டிசம்பர்

முகப்பு தினதியானம் டிசம்பர்

தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்

டிசம்பர் 09

“தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்” ரோமர் 6:23

நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு உண்டு என்றும் பாவம், துக்கம், துன்பத்தினின்று நாம் விடுதலையாகி, எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். எல்லா நாளும் சந்தோஷமாக அவருக்குப் பணிவிடை செய்வது அவர் நமக்குக் கொடுத்த பாக்கியம். அது இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஆண்டவரின் கிருபைதான். அது நமக்குக் கிடைத்தது. இதிலேதான் அவருடைய கிருபையின் மகத்துவம் விளங்குகிறது.

பாவம் செய்த தேவதூதர்கள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆனால், நாம் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அவர் நமக்கு நிரந்தர வாழ்வைத் தருகிறார். எந்த மனுஷனுக்கும் இந்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. அதைப் பெற்றவர் கிறிஸ்து நாதரோடு உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுக்கென்று பிழைத்திருக்கிறான். இவ்வாறான மரணமில்லா வாழ்வை எதிர்பார்த்து நாம் இவ்வுலகில் வாழ்வோம். அந்த அனுபவத்தைப் பெற வாஞ்சை கொண்டு ஒவ்வொரு நாளும் விசுவாச வாழ்க்கையில் முன்னேறுவோம். அருள்நாதர் தம் ஆடுகளுக்கு யாவும் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதும் இல்லை என்பது அவர் வாக்கு.

பரம வாழ்வைத் தாரும்
பரிசுத்த பிதாவே
தேவ கிருபையும் பரிசுத்தமும்
தேவனே தந்தருளும்.

தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்

டிசம்பர் 05

“தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்” பிர. 9:7

நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத் தேவன் கொடுத்த ஈவாகவும், இரட்சகராகவும் நமக்குக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்த ஈவைத்தான் அசட்சை செய்கிறோம். இந்த இரட்சகரைத்தான் புறக்கணிக்கிறோம். ஆனால், தூய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாக்களை உயிர்ப்பித்து நமக்கு ஒளி தந்தார்.

அவர் நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டு பண்ணினபோதோ, நாம் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். தேவனுடைய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டதால், நம்மை அவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் அவரில் மகிமை உள்ளவர்களாக மாற்றுப்படுகிறோம். அவருடைய அருமையான பிள்ளைகளாக மாறுகிறோம். அவருக்காக ஏதாவது நாம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நமக்கிருந்தால், அவர் அதையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். இது எத்தனை இன்பமான காரியம்! எவ்வளவு மகத்துவமானது! எத்தனை மேன்மையானது! இதை நாம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாகும்படி தூய ஆவியானவர்தாமே நம்மை நடத்துவாராக.

இயேசு என்னை ஏற்றுக்கொண்டார்
என்னை அவர் அங்கீகரிப்பார்
இயேசுவுக்காய் என்றும் உழைப்பேன்
என் இயேசுவின் நாட்டை சேருவேன்.

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04
“அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது” உன். 2:3

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.

பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.

இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது

டிசம்பர் 07

“இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது” ஆதி. 42:36

எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்தினால், உன் தேவனுக்கு உன்னைப் பகைவனாக்கினால், உனக்கு அவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகளைத் திருப்பினால், இவைகளெல்லாம் உனக்கு விரோதிகள் எனலாம். ஆனால், இவை உன்னை உலகத்தை வெறுக்கும்படி செய்து, உன் தேவனண்டைக்கு உன்னை அழைத்துச் சென்று, இரட்சகராக நல்லவராகக்காட்டி, அவருடைய வசனங்களை மதிக்கச் செய்து, பரலோகத்தின்மேல் உன்னை வாஞ்சை கொள்ளச் செய்தால் இவை உனக்கு விரோதமானவை அல்ல. அனுகூலமானவைகளே.

