துண்டு பிரதிகள்

Home துண்டு பிரதிகள்

ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் ‘பிரவுன்ஸ்’ என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப் போலவே படிப்பிலும், நாடகத்திலும், நகைச்சுவையிலும் ஆர்வமுள்ள ஒருவன் அவனுக்கு நண்பனாகினான். மதம் சார்ந்த காரியங்களை கேலிக்கூத்தாகக் கருதிய, தெய்வ நம்பிக்கையற்ற அந்த நாத்திக நண்பனின் செல்வாக்கினால், ஜட்சனும் மதம் சார்ந்த காரியங்களை மூட நம்பிக்கையாகக் கருதி, தெய்வம் என ஒன்று இல்லை என எல்லோரிடமும் வாதிடத்தொடங்கினாான்.

பட்டப்படிப்பு முடிந்ததும், தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை அனுபவிக்கத் துடித்தான். சிறகு முளைத்த பறவைபோல புது உலகைக் காணவும், ஒரு நாடககதாசிரியனாக மாறவும் மனக்கோட்டைகள் பல கட்டினான். இருபத்தோராவது வயதில் புதிய உலகைக் காண எண்ணி, மனதில் பல கனவுகளைச் சுமந்தவனாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை நோக்கிப் பயணமானான். ஆரம்பத்தில் அங்கே நாடகக்கம்பனியொன்றில் சேர்ந்து பணியாற்றினாான். ஆனால் அங்கு அவன் எதிர்பார்த்த திருப்தியும் சந்தோஷமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

அவன் பிரயாணம் செய்கையில் ஒரு நாள், விடுதியொன்றில் இரவு தங்க நேர்ந்தது. அந்த விடுதியில் அவன் கழித்த அந்த இரவு அவன் வாழ்விலேயே அவன் சந்தித்த அத்தனை இரவுகளிலும், மிகப் பயங்கரமானதும் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் இரவாகவும் இருக்குமென அவன் கற்பனையில் கூடச் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. அவன் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஒரு மனிதர் வேதனையில் முனகிக்கொண்டிருப்பதும், பயத்தோடு அலறிக்கொண்டிருப்பதும் அவன் காதுகளில் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ஜட்சனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மரணபயம் அவன் உள்ளத்தைக் கவ்விக்கொள்ள அவனது எண்ணங்கள் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.

‘ம் … மரணம்? மரணம்? மரணம்? இந்த மரணத்தைக் குறித்து என் தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவாரே … நான் மரித்த பின்பு எனக்கு என்ன நடக்கும் ?… ஓ! என்ன பயங்கர நினைவுகள் … , எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏனெனில் என்னுடைய நண்பன் இந்தப் பயங்கரமான அனுபவத்துக்கும் ஒரு நல்ல ஞானமான பதிலை நிச்சயமாய் வைத்திருப்பான்’ என்றவாறு தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றான். ஆனாலும், அப்பயங்கர இரவு, மரணத்தைப்பற்றிய பயத்தை அவன் மனதில் இன்னும் அதிகமதிகமாய் பதியச் செய்து, அவனைப் பதறச்செய்தது.

இவ் உண்மைச் சம்பவத்தின் அடுத்த கட்டத்தை அறியமுன்பு இதனை வாசிக்கும் உங்களிடம் நான் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். மனிதராய்ப் பிறந்த நாம் எல்லோரும் ஒருநாள் மரணத்தை சந்திக்கவே வேண்டும். மரணம் எந்த வயதில் வரும் எனச் சொல்லமுடியாது. பச்சிளம் பருவத்திலும் மரிக்கலாம், அல்லது வயதுபோய் தளர்ந்த நிலையிலும் இறக்கலாம். நேற்று இருந்த பலர் இன்று இல்லை. இன்று இருக்கும் நாமும், நாளை இருப்போமா என்ற நிச்சயமில்லை. இப்படிப்பட்ட நிலையிலே நீங்கள் மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் இறந்தால் எங்கே போவீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் இறந்ததும், நம்முடைய சரீரம் இந்த மண்ணோடு மண்ணாய் உருவழிந்து போகலாம், ஆனால் நம்முடைய ஆன்மா? அதற்கு என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏனெனில் நாம் மிருகங்களைப்போல வெறும் சரீரத்தோடு மட்டும் படைக்கப்படவில்லை. கடவுள் நம்மை ஒரு அழியாத ஆன்மாவுடன் சிருஷ்டித்திருக்கின்றார்.

இனி அக் கதையின் தொடர்ச்சியைக் கண்ணோக்குவோம். அப்பயங்கர இரவை பயத்தோடு கழித்த ஐட்சன் மறுநாள் காலையில் அந்த விடுதிக்காப்பாளரிடம், கடந்த இரவு தன்னுடைய அடுத்த அறையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த அம்மனிதனைக் குறித்து விசாரித்தபோது: “அந்த வாலிபன் இறந்துவிட்டான்” என அந்த விடுதிக்காப்பாளர் பதிலளித்தார்.

“என்ன! இறந்துபோனது ஒரு வாலிபனா?” என ஜட்சன் ஆச்சரியத்தோடு கேட்க. விடுதிக்காப்பாளர் தொடர்ந்து கூறிய காரியம் ஐட்சனை மேலும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கிட்டத்தட்ட உங்கள் வயதை ஒத்த அந்த வாலிபன், ‘பிரவுன்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பயின்று அண்மையில்தான், தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவனாம்” என விடுதிக் காப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், ஜட்சன் குறுக்கிட்டு:

“என்ன ‘பிரவுன்ஸ்’ பல்கலைக்கழகமா? அவன் பெயரென்ன?” எனக் கேட்க.

“சற்றுப் பொறுங்கள் பார்த்துச் சொல்கிறேன்” என்று அவர் அவனது பெயரைச் சொன்னதும், உலகமே ஒருகணம் இருண்டுவிட்டதுபோல ஜட்சன் அதிர்ச்சியுற்றான்.

