர்தான் என்று தாங்கள் சோதிக்கப்படுகையில் அறிந்து கொள்ளுவர். நம்முடைய தன்மையை தேவன் நமக்குக் காட்டினால்தான் நாம் அதை மெய்யாகத் தெரிந்து கொள்ள முடியும். நமது இருதயம் திருக்குள்ளது. பெலவீனமானது. ஆண்டவர் நமக்கு தரும் சோதனைகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேவ கிருபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அவர் நம்மை சோதித்து நம்மைத் தம்மிடம் நெருக்கமாக சேர்க்கிறார்.

கர்த்தாவே, உமது வழிகள் எல்லாம்
ஆச்சரியமானவை, என்னைப் புடமிட்டு
என்னைத் தூய்மையாக்கியருளும்
என்னை உம்மிடம் சேர்த்தருளும்.

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02

“தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்” அப். 27:25

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.

அவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார் என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்க் கூடியவர்களாயிருக்க வேண்டும்.

அன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா? நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.

எந்நிலையிலும் தவறாது
அன்பர் சித்தத்தையே பிடி
கண்டல்ல, காணாமல்
விசுவாசிப்பதே பாக்கியம்

ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை

டிசம்பர் 01

“ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை”  எபி. 4:16

தேவனின் கிருபைதான் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நமக்கு நன்மையும் செம்மையுமானவைகளையெல்லாம் தருகிறது. ஓவ்வொரு நாளும் நமக்குத் தேவ கிருபை தேவை. ஆனாலும் சில நேரங்களில் அது அதிகமாக தேவைப்படுகிறது. நம்மைப் பெருமையிலிருந்து துணிகரமான பாவத்திலிருந்தும் தடுத்துக் கொள்ள நமக்கு தேவனுடைய கிருபை தேவையாயிருக்கிறது. நாம் முறுமுறுத்து நமது ஆன்மீக வாழ்வில் பின்வாங்கிப் போகாமலிருக்க தேவ கிருபை நமக்குத் தேவை. சோதனைகளாகிய கண்ணிகளுக்குத் தப்புவதற்கும், மகிமையுடன் நாம் மரிப்பதற்கும் தேவ கிருபை நமக்கு வேண்டும். தேவன் எவ்விதத்திலும் கிருபை செய்வார். தகுதியற்ற நமக்குக் கிடைக்கும் அவருடைய உதவி தேவ கிருபையால்தான் கிடைக்கிறது. நமது ஜெபங்களின்மூலமாக நாம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே, நாம் இரக்கம் பெறவும், ஏற்ற நேரத்தில் சகாயம் பெறவும் கிருபையைத் தேட வேண்டும். நமது சுயபெலத்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது. நமது சொந்த ஞானமும் பயனற்றது. எல்லாவற்றிற்கும் தேவ கிருபைதான் அவசியம் என்று உணர்ந்து எப்பொழுதும் அதைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தேவ கிருபையில்லாமல் நாம் வாழ முடியாது. நமது வாழ்நாள் முழுவதும் நாம் அதை வாஞ்சையோடு தேட வேண்டும். இதை நாமும் இச்சிந்தையுடன் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நமக்குத் தந்தருளுவார். நம்மைக் காப்பாற்றி, வாழ வைத்து, நோய் நொடியிலிருந்து மீட்டு, பெலன், ஜீவன் ஈந்து நம்மை நடத்தி வருவது தேவ கிருபைதான். ஆண்டவரே, என்னை ஜெப ஜெயவீரனாக்க உமது கிருபையை எனக்குத் தாரும்.

தேவ கிருபை, ஆசீர்வாதம்
தினமும் எங்களில் தங்கிட
தேவனே அருளும் உம் ஈவை
தினமும் எங்களைக் காத்திட.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை

நவம்பர் 30

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி. 18:12

தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றிப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக நம்மை உயர்த்துவதற்கும் நாம் தாழ்மையை அனுபவிக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்குப் பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களைத் தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாயிருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.

தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப்போல வேட்டையாடப்பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னைப் பாவியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப்பேலா ஒளி வீசுவார்கள். பிரியமானவனே, நீ தாழ்ந்திருக்கிறாயென்று அஞ்சாதே. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்திருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவாய். எவ்வளவாய் துக்கிக்கிறாயோ அவ்வளவாக மகிழ்ச்சியடையலாம். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை இன்றுமென்றும்
நமக்குள்ளதே.

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்

நவம்பர் 28

“அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” யோபு 13:15

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பதைத்தவிர நாம் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. இவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பதே நலமாகும். நம்பியிருப்பதையன்றி நாம் வேறு ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் என் சொத்துக்களை என்னைவிட்டு அகற்றி, என் சுகத்தை நோயாகமாற்றி, என் நண்பர்களை எனக்கு பகைஞராக்கிக் கர்த்தர் தமது முகத்தை எனக்கு மறைத்துக் கொண்டால், நான் என்ன செய்வது? ஆம் அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும். இவைகள் போதாதன்றி பட்டயம் கரத்திற்கொண்டு அவர் என்னைக் கொல்லு முயற்சித்தால் என்ன செய்வது? அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும்

உனக்கு அவருடைய வாக்குகள் இருக்கிறன. அவ்வாக்குகளை அவர் மாற்றார். நிறைவேற்றாது போகார். அவர் உண்மையுள்ளவர். அன்புள்ளவர். அழுகிற குழந்தையைத் தாய் அணைப்பதுபோல், உன்னை அவர் அணைத்துக் கொள்வார். அவருடைய சிம்மாசனத்தின்முன் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி கேட்கும்போது, அவர் தமது வாக்குகளை நிறைவேற்றியே தீருவார். அவரை நம்பியிரு. அவர் உன் விசுவாசத்தை சோதிக்கிறார். இனி அவர் உனக்குத் தரவிருக்கும் பாக்கியங்களை எண்ணி மகிழ்ந்திரு. அவர் அனுப்பிய சோதனைக்காக நீ ஒரு நாள் அவரைத் துதிப்பாய். அவர் உன்னை சோதித்தபின் நீ பொன்னாக விளங்குவாய். எப்பொழுதும் கர்த்தரையே நம்பியிரு. என்ன நேரிட்டாலும் அவர்மீது கொண்ட நம்பிக்கையை விடாதே.

தேவனே, உம் கரம் என்னை
எவ்வழி நடத்தினாலும் நலமே
உம் அன்பே எனை நடத்துவதால்
உம்மை நம்பி நிற்பேன்.

என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

நவம்பர் 27

“என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” சங். 51:7

தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும் இட்டான். ஆனாலும், தேவனுடைய மன்னிக்கும் தன்மை மிகவும் பெரிதாகையால், தன் பாவக்கறை முற்றிலும் நீங்கிவிடுமென்று நம்பினான். கர்த்தர் தன்னைத் தூய்மையாக்கினால், முழுத்தூய்மை  அடைவான் என்றும், பாவத்தின் கறை முற்றிலும் நீங்கிப்போகும் என்றும், தூதனைப்போல் தூய்மை அடைவான் என்றும் அவன் நம்பியிருந்தான். அதேபோல், அவருடைய மன்னிப்புக்கும் ஆளானான். அந்த நொடியிலிருந்தே அவன் தேவ கிருபையை அனுபவித்தான்.

அன்பானவரே, உமது பாவமும் கொடியதாக, கணக்கிலடங்காப் பெரியதாயிருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் அதை அறவே நீங்கக் கழுவிவிடும். உன் தேவன் உன்னைக் கழுவினால் உன்னில் எந்தப் பாவக்கறையும் தங்காது. உனக்கு முன்பு இப்பூவுலகில் பாவிகளாயிருந்து, இப்பொழுது பரலோக வாசிகளாயிருப்பவர்களைக் குறித்து, வேத வசனம், இப்பொழுது அவர்கள் குற்றமற்றவர்களாக தேவ ஆசனம்முன் நிற்கிறார்கள் என்று கூறுகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கிருபை நிறைந்த தமது சமுகத்தில் மிகுந்த சந்தோஷத்தோடே குற்றமற்றவர்களாக உம்மை நிறுத்தக்கூடியவர் கிறிஸ்து என்றும் கூறுகிறது. இரட்சகருடைய இரத்தத்தின் பெருமையைக் கவனியும். அதனால் வரும் நன்மைகளை நோக்குங்கள். அது சகல பாவங்களையும் கழுவி நீக்கிவிடும். விலைமதிப்பற்ற அந்த இரத்தம், மனிதருடைய பாவங்களுக்காக பிராயச்சித்தமாக சிந்தப்பட்ட தேவ இரத்தம். அது உம்மை உம் பாவங்களறக் கழுவ வேண்டுமெனக் கேள்.

பாவக் கறையைப் போக்கும்
குருதி ஊற்றுப் பாயுது கல்வாரியில்
அதென்னைத் தூய்மையாக்கும்
கறை நீங்கித் தூய்மையாவேன் நானும்.

Popular Posts

My Favorites

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02 "ஏன் சஞ்சலப்படுகிறாய்" 1.சாமு. 1:8 அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா?...

இவர் யார்