இனி குழந்தைகளாய் இராமல்

யூலை 16

“இனி குழந்தைகளாய் இராமல்” எபேசி. 4:14

இந்த வசனம் ஓரே நிலையையல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. நாம் எப்போதும் பிள்ளைகளைப்போல இருந்தாலும் அறிவில் பெரியவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் வளர்வதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கியிருப்பதுமல்லாமல், அவர்கள் வளர வேண்டும் என்று கற்பிக்கிறார். நாம் அறிவில் வளர வேண்டும். சிறு பிள்ளைகள் சிறிய காரியங்களில் திருப்தியடைகிறார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. நாம் பலப்பட்டு கிறிஸ்துவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும். நம் சத்துருக்களுக்கு எதிராகத் திடன் அடைந்து கர்த்தருடைய காரியத்தில் தைரியம் பெற்று திவ்வி காரியங்களில் உறுதியாய் இருக்க வேண்டும்.

நம்முடைய விசுவாசமும், நம்பிக்கையும், வைராக்கியமும் அன்பும் பெருகவேண்டும். நாம் இருக்கிறபடியே இருக்கக்கூடாது. குழந்தைகளாகவும் வளரவேண்டும். நாம் வளரும்படி ஞானத்திலும், பக்தியிலும் பெருக வேண்டும். நாம் வளரும்படிக்கு கிறிஸ்துவை உள்கொண்டு சகல கிருபைகளையும் முயற்சி செய்து தேவனோடு ஐக்கியப்பட வேண்டும். நாம் வளரும்படிக்கு தேவன் தம்முடைய வசனத்தையும், நியமங்களையும், தமது குமாரனையும் தந்திருக்கிறார். நாம் பூரணராகும்படிக்குத் தம்முடைய ஊழியக்காரரையும் தாம் செய்து முடித்த கிரியைகளையும், தம்முடைய சத்துருக்களையும்கூட பயன்படுத்துகிறார். நாம் திராட்சை செடிபோலவும், தொழுவத்தில் உள்ள கன்றுகுட்டிகளைப்போலவும் வளருவோம் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். ஆதலால் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வாக்கியத்தில் கண்டிருக்கிற எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வோமாக. நாம் குழந்தைகளாய் இருக்ககூடாது.

பிதாவே எப்போதும்
குழந்தைகள் போலிராமல்
எங்கள் ஒளி மென்மேலும்
பிரகாசிக்க செய்யும்.

பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்

யூலை 15

“பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1.கொரி. 5:8

இந்த இடத்தில் பஸ்கா பண்டிகையைக் குறித்தே பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதலாவது கொல்லப்பட்டு கதவின் நிலைகளில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிந்தார்கள். இஸ்ரவேலர் விடுதலை அடைந்தார்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி. அவருடைய இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டு நம்மேல் தெளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சத்துருக்கள் அழிந்துப் போனார்கள். நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. இஸ்ரவேலர் பஸ்காவின் இரத்தம் சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியைப் புசித்தார்கள். இரத்தம் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்துவை நாம் உள்கொள்ளு வேண்டும். ஆகவே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

அது நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டுப் பலியிடப்பட்ட கிறிஸ்துவை புசிக்கிற பண்டிகை. அவர் நம்மை மீட்கும் பொருளாக மாத்திரமல்ல பஸ்காவுமாய் இருக்கிறார். அவருடைய மகிமையைப் பற்றியும் அவர் நிறைவேற்றின கிரியைப்பற்றியும் அவர் முடித்த வெற்றியைப்பற்றியும் அவருக்குக் கிடைத்த நித்திய கனத்தைப்பற்றியும், விசுவாசமுள்ள சிந்தையால் நம்முடைய ஆத்துமா போஷிக்கப்படுகிறது. நம்முடைய கண்களை நித்தம் கிறிஸ்துவண்டைக்கு உயர்த்த வேண்டும். மனம் அவரையே தியானிக்க வேண்டும். இதயம் அவரையே உள்கொள்ள வேண்டும். அவர் ஜீவன் அளிக்கும் தேவன். என்னைப் புசிக்கிறவன் என்னால் பிழைப்பான் என்கிறார். நாம் ஆசரிக்க வேண்டிய பண்டிகையின் சாரம் கிறிஸ்துதான். ஆதலால் நாம் தினந்தோறும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். அதிக ஜெபத்தோடும், ஸ்தோத்திரத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தாழ்மையோடும், பயபக்தியோடும், உத்தம மனஸ்தாபத்தோடும், மெய்யான சந்தோஷத்தோடும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். தேவன் கற்பித்திருக்கிறபடியால் நாம் அதை ஆதரிக்க வேண்டும். அதை ஆசரிப்பதால் இரட்சகர் மகிமைப்படுகிறபடியால் அதை ஆசரிக்க வேண்டும்.