இறந்துபோன அந்த வாலிபன் வேறுயாருமல்ல அவனோடு ஒன்றாகக் கல்வி பயின்ற அவனது கல்லூரி நண்பனே. இறைவன் இல்லையென்று இடித்துரைத்த அவன் இப்போது இறந்துபோனான். வாழ்க்கையின் எல்லாப் பிரச்சனைக்கும் எவரிடத்தில் பதில் உண்டு என்று ஜட்சன் நம்பினானோ, அந்த நண்பனே மறைந்துவிட்டான். ஒருக்காலும் மீளமுடியாத இடத்திற்கே போய்விட்டான். உண்மையில் தன் நண்பன், மரணத்திற்கு ஆயத்தமாக இருக்கவில்லை என்பதை ஐட்சன் நன்கு அறிந்திருந்தான்.

இப்போது ஜட்சனின் மனதில் மரணபயம் கவ்விக்கொள்ள, அவன் மெய்தெய்வத்தைத் தேடத்தொடங்கினான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், மரணத்தின்பின் அவர் தரும் நித்திய வாழ்வு பற்றியும் அறிந்துகொண்ட அவன், அந்த தெய்வத்தை அனுபவரீதியாக அறிந்து, தன்னுடைய பாவங்களை மன்னிக்கும் இரட்சகராக அவரை ஏற்றுக்கொண்டான். அவன் வாழ்வின் கேள்விகளுக்கு விடைகிடைத்து, பயம் நீங்கியவனாக தைரியம் கொண்டான். இனியும் மரணத்தின்பின் என்ன நடக்கும் என்று அவன் கலங்க அவசியமிருக்கவில்லை. தன் வாழ்வில் தான் செய்த அனைத்துப் பாவங்களின் தண்டனையையும் இயேசுகிறிஸ்து, சிலுவையில், தன்மேல் ஏற்றுக்கொண்டதால் இனி அவன் திரும்பவும் தன் பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்க அவசியமில்லை என்றும் ‘மரணத்திலிருந்து உயிரோடு எழும்பிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவனுக்கு, மரணத்தின் பின்பாக ஒரு சந்தோஷமான வாழ்வு உண்டு’ என்றும் அறிந்தவனாக, தான் அனுபவித்த அந்த கிறிஸ்துவை மற்றவருக்கும் அறிவிக்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பர்மா தேசத்திற்குப்போய் அங்கிருப்பவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றியும் அவர் தரும் நம்பிக்கை, புதுவாழ்வுபற்றியும் அறிவித்தான். அப்படி அறிவித்ததினால் சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளானான். ஆனாலும் மக்கள் மரணத்தின் பின்பு நரகம் என்று சொல்லப்படுகிற கொடிய வேதனையுள்ள இடத்திற்குப் போய்விடக்கூடாது, இயேசுகிறிஸ்து தரும் பாவமன்னிப்பையும் புதுவாழ்வையும் அவர்கள் அனுபவிக்கவேண்டும். மரணத்தின் பின்பு கிறிஸ்துவோடு பரலோகம் என்னுமிடத்தில் ஒரு சந்தோஷமான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக ஐட்சன் தன்னையே அர்ப்பணித்தான்.

இந்தப் பிரதியை வாசிக்கையில் உங்களில் சிலர் இது மத மாற்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்று என எண்ணலாம். அது உண்மையல்ல. ஏனெனில் கிறிஸ்து மதம் மாற்றுவதற்காக இவ்வுலகிற்குவரவில்லை. ‘பாவிகளை இரட்சிக்கவே (மீட்கவே) கிறிஸ்துஇயேசு உலகில் வந்தார்’ (1திமோத்தேயு1:15) மக்களை பாவத்திலிருந்து மனந்திரும்பச்செய்து, அப்பாவத்திலிருந்தும் அப்பாவத்தின் விளைவான நரக தண்டனையிலிருந்தும் அவர்களை விடுவித்து, புதுவாழ்வு கொடுக்கவும் தேவனோடு ஒரு புதிய உறவை ஏற்படுத்தி, மரணத்தின் பின் பரலோகம் என்னும், நித்தியமானதும் இன்பமானதுமான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார். ‘பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்’ (ரோமர் 6:23) என வேதாகமம் கூறுகிறது எனவே நம்முடைய பாவத்துக்காக, நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் தன்மேல் ஏற்று நாம் மரிக்கவேண்டிய இடத்தில் அவர் மரித்து, பின் மரணத்தை தம்முடைய உயிர்த்தெழுதலினால் ஜெயித்தார். அவரை விசுவாசிக்கிறவன் எந்த இனத்தவனாயிருந்தாலும் எந்த மதப்பின்னணியைச் சேர்ந்தவனாயிருந்தாலும் அவனுக்கு மரணத்திற்குப் பின்னான ஒரு வாழ்வைக் கொடுப்பார். அவர் கொடுக்கும் இந்த நித்திய வாழ்வை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மரணத்தின் பின்பு சந்தோஷம் இல்லாததும், வேதனை நிறைந்ததுமான நரகத்தில் தங்கள் நித்திய காலத்தைக் கழிக்க நேரிடும். அப்பொழுது புலம்பிப் பிரயோஜனமில்லை ஏனெனில் அதிலிருந்து மீளவே முடியாது. இதனை வாசிக்கும் அன்பானவர்களே! உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதனை விட்டுவிடுவதற்கான தீர்மானத்தோடு ‘ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தார்’ என விசுவாசித்து, அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு பாவமன்னிப்பும் மெய்ச்சமாதானமும் கிட்டுவதுடன், மரித்த பின்பும் பரலோகிற்குச் செல்லும் பாக்கியமும் கிடைக்கும். ஆனால் அவர் தரும் பாவமன்னிப்பையும் நித்திய வாழ்வையும் ஏற்க மறுத்தால் இவ்வுலகின் வெறுமையும், விரக்தியுமான வாழ்வு மட்டுமல்ல, மரணத்தின் பின்பு உங்கள் பாவங்களுக்கான தண்டனையாக நரகமும் உண்டு. இவை இரண்டில் எதைத் தெரிவு செய்யப்போகிறீர்கள்? தெரிவு உங்களுடையது.

மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ் அவதிகள் பல பட்டு வாடி வதங்கினர். பலர் கூடித் திட்டமிட்டு அவிவரசனைக் கொலை செய்யச் சதி செய்தனர். அவ்வரசன் இதனை அறியாதிருந்த போதிலும் அதி தூரத்தில் அத்தனே என்னும் பட்டணத்தில் உள்ள அவனது ஆத்மநண்பன் இச்சதியைக் குறித்துக் கேள்வியுற்று ஒரு கடிதம் எழுதி அவனுக்கு ஒரு தூதுவன் மூலம் அவசரமாய் அனுப்பினான்.

அத்தூதுவன் வந்த தினத்தில் அரசன் தனது நண்பர்களுக்கு பெரிய விருந்தொன்று ஆயத்தப்படுத்தி முடிவில் ஏராளமான மதுவருந்திக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் அத்தூதுவன் கடிதத்தை அரசனிடம் கொடுத்து, “இதை அனுப்பியவர் இது அதிமுக்கிய காரியமானதால் நீர் இதனை உடனே படித்து ஆவன செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றார்” என்று கூறினான். அவ்வரசனோ அக்கடிதத்தில் உள்ள ஜீவன் அளிக்கும் செய்தியைப் பற்றி கிஞ்சிற்றும் உணராமல் “முக்கியமான காரியங்களை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு புசித்துக் குடித்து இன்புற்றிருப்பேன்” என்று சொல்லி அக்கடிதத்தைத் தூர எறிந்து விட்டான். அன்று இரவில் தானே அவனுடைய பகைஞர் அவன் குடித்து வெறித்திருந்த சமயம் அவன்மீது பாய்ந்து கொன்று விட்டனர். அந்தோ! அவன் ஜீவன் தப்பு அவனது நண்பனால் அருளிய எச்சரிப்பான நற்செய்தியை அல்லத் தட்டினதால் அவன் மாண்டு போனான்.

இதனை வாசிக்கும் அன்புள்ள நண்பரே, இவ்வரசனைப் போலவே நீரும்’ கிஞ்சிற்றேனும் கவலையின்றி சிற்றின்ப வாழ்வை நுகர எண்ணி உலகமே சதம் என்று அதன்பின் சென்று, பின் ஒரு நாள் நமது ஆத்மிக இரட்சிப்பைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்நாளை வீணாளாக்கிக் கொண்டு வருகின்றீரோ? சற்றே நின்று யோசித்துப் பாரும் நாளை நம்முடையதன்று. இன்றே இவ்வுலகில் நமது கடைசி நாளாக இருந்தாலும் இருக்கலாம்: யாரறிவார்? ஒரு வேளை நான் இப்படிச் சொல்வது உமக்குச் சற்று வருத்தமாய் இருக்கலாம். ஆயினும் இது உண்மையல்ல என்று சொல்ல உமது இதயம் துணியவில்லையே! ஆகவே இன்றே உமது நித்தியத்திற்கடுத்த காரியங்களைப் பற்றி நீர் சிந்திக்க வேண்டும். நித்தியத்திலே நாம் கடவுளிடம் சென்று இன்புற்றிருக்க வேண்டுமென்றால், நம்முடைய பாவங்களுடன் செல்ல முடியாது. நாம் மோட்சம் அடைய வேண்டுமென்றால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். இவ்வுலகின் கண் பாவப் பாரத்தால் சோர்ந்து அழியும் மானிடரை மீட்கவே இயேசு கிறிஸ்து மானிட அவதாரம் எடுத்து, நமது பாவங்களை தம்மீது ஏற்று, நமக்குப் பதிலாக சிலுவையில் தம்மையே தியாக பலியாக்கி, மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து, இன்றும் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் மீட்டு இரட்சித்து, பாவத்தின்மீது வெற்றி தந்து, தம்முடன் இவ்வுலகிலும் மறு உலகிலும் இனிது வாழும் பெரும் பாக்கியத்தைக் கொடுக்க வல்லவரும் நல்லவருமாய் இருக்கின்றார்.

உமது பாவங்களை அவரிடம் இன்றே அறிக்கை செய்து, அவரை உமது சொந்த தெய்வ இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரைத் தொழுது அவரையே சேவிக்க முற்படுவீராக. அப்பொழுது இம்மையில் தூயவாழ்க்கையும் பேரின்பத்தையும் மறுமையில் மோட்சானந்த பாக்கியத்தையும் அடைவீர். அவ்வரசனைப் போன்று முக்கியமானகாரியங்களை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இந்த இரட்சிப்பின் நற்செய்தியை தள்ளிவிட வேண்டாம் “ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் …………. நீங்கள் எவைகளினின்று (பாவத்திலிருந்து) விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ … அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் என்றும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமான்களாக்கப்படுகிறான். (அப்போஸ்தலர். 13:38-39) என்று சத்தியவேதம் வெளிப்படுத்துகிறது. ஆகவே இயேசு கிறிஸ்துவை இன்றை உமது இரட்சகராய் ஏற்றுக் கொள்வீராக.”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” அப்போஸ்தலர். 16:31)

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் சென்றதாகவும் சரித்திரம் கூறுகிறது. வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், மிக விலையுயர்ந்த பலவித வண்ணக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இச்சிறந்த கட்டிடத்தின் மேன்மை இதன் கட்டிடக்கலை நுட்பத்தையோ, கைவன்மையையோ, செலவிட்ட பொருட் செல்வத்தையோ சார்ந்ததாயிராமல், அது கட்டப்பட்ட நோக்கத்தையும் சார்ந்துள்ளது. மன்னன் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அன்பின் நிமித்தம், அவளுக்காக எழுப்பின ஒப்பற்ற அன்பின் சின்னமே இந்த தாஜ்மகால் ஆகும். இந்த அன்பின் உன்னத சின்னத்தைக் கண்டுகளிக்க இன்றும் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் திரண்டு வருகின்றனர்.

அன்புடையீர்! உலகில் மிகச்சிறந்த அன்பின் சின்னம் எது என்று அறிந்திருக்கிறீர்களா? அது மூன்று முக்கிய கண்டங்கள் சந்திக்கும் இஸ்ரவேல் நாட்டிலுள்ள எருசலேம் என்னும் நகரில் உள்ள கல்வாரி என்ற குன்றில் உள்ளது. இது ஆச்சரியமாக உள்ளதா? அந்த இடத்தை நீங்கள் எப்பொழுதாகிலும் கண்டிருக்கிறீர்களா? இப்பொழுது வாருங்கள்! நாம் போய், அந்த அன்பின் சின்னம் என்னவென்று கண்டு, அவ்வன்பில் திளைத்து இன்புறுவோம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கல்வாரிக் குன்றில் சரித்திரத்தின் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காலத்தையும், சரித்திரத்தையும், மனுமக்களையும் இரு கூறுகளாகப் பிரித்துள்ளது. “நாம் பாவிகளாய் இருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:8). “பிதாவாகிய தேவன் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள்”(யோவான் 3:1). இந்த இறை வசனங்கள் கூறும் உண்மைகளாவன:

01. மனிதர்களாகிய நாம் அனைவரும் பாவ மக்களாக உள்ளோம்.

நாம் அனைவரும் பாவம் செய்து தேவ மகத்துவத்தை இழந்து விட்டோம்.(ரோமர் 3:23) என் இருதயம் சுத்தமாக இருக்கிறது. நான் பாவங்களுக்கு விலகி தூய்மையாயிருக்கிறேன் என்று சொல்லக் கூடிய மனிதர் எவரேனும் இவ்வுலகில் உண்டோ? இவ்வுலக மக்கள் அனைவரும் தூய, நீதியுள்ள தேவனுக்கு முன்பாகக் குற்றம் புரிந்தவர்களாகவே உள்ளனர். ஒரே மனிதனாலே (படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம் மூலமாக) பாவமும், (அந்த) பாவத்தினாலே, மரணமும் உலகத்தில் பிரவேசித்தது”(ரோமர் 5:12) என்றும், “பாவத்தின் சம்பளம் மரணம்”(ரோமர் 6:23) என்றும் திருமறை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

02.தேவன் இத்தகைய மனுமக்களையும் நேசித்து அன்பு கூறுகிறார்.

என்ன ஆச்சரியம்! நாம் பாவிகளும், துரோகிகளுமாக இருப்பினும், பெரும் பாதகர்களாக நாம் இருப்பினும், தேவன் அளவு கடந்து நம்மீது அன்பு கூறுகிறார். தேவன் அன்பு கூறுபவராகவே இருக்கிறார். இதுவே தேவனுடைய பண்பு. நம்மில் உள்ள பாவத்தையோ பாவத் தன்மையையோ அல்ல, கொடும் பாவியாக உள்ள நம் அனைவரையும் அவர் அன்பு கூர்ந்து நேசிக்கிறார். அவர் பாவத்தை மன்னித்து நமக்குப் புதியதோர் வாழ்வை அருளும்படி காத்து நிற்கிறார். இதற்காகத் தம்மண்டை வரும்படி நம்மை அழைக்கிறார்.

03.இயேசு கிறிஸ்து பாவிகளாக இருக்கும் நமக்காகவே மரித்தார்.

தேவன் அன்புள்ளவராக மட்டுமல்ல, நீதியும் தூய்மையுள்ளவராகவும் இருக்கிறார். தூய்மை, நீதி, நேர்மை, அன்பு ஆகிய இம் மூன்று பண்புகளும் சரிசமமாகவே அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. இதனிமித்தம் அவர் பாவத்தை அவசியம் தண்டித்து, நீதியான தீர்ப்பைக் கொடுக்க வேண்டும். “ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி 9:27). இதுவே பாவத்துடன் மரிக்கும் மனிதருடைய மாற்றமில்லா முடிவாகும். தேவன் பாவத்திற்கு கொடுக்கும் நீதியான தீர்ப்பு, நித்திய மரண தண்டனையாகிய நரகமே.

ஆயினும், தேவன் துதிக்கப்படத்தக்கவராக உள்ளார். அவர் மனிதர்களாகிய நம்மீது வைத்துள்ள பெரிதான அன்பினிமித்தம் பாவிகளாகிய நாம் தேவ தண்டனைக்குத் தப்பித்துக் கொள்வதற்கான ஒரே நல்வழியை உருவாக்கியுள்ளார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). மெய்தேவனுடைய ஒரே பேறான குமாரனே, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து. உங்களையும் என்னையும் போல அவர் ஒரு மனித சரீரம் எடுத்துக் கொண்டு, ஒரு கன்னியின் வயிற்றில் பாவம் அற்றவராக பிறந்து, தூய வாழ்க்கை நடத்தி, உலக மக்கள் யாவருக்கும் பதில் ஆளாக சிலுவை மரத்தில் மரித்து ஜீவபலியானார்.

