டிசம்பர்

முகப்பு தினதியானம் டிசம்பர்

இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது

டிசம்பர் 07

“இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது” ஆதி. 42:36

எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்தினால், உன் தேவனுக்கு உன்னைப் பகைவனாக்கினால், உனக்கு அவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகளைத் திருப்பினால், இவைகளெல்லாம் உனக்கு விரோதிகள் எனலாம். ஆனால், இவை உன்னை உலகத்தை வெறுக்கும்படி செய்து, உன் தேவனண்டைக்கு உன்னை அழைத்துச் சென்று, இரட்சகராக நல்லவராகக்காட்டி, அவருடைய வசனங்களை மதிக்கச் செய்து, பரலோகத்தின்மேல் உன்னை வாஞ்சை கொள்ளச் செய்தால் இவை உனக்கு விரோதமானவை அல்ல. அனுகூலமானவைகளே.

கிருபைகள் நிறைந்த தெய்வ செயலின் ஒழுங்குப்படி, அவைகள் நடக்கின்றனவென்றும், அவைகளை உன் பரம பிதா உன் நன்மைக்கென்றே அனுப்புகிறார் என்பதையும் மறந்துவிடாதே. ஆகவே, முறுமுறுக்காதே. நீ முறுமுறுப்பது வேத வசனத்தை அறியாததினாலும், உன் பாவங்களை மறந்துவிடுவதினாலும் அவிசுவாசத்தினாலும் ஆகும். முறுமுறுப்பது, தேவனின் கிருபையும், அவர் கருத்து உள்ளவர். இரக்கம் உள்ளவர் என்பதையும் மறுப்பதாகும். உலகில் துன்பங்கள் வரத்தான் செய்யும். சோதனைகள் சூழும். விரோதங்கள் எழும். ஆனாலும், உனக்கு நன்மைகளைக் கொண்டு வரவே அவை அனுப்பப்படுகின்றன. அன்பானவனே, துன்பங்கள், சோதனைகள் வரும்போது தேவனைக் குறித்து தவறான எண்ணங்கள் கொள்ளாதே. யாவும் நன்மைக்கென்றே நடக்கின்றன. நாம் தவறான எண்ணங்கொண்டு அவர் வாக்குகளை மறக்கிறோம். இனி அவ்வாறு செய்யாதிருப்போமாக.

பக்தருக்கு பயம் ஏன்?
அவன் முறுமுறுப்பதேன்?
எத்துன்பம் வரினும் அதில்
தேவனிருப்பார். அஞ்சாதே.

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11

இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.

நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02

“தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்” அப். 27:25

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.

அவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார் என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்க் கூடியவர்களாயிருக்க வேண்டும்.

அன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா? நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.

எந்நிலையிலும் தவறாது
அன்பர் சித்தத்தையே பிடி
கண்டல்ல, காணாமல்
விசுவாசிப்பதே பாக்கியம்

தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

டிசம்பர் 09

“தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்” ரோமர் 6:23

நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு உண்டு என்றும் பாவம், துக்கம், துன்பத்தினின்று நாம் விடுதலையாகி, எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். எல்லா நாளும் சந்தோஷமாக அவருக்குப் பணிவிடை செய்வது அவர் நமக்குக் கொடுத்த பாக்கியம். அது இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஆண்டவரின் கிருபைதான். அது நமக்குக் கிடைத்தது. இதிலேதான் அவருடைய கிருபையின் மகத்துவம் விளங்குகிறது.

பாவம் செய்த தேவதூதர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆனால், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அவர் நமக்கு நிரந்தர வாழ்வைத் தருகிறார். எந்த மனுஷனுக்கும் இந்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றவர் கிறிஸ்து நாதரோடு உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுக்கென்று பிழைத்திருக்கிறான். இவ்வாறான மரணமில்லா வாழ்வை எதிர்பார்த்து நாம் இவ்வுலகில் வாழ்வோம். அந்த அனுபவத்தைப் பெற வாஞ்சை கொண்டு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்க்கையில் முன்னேறுவோம். அருள்நாதர் தம் ஆடுகளுக்கு யாவும் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதும் இல்லை என்பது அவர் வாக்கு.