கிருபைகள் நிறைந்த தெய்வ செயலின் ஒழுங்குப்படி, அவைகள் நடக்கின்றனவென்றும், அவைகளை உன் பரம பிதா உன் நன்மைக்கென்றே அனுப்புகிறார் என்பதையும் மறந்துவிடாதே. ஆகவே, முறுமுறுக்காதே. நீ முறுமுறுப்பது வேத வசனத்தை அறியாததினாலும், உன் பாவங்களை மறந்துவிடுவதினாலும் அவிசுவாசத்தினாலும் ஆகும். முறுமுறுப்பது, தேவனின் கிருபையும், அவர் கருத்து உள்ளவர். இரக்கம் உள்ளவர் என்பதையும் மறுப்பதாகும். உலகில் துன்பங்கள் வரத்தான் செய்யும். சோதனைகள் சூழும். விரோதங்கள் எழும். ஆனாலும், உனக்கு நன்மைகளைக் கொண்டு வரவே அவை அனுப்பப்படுகின்றன. அன்பானவனே, துன்பங்கள், சோதனைகள் வரும்போது தேவனைக் குறித்து தவறான எண்ணங்கள் கொள்ளாதே. யாவும் நன்மைக்கென்றே நடக்கின்றன. நாம் தவறான எண்ணங்கொண்டு அவர் வாக்குகளை மறக்கிறோம். இனி அவ்வாறு செய்யாதிருப்போமாக.

பக்தருக்கு பயம் ஏன்?
அவன் முறுமுறுப்பதேன்?
எத்துன்பம் வரினும் அதில்
தேவனிருப்பார். அஞ்சாதே.

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25

“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)

இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.

இறைவன் மானிடனானது
இகத்திற்கு மகிழ்ச்சியாம்
இகத்தில் சமாதானமும்
இறைவன் நாட்டில் மேன்மையாம்

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.

நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

டிசம்பர் 06

“நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்” வெளி 1:8

இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும் அவர் அப்படியே வெளிப்படுத்துகிறார். கிரேக்க மொழி பேசுகிறவர்கள் தங்கள் உரையாடலில் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையாக இருப்பவர். நம்முடைய இரட்சிப்புக்கும், ஆறுதலுக்கும், மேன்மைக்கும், கனத்திற்கும் அவசியமானதெல்லாமே அவரிடம் உண்டு. அவரில் ஞானமும் அறிவும், மேன்மையும் கனமும், ஐசுவரியமும் நித்தியமும் நிறைவாக அடங்கியுள்ளது. அவரே இரட்சிப்பின் முதலும் முடிவுமாக இருக்கிறார். அவரிலிருந்து கிருபையின் ஊற்று பாய்கிறது. அது நாம் அவரையே மையமாகக் கொண்டு அவரையே சூழ்ந்திருக்கச் செய்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமும், நித்தியமுமாய் இருக்கிறவர் அவரே. தேவனுக்குரிய அனைத்து கர்த்தத்துவங்களும் அவர் கொண்டவர். நன்மையும், கிருபையும் அவரிடத்தில் எப்பொழுதும் உண்டு. எனவேதான் தேவனுடைய பிள்ளைகள் அவரைப் புகழ்வதிலும், பிரசங்கிப்பதிலும் ஒய்வதே இல்லை. பாவிக்கு தேவையான சகல தயவும் அவரிடம் உண்டு. இத்தன்மையில் இயேசுவைக் காண்பது எவ்வளவு இனிமை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் இவ்வசனத்தில் நான்கு முறைகள் கூறப்பட்டுள்ளது. இதைத் தியானித்து நமது ஆன்மீன உணவைப் பெறுவோம்.

கிறிஸ்துவே ஆதியும் அந்தமுமாம்
அவரே கிருபையும் ஆனந்தமுமாம்
கிறிஸ்து தரும் நன்மைகள் யாவும்
அவர் தரும் பேரின்பங்களாம்.

எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11

இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.

நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.

Popular Posts

My Favorites

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23 "எங்களை எப்படிச் சிநேகித்தீர்" மல். 1:2 இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச்...