இயேசுவே உள்கொண்டு
ஆனந்தம் கொள்வோமாக
ஜீவன் சுகம் பெலன்
எல்லாம் அவரால் வரும்.

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14

“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1

கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.

அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.

கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்

யூலை 13

“இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.” எபேசியர் 2:4

பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிறார். அது துன்பப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் காட்டும் தயவு. அதைக் கொண்டுதான் நம்முடைய துன்பங்களை அவர் சரியாய் அறிந்து உணருகிறார். பழைய ஏற்பாட்டில் அவருடைய ஜனங்களைப்ற்றி, அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார். அவர் தமது அன்பின் நிமித்தம் அவர்களுடைய பரிதாபத்தின் நிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாள்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது.

தேவ இரக்கம் அளவற்றது. அது இரட்சகர்மூலமாய்ப் பாய்கிறது. நம்முடைய துக்கத்தை ஆற்றுகிறதினாலும் நம்முடைய குறைவுகளை நீக்குகிறதினாலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறதினாலும் நம்முடைய வருத்தங்களை அகற்றுகிறதினாலும் அலைந்து திரிகிற நம்மைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதினாலும் அது மகிமைப்படுகிறது. அன்பர்களே, இந்த நாளில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் உனக்க இரக்கம் வைத்திருக்கிறார். உனக்கு தேவையான இரக்கம் அவரிடத்தில் உண்டு. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார். அவர் வாக்கை நம்பு. அவர் சமுகத்தில் இரக்கத்திற்காக கெஞ்சு. தமது இரக்கத்தை உன்னிடத்தில் மகிமைப்படுத்த வேண்டுமென்று கேள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னர் என்பதே உனக்கு போதுமான தைரியம். ஆகவே இன்று அவர் வார்த்தையை நம்பி அவரைக் கனப்படுத்து.

பூமிக்கு வானம் எப்படி
உயர்ந்து இருக்கிறதோ,
அவர் இரக்கம் அப்படி
நமது பாவம் மூடாதோ?

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்

யூலை 12

“அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்” ஏசாயா 8:14

இது இயேசுவைப்பற்றி ஏசாயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், துன்பங்களுக்கும் நாம் தப்பி ஓடவேண்டிய அடைக்கலப் பட்டணம் அவர்தான். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தான் நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், அங்கீகாரத்தோடும் கிருபாசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நாம் ஆராதிக்கலாம். கிறிஸ்துவினாலே தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நாம் அறிய வேண்டிய காரியங்களைப்பற்றி நமக்குப் போதிப்பார். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்கு வேண்டிய சகலமும் பயத்தினின்று விடுதலையும், சத்துருக்களை எதிர்க்க பலனும் துன்பங்களின் உதவியும், துக்கங்களால் உள்ளான பரிசுத்தமும், இந்த உலகத்தில் இருக்கும் மட்டும் சுகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

நண்பரே, எவ்வகை துன்பத்திலும் நீ இயேசுவண்டை போக வேண்டும். உன் தேவை யாவையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள பார்க்க வேண்டும். தேவன் உனக்கு எண்ணளவு கிருபையுள்ளவரென்று காட்டி எல்லா மெய் விசுவாசிகளுக்கும் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று அவர் விவரிக்கிறார். அவர் உன் பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறாரா? நீ தேவனைக் கிறிஸ்துவுக்குள் எப்போதாவது சந்தித்ததுண்டா? நீ கிறிஸ்துவில் தேவனைத் துதிப்பது உண்டா? அவர் உனக்குப் பரிசுத்த ஸ்தலமானால் அவரை மகிமைப்படுத்தப் பார். எந்த ஆசீர்வாதத்தையும் அவரிலே பெற்றுக்கொள்ளத் தேடு. எந்தத் துன்பத்திலும் மோசத்திலும் அவரண்டை போய் அப்படிப்பட்ட மகிமையின் நிலை உனக்குக் கிடைத்ததற்காக அவரை ஸ்தோத்திரி. இங்கே நீ சுகபத்திரமாய் இருக்கலாம். இங்கே உனக்குச் சமாதானம் உண்டு. கிருபையும் இருக்கும்.

