செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர்

மரணபரியந்தம் நம்மை நடத்துவார்

செப்டம்பர் 11

“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14

இந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா? நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.

நாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.
அவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.

என்றும் மாறாதவர் நமது தேவன்
நித்தம் நம்மை நடத்துவார் அவர்
மரணம் மட்டும் நம்மைக் காப்பார்
நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?

செப்டம்பர் 16

“மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மல். 3:8

இந்த கேள்வி மிகக் கேவலமானது. மனிதன் தேவனை வஞ்சிப்பதென்பது எத்தனை துணிகரமான செயல்! நாம் தேவனை எவ்வாறு வஞ்சிக்கிறோம். அவருக்குச் சொந்தமானவைகளை நாம் எடுத்துக்கொள்ளாமற்போனாலும், நாம் அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தாமலிருந்து அவரை வஞ்சிக்கிறோம். ஆதலால், அவர் நம்மைப் பார்த்து, நீங்கள் என்னை வஞ்சித்தீர்கள் என்கிறார். அவருடையவைகள் யாவற்றிலும் நாம் அவரை வஞ்சிக்கிறோம். அவருக்காகச் செலவிட வேண்டிய அவருடைய நேரத்தை எடுத்துக்கொண்டோம். அவருடைய பொருளைத் திருடிக்கொண்டோம். பிறருக்குக் கொடுக்க வேண்டியவைகளை நமக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டோம். அவருடைய ஊழியத்தை நாம் செய்வதில்லை.

நம் இருதயம் அவருக்குச் சொந்தம். நாம் அதைக் கொடுக்கவில்லை. மாறாகச் சிலுவைகளுக்குக் கொடுத்தோம். உலகத்தையே அதிகம் நாடி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நேசித்தோம். அவர் தந்த திறமைகளை அவருக்கென நாம் பயன்படுத்தவில்லை. அவருடைய பணிகளை விட்டு நமது பணிகளையே செய்தோம். இப்படி நடப்பது பாவம். அவரை வஞ்சிப்பது கொடுஞ்செயல். நம்மால் அவருடைய கோபத்திற்குமுன் இமைப்பொழுதுகூட நிற்கமுடியாது.

பிரியமானவர்களே, தேவனை நாம் வஞ்சித்துக்கொண்டிருக்கிறோமா? இவ்வாறானால் உடனே நமது குற்றத்தை அறிக்கை செய்துவிட்டு விடுவோம். நமது மீறுதல்களை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்வோம். முதலாவது தேவனுக்குரியவைகளை அவருக்குச் செலுத்துவோம். நமது உள்ளத்தில் உண்மையும், நடக்கையில் உத்தமமும் இருந்தால் எத்தனை நலமாயிருக்கும்.

நான் உம்மை வஞ்சித்தேன்
நாதா என்னை மன்னியும்
கிறிஸ்துவின் இரத்தம் மீட்டதால்,
என்னைக் கடாட்சித்தருளும்.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04

“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14

இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா?

அவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

இரவில் கவலை நீக்குவேன்
என்னை ஆராய்ந்துப் பார்ப்பேன்
கண் மூடும் முன்னே நான்
ஜெபத்தில் பேசுவேன்.

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்

செப்டம்பர் 05

“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்” ஆப. 3:18

இது நல்ல தீர்மானம். நமக்கிருக்கும் எந்தச் சூழ்நிலை மாறினாலும், மனிதர்கள் மாறினாலும் கர்த்தர் மாறாமல் இருக்கிறார். வெளிச்சம் இருட்டாயும், சாமாதானம் சண்டையாயும், இன்பம் துன்பமாயும், சுகம் வியாதியாயும் மாறினாலும் நாம் அவருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் எப்படியிருந்தாலும் நாம் இன்னும் கர்த்தருக்குள் மகிழலாம். ஆபகூக்கைப்போல நாம் இருக்கவேண்டுமானால், கர்த்தர் நமக்குச் சொந்தமாக வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடையதாக வேண்டும்.

அவருடைய நாமத்தைக் குறித்து நம்முடைய மனதிற்கு தெளிவான, வேத வசனத்திற்கு இசைந்த எண்ணங்கள் உண்டாக வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. நாம் தேவனோடு ஒப்புரவாயிருக்கிறோம். ஆகவே, அவர் நம்முடைய உத்தம சிநேகிதன் என்று உணர வேண்டும். அப்போது எக்காலத்திலும் அவரில் நாம் மகிழலாம். அவரின் நிறைவுகள்தான் நமக்குப் பொக்கிஷம். அவருடைய வல்லமை நமக்கு ஆதரவு. அவருடைய அன்பு நமக்கு ஆறுதல். அவருடைய வாக்கு நமக்குப் பாதுகாப்பு. அவருடைய சிம்மாசனம் நமக்கு அடைக்கலம். அவருடைய சமுகம் நமக்குப் பரலோகம், தேவனிடத்திலுள்ள எதுவும் நமது சுகத்தை விருத்தியாக்கும்.

அன்பானவர்களே, இந்த இரவு கர்த்தரிடத்தில் போய், அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வந்துள்ளோம் என்று சொல்லுங்கள். நீங்கள் அவருடைய நன்மையை உணர்ந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை எடுத்துச் சொல்லி, அவருடைய கிருபைக்காகக் கெஞ்சுகிற சத்தத்தை அவர் கேட்கட்டும்.

தேவனே என் ஆஸ்தி
என் மகிழ்ச்சியின் ஊற்று
வறுமையிலும் அது வற்றாது
மரணத்திலும் ஒழியாது.

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

செப்டம்பர் 03

“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” ஏசாயா 63:9

கர்த்தருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இருக்கும் ஐக்கியம் நெருங்கினதும் மெய்யானதுமாயிருக்கிறது. பல நேரங்களில் தேவன் தமது ஜனத்தைவிட்டு விலகினதுப்போல் காணப்படுவார். இது அவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தண்டிக்கப்படும் போது அவரும் சேர்ந்து துன்பப்படுகிறார். தேவ ஜனங்கள் துன்பங்களைத் தனிமையாய் அனுபவிப்பதில்லை. தேவன் எப்போதும் அவர்களோடிருந்து தகப்பன் பிள்ளைகளோடு துன்பத்தைச் சகிப்பதுபோல் துன்பத்தைச் சகிக்கிறார். வேதமும் இயேசுவானவர் எல்லாருடைய நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டாரென்று சொல்கிறது. அவர்களுக்கு வருகிற துன்பங்கள் அநேகம். இந்த அநேக துன்பங்கள் இவர்களைக் கொடிய வருத்தத்திற்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவர்களுடைய எல்லா வருத்தங்களிலும் அவர் நெருக்கப்படுகிறார். அவருடைய சமுகத்து தூதர்கள் இவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

அன்பான விசுவாசியே! நீ உன் மனதில் உன் சரீரத்தில் நெருக்கப்படுகிறாயா? அதைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவானவர் அறிக்கை உன்னோடு அனுதாபப்படுகிறார். உது சோதனைகள், பயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் அவைகளைப் பிதாமுன் வைத்து நீ இரக்கம் பெறவும். தகுந்த வேளையில் உதவிக்காக கிருபையைக் கண்டடையவும், உனக்காகப் பரிந்து பேசுகிறார். அருமையான இரட்சகரே நீர் என் சோதனைகளிலும் துன்பங்களிலும் பங்கடைந்து அவைகள் எல்லாவற்றினின்றும் மகிமையாய் என்னை விடுவிப்பீர் என்கிற சிந்தை எப்பொழுதும் என்னைத் தேற்றும்படி செய்யும்.

நம்முடைய ஆசாரியர் நமக்கு இரங்கத்தக்கவர்
நம்மோடென்றும் அவர் பாடுபடுபவர்
காயத்தில் எண்ணெய் ஊற்றி
தேற்றி இரட்சிப்பார்.

தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக

செப்டம்பர் 22

“தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” சங். 3:8

உலகம் உண்டாவதற்கு முன்னமே, தேவனுடைய ஜனம் எல்லா ஞான நன்மைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவால் எல்லா நன்மைகளையும் பெறுகிறார்கள். மறுமையிலும் கிறிஸ்து நாதரோடு வாழ்ந்து அனைத்து நன்மைகளையும் அனுபவிப்பார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய கிருபையால் அவர்கள்மேல் இருப்பதனால், அவர்கள் அவரைப் புகழ்ந்து போற்றித் துதித்துப் பாட அவர்களைத் தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுடைய பரிசுத்த பெருகுகிறது. அந்த ஆசீர்வாதம் தங்கியிருப்பதனால், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள் யாவும் நன்மையாகவே முடிகிறது. அவர்களுடைய குடும்பத்தின்மேலும் இந்த ஆசீர்வாதம் தங்குகிறது. உடன்படிக்கைப் பெட்டியின்மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட ஓபேத், ஏதோம் என்பவர்களுடைய வீட்டைப் போல் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

அன்பானவர்களே, தேவ ஆசீர்வாதம் உங்கள்மேல் தங்குவது தான் உங்கள் பாக்கியம். இதை அனுபவித்து இருக்கிறீர்களா? தேவ கிருபையால்தான் இது நடக்கிறது என்று அறிவீர்களா? இயேசு கிறிஸ்துதான் இக்கிருபையை உமக்கு அருளுகிறார். விசுவாசத்துடன் கீழ்படிவதனால் இதை அனுபவிக்கலாம். தேவ வாக்குத்தத்தத்தின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது. தேவ பிள்ளையே, உனக்குத் தேவையானதைத் தர தேவன் ஆயத்தமாக இருக்கிறார் என்னும் சிந்தையோடு இன்றிரவு படுக்கைக்குச் செல்லுங்கள். தகப்பனே, என்னை ஆசீர்வதியும் என்று ஜெபித்துப் படுத்துக்கொள். அவரை நம்புகிற யாவரும் பாக்கியவான்கள்.

நான் உம்முடையவன்
என்னை மகிழ்ச்சியாக்கும்
உம் சொந்த மகனாகவே உம்
வாக்குத்தத்தம் பெறுவேன்.

நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

செப்டம்பர் 10

“நான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” சங். 86:11

கர்த்தருக்குப் பயப்படுகிறதென்றால் அவர் வார்த்தையே நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, அவரை மகிமைப்படுத்துகிறதே ஆகும். அவருடைய நாமத்தில் பக்திவைராக்கியம் கொள்வது, அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்து, அவரை விசனப்படுத்தாமல் இருப்பது அவரைத் தொழுவது ஆகும். ஆராதனை என்பதில், துதி, தோத்திரம், ஜெபம் ஆகியவை அடங்கும். முழு உள்ளத்தோடு செய்யாத ஆராதனை ஒன்றுக்கும் உதவாது. தேவனைத் தொழுதுகொள்ளும்பொழுது, நமது சிந்தனை அவர்பேரில் இல்லாது சிதறிப்போவதுண்டு. இதனால்தான் நாமும் சங்கீதக்காரனைப்போல், உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இதயத்தை ஒரு முகப்படுத்தும் என்று ஜெபம் செய்ய வேண்டும்.

அதாவது, சமாதானமாய் இருக்கவும், தேவ சமுகத்தில் களிகூர்ந்து ஆராதனை செய்யவும் இது முக்கியம். இவ்வாறு நாம் ஜெபிக்கும் பொழுது, நாம் தேவ ஆராதனையில் பிரியம் கொள்வோம். பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்கு ஊழியம் செய்யத்தக்க கிருபையைப் பெற்றுக்கொள்ளத் தேடுவோம் என்று காட்டுகிறோம் பரிசுத்தவான்கள்கூட இருதயத்தை அலையவிடுவதினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தடைப்படுகிறார்கள். சில நேரங்களில் நாமும் அவ்வாறு உணர்வதுண்டு. இந்நிலையிலுள்ளவர்கள், மந்தமனமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் உற்சாகமில்லாமல், இரண்டுங்கெட்டானாயிருப்பார்கள். அவர்கள் தாவீதைப்போல ஜெபிக்க வேண்டும். அப்பொழுது மேலான தேவசமாதானம் இவர்களுடைய சிந்தையை ஆளும். இருதயத்தை ஒருமுகப்படுத்தி, தேவனுக்குப் பயந்திருங்கள். ஆவிக்குரிய வாழ்வில் வளருங்கள்.

என் இதயம் அலைந்து
திரியாமற் செய்திடும்
உம்மையே பற்றி நிலைத்து
வாழ்ந்திருக்க உதவிசெய்யும்.

Popular Posts

My Favorites

ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20 "ஜெயங்கொள்ளுகிறவன்" வெளி 2:17 ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்...