அக்டோபர்

முகப்பு தினதியானம் அக்டோபர்

அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்

அக்டோபர் 07

“அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” யோபு 23:10

யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான். குறைவுள்ளவனானாலும் அவன் உண்மையுள்ளவன். தேவன் தன் இருதயத்தையும், நடத்தையையும் விருப்பத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். தன்னுடைய சோதனையின்பின்தான் புதுபிக்கப்படுவான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

தேவன் நம்மைச் சோதிக்கும் நோக்கமே இதுதான். நம்முடைய எஜமானுக்கு நாம் தகுதியுடையவர்களாகும்படியே அவர் நமக்கு அவைகளை அனுமதிக்கிறார். நித்திய மகிமைக்கு நம்மை ஏற்றவர்களாக்கவே நம்மைச் சோதித்துத் தூய்மை ஆக்குகிறார். நமது பாவங்களும் தவறுதல்களும் இந்தச் சோதனைகளால் நம்மை விட்டு நீங்கி விடும். நமக்கு வேறெதுவும் நடக்காது. நமது பேரின்பத்தின் பலன்கள் அதிகரித்திடும். நித்திய மகிழ்ச்சிக்கு அவை வழிவகுக்கும். நமது தேவன் மாறுகிறவரல்ல. அதுதான் நமக்கு மகிழ்ச்சியும் மனஉறுதியும் தரும். நான் கர்த்தர், நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை என்கிறார். கர்த்தர், தேவன் நம்மைப் புதுப்பிக்கச் சோதனையிடும்பொழுது புடமிடும் குகையண்டை அமர்ந்து பணிமுடிந்ததும் அக்கினியை அவித்துவிடுகிறார். சோதனைக்குள் இருக்கும் கிறிஸ்தவனே, கர்த்தர் உன் சோதனையை மாற்றுவார். உன்னைப் புதிப்பிப்பார். அவர் அன்பினால் அவ்வாறு செய்கிறார். இதை நம்பியிரு. அவிசுவாசங்கொள்ளாதே. உன் விசுவாசத்தை வளர்த்துத் தைரியங்கொள். யோபைப்போல் நான் போகும்வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்.

துன்பம் எனும் சூளையிலும்
உம் வாக்கையே நம்புவேன்
நீர் என்னைத் தாங்குகையில்
பொன்னைப்போல் மிளிருவேன்.

கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்

அக்டோபர் 13

“கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்” ஆப. 3:2

தேவன் எப்போதும் தம்முடைய கிரியைகளுக்குப் புத்தியிரளிக்க வல்லவர். அவர் இச்செயலைத் தொடங்கி, அதை நடத்துபவர். அதைத் தாமாகவே முடிக்கவும் வல்லவர். தம்முடைய கிரியைகளைப் பல உபகரணங்களைக் கொண்டு செய்து முடிக்க வல்லவர். நாம் எழும்புதல் அடைய வேண்டும் என்று நமக்குக் கூறகிறார். அவ்வாறு செய்ய நம்மைத் தூண்டிவிடுகிறார். நாம், பல நேரங்களில் அவருடைய பாதத்தருகில் அதிக நேரம் செலவிட மறந்து விடுகிறோம். அவரின் சமுகத்தில் அதிகம் ஜெபிக்காமல் இருந்து நேரத்தை வீணாக்கி விடுகிறோம். ஆனால், அவர் சமுகத்தில் அதிக நேரம் செலவிடும் பொழுது ஒரு வேகத்தையும் தைரியத்தையும் பெறுகிறோம். அப்போது அந்தத் தீர்க்கன் சொன்னதைப்போல் உம்முடைய ஜனங்கள் உம்மில் மகிழும்படிக்கு எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரா என்று நாமும் சொல்லலாம்.

கர்த்தர் தமது கிரியைகளை உயிர்ப்பிக்கும்போது நம்முடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துவார். நமது நம்பிக்கையை வளர்ப்பார். நமது அன்பிற்கு அனல் மூட்டுவார். தாழ்மையைக் கற்றுக்கொடுப்பார். நமது பக்தி வைராக்கியத்தை உறுதிப்படுத்துவார். நம்முடைய எழுப்புதலின் ஆவியைத் தூண்டிவிடுவார். அப்போது ஜெபம் நமக்கு இனிமையாகும். ஆலயம் அருமையாயிருக்கும். சபையில் தேவ மக்கள் மகிழ்ச்சியோடு உலாவும் நந்தவனம்போல் இருக்கும். வசனம் விருத்தியாகும். மோட்சத்தையே நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்போம். தேவன் நம்மை என்றும் உயிர்ப்பிக்க வல்லவராகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவியானவர் நம்மை அவரண்டை நேராக நடத்துவார்.

உமது தயவினாலே
எம்மை உயிர்ப்பியும்
நாங்கள் ஒளிவிட்டெழும்ப
கிருபை பாராட்டியருளும்

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.

இஸ்ரவேலில் நம்பிக்கை

அக்டோபர் 09

“இஸ்ரவேலில் நம்பிக்கை” எரேமியா 14:8

தேவன் இஸ்ரவேலின் நம்பிக்கைக்குக் காரணர். அந்த நம்பிக்கை அவருடைய ஆவியானவராலும், அவருடைய வசனத்தினாலும் உண்டாகிறது. வாக்கில் அவர் உண்மையுள்ளவராதலால், அவருடைய வாக்கிலும் ஆழமான கருத்துள்ள நித்திய வசனங்களிலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். இஸ்ரவேல் கர்த்தரை நம்புகிறான். தேவ பிள்ளைகள் அவரை நம்பியிருப்பார்களாக. கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு. மனிதனை நம்புவதில் பயன்யாதும் கிடையாது. மனிதன் பெலவீனன். மாறக்கூடியவன், உண்மையற்றவன். சுயநலக்காரன். அவனை நம்பாதே, கர்த்தரோ பெரியவர். உயிர் நண்பர், மன்னிப்பளிப்பவர், ஞானத்தோடு நடத்துபவர், கிருபையாகக் காப்பவர், இரக்க உருக்கம் உள்ளவர், மாறா அன்புள்ளவர். ஆகவே அவரையே நம்பு.

அவருடைய கிருபை நமக்குப் போதும். அவருடைய பெலன் நமக்குப் பூரணமாய்க் கிடைக்கும். அவர் இஸ்ரவேலின் கன்மலையாக நம்பிக்கைக்குரியவர். உறுதியானவர். அவரே அடைக்கல பட்டணமானவர். எனவே, ஆபத்துக்காலத்தில் அவரே நமக்கு ஒதுக்கிடமானவர். ஜீவ ஊற்றாகிய அவரில் நம் தாகம் தீர்த்துக்கொள்ளலாம். அவர் பாவத்தினின்று நம்மை இரட்சிக்கும் இரட்சகர். ஆதலால் அவரிடம் போவோம். அவரை நம்புவோம், அவரில் விசுவாசம் வைப்போம்! யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். எனவே, இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை உன் முழுமனதோடும், முழுப்பெலத்தோடும் நம்பு. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.

இஸ்ரவேல் நம்பும் கர்த்தாவே
என் வேண்டுதல் கேட்டிடும்
எத்துன்பத்திலும் எனைக்காப்போரே,
என் முழுமையும் உம்மையே நம்பும்.

அவர் முற்றிலும் அழகுள்ளவர்

அக்டோபர் 25

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” உன். 5:16

ஆண்டவரை அதிகம் தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறுதான் அவரை வர்ணிப்பார்கள். அன்பு செலுத்தத்தக்க பண்பு அவரிடத்தில் உண்டு. அவரை நேசிப்பவர்கள் அவரில் வாசம்பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டவர்கள் அவரைப் போற்றிப் பாடுவார்கள். தேவகுமாரனாக அவரைப் பார்த்தால், அவர் முற்றிலும் அழகுள்ளவர். அவர் மனுஷரெல்லாரிலும் அழகுள்ளவர். அவருடைய அழகில் தெய்வத்தன்மை உண்டு. அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர். அவர் அளவில்லா ஞானமும், மகத்துவமும் உள்ளவர். அன்பும், இரக்கமும் உள்ளவர். அழகற்றது ஒன்றும் அவரிடமில்லை. அவரே பூரண அழகுள்ளவர்.

திருச்சபையாகிய மணவாட்டி, அவரைக் குறித்துக்கூறிய சாட்சி, அவருடைய தீர்க்கதரிசி, ஆசிரியர், இராஜா ஆகிய பதவிகளுக்கும் பொருந்தும். உலகம் முழுவதையும் அவர் ஆண்டுகொண்டிருப்பதாலும், சகலமும் அவர் பாதங்களின்கீழ் இருப்பதாலும் அவரை இவ்வாறு போற்றிப் புகழலாம். வானத்திலும், பூமியிலும் அவருடைய பணிகளைக்குறித்தும் இச்சாட்சியைக் கூறலாம். அவர் கிருபை செய்வதில் வல்லவர். ஆகவே அவர் அழகுள்ளவராகக் காண்பிக்கப்படுகிறார். அவர் நம்மைச் சுத்திகரித்து, உயர்த்திக் கனப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

பிரியமானவனே, நீ ஆண்டவரை அழகுள்ளவராகக் காண்கிறாயா? அவருடைய அழகில் நீ மகிழ்ச்சி கொள்ளுகிறாயா? அவரில் களிகூரு. அவரில் பேரின்பம் பெறு. அவர்மேல் சார்ந்து வாழ்ந்திரு. எவ்வளவாய் நீ அவரை அறிந்து கொள்ளுகிறாயோ, அவ்வளவாய் நீ அவரை நேசிப்பாய். அவரை நேசிக்கும் அளவுக்கு நீ பாக்கியவானாவாய்.

கர்த்தர் மகிமை நிறைந்தவர்,
மா அழகுள்ளோர், அவரை நேசிப்பது
பேரானந்தம். அவரை அறிந்தோர்
எவருமவரைப் புகழ்ந்து போற்றுவார்.

நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்

அக்டோபர் 21

“நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்” ரோமர் 14:8

கர்த்தர் தமக்கென்று சொந்தமான ஒரு ஜனத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மற்றெல்லாரையும்விட மாறுபட்டவர்கள். கர்த்தரே அவர்களைத் தெரிந்து கொண்டு, தமது இரத்தத்தால் அவர்களக் கழுவித் தூய்மைப்படுத்தினபடியால், அவர்கள் எல்லாரிலும் மேம்பட்டவர்கள். அவர்க அவர்களைத் தமது நித்திய அன்பினால் நேசிக்கிறார். அதனால் அவர்களைத் தமது பிள்ளைகளைப்போல நடத்துகிறார். தமது சிறப்பான செல்வங்களாக அவர்களை மதிக்கிறார். அவர்கள்மீது அன்பு செலுத்தி அவர்களோடு ஒன்றாகி விடுகிறார். தமது மணவாட்டியான அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்களைத் தமது கண்ணின் மணிகளாகப் பாவிக்கிறார்.

இந்தப் பாக்கியம் நமக்கும் உண்டு. நாம் கர்த்தருடையவர்கள். இதை நாம் அறிவோம். நாம் தூய ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்படுகிறோம். ஆண்டவரின் சிம்மாசனத்தின்முன் நிற்கத் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டோம். தமக்கு ஊழியம் செய்யவும், தமக்கென்று உழைக்கவுமே அவரால் நாம் பிரித்தெடுக்கப்பட்டோம். அவருடைய குடும்பத்தின் அங்கமாகி, அவருடைய வசனத்தின்படி நடந்து, அவருடைய மகிமைக்காக வாழ்கிறோம். அவருடைய உறவைப்பெற்ற நாம் அவரை நேசிப்பதனால் திருப்தியடைகிறோம். இதனால் நாம் மகிழ்வோம். இது நமக்குக் கிட்டிய பெரும் பேறாகும். அவருடைய பரிசுத்தவான்களோடு இணைந்து கொள்வோம். பூவுலகில் சிறந்தவர்கள் அவர்களே. அவருடைய வசனத்தை வாசித்து கேட்டறிந்து உள்கொண்டு, விசுவாசித்து அவைகளின்படி நடப்போம். துன்பம் வரும் நேரத்திலும், நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நான் உம் சொந்தம் இயேசுவே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்முடையோனாம் என்னையே
கிருபை தந்து கடாட்ச்சியும்.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23

இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.

நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.

எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அக்டோபர் 11

“அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்” உன். 6:3

விசுவாசிகள் லீலி மலர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். இம் மலர்கள் வெளிகளில் வளர்வன அல்ல, தோட்டத்தில் பயிரிடப்படுபவை. தேவ பிள்ளைகள் அவருடைய தோட்டத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர் அவர்களை அதிகம் நேசிக்கிறார். எப்பொழுதும் அவர்களைச் சந்தித்து உரையாடி அவர்கள் நடுவில் உலாவுகிறார். இந்தத் தோட்டத்தில் உள்ள தேவ பிள்ளைகளின், ஜெபங்கள், துதிகள், சாட்சிகள், செய்யும் ஊழியம் ஆகியவை தேவனுக்கு மிகவும் பிரியம். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அவரின் குரலை அவர்கள் கேட்கும்போதும் விசுவாசிகள் மிக மகிழ்ச்சிகொள்ளுகிறார்கள்.

இது ஓரு விசுவாசியின் உயர்ந்த தன்மையைக் காட்டுகிறதல்லவா? தொடுகிற எவரையும் காயப்படுத்தும் முள்ளைப்போலவோ, எதிரியையும் எவரையும் தாக்கும் கொடிய விலங்குபோலவோ இல்லாது, இவர்கள் லீலி மலர்களைப் போன்று உயர் பண்புடையவர்கள். உள்ளான அழகும், நற்குணங்களாகிய நறுமணமும் கொண்டு யாவராலும் விரும்பப்படுகிறார்கள்.

நண்பனே, நீ எவ்வாறு இருக்கிறாய்? உன் விசுவாச வாழ்க்கை நறு மணத்துடனுள்ளதா? பிறருக்கு தேவ சாட்சியாக வாழ்கிறாயா? எவ்விடத்திலிருப்பினும் ஒளி வீசும் சுடராய் நீ விளங்க வேண்டும். பலருக்குப் பயன்படும் பாத்திரமாக நீ இருக்க வேண்டும். மணம் வீசும் லீலி மலராகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உன் நேசர் உன் நடுவில் வந்து மேய்வார். உன்னோடு உரையாடுவார். உன்னுடனேயே அவர் தங்கியிருக்கும்படிடி அவரை வருந்தி வேண்டிக்கொள். அவர் உன் பிரியமான பிரியா நேசராயிருப்பார். நீ வருந்தி அழைத்தால் அவர் வருவார்.

உம் வல்லமையால் என்னை
உம்முடையவனாக்கும்
உம் லீலி மலர்களைப்போல்
உமக்குக் காத்திருக்கச் செய்யும்.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

அக்டோபர் 31

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3

மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.

இந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.

இதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.

காயப்பட்ட இருதயத்தைக்
கழுவி சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சை அது
மயக்கமின்றி விடுவிக்கும்.

உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக

அக்டோபர் 05

“உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக” பிலி. 1:9

எடுத்த எடுப்பில் எதையும் நம்பாமல், அதை வேதவசனத்துடன் ஒப்பிட்டு பரீட்சித்துப் பார்க்கவேண்டும். நலமானது எது? பயனுடையது எது? அவசியமானது எது? முக்கியமானது எது? சேதம் விளைவிப்பது எது என்று சோதித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேறுபடுகிற காரியங்களைப் பகுத்தறிந்து உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்ல கடமைகளை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். நல்ல கடமைகளை நிறைவேற்றுவதுடன், உயர்வான காரியங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். சிறந்த, ஒழுங்கான காரியங்களைத் தேடிப்பிடிக்கவேண்டும். ஒழுங்கான முறையில் வாழவேண்டும். வேதவாக்கியங்களை ஆராயவேண்டும். நற்காரியங்களுக்காக ஜெபிக்கவேண்டும். தெளிவான பார்வையுடையவனெ;றும் சத்திகரிக்கப்பட்ட இதயமுள்ளவனெ;றும் உலகம் உன்னில் காணவேண்டும்.

நியாயப்பிரமானம், சுவிசேஷம், தேவகிருபை, நல்உணர்வு, இதயமாறுதல் போன்றவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். வாய்வார்த்தைக்கும் உண்மையான உத்தமத்திற்கும், வேத சத்தியத்திற்கும் தவறுதலான உபதேசத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னெ;னவென்றறிந்து, உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்லவைகளைக் கண்டுபிடித்து அவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து nனுபவிப்பதைப் பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். தேவ ஞானத்திற்காகத் தேவ ஆவியானவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நலமான எதையும் மறக்காமல் செய்பவர் அவர். விசுவாசத்தோடு கேட்டாய் பெற்றுக் கொள்வாய்.

உமக்கூழியம் செய்வதே
என் மீதான கடமை
உமக்குக் கீழ்ப்படிந்திருப்பதே
என் பாக்கியம். சிலாக்கியம்.

Popular Posts

My Favorites

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12 "எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்." 1.தெச. 4:17 தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர்...

மீட்பு