அவர் தம் சொந்த சரீரத்தில் நம் அனைவரின் பாவ சாபங்களையும் ஏற்றுக் கொண்டு, கல்வாரிக் குன்றில் நாட்டப்பட்ட சிலுவை மரத்தில் நமக்காகவே மரித்தார். பாவத்தினிமித்தம் நாம் பெறவேண்டிய தண்டனையாகிய மரணத்தையும், நரகவேதனையையும் தாமே சுமந்து தீர்த்தார். அவரே நமது பாவங்களைக் கழுவுவதற்கென்று கிருபையின் ஆதாரமாகி பலியானார். நமது பாவங்களைக் கழுவிச் சுத்திகரிக்க அவர் சிலுவையில் தமது தூய இரத்தத்தைச் சிந்தினார். “இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம்(நமது) சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்”(1யோவான் 1:7).

ஆம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே மரித்தார். ஆயினும் அவருடைய மரணத்தோடு எல்லாம் முடிவடைந்து விடவில்லை. அடக்கம் செய்யப்பட்ட அவர், மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, பலருக்கும் காட்சியளித்து, தாம் உயிரோடுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மற்றும் அநேக உறுதியான செயல்களினால் தாம் உயிரோடு எழுந்துள்ளதை நிரூபித்துக் காட்டி, விண்ணுலகம் போனார். அங்கு தம்முடைய மாட்சிமையிலும், மேன்மையிலும் தேவனுடைய ஆசனத்தின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே எல்லோருக்கும் ஆண்டவர்! இயேசுக்கிறிஸ்துவை அண்டிக்கொள்ளும் அனைவருக்கும், அவருடைய சிலுவைப் பலியினால் பாவ மன்னிப்பாகிய மீட்பு உண்டு.

இவ்வுலகில் மெய்யன்பின் உன்னதச் சின்னம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பாவ மனிதனுக்குப் பதிலாகப் பலியான சிலுவை தான். “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது: நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாக இருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:7,8).

இது தகுதியற்ற நம் ஒவ்வொருவருக்காகவும் காண்பிக்கப்பட்ட இறையன்பு,

இறைவன் தம்மையே மரணத்தில் ஊற்றிவிட்ட அன்பு, உங்களையும் என்னையும் கவரும் அன்பு, நம் அனைவரின் பாவத்திற்காக மரித்துப் பலியான அன்பு, இந்த சிலுவை மரணமே மெய்யான அன்பின் சின்னம், ஒப்பற்ற அன்பின் சின்னம்!

அந்த சிலுவையில் தம்மை ஒப்புவித்த ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவிற்கு முன் நீங்களும் அடிபணிவீர்களா? அவ்வாறு பணிவீர்களாயின் உங்கள் பாவம் நீங்கி, பாவத்திற்காக வரும் தண்டனையாகிய நரக ஆக்கினையாவும் விலக்கப்பட்டு, இரட்சிக்கப்படுவீர்கள். இந்த மகா அன்பின் சின்னத்தின் மேன்மைதான் எவ்வளவோ!

இவர் யார்

இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு மாட்டுக்கொட்டகையாய் இருந்தபோதிலும் ஒரு விண்மீன் அறிஞர்களைக் கீழ்த்தேசத்திலிருந்து வந்து அவரை வணங்கும்படி வழிநடத்தினது.

அவர் பிறப்பு இயற்கை விதிக்கு முரண்பட்டது. அவர் மரணம் மரணவிதிக்கும் மாறுபட்டது. அவர் ஜீவியமும், போதனையும் விளக்கவொண்ணாத ஒரு மாபெரும் அற்புதம். அவருக்கு கோதுமை வயலோ, மீன்பண்ணையோ இல்லாதிருந்தும் அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு திருப்திபடக்கொடுத்து மீதமும் வைக்கமுடிந்தது. அவர் நீர் மேல் நடந்தால் அது தரைபோல் அவரைத் தாங்கும்.

அவரைச் சிலுவையில் அறைந்ததோ கொடுமையிலும் கொடுமை. தேவன் அம் மரணத்தின்மூலம் கிருபையாய் பாவமன்னிப்பையும் மீட்பையும் மானிடர்க்கு அருளிச் செய்தார். அவர் மரித்த அன்று ஒரு சிலரே அவருக்காகப் புலம்பினர். ஆயினும் சூரியன் கருந்திரையினால் மூடப்பட்டதுபோல் அந்தகாரப்பட்டது. கீழிருந்த பூமியோ அக் கொடுமையின் பாரம் தாங்காமல் அதிர்ந்தது. சகல இயற்கையின் தத்துவங்களும் அவரை நன்கு மதித்து அவருடைய அநியாய மரணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால் இவ் உலகின் கொடிய பாவிகளோ அவரைத் தூஷித்து, புறக்கணித்து, சிலுவையில் அறைந்தனர்.

பாவம் அவரை எள்ளளவேனும் தீண்டவில்லை. அழிவோ அவரின் சரீரத்தை ஆட்கொள்ளஇயலவில்லை. அவர் இரத்தத்தால் கறைபட்ட மண் அவர் சரீரத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் மரித்து மூன்றாம் நாள் மண்ணிலிருந்து உயிருடன் எழுந்தார்.

அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து மூன்றரை வருஷங்கள் சுவிசேஷத்தைக் கூறி அறிவித்தார். அவர் ஒரு புத்தகமும் எழுதியதில்லை. ஒரு கட்சியும் அமைக்கவில்லை. ஒரு ஆலயமும் கட்டவில்லை. அவர் மாபெரும் நிதிகள் ஒன்றும் திரட்டவில்லை. என்றாலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மனித சரித்திரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இடைவிடாமல் போதிக்கப்பட்டுவரும் பிரசங்கங்களின் மத்திய பொருள் இவரைப் பற்றியதே. காலத்தின் சகல வர்த்தமானங்களும் இயேசு கிறிஸ்து எனும் ஒரு அச்சாணியிலேயே சுழன்றுகொண்டுவருகிறது. இவர் ஒருவரே மானிடவர்க்கத்தை மீட்டு புதுப்பித்து நித்தியஜீவனைக் கொடுக்க வல்லவர்.

அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மறைந்த மரியாளின் மைந்தனான வெறும் மைந்தனோ? இல்லை! இல்லை! இவர் தெய்வத்தில் தெய்வமானவர். பரஞ்சோதியான உண்மைக் கடவுள். இவர் சர்வத்துக்கும் மேலான தேவன். கல்வாரிச் சிலுவையில் அவர் செய்த ஒப்பற்ற தியாகம்தான் கடந்த நூற்றாண்டுகளில் கொடிய பாவிகளையும் நரமாமிசபட்சணிகளையும் மீட்டு, இரட்சித்து புனிதராக்கி, பிறரைத் தம் தோழராக நேசிக்கச் செய்து அவர்கள் ஜீவியத்தில் அற்புதமாறுதல்கள் உண்டுபண்ணிற்று.

இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த தூயவரை மானிடரை மீட்டு இரட்சித்து இம்மையில் பாவமன்னிப்பின் நிச்சத்தையும் மறுமையில் மோட்சானந்தத்தையும் அளிக்கவல்ல இவ் உன்னத மீட்பரை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் என் ஆண்டவனே! என் தேவனே! என்னை இரட்சியும் என்று வணங்காமல் இருக்க மாட்டான்.

இதை வாசிக்கும் அன்பான நண்பரே, நீர் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம்செல்ல வாஞ்சிக்கிறீரா? இப்படிப்பட்ட ஒப்பற்ற நேசராகிய இயேசு கிறிஸ்துவை உமது உள்ளத்தில் உறையும் கடவுளாகவும், உமது சொந்த இரட்சகராகவும் ஏற்று அங்கீகரிப்பீராகில் அவர் உம்மை முற்றுமுடிய இரட்சித்து மோட்சானந்த பாக்கியத்தை உமக்கு அருளுவார். நீர் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்16:31).

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

வாய்ப்பைத் தவறவிட்டவள்!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவாள். அவள் அதிக சீக்கிரத்தில் ஒரு சிறந்த நாட்டியக்காரியாகவும் மாறினாள்.

தன் ஊரில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், குதிரைப்பந்தயம், திரைப்படங்கள், நாட்டிய அரங்கம் போன்ற பற்பல இடங்களுக்கு மெர்லின் தவறாமல் செல்வாள். அவளின் அழகிய நடனம் அந்த நாட்டில் உள்ள பலரைக் கவர்ந்தது. சற்று பிரபலமானவுடன் அவளுக்குப் பெயரும், புகழும், பணமும் பெருகிவிட்டது.

ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது சுவர்களில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டாள். தன் காரை நிறுத்தி அதை வாசித்துப் பார்த்தாள். கடவுளைப் பற்றிச் சொல்லும்படியாக ஒரு தெய்வீக மனிதர் அந்த ஊருக்கு கடந்து வருவதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்ருந்தது. மெர்லின் அந்த நபரின் பெயரை படித்ததும், இவர் பெரியமனிதர் அல்லவா! இவரைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சிந்தித்தவாறே தன் வீட்டை அடைந்தாள்.

அடுத்தநாள் அவள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணிப்பெண் தான் நேற்றைய தினம் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு கடந்து சென்றதையும், அங்கு நடைபெற்ற நிகழ்சிகளையும் பற்றி சொன்னாள்.

இதைக் கேட்ட மெர்லின் மனதிலும், ஒரு விருப்பம் வரவே, அன்று சாயங்கால கூட்டத்திற்கு அவளும் புறப்பட்டாள்.

மெர்லின் தன் காரை ஓட்டிச் செல்லும்போதே கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த மைதானத்திற்கு செல்வதைப் பார்த்தாள். தனக்கு அந்த கூட்டம் பிடிக்கவில்லையெனில் இடையில் எழுந்து வெளியே வந்துவிட வசதியான ஒரு இடத்தில் காரை நிறுத்தி, உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்த கூட்டம் ஆரம்பித்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவள், இத்தனை நாட்கள் சென்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலிருந்து இது வித்தியாசமானதாகவும், அவள் மனதிற்கு ஒரு அமைதியை கொண்டு வருவதாகவும் இருந்தது.

கூட்டம் ஆரம்பமாயிற்று. அந்த தேவமனிதர் பேசத் துவங்கினார். கூடியிருந்த எல்லாரும் மிக ஆவலாக, அவர் சொல்லும் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவத்தில் சிக்கியிருப்பவர்கள் தண்டனைக்கு எப்படி தப்ப முடியும்? என்ற வார்த்தைகளை அவர் பேசும் போது அந்தக் கூட்டத்திலிருந்த அநேகர் தங்கள் பாவங்களை உணர்ந்தார்கள். அதில் நாட்டியப் பெண்ணான மெர்லினும் ஒருத்தி.

கூட்டம் முடியும் இறுதி நேரத்தில் மக்கள் பலர் தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து, அழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் மேடையிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்காகவே பேசப்பட்டதாக உணர்ந்தாள். நீ செய்த பாவங்கள் எவ்வளவு கொடிதானாலும், இயேசுவிடம் அறிக்கையிடு, இன்றே அதை விட்டு விடு. நிச்சயம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீ சொர்க்க வாழ்வை அனுபவிப்பாய் என்று அவர் பிரசங்கித்தார்.

இதைக் கேட்ட மெர்லின், தான் கடவுளை விட்டு தூரம் போன பாவி என்று உணர்ந்தாள். ஆனால் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது. மறுவிநாடி அவள் எண்ணம் சற்று மாறியது. ஐயோ! நாளை ஒரு முக்கிய நடன நிகழ்ச்சி உள்ளதே. ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நான் ஆட வேண்டுமே, இன்று என் வாழ்வை நான் இயேசுவுக்கு கொடுத்தால், நாளை எப்படி நடனமாட முடியும்? என்று யோசித்தாள். அன்று மேடையிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் பலர் தொடப்பட்டனர். ஆனால் மெர்லின் தன் டைரியில், ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வேன்’ என எழுதிக் கொண்டவளாய் அந்தக் கூட்டம் முடியும் முன்னரே மனப் போராட்டத்துடன், காரை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

மெர்லினுடைய உள்மனதில் திரும்பத் திரும்ப அந்த தேவமனிதரின் வார்த்தைகள் ஓடினாலும், அவள் “இன்று அல்ல, இன்னும் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பின் நாளை மனம் மாறுவேன்” என்று நினைத்தவாறே நான்கு வழி ரோட்டில் காரை ஒட்டினாள். அப்போது எதிர்புறமாக இருந்து வந்த ஒரு லாரி மின்னல் வேகத்தில் அவள் காரை மோதியது. கார் சுக்கு நூறாக உடைந்தது. இரத்த வெள்ளத்தில் மெர்லின் அந்த இடத்திலே பிணமாக கிடந்தாள். அவள் எழுதி வைத்திருந்த டைரியும் அங்கு திறந்து கிடந்தது. ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வேன்’ என்ற வரிகளுடன் …

பிரியமானவர்களே, நாளையை சந்திப்பதற்கு முன் அவள் இருளுக்குள் சென்றுவிட்டாளே! நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. நல்ல தீர்மானங்களை எடுக்க காலந் தாழ்த்துவது நல்லதல்ல. அதினால் நாம் அவற்றை இழந்துபோக நேரிடலாம் – மெர்லினைப் போல.

நாம் இந்த பூமியில் வாழும் வாழ்க்கை நிலையற்றது. நிச்சயம் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும். அதற்குப் பின்னர் தான் நமக்கு என்றும் அழிவில்லாத ஒரு வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இந்த பூமியில் நாம் செய்யும் தவறுகளுக்கு பின்னர் நாம் அனுபவிக்கும் தண்டனை முடிவில்லாத நரக வாழ்க்கையே. நித்திய வாழ்வைப் பெற இயேசுவிடம் திரும்புங்கள். இன்றே தீர்மானம் எடுங்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13)

செவிகொடுங்கள்

இயேசு சொன்னார்: எனக்குச் செவிகொடுங்கள். (மாற்கு 7:14).

எல்லோரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 4:22).

இயேசு சொன்னார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (லூக்கா 21:33).

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. (யோவான் 5:24).

இப்புஸ்தகம் தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்கியங்கள் அடங்கியது. நீங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ளவும் வாசிக்கவும் ஊக்கமாய் ஏவுகிறோம். ஏனெனில் அது  எல்லா மனிதருக்கும் தேவ வெளிப்படுத்துதலாயிருக்கிறது.

இரண்டு வீடுகள்

இயேசு சொன்னது : நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷலுக்கு ஒப்பிடுவேன்.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழைசொரிந்து, வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மத்தேயு 7:24-29).

போடப்பட்டிருக்கிற அஸ்திவாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல வேறே எந்த அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11).

காணாமற்போன ஆடு

இயேசு இந்த உவமையைச் சொன்னார்: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து,

அவைகளில் ஒன்று காணாமறபோனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே வீட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து”: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாயிருக்கும். (லூக்கா 15:3-7).

நாம் எல்லாரும் ஆடுகளைப்போல் வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6).

காணுமற் போதலும் கண்டுபிடித்தலும்

இயேசு சொன்னார்: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.

சில நாளைக்குப் பின்பு இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூரதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பணணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களிலே பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்த தெளிந்தபோது அவன் என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனை பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. நானோ பசியினால் சாகிறேன்.

நான் எழுந்து. என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே. பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதரகு நான் பாத்திரனல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான்.

அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதறகு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து. இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரடசையையும் போடுங்கள்: கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் புசித்துச் சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணுமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். (லூக்கா 15:11-24).

மன்னிப்பு ஈயாத ஊழியக்காரன்

இயேசு சொன்னார் : பரலோக ராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

அவன் கணக்கு பார்க்கத் தொடங்சினபோது பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒரு வனை அவனுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். கடனைத் தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும அவன் பெண்சாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டான்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவரே, என்னிடத்தி ல் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி. அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

அப்படியிருக்க அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில், தன்னிடத்தல் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்டிருந்தவனகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத்தீர்க்கவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன் உடன் வேலைக்காரன் அவன் காலில் விழுந்து, என்னிடத்தல் பொறுமையாயிரும், எலலாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அவனோ சம்மதியாமல் அவன் பட்ட கடளைக்கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

அவனுடைய ஆண்டவன் அப்பொழுது அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் கொடுத்துத்தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். (மத்தேயு 18:23-34).

ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து. கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32).

பேராசையுள்ள கமக்காரன்

இயேசு சொன்னார்: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல.

அல்லாமலும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன் நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு எனக்கு இடமில்லையே?

நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும், என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு என் ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது: நீ இளைப்பாறி புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

தேவனோ அவனை நோக்கி : மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தது யாருடையதாகும் என்றார்.

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சோத்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான். (லூக்கா 12:15-21).

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (லூக்கா 12:31).

பெருமையும் தாழ்மையும்

இயேசு தங்களை நீதிமான்களென்று நம்பி மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக் குறித்து இந்த உவமையைச் சொன்னார்:

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று, தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுரைப் போலவும். இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன். என் சமபாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

அவனல்ல இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:9-14).

உங்கள் செவியைச் சாய்த்து என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசாயா 55:3, 6).

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

ஏன் எனக்கு அமைதியில்லை

நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு, சரீர் வேதனை என பல பிரச்சினைகளை சரீரத்தில் உணரமுடியும். இவைகள் உண்மையான நோய்கள் அல்ல. உள்ளே மறைந்திருக்கும் கான்சர் நோயின் வெளிப்படையான அறிகுறிகளே இவைகள். எனவே மேற்கண்ட நோய்களுக்கு நாம் மருத்துவம் செய்தால் அதனால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். மறைந்திருக்கும் கான்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சை உரிய நேரத்தில் செய்யப்பட்டால்தான் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பலருக்கு பயம், அமைதியின்மை, பதட்டம், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவைகளை அவர்கள் தங்களின் பிரச்சினைகளாக எண்ணிக்கொண்டு அவைகளைச் சரி செய்ய பலவிதமானக் காரியங்களைச் செய்கின்றனர். சிலர் கோயில்களுக்கு செல்கின்றனர். சிலர் பக்தி ரீதியாக சில காரியங்களை செய்கின்றனர். சிலர் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்றனர். சிலர் புனிதத்தலங்கள் போய்வருகின்றனர். சிலர் மனதை இலகுவாக்கும் சில ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் அவர்களுக்கு நிரந்தரமானத் தீர்வுகள் அவைகளால் கிடைப்பதில்லை. எல்லாம் சற்று நேரம் மட்டுமே செயல்படுகின்றன.

காரணம் என்ன? மேற்கண்ட மனப்பிரச்சினைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோயின் வெளிப்புறமான அறிகுறிகளே அந்த நோயின் பெயர் என்ன? அதன் பெயர்தான் பாவம். பாவம் என்றால் என்ன? தன்னைப் படைத்த தேவனோடு தனிப்பட்ட உறவுடன் வாழாமையின் பெயர்தான் பாவம். மனிதன் கடவுளின் உறவில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். மனிதன் கடவுளின் உறவினால் மட்டுமே முழுமையான வாழ்வினை அடைகின்ற இயற்கையுடன் படைக்கப்பட்டவன். கடவுளை நாம் நம்பலாம். கடவுளை நாம் வணங்கலாம். கடவுளை நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்யலாம். ஆயினும் கடவுளின் உறவுடன் வாழ்வது என்பது வித்தியாசமான ஒரு அனுபவம். கடவுளின் உறவினை மனிதன் தனக்குள் அனுபவிக்கும் போதுதான் அவனைவிட்டு தனிமை உணர்வு போகின்றது. தனிமை உணர்வு போகின்ற போதுதான் பயம், சோர்வு, பீதி, கவலை ஆகியவைகளும் போகின்றது.

கடவுளின் உறவு இல்லாத உள்ளான ஒரு நிலைமை தான் பாவம். அந்த பாவத்தின் அறிகுறிகள்தான் அகலாத பயங்களும், நீங்காத நிம்மதியின்மைகளும், மறையாத வேதனைகளும், விலகாத மனச்சோர்வுகளும், உள்ளான இருதயத்தில் கடவுளின் உறவினை அடைந்து உணரும்வரை மனரீதியான பலவிதத் துயர்தரும் விஷயங்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.

கடவுளின் உறவினைப் பெறுவது எப்படி? கடவுளின் உறவை மனிதன் பெறுவதற்காக பாவநிவாரணம் செய்யப்பட வேண்டியத் தேவை உண்டு. அந்தப் பாவநிவாரணத்தை செய்திடவே தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமியில் மானிடனாக வந்து பாவநிவாரணப் பலியாக தம்மையேக் கொடுத்தார். சிலுவையில் இயேசு கிறிஸ்து பாவநிவாரண பலியாக அடிக்கப்பட்டார். அதன் விளைவாக மனிதன் தேவ உறவுடன் வாழ்வதற்கான வாசல் திறக்கப்பட்டது. இந்த இரட்சகராகிய இயேசுவை
நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறை உறவுடன் வாழ விரும்பும்போது பாவம் ஒழிகிறது. அதாவது தேவ உறவற்ற நிலை போய், தேவ உறவுடன் வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டுகிறது. அதன் விளைவாக நாம் உண்மையான இதய அமைதி, நம்பிக்கை. சந்தோஷம், மனத்தூய்மை ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழிதிறக்கின்றது. பலவிதமான வாழ்க்கை சுமைகளினால் வருத்தப்பட்ட மக்களைப் பார்த்து இயேசு ‘என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருகிறேன்’ என்றார். அதாவது அவரோடு ஒரு நெருங்கிய உறவுடன் வாழவரும்போது, அவரால் நமக்கு உண்மையான அமைதி கிடைக்கிறது (மத்தேயு 11:28).

ஆண்டவராகிய இயேசு இன்றும் உங்களை அன்புடன் அழைக்கின்றார். தேவ உறவின்மை என்ற பாவ வாழ்வை விட்டு விலகி, தேவ உறவுடன் வாழ்தலாகிய தூய்மையான வாழ்விற்கு வரும்போது அங்கே பயமும், கவலையும், சோர்வும் நீங்கி உண்மையான தேவ அமைதியை இருதயத்தில் உணரலாம்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவர் இயேசுவே.
தேவ உறவில்லாத என் பாவ
வாழ்வை மன்னியும். எனக்குள் நீர்
வந்து உம்முடைய உறவை
அனுபவிக்கச் செய்யும்,
கவலைகள், பயங்கள், சோர்வுகள்,
சஞ்சலங்கள், பதட்டங்கள்
யாவற்றையும் நீக்கி என்னை
அமைதியுடன் வாழச் செய்யும். உமக்கு
பிரியமாக வாழ்வதற்கு உதவி செய்யும். இயேசுவின்
நாமத்தில் ஆமென்.

Popular Posts

My Favorites

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு

https://youtu.be/h6glrMUrG2A?si=0Q9bOQdPR-4_cuA0 அழைப்பு ஒன்று உனக்கு உண்டுஎழுந்து வா மகனே - இறைவன் சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டுதூக்கி வா மகனே அழைப்பு ஒன்று உனக்கு உண்டுஎழுந்து வா மகனே - இறைவன் சுமக்கும் சிலுவை...