துண்டு பிரதிகள்

Home துண்டு பிரதிகள்

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

வாய்ப்பைத் தவறவிட்டவள்!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவாள். அவள் அதிக சீக்கிரத்தில் ஒரு சிறந்த நாட்டியக்காரியாகவும் மாறினாள்.

தன் ஊரில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், குதிரைப்பந்தயம், திரைப்படங்கள், நாட்டிய அரங்கம் போன்ற பற்பல இடங்களுக்கு மெர்லின் தவறாமல் செல்வாள். அவளின் அழகிய நடனம் அந்த நாட்டில் உள்ள பலரைக் கவர்ந்தது. சற்று பிரபலமானவுடன் அவளுக்குப் பெயரும், புகழும், பணமும் பெருகிவிட்டது.

ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது சுவர்களில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டாள். தன் காரை நிறுத்தி அதை வாசித்துப் பார்த்தாள். கடவுளைப் பற்றிச் சொல்லும்படியாக ஒரு தெய்வீக மனிதர் அந்த ஊருக்கு கடந்து வருவதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்ருந்தது. மெர்லின் அந்த நபரின் பெயரை படித்ததும், இவர் பெரியமனிதர் அல்லவா! இவரைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சிந்தித்தவாறே தன் வீட்டை அடைந்தாள்.

அடுத்தநாள் அவள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணிப்பெண் தான் நேற்றைய தினம் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு கடந்து சென்றதையும், அங்கு நடைபெற்ற நிகழ்சிகளையும் பற்றி சொன்னாள்.

இதைக் கேட்ட மெர்லின் மனதிலும், ஒரு விருப்பம் வரவே, அன்று சாயங்கால கூட்டத்திற்கு அவளும் புறப்பட்டாள்.

மெர்லின் தன் காரை ஓட்டிச் செல்லும்போதே கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த மைதானத்திற்கு செல்வதைப் பார்த்தாள். தனக்கு அந்த கூட்டம் பிடிக்கவில்லையெனில் இடையில் எழுந்து வெளியே வந்துவிட வசதியான ஒரு இடத்தில் காரை நிறுத்தி, உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்த கூட்டம் ஆரம்பித்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவள், இத்தனை நாட்கள் சென்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலிருந்து இது வித்தியாசமானதாகவும், அவள் மனதிற்கு ஒரு அமைதியை கொண்டு வருவதாகவும் இருந்தது.

கூட்டம் ஆரம்பமாயிற்று. அந்த தேவமனிதர் பேசத் துவங்கினார். கூடியிருந்த எல்லாரும் மிக ஆவலாக, அவர் சொல்லும் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவத்தில் சிக்கியிருப்பவர்கள் தண்டனைக்கு எப்படி தப்ப முடியும்? என்ற வார்த்தைகளை அவர் பேசும் போது அந்தக் கூட்டத்திலிருந்த அநேகர் தங்கள் பாவங்களை உணர்ந்தார்கள். அதில் நாட்டியப் பெண்ணான மெர்லினும் ஒருத்தி.

கூட்டம் முடியும் இறுதி நேரத்தில் மக்கள் பலர் தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து, அழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் மேடையிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்காகவே பேசப்பட்டதாக உணர்ந்தாள். நீ செய்த பாவங்கள் எவ்வளவு கொடிதானாலும், இயேசுவிடம் அறிக்கையிடு, இன்றே அதை விட்டு விடு. நிச்சயம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீ சொர்க்க வாழ்வை அனுபவிப்பாய் என்று அவர் பிரசங்கித்தார்.

இதைக் கேட்ட மெர்லின், தான் கடவுளை விட்டு தூரம் போன பாவி என்று உணர்ந்தாள். ஆனால் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது. மறுவிநாடி அவள் எண்ணம் சற்று மாறியது. ஐயோ! நாளை ஒரு முக்கிய நடன நிகழ்ச்சி உள்ளதே. ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நான் ஆட வேண்டுமே, இன்று என் வாழ்வை நான் இயேசுவுக்கு கொடுத்தால், நாளை எப்படி நடனமாட முடியும்? என்று யோசித்தாள். அன்று மேடையிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் பலர் தொடப்பட்டனர். ஆனால் மெர்லின் தன் டைரியில், ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வேன்’ என எழுதிக் கொண்டவளாய் அந்தக் கூட்டம் முடியும் முன்னரே மனப் போராட்டத்துடன், காரை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

மெர்லினுடைய உள்மனதில் திரும்பத் திரும்ப அந்த தேவமனிதரின் வார்த்தைகள் ஓடினாலும், அவள் “இன்று அல்ல, இன்னும் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பின் நாளை மனம் மாறுவேன்” என்று நினைத்தவாறே நான்கு வழி ரோட்டில் காரை ஒட்டினாள். அப்போது எதிர்புறமாக இருந்து வந்த ஒரு லாரி மின்னல் வேகத்தில் அவள் காரை மோதியது. கார் சுக்கு நூறாக உடைந்தது. இரத்த வெள்ளத்தில் மெர்லின் அந்த இடத்திலே பிணமாக கிடந்தாள். அவள் எழுதி வைத்திருந்த டைரியும் அங்கு திறந்து கிடந்தது. ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வேன்’ என்ற வரிகளுடன் …

பிரியமானவர்களே, நாளையை சந்திப்பதற்கு முன் அவள் இருளுக்குள் சென்றுவிட்டாளே! நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. நல்ல தீர்மானங்களை எடுக்க காலந் தாழ்த்துவது நல்லதல்ல. அதினால் நாம் அவற்றை இழந்துபோக நேரிடலாம் – மெர்லினைப் போல.

நாம் இந்த பூமியில் வாழும் வாழ்க்கை நிலையற்றது. நிச்சயம் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும். அதற்குப் பின்னர் தான் நமக்கு என்றும் அழிவில்லாத ஒரு வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இந்த பூமியில் நாம் செய்யும் தவறுகளுக்கு பின்னர் நாம் அனுபவிக்கும் தண்டனை முடிவில்லாத நரக வாழ்க்கையே. நித்திய வாழ்வைப் பெற இயேசுவிடம் திரும்புங்கள். இன்றே தீர்மானம் எடுங்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13)

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், இருவரும் அடிக்கடி சந்தித்து மத சம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்த போதிலும், தன் கிறிஸ்தவ நண்பரிடம் அன்போடு பழகுவான்.

இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். ‘சாபு, உன்னைப் பார்க்கும்போது, மிகவும் சோர்ந்திருப்பதுடன், வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது, இதுவே நீ கடைசி முறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன்’ என்றதும், ‘ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப் போவதில்லை. மேலும், நான் விருத்தாப்பியம் அடைந்ததால் முத்துக்குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது, பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது” எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

சாபுவின் கிறிஸ்தவ நண்பர், பலமுறை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால், பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழி யாதெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக மட்டும் தான் கிடைக்கக் கூடியது. மேலும், இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும் இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்ததை விளக்கினார்.

இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் “நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது, ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே ! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன்’ என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.

“நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் நட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்” என்றவன், குடிசையின் ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக் கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட, பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்று விட்டது. “எவ்வளவு அழகான ஒப்பற்ற முத்து ! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டியது,” என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒரு நாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான். இந்த விலையேறப்பெற்ற முத்து.’ எனக் கூறிவிட்டு அழஆரம்பித்தான் சாபு. ‘நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான்’, என்றவன், “நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலை மதிப்பு என் அன்பு மகனின் உயிர்” என்று கூறி கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

“இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய்? வேண்டாம், இதை இலவசமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன் ஆனால்,வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
‘நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில், இது விலை மதிப்பிட முடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா ! இதன் விலை என் மகனின் உயிர்’ என்றான் சாபு.

“சாபு, சற்று முன் சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா ! எதையாவது கொடுத்து சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா, உன்னுடைய இரட்சிப்புக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார். நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம்’ என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, “இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும்’ என்றார்.

வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். “….நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்’. (ரோமர் 5:6)

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1.யோவான் 5:11,12)

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’. (எபேசி. 2:8,9)

வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார். அவர் நித்தியம் முழுவதற்கும் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் ஆகிய யாவருடனும் நட்பும், ஐக்கியமும் கொள்ளவே விரும்புகிறார்.

இறைவன் நீதியுள்ள இறைவனாக இருக்கிறார். பாவ மனிதர்களாகிய நம்மை அவரால் ஏற்றுக்கொள்ள இயலாது. அவரால் பாவத்தைக் கண்டும் காணாதவர்போல இருக்கவும் முடியாது. அவரால் அதைத் தண்டிக்காமல் விட்டுவிடவும் முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் சரியானபடி தண்டிக்கப்படத்தான் வேண்டும். இறைவனுடன் பாவிகள் என்றென்றைக்குமாக வாழ வேண்டுமானால், அவர்களுடைய பாவம் எவ்வகையிலாயினும் அகற்றப்பட வேண்டும். பாவத்திற்கான தண்டனையும் செலுத்தியே தீர வேண்டும். துப்புரவானவர்களாகவும் தூய்மையாக்கப்பட்டவர்களாக உள்ள மனிதர்களே இறைவனுடன் வாழ இயலும்.

ஒரு மனிதனாகிலும் நித்திய அழிவுக்குள்ளாவதை இறைவன் விரும்புவதில்லை. அனைவரும் நித்திய காலமாய் சொர்க்கத்தின் எல்லா மேன்மைகளையும் பேரின்பத்துடன் அனுபவிக்க இறைவன் விரும்புகிறார். ஆனால் தன் பாவங்கள் மன்னிக்கப்படாத எந்த பாவியும் கடவுள் வாழும் நாட்டிற்கு ஒருபோதும் நுழைய முடியாது.

இஃது உண்மையானால், ஒரேநேரத்தில் அவர் நீதி தவறாத இறைவனாகவும் அன்பான இரட்சகராகவும் எவ்வாறு இருக்கமுடியும்? நீதியும் நேர்மையுமுள்ள இறைவன் பாவிகளை மன்னிக்க முடியுமா? இதற்காக தேவன் தம்முடைய அநந்த ஞானத்தின்படி ஒரு மீட்பின் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

மீட்பின் திட்டத்திற்குத் தேவையான ஏழு படிகள்

பாவத்தில் விழுந்துபோன மனித இனத்தைக் காப்பாற்ற இறைவன் எடுத்த தீர்மானம் விவரிக்க இயலாத தயவுள்ள இரக்கமாகும். ஆனால், அவர் எடுக்கும் இந்தத் தீர்மானம் அவருடைய அன்பையும் பரிசுத்தத்தையும் நீதியையும் முழுமையாகத் திருப்தி செய்யும் திட்டமாக அமைவது அவசியம். இத்திட்டத்தின்படி இறைவனுடைய மீட்பு:

* அது எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும்;

* அது எல்லோருக்கும் போதுமானதாக அமையவேண்டும்.

* நிபந்தனையின்றி அதற்கு எல்லோரும் தகுதியுள்ளவர்களாக அமைய வேண்டும்.

* அது எல்லோரும் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

* அது எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.

* மனிதனின் தற்பெருமைக்கு எவ்வித வழியும் அதில் இருந்துவிடக்கூடாது.

* இறைவன் அவன்மீது கட்டாயமாகத் திணிக்கும் திட்டமாக அது இருக்கக் கூடாது.

இத்தகைய தெய்வீகச் சிக்கலுக்கான நிரந்தர தீர்வு என்ன? ஆம், மனித இனத்தின் பாவத்திற்காக பதிலாள் ஒருவர் மரிப்பதே இச்சிக்கலின் நிரந்தரத் தீர்வாகும்.

அத்தகைய பதிலாள் ஒருவர் நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன.

* அவ்வொருவர் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் ..

* அவர் பாவமற்றவராக இருக்க வேண்டும். இல்லையாயின் அவர் தன்னுடைய பாவங்களுக்காகவும் மரிக்க வேண்டி வருமே.

* அவர் இறைவனாக இருக்க வேண்டும். ஏனெனில் குறைவற்றவரும், முடிவற்றவருமாகிய ஒருவரே எண்ணற்ற மக்களின் எண்ணி முடியாத பாவங்களை ஈடுசெய்ய இயலும்.

* இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது தெய்வீகச் சட்டமாக இருப்பதினால் அவ்வொருவர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்த வேண்டும்.

* இதை அவர் விருப்பத்துடன் செய்ய வேண்டும். இல்லையேல் மரிக்க விருப்பமில்லாத ஒருவரை தேவன் கட்டாயப்படுத்தி துன்மார்க்கரான பாவிகளுக்காக பலியாக்கினார் என்று குற்றஞ்சாட்ட ஏதுவாகும்.

மனிதனாக வந்த இறைவனாகிய இயேசு கிறிஸ்துவே இவையனைத்திற்கும் தகுதியுள்ளவர்:

* இந்தப் பூமியிலேயே மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவுசெய்யக்கூடிய ஒரே ஒரு நபர் இறைவனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.

* பெத்லகேமில் அவர் மனிதனாக அவதரித்தார். கன்னியாக இருந்த மரியாளிடம் பிறந்ததினால் அவர் பாவமற்ற பூரண மனிதர்.

* அவர் இறைவன். படைப்பாளர், எல்லாவற்றையும் அறிந்தவர், எங்கும் பிரசன்னமாயிருக்கிறவர், தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவர் வல்லவர்.

* அவர் பாவம் இல்லாதவர்.

* பாவிகளுக்குப் பதிலாக அவர் தம்முடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.

* பாவிகள் பாவம் நீங்கி இரட்சிக்கப்படும்படி அவர்தாமே மனமுவந்து முன்வந்தார்.

இதைக் குறித்து வேத புத்தகம் இவ்வாறு கூறுகிறது:

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”

மனிதனுடைய பாவத்திற்கான பரிகாரம் முழுவதையும் இறைவனாகிய இயேசு கிறிஸ்து நிறைவு செய்துவிட்டபடியால், இறைவன் அவருடைய இரக்கத்தின் நற்செய்தியை, அவருடைய அற்புதமான இத்திட்டத்தின் மூலம் இப்பொழுது மீட்பின் வழியை உலகெங்கும் பறைசாற்றி வருகிறார். பாவத்திற்காக மனந்திரும்பி,உண்மையான நம்பிக்கையுடன் இறைவனாகிய இயேசு கிறிஸ்து பாவத்திற்காக மரித்தார் என்றும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும், இறைவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்கிற அனைவருக்கும் அவர் மீட்பை இலவசமாக அருளுகிறார்.

வேதம் சொல்லுகிறது:

ஆ! இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள். அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

ஏகாந்தம்

ஏகாந்தம் என்பது தனித்திருத்தல் அல்லது தனிமை எனப் பொருள் படும். ஒருவர் தனித்திருந்தால் அது அவருக்கு ஒரு பெரும் பளுவைச் சுமப்பது போன்று இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏகாந்தத் தன்மையுடையதாகவே உள்ளது. வாலிபர் தனித்து விடப்பட்டதாக எண்ணுகின்றனர். ஏழைகளும் ஏகாந்த உணர்ச்சியினால் வாடி வதைக்கப்படுகின்றனர். சில செல்வந்தருங்கூட இவ்வித உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனர்.

வயோதிகர்கள் இவ்வித ஏகாந்த உணர்ச்சியினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள்: “வாழ்வில் வாழ்ந்த பல அரிய வாய்ப்புகளைத் தவற விட்டோம், பல நண்பர்கள் நம்மைக் கைவிட்டனர், யாருக்கும் இந்தக் கிழக்கட்டை தேவை இல்லை; காடு வா, வா என்கிறது” என்று சொல்லி ஏகாந்த உணர்ச்சியினால் ஏக்கமடைகின்றனர். வியாதிப்பட்டு பலவீனமடைந்து பல கஷ்டங்களைத் தாங்களே தங்களது வயோதிபக் காலத்தில். அனுபவித்துத் தவிக்கின்றனர்.

எல்லோரும் இத்தகைய ஏகாந்தம் தகர்த்தெறியப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.

குறிப்பாக கடவுளும் இதையே நமக்கு வாக்குறுதியாக அளித்துள்ளார். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று உறுதியாகக் கூறியுள்ளார். இது ஒரு மாபெரும் வாக்குறுதியன்றோ? ஒரு மனிதனும் இவ்வித வாக்குறுதியினைக் கொடுக்க இயலாது; ஏனெனில் எம்மனிதனாலும் இதைச் செய்து முடிக்க இயலாது.

தேவன் மற்றவர்களை உதவிக்கு அனுப்புவதாகச் சொல்லாமல் தாமே” “உன்னைக்காக்காமல் விடுவதில்லை”  என்கிறார். தம்மையே முழுவதுமாய் உனக்கு அர்ப்பணிப்பதாய்க் கூறுகின்றார். தேவனது பிரசன்னத்தை அளவிடக் கூடியவன் யார்? தேவன் தம்முடைய எல்லாவற்றையும் உனக்குக் கொடுப்பதாய் வாக்குறுதி கூறுகிறார்.

தேவன், நமது பெருந் தேவையைச் சந்தித்த நாளில் ஒன்றையும் தமக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. நமது பாவத்தினால்தான், நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டு ஏகாந்த உணர்ச்சி அடைகின்றோம். ஆகவே தேவன் தாமே மண்ணுக்கு வந்து சிலுவையில் தம்மையே தியாகம் செய்து நமது பாவங்களுக்கு ஒரு முடிவு கட்டினார். இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்டு தனித்திருந்தது. நாம் நித்தியத்தில் தேவனிடமிருந்து பிரிக்கப்படாதிருக்கவேயாகும்.

தேவன் தமது நட்பினையும் அன்பினையும் நமக்கு அருளுகின்றார். ஆயினும் ஒருவரிடமும் பலவந்தமாய் அவர் உட்பிரவேசிப்பதில்லை. அவர் இலவசமாய் அருளும் கிருபை நிறைந்த இரட்சிப்பினை, அவரது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தினால் அவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கே அளிக்கிறார் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன் நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கூறுகிறார்.

நமது நண்பர்களுடன் கூடி வாழ்வதாலோ, அல்லது வேதனை நீங்கி வலியின்றி சுகமுடன் வாழ்வதாலோ ஏகாந்த உணர்ச்சி நீங்கி மகிழ்வுடன் வாழ இயலாது. இவைகள் நமக்குத் தேவைதான்; ஆனால் உண்மையான ஆறுதல் நாம் தேவனது பிரசன்னத்தில் வாழ்வதாலேயே கிட்டும். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இன்றே உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீராக. “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப். 16:31)

டீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்

விக்கிரகத் தேவர்கள் யாவும் கடலில் மூழ்கின

இந்தியாவிலிருந்து கென்னியாவிற்குக் குடிபெயர்ந்த டினேஷா, தனது குடும்பத்துடன் அங்கு வாழ்ந்து வந்தாள். இளவயதிலிருந்து ஒரு இந்துப்பற்றுள்ள அந்தப் பெண்மணி, வழக்கப்படி விரதம் இருந்து, கும்பிட்டு, அர்ச்சனை செய்துவந்தாள். டினேஷாவின் குடும்பத்தில் அதிக பிரட்சனைகள் இருந்தன, ஆகவே அவர்கள் அதிகமாக விக்கிரகத் தேவர்களை வணங்கி வந்தார்கள். “சிலவேளையில் அவைகளில்ஒன்றாவது எமக்கு உதவலாம்….” என்று நம்பிய டினேஷாவும் அவளது சகோதரியும் அதிகாலையில் மூன்றுமணிக்கு வீட்டில் உள்ள விக்கிரகங்களைக் கழுவிவந்தார்கள். அவர்கள் வீட்டில் பொன்னாலும், வெள்ளியினாலுமான நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் காணப்பட்டன. அவைகளில் ஒவ்வொன்றும் உடுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, உணவு படைக்கப்பட்டும் வந்தன. அதன் பிற்பாடு அவர்கள் இருவரும் மணித்தியாலக் கணக்காக அந்த விக்கிரகங்கள் முன்பாக இருந்து தியானம் செய்து, எல்லாச் சடங்குகளையும் செய்து முடிப்பார்கள். காலை ஒன்பது மணிக்கு அவர்கள் தங்கள் கடையைத் திறப்பதற்கு முன்னதாக, காலைதோறும் அந்த வழிபாட்டைச் செய்து வருவார்கள். விக்கிரகங்களுக்குச் செய்யவேண்டிய சகல கிரியைகளும் டினேஷாவுக்கும் அவளது சகோதரிக்கும் முக்கியமாக இருந்தது.

டினேஷாவினதும் அவளது குடும்பத்தாரினதும் வாழ்வு இன்னும் கஷ்டமாகவே சென்று கொண்டிருந்தன. அவளது உடலில் நோய்கள் ஆரம்பித்து, அவைகள் பாரிசவியாதியை ஏற்படுத்தின. டினேஷா பதினான்கு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பதினொரு தடவைகள் சத்திர சிகிச்சை பெற்றாள். அவள் வியாதிப்பட்டுங் கூட, அவளது சமயச் சடங்குகள் யாவும் இன்னும் அதிகரித்தே வந்தன. மூடநம்பிக்கைகள் போன்ற பயங்கரச் செய்கைகளும் அவளிடத்தில் ஆரம்பித்தன. என்னவெனில் பறவைகள், மிருகங்கள் போன்றவைகளின் ஆவிகளுக்கு அவள் பலி செலுத்தினாள். மந்திரம், சூனியம், சாஸ்திரம் போன்றவற்றில் வசீகரிக்கப்பட்ட டினேஷா, தனது குடும்பத்தார் ஒவ்வொருவரிலும் சந்தேகப்பட ஆரம்பித்தாள். ஆகவே அவள் தனது குடும்பத்தாருடன் பகையை உருவாக்கி தனிமையும் ஆனாள்.

இந்த நாட்களிலேயே டினேஷா தனது விக்கிரகங்களைத் திட்டத்தொடங்கினாள்.”நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவுகின்றவர்களா?”என்றுகேட்ட அவள்” நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? எனக்கு நிம்மதியில்லை, சமாதானமில்லை நான் நோய்வாய்ப்பட்டும் போனேன், எனக்கு இருந்ததெல்லாம் உங்களுக்குச் செலுத்தினேன். இனி உங்களுக்குத் தருவதற்கு என்னிடத்தில் எதுவும் இல்லை, நீங்கள் எனது வீட்டில் இருந்த வண்ணம் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் பொன்னும், வெள்ளியுமாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஊமைகளும், காதுகேளாதவர்களுமானவர்கள், நான் கும்பிட்டுப் பிரார்த்திக்கும் போது உங்களால் கேட்க முடியாதுள்ளது. இனி எனக்கு எல்லாம் போதும்!” இவைகளைக் கூறிய டினேஷா, அந்த விக்கிரகத் தேவர்களுக்குப் பரிட்சை கொடுக்க முன்வந்தாள். பொன்னிலும், வெள்ளியிலும் செய்யப்பட்ட அந்த விக்கிரகங்களால் நீந்த முடியுமா? என்று கேட்ட டினேஷா: “நீங்கள் உண்மையிலேயே தேவர்கள் என்றால், நான் உங்களைக் கடலில் எறியும் போது, நீங்கள் மீண்டும் மேலே வரவேண்டும். நீங்கள் உங்களைக்காத்துக்கொள்ள முடியாவிடில் மூழ்கிப் போகுங்கள், நான் இனிமேல் உங்களைப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி அவைகளைக் கடலிலே எறிந்தாள். அவைகள் யாவும் கடலில் மூழ்கின.

இந்த நாட்கள் கடந்த பின்னர், ஒரு நாள் டினேஷாவின் இந்து நண்பி ஒருத்தி அவளிடத்தில் வந்து, அவள் இதுவரையில் கேள்விப்படாத ஒரு கடவுளைக் குறித்து அறிவித்தாள். அந்த கடவுள் “இயேசு பிரபு” இயேசு கிறிஸ்து என்று டினேஷாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தன்னிடத்தில் இதுவரையில் இருந்தவைகளிலும் பார்க்க இயேசு அதிகமானவர் என்பதை டினேஷா உணர்ந்தாள். அவர்கள் இருவரும் ஒருமித்து வேறொரு இந்தியப் பெண்ணிடம் சென்றார்கள். அப்பெண் இயேசுவில் விசுவாசம் உள்ளவளாக இருந்தாள். அவளுடன் ஆழ்ந்த சம்பாசணையை வைத்த டினேஷா, இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்பதை நன்கு அறிந்தாள். எல்லா இருளான அசுத்த வல்லமைகளிலிருந்து, இயேசு அவளை விடுவிக்க வல்லவர் என்று உணர்ந்த டினேஷா அவரை ஜெபத்தில் ஏற்றுக் கொண்டாள்

அந்த நாளிலிருந்து டினேஷா தனது வாழ்வை இந்த உண்மையுள்ள ஆண்டவரிடம் ஒப்படைத்தாள். அவள் அவருக்கு ஊழியம் செய்து, தனது சமயத்தாரும் இயேசுவை அறிய விரும்பினாள். இக்காலம் கழிந்த நாட்களில் டினேஷாவின் முழு குடும்பமும் இயேசுவில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள்.

நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கோளது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவை களை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

(பைபிள்) சங்கீதம் 115: 3-8

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

இன்று உங்களுக்கு ஒரு விடுதலை
தேவையாயிருக்கிறது!

பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை!

‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே கலங்காதீர்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும்.

சத்தியம் என்றால் என்ன?

நம்மை உண்டாக்கின தேவன் சத்தியமுள்ளவர் (யோவான்8:26), இயேசு கிறிஸ்து சத்தியமுள்ளவர் (யோவான்14:6), பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் (யோவான்16:13).

இவர்களை அறிய அறிய நம் வாழ்க்கையில் விடுதலை உண்டாகும். இவர்களை எப்படி அறிந்து கொள்வது? சத்திய வசனமாகிய வேத வசனங்கள் மூலமாகத்தான் சத்திய தேவனை அறிந்து கொள்ள முடியும் (யோவான்17:17).

வேத வசனம் சத்தியம். வேத வசனங்களை வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் விடுதலையை அனுபவிக்க முடியும்.

வேத வசனங்கள் மனிதனால் எழுதப்பட்ட தத்துவங்களல்ல.
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” 2.தீமோ.3:16

பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த மனிதர்களைக்கொண்டு
எழுதியதுதான் வேத வசனங்களாகிய வேத புத்தகம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது வேத புத்தகம்தான்!
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகம் வேத புத்தகம்தான்!

தமிழில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் வேத புத்தகம்தான்!

உலகிலேயே அதிகமான புத்தகங்கள், விளக்க உரைகள் எழுதப்பட்டது வேத புத்தகத்திற்குத்தான்!

காரணம்,
வேத புத்தகம் தேவனுடைய வார்த்தைகள்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்….இருக்கிறது.” எபி.4:12.

தேவனுடைய வார்த்தையாகிய சத்தியம் வல்லமையுள்ளது.
பாவியை பரிசுத்தமாக்கும் வல்லமை வேத வசனத்திற்கு உண்டு! வியாதியஸ்தரை குணமாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தையில் உள்ளது! துக்கத்தில் மூழ்கிப்போகிறவர்களை ஆறுதல்படுத்தும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு! சோர்ந்து போகிறவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை வேத வசனத்தில் உள்ளது! எந்த சூழ்நிலையில் இருக்கிற மனிதனையும் விடுவிக்கிற வல்லமை வேத வசனத்திற்கு உண்டு!

வசனத்தில் வல்லமை மட்டுமல்ல, ஜீவனும் (உயிர்) இருக்கிறது. வேத வசனங்களை வாசிக்கும்போது, அது நம்மோடு பேசுவதை உணர முடியும்! இந்த ஜீவனும், வல்லமையுமுள்ள வேத வசனங்களை வாசிப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! உங்களுக்கென்று ஒரு வேத புத்தகம் இல்லாவிட்டால் உடனே ஒரு வேத புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் வேதத்தில் பிரியமாய் இருந்து. அதை வாசித்து, தியானியுங்கள். உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தமும், சுகமும், விடுதலையும், ஆசீர்வாதமும் உண்டாவதை காண்பீர்கள்.

சத்தியம் உங்களை பரிசுத்தமாக்கும்.
வேத வசனமாகிய சத்தியத்தை வாசித்து அறியும்போது உண்டாகிற ஆசீர்வாதங்கள் என்ன?

‘உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.” யோவான்17:17
வேத வசனங்கள் நம்மை பரிசுத்தப்படுத்தும்.

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் ரோமர் 13:12,13,14.

நீங்கள் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா?
தினமும் முழங்காலில் நின்று வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சத்திய வசனமாகிய வேத வசனம் உங்களை பரிசுத்தப்படுத்தும்.

‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான?  உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே’ சங்.119:9
கர்த்தருடைய வசனங்கள் தான் நம் வழிகளை சுத்தம் பண்ண முடியும்.
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” சங்.119:11.

வேத வசனங்களை வாசித்து, தியானிப்பது மட்டுமல்ல, அதை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும்.

விசுவாசம்!

“விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர்10:17

அதாவது தேவனுடைய வசனத்தைகேட்கும்போது விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்.

வேத வசனங்களை வாசிக்கத்தான் விசுவாசம் பெருகும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர் இயேசு கிறிஸ்து  எபி. 12:1.

இயேசுவை ஒரு மனிதன் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது அவனுக்குள் விசுவாசம் துவக்கப்படுகிறது. இந்த விசுவாசம் வளர்ந்து பெருக வேண்டுமானால் தேவனுடைய வசனங்களை கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், தியானிக்கவேண்டும்.

உங்களுக்குள் ஆண்டவர் மீது விசுவாசம் பெருக வேண்டுமா?  அதிகமாக வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள்.

“விசுவாச வீரன்” என்று அழைக்கப்பட்டவர் ஜார்ஜ் முல்லர் என்கிற தேவ ஊழியர். கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்தவர். விசுவாசத்தினால் கர்த்தருக்காக இவர் பெரிய காரியங்களை சாதித்தார்.

இவர் விசுவாச வீரனாக திகழ்ந்ததற்கு காரணம், வேத வசனங்கள்தான். இவர் தேவ புத்தகத்தை இருநூறு (200) முறை வாசித்து முடித்திருக்கிறார். நூறு முறைக்கு மேலாக முழங்காலிலேயே நின்று வேதத்தை வாசித்து முடித்தாராம்!

விடுதலை!

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32

வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும்.
துக்கத்திலிருந்து விடுதலை!

“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92

தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும்.

ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ
இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்:

“வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.”
“வேத வசனங்களே என் மனமகிழ்ச்சி. இந்த வீட்டில் எனக்கு ஒரே துணை வேத புத்தகம்தான்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.
நீங்களும் வேதத்தை வாசிக்க வாசிக்க கவலையிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

பயத்திலிருந்து விடுதலை!

ஒரு சகோதரன் தன் அனுபவத்தை கூறினார். இவர் உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு பயம். எதற்காகவும் பயந்து கொண்டேயிருப்பார். பயம் இவரை அடிமையாக்கி விட்டது.

ஒருசமயம் ஏசாயா 41:10ஐ வாசித்தபோது ஆண்டவர் இவரோடு பேசினார்:
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
என்று ஆண்டவர் இந்த வசனத்தின் மூலம் பேசினவுடன் பயம் உள்ளத்தை விட்டு விலகினது. இந்த சத்திய வசனம் விடுதலை கொடுத்தது.
நீங்களும் விசுவாசத்தோடு வேத வசனத்தை வாசிக்க வாசிக்க பயத்திலிருந்து விடுதலையடைவீர்கள். உங்களுக்குள் தைரியமும், பெலனும் உண்டாகும்.

ஆதலால், தினமும் தவறாமல் வேதத்தை வாசியுங்கள்!
வசனத்தை கருத்தாய் தியானியுங்கள்! வசனத்தின்படி வாழுங்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

சத்தியமுள்ள தேவனே!

உமது வசனமாகிய சத்திய வசனத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்!

நீர் விரும்புகிற வண்ணமாக சத்தியத்தை அறிந்து கொள்ள எனக்கு கிருபை தாரும்!

உம்முடைய சத்தியத்தினால் என்னை பரிசுத்தமாக்கும்!
உம்முடைய சத்திய வசனங்களினால் என் விசுவாசத்தை பெருகச் செய்யும்!

உம்முடைய வசனமாகிய சத்தியம் என்னை விடுதலையாக்கட்டும்!

காணாமல் போன படகு

ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான். எத்தனை அழகு! என்ன அருமையாக உள்ளது .. என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.

ஓ! இந்த அழகிய படகை ஆற்றங்கரையில் விட்டு விளையாடினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்த ராஜூ, அதிசீக்கிரமாக ஆற்றை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடிவந்தவன் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் அதனை மிதக்க விட்டான். அந்த சின்ன படகு அசைந்து அசைந்து செல்வதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராமல் பலமாக அடித்த காற்றினால் அந்த படகு வேகமாக ஆற்றுப்போக்கிலே அடித்துச் செல்லப்பட்டது. எப்படியாவது தன் சின்ன படகை எடுக்க அவன் பெருமுயற்சி செய்தும், அது அவனுக்குக் கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு வெறுங்கையனாய் சிறுவன் ராஜூ கண்ணீரோடு வீடுவந்து சேர்ந்தான். தான் கஷ்டப்பட்டு செய்த பொருள் தன் கண் முன்னாலே போய்விட்டால் யாருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்?

இரண்டு நாட்களுக்குப் பிறகு கடைதெரு வழியாக நடந்து சென்ற ராஜூவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கடைத்தெருவில் ஒரு கடையில் விற்பனைக்காக கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சின்னப் படகை கண்டான். அந்த அழகிய படகு ராஜூ செய்து விளையாடிய அதே படகுதான். அவன் கண்களையே அவன் நம்ப இயலாமல் போனது.

ராஜூ சந்தோஷத்துடன் அந்த கடைக்குள் நுழைந்து, கடைக்காரரிடம், மிகவும் உரிமையுடன் சொன்னான், “ஐயா, அந்த அழகிய படகு என்னுடையது. நான் கஷ்டப்பட்டு செய்தது. இதை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” எனக் கேட்டான். கடைக்காரர் அவனிடம் “தம்பி, இந்த படகை நான் ஒருவரிடம் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். நீ உன்னுடையது என்று சொல்வதால் நான் வாங்கின அதே விலைக்கு வேண்டுமானால் நீ இதனைப் பெற்றுக்கொள். இது உன் படகு என்று நீ சொல்வதினால் நான் இலவசமாய் இதை உனக்குத் தர முடியாதே” என்று கூறினார்.

நான் செய்த படகுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டுமா? என்று ராஜூ சற்றும் யோசிக்கவில்லை. உடனே தன் வீட்டிற்கு ஒடினான். தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாயை பொறுக்கி எடுத்து, வேகமாக அந்த கடைக்கு வந்தான். தொலைந்து போன அப்படகை திரும்பவும் தானே விலைகொடுத்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான்.

பிரியமானவர்களே, ராஜூவின் சிறிய படகைப் போலவே நாமும் இருக்கிறோம். ஆண்டவர் இயேசுதான் நம்மை உருவாக்கினார். ராஜூவின் படகு தொலைத்துவிட்டது போலவே நாமும் பாவம் செய்து நம்மை உண்டாக்கினவரை மறந்து அவரை விட்டு தூரம் போனோம். ஆனால் இன்று நம்மை உருவாக்கினவர், நம்மை அன்புடன் தேடி வந்துள்ளார்.

ராஜூ தன் படகை மீண்டும் விலை கொடுத்து வாங்கினது போலவே, ஆண்டவராகிய இயேசுவும் தன் சொந்த இரத்தத்தையே விலைக்கிரயமாக நமக்காக சிலுவையில் சிந்தினார். ஏன்? அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவருக்கு சொந்தமாக வேண்டும் என்பதற்காகவே.

ராஜூ அந்த படகை அதிகமாக நேசித்ததாலே அந்த பணம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தன் பொருளைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அவனுக்கு பெரிதாக தெரிந்தது.

இதுபோலவே ஆண்டவராகிய இயேசுவும் நம் மேல் கொண்ட அளவற்ற அன்பினாலேயே தன் சொந்த உயிரை நமக்காகக் கொடுத்தார்.

ஓ! இறைவன் நம்மேல் வைத்த அன்பு எவ்வளவு பெரியது பார்த்தீர்களா? பாவத்தினால், அசுத்தத்தினால், இச்சையினால், அருவருப்பினால் இன்று உங்கள் வாழ்க்கையும் கூட தொலைக்கப்பட்டிருக்கலாம். கடவுளை விட்டு தூரம் போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பாவத்தில் தொலைந்து போன உங்கள் வாழ்க்கையை மீட்கவே இன்று ஆவலுடன் உங்களை அழைக்கிறார்.

நீங்கள் அவருக்கு விரோதமாக எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும், இன்று மனம்வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களைத் தள்ளிவிடாமல், உங்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் உங்களை விடுவிப்பார்.

தன் சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்கத் துணிந்த அவருக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்க நாம் தயங்கலாமா?

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறது இல்லை” என்று கூறின இயேசு, நாம் இன்றைக்கு அவரிடத்தில் வந்தால் நம் பாவங்களை மன்னித்து, நமக்குப் பரிசுத்த வாழ்வினைத் தந்து, நம்மை ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராயிருக்கிறார்.

இன்னமும் தாமதம் ஏன் நண்பரே?

“இழந்து போனைதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.” (லூக்கா 19:10)

“எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.” (1தீமோத்தேயு 2:5,6)

Popular Posts

My Favorites

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08 "இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்" 1.சாமு. 7:12 தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில்...