பரம வாழ்வைத் தாரும்
பரிசுத்த பிதாவே
தேவ கிருபையும் பரிசுத்தமும்
தேவனே தந்தருளும்.

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று

டிசம்பர் 13

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4)

தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை வரவிட்டபொழுது அவருடைய கோபம் காணப்பட்டது. நினிவேயின்மீது தேவகோபம் எழும்பியது. அவர் பாவத்தின்மீது கோபம் வைப்பார். சில நேரங்களில் தமது பிள்ளைகள்மீதும் அவர் தமது கோபத்தைக் காட்ட நேரிடுகிறது. ஒரு பிள்ளையின் தவறான நடத்தையினால் தகப்பன் கண்டித்துக் கோபப்படுகிறான். அதுபோல தேவனும் கோபப்படுகிறார். அவர் எவரை அதிகமாக நேசிக்கிறாரோ, அவாகளைத் திருத்துவதற்காகக் கோபம் காட்டுகிறார். அவர்கள் மீதுள்ள அன்பு அவரைக் கோபம் காட்டச் செய்கிறது.

தேவன் கோபிக்கிறபொழுது துன்பங்களை அனுமதிக்கிறார். அவருடைய கோபம் ஒரு வினாடிதான் இருக்கும். அவருடைய மக்களின் முரட்டாட்டத்தின் நேரத்தில் அவர்கள் பேரில் அவர் கோபங்கொள்கிறார். அவருடைய கோபத்திற்கு ஆளானவர்கள் மனந்திரும்பி துக்கப்பட்டு, அவருடைய காலில் விழுந்து, பாவத்தை அறிக்கையிட்டு, இரக்கத்திற்காகக் கெஞ்சும்பொழுது, அவர் தமது கோபத்தை விட்டுவிடுகிறார். இன்னும் உன்னை நேசிப்பேன் என்கிறார். திரும்பவும் உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களைத் தருவார். நீ எத்தவறையும் செய்யாதவன்போல உன்னை நேசிப்பார். உன் பாவத்தை மன்னித்து, மறப்பார். நாம் நமது பாவத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர் நம்மை நேசிக்கிறார் என்ற நினைவோடு இந்த இரவு படுக்கைக்குச் செல்வது நமக்கு இன்பமானதாக இருக்கும்.

ஆண்டவர் கொள்ளும் கோபம்
இருப்பது ஒரே கணம்தான்
ஆண்டவர் இரக்கம் நிறைந்தவர்
இது நமக்குக் கிடைத்த பேறுதான்.

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29

“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” மத்தேயு 15:8

இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம்.

அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிறீர். „அவர் எனக்கு இரங்குவார், காப்பாற்றுவார், நன்மைசெய்வார், விடுவிப்பார் என்று அவரையே நம்பியிருப்பீரானால், உமது இருதயம் அவருக்கு அருகிலேயே இருக்கிறது. மனிதருக்குமுன் வசனத்தின்படி நடந்து, ஆண்டவர் சொன்னபடியே செய்து, சற்றும் மாறாமல் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீரானால், உமது இருதயம் அவருக்கு சமீபமாகவே இருக்கும். மாய்மாலத்தைத் தேவன் வெறுக்கிறார், நாமும் வெறுப்போமாக. அவருக்கருகிலேயே வாழ்ந்து, அவரோடே நடந்து, அவர்மேல் அன்பு வைத்து நடப்போமாக. வேஷமாகப் பெயருக்கென்று நாம் இவ்வாறு நடந்தால் பரிதாபத்திற்குரியவர்களாவோம்.

ஆண்டவர் அன்பைப்போல்
இனியது ஏதும் உண்டோ
இதைவிட்டு வேறெதையும்
உனதாவி விரும்பலாமோ, பாவி.

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

Popular Posts

My Favorites

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது

டிசம்பர் 27 "ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது" (சங்.36:9) தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான்....