இயேசுவில் எனக்கு
சுகம் பெலன் யாவும் உண்டு
இரட்சகரே நீரே என்றும்
என் அடைக்கலமாய் இரும்.

என்னை நோக்கிப் பாரும்

யூலை 11

“என்னை நோக்கிப் பாரும்” சங். 119:132

ஒரு சிறு பிள்ளை தன் தகப்பன் தன்னைக் கவனிக்கும்படி கேட்கிறது. தேவன் செய்கிறதெல்லாம் சுலபமாக செய்கிறார். நம்முடைய வருத்தங்களை நீக்கி துன்பத்தினின்று நம்மை விடுதலையாக்க நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர அவர் நம்மைப் பார்த்தால் போதும். அவர் பார்வை யோபைத் தாழ்மைப்படுத்தி கிதியோனைப் பலப்படுத்தி, பேதுருவை மனந்திரும்பச் செய்து, சாகிற ஸ்தேவானைச் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பிற்று. பார்ப்பது என்பது தயவு காட்டுவது ஆகும். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுஞ்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். தேவன் நம்மை நோக்கிப் பார்க்க வேண்டுமானால் நம்முடைய கண்களை அவரண்டைக்கு உயர்த்த வேண்டும். அவர் நம்மைப் பார்த்து நமதுமேல் கிருபையாய் இருக்க வேண்டுமானால் நாம் விசுவாசத்தோடு அவரை நோக்கி கெஞ்ச வேண்டும்.

அன்பர்களே, தேவனுடைய கண் உங்கள் மேலிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அவர் இரக்கமாய் உங்களைக் கண்ணோக்குவாரானால் உங்கள் பயங்கள் நீங்கிப்போம். உங்கள் அந்தகாரம் விலகும். நீங்கள் ஒளியினாலும் பரிசுத்த நம்பிக்கையினாலும் நிரம்பப்படுவீர்கள். இவ்வளவு நாம் தேவனிடத்தில் கேட்கலாமென்று நினைக்கிறீர்களா? நாம் பெற்றுக்கொள்வதற்கு இது அதிகமென்று நினைத்தாலும் அவர் கொடுப்பதற்கு இது அதிகமல்ல. நாம் அவரோடு ஒப்புரவானோம் என்று இது காட்டுகிறது. அவர் நம்மேல் அக்கறை வைத்துள்ளாரென்று இது நிரூபிக்கும். இது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். இந்த இரவில் நீயும்கூட என்னை நோக்கிப் பாரும் ஆண்டவரே என்று சொல்லி படுக்கைக்குச் செல்.

உமது அடிமையைப் பாரும்
மன்னித்து மகிழ்ச்சி அளியும்
உமது சமுகம் காட்டியே
அமர்ந்து தூங்கச் செய்யும்..

கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்

யூலை 10

“கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்” சங். 26:2

கர்த்தர் மனிதரைப் பார்த்து, ஒவ்வொருவனும் தன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவ பிள்ளை தன்னைச் சோதித்துப் பார்த்து தான் செய்தது போதுமென்றிராமல் தேவனை நோக்கி, கர்த்தாவே நீர் என்னை சோதித்துப்பாரும் என்பான். தன் இருதயம் மோசமானதென்று அறிந்து இன்னும் மிகுதியாக மோசப்பட்டு போவேமோ என்று பயப்படுகிறான். என்னதான் கேடுள்ள ஒருவனிருந்தாலும் அவன் நல்லதை அறியவே விரும்புகிறான். தன் இருதயம் செம்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற ஒளியினிடம் வருகிறான்.

ஆத்துமாவில் தேவ கிருபை இருக்கிறது என்பதற்கு இது நல்ல அத்தாட்சி. தேவனால் போதிக்கப்படுபவர்கள்தான் கர்த்தாவே என்னைச் சோதித்துப்பாருமென்று கேட்பார்கள். சிநேகிதரே இன்று இரவு இப்படி ஒரு ஜெபத்தைபண்ணுவீரா? தேவன் உங்களை சோதித்து பார்ப்பது உங்களுக்குப் பிரியமா? கர்த்தாவே என் இருதயத்தை சோதித்துப்பாரும். நான் உமது கிருபையைப் பெற்றவனா? என் நோக்கங்களை சோதித்துப்பாரும். அவைகள் சுத்தமானவைகளா? அவை தேவ வசனத்தோடு ஒத்திருக்கிறதா? என் எண்ணங்களைச் சோதித்துப்பாரும். உம்முடைய மகிமையையும் சித்தத்தையும் நாடுகிறேனா என்று கேளுங்கள். உன்னை நீயே சோதித்துப் பார்ப்பது தான் இந்த ஜெபத்தின் நோக்கம். என்னைச் சோதித்துப்பாருமென்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். உத்தமன்தான் தன் காரியங்களை நன்றாய்ச் சோதித்துப் பார்க்க கேட்பான். உத்தம சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்தான் தேவன் தங்களை ஆராய வேண்டுமென்று மனதார ஜெபம்பண்ணுவார்கள்.

என்னைச் சோதித்தறியும்,
உமது ஆவியை அருளும்
சூது கபடு ஒழியட்டும்
நான் உமதாலயம் ஆகட்டும்.

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்

யூலை 09

“நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்.” எரேமி. 32:38

இது இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதாய் இருந்தாலும், மெய்யான இஸ்ரவேலரான விசுவாசிகளுக்கும் ஏற்றதுதான். ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட எவரைக்குறித்தும் இப்படி சொல்லலாம். அழுகையோடும் விண்ணப்பத்தோடும் தேவனிடம் திரும்புகிற எந்தப் பாவிக்கும் அவரின் கிருபையின் வார்த்தையை நம்புகிற ஒவ்வொருவருக்கும், எந்த ஓர் உண்மையான விசுவாசிக்கும் இந்த வாக்குத்தத்தத்தில் பங்குண்டு.

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன் என்பதின் ஆழ்ந்த சத்தியம் என்ன? அவர்கள் என் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து, என் வார்த்தையை அங்கிகரித்து, என் சிம்மாசனத்தண்டை பணிந்து, எனக்கு ஊழியம் செய்து, என் சித்தத்தை நிறைவேற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உயர்த்தி, தங்களின் தேவனாக என்னை நம்பி, என்னை ஆராதித்து என்னை நேசிப்பார்கள் என்பதே இதன் கருத்து. நான் அவர்களின் தேவனாய் இருப்பேன் என்றால், அவர்களை நடத்த என் ஞானமும், அவர்களை ஆதரிக்க என் வல்லமையும், அவர்களுக்கு நிச்சம் உண்டாக்க என் அன்பும், அவர்களை இரட்சிக்க என் கிருபையும், அவர்களைச் சுத்திகரிக்க என் பரிசுத்தமும், அவர்களை ஆறுதல்படுத்த என் ஆவியும் கிடைக்கும் என்பதே சத்தியம்.

அவர்கள் தேவனாக நான் அவர்களோடு இருப்பேன். அவர்கள் பட்சத்தில் இருப்பேன். அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன். அவர்களை விட்டுவிலகவும் மாட்டேன். கைவிடவும் மாட்டேன். நான் வாக்களித்தபடியெல்லாம் அவர்களுக்குச் செய்வேன். என் உடன்படிக்கையில் சவதரித்து வைத்திருக்கிறதெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பேன். விசுவாசியே, இந்த வாக்குத்தத்தத்தில் தேவன் உனக்குக் காட்டும் மகா பெரிய இரக்கத்தைப் பார்.

இதுவே எனக்காதாரம்
என் கவலைகள் நீங்கும்
அவர் என் தேவனானால்
துக்கம் களிப்பாகுமே.

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

யூலை 08

“அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி நமதுமேல் கோபமாய் இருக்கமாட்டார் என்று வாக்குப்பண்ணியுள்ளார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நாம் திருந்தவேண்டும் என்பதற்காகவே அவர் கோபிக்கிறார். பேதுருவின் மனதை நோகப்பண்ணி அழுகையோடும் விண்ணப்பத்தோடும் அவனைத் திரும்பினதுபோல நம்மையும் திரும்ப நோக்கிப் பார்ப்பார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, சமாதானத்தோடே போ என்று மரியாளுக்குச் சொன்னதுபோல் நமக்கும் சொல்லுவார்.

நம்முடைய பயங்களை ஓட்டி நம்மைத் தம்முடைய மடியில் சேர்த்து தமது அன்பை நம்மேல் பொழிவார். அவர் வாக்குபண்ணினவைகளை மாற்றாது அப்படியே செய்வார் எப்பொழுதும் அப்படிச் செய்வார். அவர் இருதயம் அன்பினால் நிறைந்திருக்கிறபடியால் அப்படிச் செய்வார் என்பது நிச்சயம். அவர் இரக்கத்தில் பரியப்படுகிறவர் என்பதால் அப்படிச் செய்வார் என்று சொல்லலாம். நம்முடைய புத்தியீனத்தைக் குறித்து நாம் புலம்பினாலும், அவர் மன்னிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. பட்சமும் கிருபையும் நிறைந்த தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கினோம் என்று அழுதாலும் மனம் கலங்க வேண்டியதில்லை. நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவர் திரும்ப இரங்குவார் என்று எதிர்பார்த்திருப்போமாக இஸ்ரவேல் வீட்டாருக்குத் தம்மை மறைத்துக்கொள்ளுகிற கர்த்தருக்குக் காத்திருந்து அவர் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போமாக.

இயேசுவே எங்கள் துன்பங்கண்டு
உருக்கமாய் இரங்குமேன்
எங்கள்மேல் கிருபைகூர்ந்து
சகல பாவம் நீக்குமேன்.

மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்

யூலை 07

“மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்.” 1.தெச.5:6

தூக்கம் இங்கே உவமானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீர இளைப்பாறுதலைப்பற்றியல்ல, மனதின் தன்மையைப்பற்றியே அப்போஸ்தலன் இப்படிச் சொல்கிறார். விசுவாசித்து ஜெபிக்கிற பரிசுத்த விருப்பங்களுக்குரிய வல்லமை நின்றுப்போயிருப்பது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. வேலைசெய்ய வேண்டிய நேரத்தில் தூங்குவது தவறல்லவா? இது மரணத்துக்கு ஒப்பானது. பேர் கிறிஸ்தவர்கள் தூங்குகிறார்கள். ஆனால் நாமோ மற்றவர்கள் தூங்குகிறதுப்போல் தூங்கக்கூடாது. அப்படி நாம் தூங்கினால் உவாட்டர்லூ என்னும் போர்க்களத்தில் கொடிய சண்டை முடிந்த பிறகு காணப்படும் செத்தவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோர் நடுவே தூங்குவதுப்போல, ஒரு பட்டணத்தில் பெரிய கொள்ளை நோய் வந்தபோது அந்த நோய்க்கு மாற்று மருந்து நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம்.

ஒரு தீவில் அநேக அடிமைகள் இருக்க அவர்களை விடுதலையாக்கும் விடுதலை சாசனம் நம்மிடம் இருந்தும் நாம் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். அதிக பைத்தியக்காரர்கள் இருந்தும் ஊரில் நாம் அவர்களைக் குணப்படுத்தக்கூடிய திறமை இருந்தும் தூங்குகிறவர்கள்போல் இருப்போம். போதுமான உணவு இருந்தும் பட்டினியால் சாவதுப்போல் இது இருக்கும். பகலில் அறுவடை நேரத்தில் தூங்குகிற சோம்பேறிபோல இருப்போம். அறுவடை நேரத்தில் பெரும் புயல் அடித்து எஜமானுடைய விளைச்சல் நாசமாகும் சமயத்தில் தூங்கும் வேலைக்காரனைப்போல இருப்போம். இது சத்துரு போர்களத்தில் இருக்கும்போது விழித்திருக்கவேண்டிய போர்ச்சேவகன் தூங்குகிறதுபோல இருக்கும்.

கிறிஸ்துவர் என்று சொல்பவர்
தூங்குகிறதைப் பார்
எழுந்து கீழ்ப்படிந்து
ஓட்டத்தை ஓடிமுடி.

Popular Posts

My Favorites

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21 "என் தேவன் என்னைக் கேட்டருளுவார்" மீகா 7:7 தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது....