ஒகஸ்ட்

முகப்பு தினதியானம் ஒகஸ்ட்

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்

ஓகஸ்ட் 21

“கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவன்” கொலோசெயர் 1:28

விசுவாசி தன்னில் குறையுள்ளவனாக எல்லாரும் பார்க்கும்படி நடந்துக்கொள்ளுகிறான். அவர் உணர்வுகள், விருப்பங்கள், துக்கங்கள், செயல்கள், ஜெபங்கள், தியானம் எல்லாவற்றிலும் குறைவு வெளியரங்கமாய்க் காணப்படுகிறது. அவன் இருதயத்திலிருந்து எழும்பும் பெருமூச்சு, மனதில் வரும் அங்கலாய்ப்பு, கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர், எல்லாம் குறைவையே காண்பிக்கின்றன. ஆனால் கிறிஸ்து இயேசுவிலோ நிறைவுண்டு. நம்மை நீதிமான்களாக்க அவரிடத்தில் பூரண கிருபை உண்டு. நம்மைப் பரிபூரணமாக்க அவரிடத்தில் பரிபூரணமுண்டு. நம்மைப் போதித்து நடத்த அவரிடத்தில் பூரண ஞானம் உண்டு.

அவரோடு ஐக்கியப்படுவதால் நாம் பூரணராகிறோம். ஏனென்றால் அவருடைய மணவாட்டியாக அவருக்கிருப்பதெல்லாம் நமக்குச் சொந்தமாகிறது. அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளகிறதினால்தான் நாம் பூரணராகிறோம். அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஆவியாலே நாம் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம். நாம் குறைவற்று, தேர்ச்சி பெற்றவர்களாவது, தேவனுடைய தீர்மானம். இப்படி வளர அவர் வாக்களித்துள்ளார். உதவி செய்கிறார். வசனத்தில் உள்ளபடியே நடந்தேறும். அவர் நம்மை பூரணராக்கி நிறையுள்ளவர்களாய், தேறினவர்களாய் பிதாவுக்குமுன் நிறுத்துகிறார். நாம் பூரண பரிசுத்தர் ஆவோம். பூரண பாக்கியர் ஆவோம்.

இயேசு மரித்தபோது
அவர் சீடரும் மரித்தார்
அவரும் அவர்களும் ஒன்றே
இப்பாக்கியம் மகா பெரியது.

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

ஓகஸ்ட் 27

“தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்”. நீதி. 2:8

விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது. விசுவாசியின் பெலவீனம் அதிக வருத்தத்தைக் கூட்டுகிறது. உள்ளான போராட்டமும் அவன் வழியைக் கடினப்படுத்துகிறது. ஆகிலும் நாம் சேர வேண்டிய நகரத்திற்கு அந்த ஒரு பாதைதான் உண்டு. இந்தப் பாதை இளைப்பாறுதலுக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சுதந்திரத்திற்கும் நடத்துகிறது. இந்தப் பாதையில் கர்த்தரும் தம்முடைய பரிசுத்தவான்களுடன்கூட நடக்கிறார். அவர்களின் குறைவுகளைப் போக்கி அவர்களுடைய நிலைமைக்குத்தக்கதாக இரக்கம் பாராட்டுகிறார்.

சத்துருக்கள் இவர்களை மேற்கொள்ள முடியாமல் தற்காக்கிறார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை அவர்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்று எக்கொடிய சோதனையைப்பற்றியும் சொல்லலாம். சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தும்போது பின்வாங்கிப் போகாமலும், பாதுகாக்கிறார். அவர்களுடைய பெலவீனத்தில் தம்முடைய பெலனைப் பூரணப்படுத்தி தம்முடைய கிருபை அவர்களுக்குப் போதும் என்று ரூபிக்கிறார். விழிப்பாய் அவர்களைக் கவனித்து பலத்த கையால் தாங்கி, அன்பான மனதால் அவர்களைத் தாங்குகிறார். அன்பரே, இன்றுவரை அவர் உங்களைப் பாதுகாத்து வந்ததை கவனித்துப் பாருங்கள். இனிமேலும் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்புங்கள். பரிசுத்தவான்களைப் பராமரிப்பதும் அவர்களின் பாதைகளைப் பாதுகாப்பதுமே அவருடைய வேலை.

இயேசுவின் கரத்தில் பக்தர்
என்றும் சுகமாய் இருப்பர்
அவரால் துன்பங்களைக்
கடந்து என்றும் சுகித்திருப்பர்.

துக்கம் நிறைந்தவர்

ஓகஸ்ட் 23

“துக்கம் நிறைந்தவர்” ஏசாயா 53:3

தேவகுமாரன் துக்கமாய் இருப்பது எவ்வளவு விசித்திரமான காரியம். அவர் மகிமையின் பிரகாசமானவர். பிதாவின் அச்சடையாளமானவர். ஆனாலும் அவருடைய ஜனங்கள் பட்ட துன்பத்தையும், பட வேண்டிய துன்பத்தையும் அனுபவத்தால் அறியவே இந்த உலகில் வந்தார். அவர் துயரங்களை கேள்வியால் அறிந்தவர். அவர் நம்முடைய சுபாவத்தை தரித்துக் கொண்டார். நமக்கு பதிலாக வந்தார். பிறந்தது முதல் துன்பத்தைச் சகிக்க ஆரம்பித்தார். மரணபரியந்தமும் துன்பத்தையே அனுபவித்து வந்தார். தன்னுடைய கடமையில் அதிக பாரத்தைச் சுமந்தவர். பிதாவை நிந்தித்தவர்களுடைய நிந்தை அவர்மேல் விழுந்தது. அவர் துக்கம் அனுபவித்தவர். பலவகையில் துக்கம் அனுபவித்தார். துக்கத்தின் ஆழம் அவருக்குத் தெரிந்திருந்தது.

அவரைப்போலவே துயரங்களை அனுபவித்தவர் வேறே ஒருவரும் இல்லை. சில வேளைகளில் சந்தோஷப்பட்டாலும் பல வேளைகளில் துக்கப்பட்டார். துக்கமே அவர் கூட்டாளிகளாய் இருந்தது. நண்பரே, கர்த்தர் உனக்காய் துக்கப்பட்டார். உன்னைப்போல் துக்கப்பட்டார். உன்னைவிட அதிகம் துக்கப்பட்டார். அதனால் இப்போது உனக்காகப் பரிதபிக்கிறார். மனிதன் அனுபவிக்கும் துக்கம் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும். அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் துக்கம், துயரம் ஏற்பட்டது. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் ஏன், நரகத்திலிருந்தும்கூட அவருக்குத் துன்பம் வந்தது. உனக்காய் அவர் பாடுபட்டார். ஆதலால் உனது எல்லா துக்கத்திலும், துயரத்திலும் நிர்பந்தத்திலும் உனக்காகப் பரிதபித்து, உனக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.

மனிதனால் எனக்கிரங்கி
உருக்கத்தால் தவிர்க்கிறார்
கர்த்தாவே என்னைத் தாங்கி
முற்றிலும் இரட்சியுமே.

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06

“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5

தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.

இப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன? அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.

உமது சமுகம் தரிசிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
கர்த்தரைத் தேடிய
இஸ்ரவேலர் வெட்கப்பட்டதில்லை.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்

ஓகஸ்ட் 13

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்” உபா. 14:1

என்ன ஒர் ஆச்சரியமான உறவிது. தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! இவர்கள் யார்? அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். இது இவர்களுக்குள்ளே புது சுபாவத்தையும், புது விருப்பங்களையும், புது ஆசைகளையும், புது எண்ணங்களையும், புது செய்கைகளையும் உண்டுபண்ணும். இவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள். இவர்கள் புத்திரசுவிகார ஆவியைப் பெற்றவர்கள். இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. ஒரு பிள்ளை தகப்பன் சொன்னதை நம்பி தகப்பன் கற்பிப்பதைச் செய்து தகப்பன் அனுப்பும் இடத்துக்கும் சென்று, அவர் வாக்குமாறாதவர் என்றும், அவர் கொடுப்பார் என்றும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது. உன்னைச் சிநேகிதனற்றவனென்று சொல்லாதே. நீ அநாதை பிள்ளை அல்ல. அவர் உன் தகப்பன். ஒப்பற்ற தகப்பன். மாறாத தகப்பன். மனம் கலங்காதே.

உன் வறுமையில் பிதாவின் சம்பத்தையும், நிந்தையில் உனது கனமான உறவையும் உன் வியாதியில் பரம வீட்டையும் மரணத்தில் முடிவில்லா நித்திய வாழ்வையும் நினைத்துக்கொள். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள். நாம் எல்லாரும் இப்பொழுது பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாய் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை. ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.

இந்தக் கிருபைத் தாரும்
அது என்னை நடத்தட்டும்
என் நா உம்மைத் துதிக்கும்
என் இதயம் உம்மை நேசிக்கும்.

உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்

ஓகஸ்ட் 16

“உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்” சங்கீதம் 89:16

இவர்கள் தேவனுடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நமக்கென்று ஒரு நீதியே கிடையாது. அவரே நமக்கு நீதியைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்த நீதியை இலவசமாய்த் தருகிறார். இந்த நீதியை விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம். நமது கிறிஸ்தவ மார்க்கம் விசேஷமானது. நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் ஞானத்தினால் நாம் ஞானிகளாகிறோம். நம்முடைய மூத்த சகோதரன் இயேசுவால் நாம் ஐசுவரியவான்களாகிறோம். நம்முடைய இரட்சகரின் நீதியால் நாம் நீதிமான்களாகிறோம். இந்தச் செய்தி நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்தி, ஆத்துமாவைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது. இந்த நீதியில் நாம் குற்றவாளி என்று தீர்க்கிற நியாயப்பரமாணத்தின் வல்லமைக்கும் சாத்தானுடைய பொல்லாத தந்திரத்திற்கும், கொடிய உலகத்துக்கும், மரணத்தின் பயங்கர வேதனைக்கும் மேலாக உயர்த்தப்படுகிறோம்.

இது சமாதானத்திற்கும் தேவ நேசத்திற்கும் புத்திரசுவிகாரத்திற்கும் தேவ சமுகத்து நம்பிக்கைக்கும், கிறிஸ்துவோடு உன்னத ஸ்தலத்தில் உட்காருகிறதற்கும், நித்திய மகிமைக்கும் நம்மை உயர்த்துகிறது. இது தேவனுடைய தன்மைபற்றியும், கிறிஸ்துவின் அன்பான கிரியைபற்றியும் மேலான எண்ணம் கொள்ளச் செய்கிறது. நாம் இந்த நீதியை மதித்து, நித்தம் தரித்துக் கொண்டு தேவன் நம்மை அங்கீகரிக்கிறதற்கு நன்றி சொல்வோமாக. இந்த நீதி நம்முடைய கலியாண வஸ்திரம், அழியாத கேடகம், பரம வாழ்வை நம்மை சுதந்தரிக்கச் செய்யும் பத்திரம். இந்த நன்மை நம்மை ஷேமப்படுத்தி, ஆறுதல்படுத்தி, பலப்படுத்தி, மேன்மைப்படுத்துகிறது.

எல்லாரும் பட்டு வஸ்திரம்
உடுத்தி மகிழட்டும்
என் போர்வை கிறிஸ்துவின் நீதியே
இது என்றும் எனக்குள்ளதே.

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19

“என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று” சங்.77:2

கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஆறுதல் மொழிகளைக் கேட்க மறுக்கின்றனர். ஒருவேளை தேவன் அவர்கள் விக்கிரமாகப் பாவித்த ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துப்போட்டிருப்பார். விசுவாசத்தினால் ஜீவனம்பண்ணும்படி தம் முகத்தை மறைத்திருக்கலாம். அல்லது இவ்வுலக காரியங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தாங்கள் நம்பியிருந்தவற்றின்மேல் மாயை என்று எழுதி இருக்கலாம். யோனாவைப்போல் இவர்கள் கோபத்திற்கு இடம் கொடுத்து இருப்பார்கள்.

அல்லது பெருமை தங்களிலே ஆளும்படி இடம் கொடுத்திருப்பார்கள். ராகேலைப்போல கவலைக்கும் அதிகம் இடங்கொடுத்திருப்பார்கள். அல்லது சோதனைக்குள் விழுந்திருப்பார்கள். தவறுகளை அதிகம் செய்திருப்பார்கள். இது முழுவதும் தவறு. சுவிசேஷத்தில் உனக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார். மோட்சத்தின் மேன்மையைப் பார். சங்கீதக்காரன் இவ்வாறு தன்னையே நோக்கி, தன்னைத் தேற்றிக் கொண்டான். தன் பாவத்திற்காகத் துக்கப்பட்டான். தன் எண்ணத்தையும், நடத்தையையும் சீர்திருத்திக் கொண்டான். நமக்குப் போதனையாகவும், எச்சரிப்பாகவும் விழிப்பு உணர்ச்சி ஏற்படவும் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கிறான். ஆறுதலைப் பெறக்கூடியவர்களும் தங்குள் தவறுகளால் ஆறுதலை அனுபவியாமல் போகிறார்கள். கர்த்தரின் ஜனங்கள் அடிக்கடி தங்களையே வாதித்துக் கொள்கிறார்கள். ஆறுதலின் பாத்திரத்தைத் தங்களைவிட்டு அகற்றி தாங்கள் அதற்குப் பாத்திரர் அல்ல என்கிறார்கள்.

சகல நன்மைக்கும் ஊற்றே
துக்கம் நீங்கி ஆற்றிடும்
மறுமையில் சேரும்போது
வாழ்ந்தென்றும் சுகிப்பேன்.

மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்

ஓகஸ்ட் 05

“மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” எபேசி. 6:6

தேவனுடைய சித்தம் என்ன என்பதை நாம் அறியவேண்டும். ஒவ்வொரு பாவியும் தம்மை விசுவாசித்து, நேசித்து தமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தேவ சித்தம். ஒவ்வொரு தேவ பிள்ளையும் தேவனுடைய அதிகாரத்தை மதித்து, தம் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தம் கொள்கிறார். தேவன் தம் சித்தத்தை வெளிப்படுத்துவதைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். நமது வாழ்க்கைக்கு அதுவே சட்டம். நமக்கு இது கடமையாகவும் தேவனுடைய சித்தம் செய்யும் பொறுப்பாகவும் இருக்கிறது. மனிதர் நம்மை விரோதித்தாலும், நமது பிரியத்துக்கு அது விரோதமாய் கண்டாலும், நாம் பிதாவினுடைய சித்தம் செய்ய வேண்டும்.

எஜமானுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அரசருடைய சட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும். இரட்சகருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் சித்தத்தை மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். பாவம் இருக்கும் இருதயத்திலிருந்து எல்லா தீமையும் வருகிறதுப்போல், கிருபையால் புதுப்பிக்கப்பட்ட இருதயத்திலிருந்து நன்மையான காரியங்கள் வெளிப்படுகிறது. இந்த நன்மையான கிரியைகள் தேவனுடைய சித்தம் செய்பவையாகவும் இருக்கவேண்டும். முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். உற்சாகமாய் தேவனுக்குரியவைகளை நிறைவேற்ற வேண்டும். பிரியமானவரே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்ய உங்களுக்கு மனம் உண்டா? உங்களுக்கு இருக்கிற அறிவுக்குத்தக்கதாக செய்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படிதல் மனப்பூர்வமானதா?

கிறிஸ்துவே என் மாதிரி
அவரையே நான் பிடிப்பேன்
அவர் அடி பின் செல்லுவேன்
அவர் சாயல் அணிவேன்.

நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?

ஒகஸ்ட் 09

“நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?”  மத். 5: 47

மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ன? சிறைச்சாலை, மருத்துவமனை, தர்மசாலை, வியாதியஸ்தர் அறை, நிர்பந்தமான வீடுகள் இவைகளைப் போய் பார்த்திருக்கிறீர்களா? குருடர், சப்பாணிகள், மனநிம்மதியற்றவர், தொழு நோயுள்ளவர் இவர்களைச் சந்தித்துள்ளீர்களா? பரிசுத்தவான்கள் சகித்தது என்ன? ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு, சிறைச்சாலையில் தேவனுக்காய்த் துன்பப்பட்டவர்கள் கொலைகளத்தில் உயிரைக் கொடுத்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். அடிகளைகளை வாங்கிக் கொண்டும் ஜெபித்த இவர்களைப் பார். உன் வாழ்க்கையையும் பார். வேதத்தையும் பார். பரலோகத்தையும் பார். நரகத்தையும் பார். உனக்குக் கிடைத்த பாக்கியங்களை நினை. உனக்கு அதிகம் அதிகம் கிடைக்கவில்லையா? மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன?

உலகத்தானைவிட, அஞ்ஞானியைவிட, புறமதஸ்தனைவிட, அநேக பெயர் கிறிஸ்தவனைவிட எனக்கு நல்ல சட்டதிட்டங்கள் உண்டு என்கிறாய். உன் இதயத்தையும், பணத்தையும், நேரத்தையும் சகலத்தையும் அவருக்குக் கொடுத்தேன் என்கிறாய். ஆனால் மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன? கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ ஊழியத்துக்காக, சபைக்காக, ஏழைகளுக்காக, தேவ மகிமைக்காக, நீ செய்தது என்ன? மற்றவர்களைவிட உனக்கு அதிகம் தெரியுமே, அதிகம் பேசுகிறாயே? ஆகவே, மற்றவர்களைவிட உன்னிடத்தில் அதிகம் எதிர்ப்பார்ப்பது நியாயந்தானே மற்றவர்களைவிட அதிகம் செய்யப்பார். இல்லாவிட்டால் நீ சொல்வதை குறித்துச் சந்தேகம் கொள்ளுகிறது நியாயந்தானே.

நமது பெயருக்கேற்ற
நல் நடத்கை எங்கே?
மாறினோம் என்று காட்ட
நற்கனிகள் எங்கே?

Popular Posts

My Favorites

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18 "உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" உன்.1:4 சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி....