நவம்பர்

முகப்பு தினதியானம் நவம்பர்

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.

அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01

“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.

அவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

எந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.

இரட்சகரான இயேசுவே
உயிரோடெழுப்பி பரத்தில்
வீற்றிருப்போரே, பாவியாம்
என்னையும் இரட்சித்தருளும்.

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24

“கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” ரோமர் 5:6

பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும் அவர் மரித்தார். இவ்வாறானவர்களுக்காக மரிப்பதுமான் மிகப் பெரிய தயவு. நல்லவர்களுக்காகவும், பக்திமான்களுக்காகவும் மரித்திருப்பாரானால், இப்பாவிகளாகிய நமக்காக மரிக்கவில்லையென்று நாம் சொல்லி விடலாம். ஆனால் இயேசுவோ அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் இப்படிப்பட்ட அக்கிரமக்காரரே. நாம் அவரை விசுவாசிப்போமானால், நமக்காகவேமரித்தார் என்று அறிவோம். நமக்குப் பதிலாக, நமக்கு பிணியாளியாக அவர் மரித்தார். நான் மரணத்தை அனுபவியாதிருக்க அவர் மரித்தார். நாம் அவருக்குள் நீதியாகும்படிக்குப் பாவமில்லாத அவர் பாவிகளான நமக்காக மரித்தார்.

அக்கிரமக்காரர்களும், பாவிகளுமான நாம் பிழைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை நினைத்து ஆறுதல் அடைவோமாக. நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவரே, நமது சரீரத்தில் நம் பாவங்களைச் சுமந்தார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம். இனி நாம் மரிப்பதில்லை. நமது பாவங்களுக்காகப் பிரதிபலன் செய்தாயிற்று. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தாயிற்று. அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்தார். என்னிடத்தில் விசுhசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். மாட்சிமை நிறைந்த மீட்பரே உமது அளவற்ற அன்புக்காக எவ்வாறு உம்மைத் துதிப்போம்.

சிலுவையில் என்க்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்துவே
உம் அன்பிற்காகவென்றும்
உம்மைத் துதி செய்வோம்.

எபெனேசர்

நவம்பர் 19

எபெனேசர்” 1.சாமு.7:12

சிருஷ்டிகளாகிய நாம் மோசத்தில் விழக்கூடியவர்கள். வலிமையில்லாதவர்கள். அறிவீனர். நமக்கு எந்த நேரத்திலும் நமது பகைவனான சாத்தானாலும்,  அவன் வைக்கும் கண்ணிகளாலும் ஆபத்து எந்நேரமும் ஏற்படும். நாம் சிறுக சிறுகத் தவறிப்போகிறவர்கள். அச்சத்தால் பீடிக்கப்படுகிறவர்கள். இவ்வாறான நேரங்களில் நமக்கு உதவி செய்திடவே எபெனேசராக தேவன் இருக்கிறார். அவர் நம்மோடே இருந்து, தேவைப்படும்பொழுதெல்லாம் நமக்கு உதவி செய்கிறார். தேவனுடைய ஒத்தாசையினால்தான் நாம் நமது அவிசுவாசத்தையும், பாவ வாழ்க்கையையும் மேற்கொண்டோம். நமது சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்கிறோம். துன்பமும், சோதனையும் வந்தபோதும், எத்தகைய புயலுக்கும் அஞ்சாதிருந்தோம். தேவ ஒத்தாசையாலேயே இம்மட்டும் காக்கப்படுகிறோம்.

ஆகவே, நம்முடைய எபெனேசராகிய தேவனை நம்முன் நிறுத்தி நமக்கு அவர் செய்த உதவியை அறிக்கை செய்வது நமது கடமை. எல்லா உதவிகளையும் நமக்குச் செய்பவர் நமது கர்த்தரே. அவரே ஏற்ற நேரங்களில் உதவியவர். எப்போதும் அவர் நமக்கு உதவி செய்பவராயிருக்கிறபடியால், அவரைத் துதிப்போம். அவரிடத்திலிருந்து நாம் உதவிகளைப் பெற்றதால், நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவை? அவரைத் துதித்து, ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்துவோம். இவ்வாறு செய்யும்பொழுது நாம் முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். அவருடைய உதவியும் பிரசன்னமும், என்றும் நம்மோடிருக்கும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். நன்றி செலுத்தும் ஜெபங்களைத் தவறாது ஏறெடுக்க வேண்டும். எபெனேசர் இம்மட்டும் தேவன் நமக்கு உதவி செய்தார். இனிமேலும் செய்வார் என்று அவருடைய உதவிக்காகப் பொறுமையோடு காத்திருப்போம். அவர் செய்த உதவிக்கு சாட்சி சொல்லுவோம்.

இம்மட்டும் காத்தார் தேவன்
எபெனேசர் ஆதலால் போற்றுவேன்
இம்மையிலெல்லாம் நம்புவேன்
இம்மை விட்டவரில்லம் சேருவேன்.

இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்

நவம்பர் 16

“இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்” எபி. 13:8

தேவனுக்கிருக்கும் முக்கியமான தன்மைகளின் ஒன்று அவர் மாறாதவர் என்பது. இப்பண்பு அவருக்கு மட்டுமே பொருந்தும். இதைக் கொண்டே அவர் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால், யாக்கோப்பின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை என்கிறார். கர்த்தராகிய இயேசுவும் தெய்வத்தன்மை உடையவர். ஆகவே, அவர் என்றும் மாறாதவராகவே விளங்குகிறார். தமது மகத்துவமான தன்மையிலும், உள்ளான நோக்கங்களிலும், உபதேசங்களிலும், தமது அளவற்ற அன்பிலும், முழு வல்லமையிலும், இரக்க உருக்கத்திலும், கிருபை நிறைந்த புண்ணியத்திலும், பாவத்தை அவர் வெறுக்கும் வெறுப்பிலும், அவர் என்றும் மாறாதவர்.

இவ்வாறு அவர் மாறாதவராய் இருப்பதினால்தான், அவரை நாம் மாறாத தேவனாகப் போற்றுகிறோம். அவரையே நாம் நம்ப வேண்டும். அவருடைய சுவிசேஷத்திலுள்ள அருமையான சத்தியங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இம்மைக்குரியவற்றை வெறுத்து, மேலான வாழ்வுக்கரியவைகளை நாடவேண்டும். மாறாத நமது தேவன் ஒளியில் இருக்கிறபடியே இருளிலும் இருக்கிறார். அவர் நமது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்பதுபோலத்தான் நமது துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறார். நம்மையாயினும் தீமையாயினும் இயேசு மாறாதவர். அவர் என்றும் அன்பும் கிருபையும் நிறைந்த கிறிஸ்துதான். முதன் முதல் அவருடைய அன்பை நாம் ருசித்தபடியே இன்றும் நாம் ருசிக்கலாம். அன்று அவரில் களிகூர்ந்தவாறே இன்றும், இனிமேலும் நாம் களிகூரலாம். மாறாத இயேசு உன் ஆண்டவராயிருப்பதற்காக நன்றித் துதி அவருக்கு ஏறெடு.

யாவும் மாறிடினும்
இயேசு என்றும் மாறார்
என்றும் மாறா இயேசுவாதலால்
என்றும் அவரை நம்பிடுவேன்.

உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது

நவம்பர் 09

“உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது” லூக்கா 21:28

நீங்கள் பெறப்போகிற பூரண மீட்புக்காக உங்கள் மீட்பர் பூமியில் வந்து மீட்பின் கிரயத்தை செலுத்தினார். இப்போது அவர் பிதாவின் வலது பக்கத்தில் வானத்திலும் பூமியிலும் அதிக அதிகாரமுள்ளவராக வீற்றிருக்கிறார். அவர் வெகு சீக்கிரம் மீண்டும் வந்து உலகை நியாயந்தீர்ப்பார். நீங்கள் இயேசு கிறிஸ்துவில் நித்திரையடையலாம். உங்களுக்கு அருமையானவர்கள் கல்லறைகளில் நித்திரையாக இருக்கலாம். ஆனால் கொஞ்கக் காலத்தில் இயேசு வருவார். அப்பொழுது மரித்துப்போன உங்களுக்கன்பானவர்களை உயிரோடு எழுப்புவார். நீங்களும் ஒருவேளை கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், தூசியை உதறித்தள்ளி சாவாமை என்னும் சிறப்பு ஆடையணிந்து கொண்டெழும்புவீர்கள். தேவனுடைய பிள்ளைகளாக மகிமை, வல்லமை முழுமையை அடைவீர்கள். பரம பிதாவினால் மீட்கப்பட்ட முழுக் குடும்பத்துடனும் கொண்டு சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள். அப்பொழுது உங்கள் மீட்பு முழுமையாகும்.

இப்பொழுது அம்மீட்பு சமீபித்திருக்கிறது. ஒவ்வொரு நாள் முடிய முடிய, அது நெருங்கி வருகிறது. அந்த நாளின்மேல் விருப்பம் கொள்ளுகிறோமா? அப்போஸ்தலனைப்போல ஆவியானவரின் முதற்பலனைப் பெற்ற நாமும், நம்முடைய மீட்பாகிற புத்திர சுவகாரத்தைப் பெறுகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோமா? அப்படியானால், உங்களது மீட்பு நெருங்கியிருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் விசுவாசிகளான போது, உங்கள் மீட்பு சமீபமாயிருந்ததைக் காட்டிலும், இப்போது அது மிக சமீபமாயிருக்கிறது.

மீப்பின் நாள் கண்டு மகிழ்வேன்
மீட்பரோடு பாக்கிறனாய் வாழ்வேன்
பரலோகத்தில் எல்லாருடனும் நான்
பரமனைத் துதித்து மகிழுவேன்.

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்

நவம்பர் 08

“மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்” சங். 100:2

நம்முடைய தேவன் இணையற்ற பேறுகள் உள்ளவர். தம்முடைய மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடிருக்கவே அவர் விரும்புகிறார். ஆதி முதல் அவர் யாவற்றையும் அவர்களுக்காக சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், பாவம் அவர்களுக்கு வரும் நன்மைகளைக் கெடுத்து போட்டது.

இப்பொழுதும் நாம் அவருக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். அதை அவர் விரும்புகிறார். நித்திய சுவிசேஷத்தில் உனக்கு பாக்கியமானதை சேமித்து வைத்திருக்கிறேன். நீ அதை விசுவாசி. இலவசமாக உனக்கு பாவமன்னிப்புக் கிடைக்கும். முழுமையான நீதியை உனக்குத் தருவேன். உன் இதயத்தைச் சுத்திகரிப்பேன். உனது குறைவுகளை நிறைவு செய்வேன். என் சமுகத்தின் உன்னை ஏற்றுக்கொள்வேன். உன் வாழ்நாளெல்லாம் என் கிருபையைத் தருவேன். மரண பரியந்தம் உன்னை மகிமைப்படுத்துவேன் என்கிறார்.

நீங்கள் மகிழ்ச்சியுள்ள  பாக்கியவான்களாகக் கர்த்தருக்கு ஆராதனை செய்ய, உங்களை உற்சாகப்படுத்த இது போதுமே, தேவனுடைய ஊழியம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். நாம் புத்திரசுவிகாரம் பெற்றது உண்மை என்ற அறிவுடன் உள்ளான அன்புடன் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். மறுமையில் நாம் பரலோகத்தில் ஆளகை செய்யப் போகிறோம் என்னும் நம்பிக்கையுடன், இன்மையில் அவருக்கு நாம் ஊழியம் செய்வோம். நமது நடத்தையினால், நான் கர்த்தருக்குச் சந்தோஷமாய் ஊழியம் செய்கிறேன். நான் வேறு எருக்கும் ஊழியம் செய்யேன் என்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும்.

இயேசுவே என் பாவம் நீக்கி
என்னை இரட்சித்திடும்
மகிழ்ச்சியோடு உம்மை
நான் ஆராதிக்கட்டும் என்றும்.

என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்

நவம்பர் 17

“என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்” யோபு 29:18

யோபு தனக்கிருந்த கூடாகிய வீட்டை சௌகரியமுள்ளதாகவும் ஆறுதல் தருவதாகவும் நினைத்திருந்தான். அது நிரந்தரமானது என்றும் எண்ணினான். ஆனால் இம்மண்ணுலகில் எங்கு நம் வீட்டை நாம் அமைத்தாலும் அது இயற்கையின் உபாதைகளான புயல், வெள்ளம், நெருப்பு, பூகம்பம் இவற்றிற்குத் தப்பாது. நிலையான நரகம் நமக்கு இங்கு இல்லை. நாம் இங்கு நிரந்தரமாக வாழ முடியாது. யோபு வாழ்வில் பழுதில்லாதவன். நேமையான, தூய வாழ்க்கையுடையவன். அவனும் இவ்வாழ்க்கையை வெறுத்து மேலான தேவனுடைய இடத்தையே நாடினான். இப்பூமியில், அந்தப் பரம வீட்டிற்கு இணையானது எதுவும் கிடையாது. இம்மைக்குரிய நன்மைகள் நமக்குத் தற்காலிகமாகத் தரப்பட்டவைதான்.

இவ்வுலகில் எங்கு நமது கூட்டை ஏற்படுத்தினாலும் அது அழிந்துபோகும். நமக்கு நிரந்தரமான வீடு பரலோகம். எனவே நம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் தேவனுடைய கரத்தில் நாம் ஒப்புக்கொடுப்போம் என்று இருந்தாலும், ஒரு நாள் நாம் இவ்வுலகை விட்டுப்போ வேண்டியவர்களே. மரணத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். படுக்கையில் மரிப்போமா. விபத்தில் மாள்வோமா. ஏழையாக மரிப்போமா. ஐசுவரியவனாக மரிப்போமா என்பது முக்கியமல்ல. நாம் கிறிஸ்துவின் மகனாக, மகளாக மரிக்கிறோமா என்பதே முக்கியம். அவ்வாறு நாம் மரித்தோமானால், நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். அங்கு மரணம் இல்லை. அவ்விடம் ஒன்ற நமக்கு நிரந்தரமாக வீடு. அதையே நாடித் தேடி, அதைப் பெற உழைப்போம். வாழ்வோம்.

இவ்வுலகம் சதமல்ல
என் வீடு பரத்திலேயேதான்
என் மீட்பர் இருக்குமிடமே
என் வீடாக என்றுமிருந்திடும்.

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

நவம்பர் 26

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து” எரேமி. 48:11

தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது இரட்சகராகிய தேவனை நாம் மறந்து நமது பாதுகாப்பான கன்மலையை அற்பமாக எண்ணுவோம். தேவனை மறந்து விடுவோம். நம்மைப்பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருப்போம். சோம்பேறிகளாகி விடுவோம். நமது ஜெபங்கள் உயிரற்றுப்போம். பரம காரியங்களில் நாம் சலிப்படைந்து விடுவோம். ஆண்டவருக்கடுத்தவைகளை அசட்டை செய்வோம். அவரோடு நமக்கிருந்த ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. ஆவிக்குரிய காரியங்களைப்பற்றிய உரையாடல்கள் இல்லை. நாம் உயிரற்றுப்போகிறோம். நாம் உத்தம கிறிஸ்தவர்களானால், இந்நிலையை நாம் அடையும்பொழுது துன்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.

துன்பங்கள் நமக்கு எவ்விதத்திலும் வரும். கழுகு தன் கூட்டைக் கலைப்பதுபோல நாமும் துன்பங்களால் கலங்கடிக்கப்படுவோம். கண்ணீரோடும் ஜெபத்தோடும் நாம் அவரண்டை வரும்வரை ஒரு சோதனைக்குப்பின் மற்றொன்று, ஒரு துக்கத்தையடுத்துப் பிறிதொன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆண்டவரைப் பின்பற்றாத மோவாப் வண்டல்களின்மேல் அசையாமல் தங்கியிருக்கலாம். ஆனால், தேவ மக்களாகிய இஸ்ரவேலர் அவ்வாறிருக்கலாகாது. இத்தகைய நிலையை நாம் அடையாதபடி எச்சரிக்கையாயிருப்போம். கவனமாக கர்த்தருக்கென்று உழைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் இது. உறங்காமல் ஆண்டவருக்காக உழைத்திடுவோம்.

பாவத்தால் சோர்வடையாமல்
பாவியின் நேசா, எனைக் காரும்,
காலமும் கர்த்தருக்காயுழைத்து,
காலமும் வாழும் பேறடைவோம்.

Popular Posts

My Favorites

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை

அக்டோபர் 19 "அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" புல. 3:22 நண்பனுடைய அன்பு ஒரு நாள் முடிந்துவிடும். உறவினரின் பாசம் முறிந்துவிடும். தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அன்பு மாறிப்போகும். ஆனால், தேவனுடைய இரக்கம் ஒருக்காலும் மாறாது. சொல்லிமுடியாத...