அக்டோபர்

முகப்பு தினதியானம் அக்டோபர்

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23

இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.

நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.

எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.

அவர் முற்றிலும் அழகுள்ளவர்

அக்டோபர் 25

“அவர் முற்றிலும் அழகுள்ளவர்” உன். 5:16

ஆண்டவரை அதிகம் தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறுதான் அவரை வர்ணிப்பார்கள். அன்பு செலுத்தத்தக்க பண்பு அவரிடத்தில் உண்டு. அவரை நேசிப்பவர்கள் அவரில் வாசம்பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டவர்கள் அவரைப் போற்றிப் பாடுவார்கள். தேவகுமாரனாக அவரைப் பார்த்தால், அவர் முற்றிலும் அழகுள்ளவர். அவர் மனுஷரெல்லாரிலும் அழகுள்ளவர். அவருடைய அழகில் தெய்வத்தன்மை உண்டு. அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர். அவர் அளவில்லா ஞானமும், மகத்துவமும் உள்ளவர். அன்பும், இரக்கமும் உள்ளவர். அழகற்றது ஒன்றும் அவரிடமில்லை. அவரே பூரண அழகுள்ளவர்.

திருச்சபையாகிய மணவாட்டி, அவரைக் குறித்துக்கூறிய சாட்சி, அவருடைய தீர்க்கதரிசி, ஆசிரியர், இராஜா ஆகிய பதவிகளுக்கும் பொருந்தும். உலகம் முழுவதையும் அவர் ஆண்டுகொண்டிருப்பதாலும், சகலமும் அவர் பாதங்களின்கீழ் இருப்பதாலும் அவரை இவ்வாறு போற்றிப் புகழலாம். வானத்திலும், பூமியிலும் அவருடைய பணிகளைக்குறித்தும் இச்சாட்சியைக் கூறலாம். அவர் கிருபை செய்வதில் வல்லவர். ஆகவே அவர் அழகுள்ளவராகக் காண்பிக்கப்படுகிறார். அவர் நம்மைச் சுத்திகரித்து, உயர்த்திக் கனப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

பிரியமானவனே, நீ ஆண்டவரை அழகுள்ளவராகக் காண்கிறாயா? அவருடைய அழகில் நீ மகிழ்ச்சி கொள்ளுகிறாயா? அவரில் களிகூரு. அவரில் பேரின்பம் பெறு. அவர்மேல் சார்ந்து வாழ்ந்திரு. எவ்வளவாய் நீ அவரை அறிந்து கொள்ளுகிறாயோ, அவ்வளவாய் நீ அவரை நேசிப்பாய். அவரை நேசிக்கும் அளவுக்கு நீ பாக்கியவானாவாய்.

கர்த்தர் மகிமை நிறைந்தவர்,
மா அழகுள்ளோர், அவரை நேசிப்பது
பேரானந்தம். அவரை அறிந்தோர்
எவருமவரைப் புகழ்ந்து போற்றுவார்.

நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்

அக்டோபர் 13

“நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” யோவான் 8:12

இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வராதிருந்தால், இவ்வுலகம் பாவம் நிறைந்து இருண்டிருக்கும். பாவம் நோய், கொடுமை, அறிவீனம் நீங்கு போன்றவைகளுக்கு அடிமைகளாகவே மக்கள் வாழ்ந்திருப்பார்கள். ஏழு திரிகள் கொண்ட ஒரு விளக்குத்தண்டை யூதர்கள் தங்கள் தேவாலயத்தில் வைத்திருப்பார்கள். அது தேவாலயத்திற்கு மட்டும் ஒளி வீசும். ஆனால் இயசு கிறிஸ்துவோ உலகத்திற்கே ஒளியாய் இருக்கிறார். புற ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் அவர் வந்தார். அவரில் பூரண ஒளி உண்டு. அது என்றுமே அணையாமல் எப்போதுமே பிரகாசித்துக்கொண்டிருக்கும். அவர் தம்முடைய வசனத்தின்மூலம் ஒளிவீசுகிறார். தம்முடைய ஆவியானவரைக் கொண்டு நம் உள்ளத்திற்கு ஒளிதருகிறார். அவர் வீசும் ஒளியினால் பாவிகள் மன்னிப்புப் பெறுகிறார்கள். அவருடைய ஒளியில் வெளிச்சம் காண்கிறார்கள்.

அவர்கள், அவரையே தங்கள் தெய்வமாகக் கொண்டிருப்பதால், வெட்கமடையார்கள். ஜீவ ஒளியைப் பெறுகிறார்கள். பிசாசின் கண்ணிகளுக்குத் தப்பி அவர்களால் நடக்கமுடிகிறது. அவர்கள் பாவம் செய்யாது வாழவே விரும்புகிறார்கள். ஞானத்தோடும் தெய்வ பயத்தோடும் நடக்க முயற்சிக்கிறார்கள்.

அன்பானவரே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நீர் நடக்கிறீரா? அவருக்காக ஒளி வீசும் சாட்சியாக நீர் வாழ்கிறீரா? மற்றவர்களை இவ்வொளிக்கு நடத்துகிறீரா? உமக்கு அவருடைய ஒளி கிடைத்துள்ளதா? இல்லையானால், அவரிடம் வந்து ஒளியைப் பெற்றுக்கொள்ளும். உமக்கு ஒளிதேவை. அதைத் தரும்படி இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்.

ஜீவ ஒளியே, உம் ஒளி தாரும்
உம் ஒளியால் என் உள்ளம் மிளிரும்
உம் ஒளியால் என் வழி காண்பேன்
அதில் என் வாழ்வு பிரகாசிக்கும்.

நீர் எங்களுடனே தங்கியிரும்

அக்டோபர் 06

“நீர் எங்களுடனே தங்கியிரும்” லூக்கா 24:29

இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் இயேசுவானவர் அவர்களோடு சேர்ந்து கொண்டார். ஆனால் அவரை இன்னாரென்று அறியவில்லை. வழியில் அவர் அவர்களுக்கு தேவ வசனத்தை விளக்கிக் கூறினார். பின்பு வேறு வழியிற் செல்பவர்போல் காணப்பட்ட அவரை அவர்கள் நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காம் ஆயிற்று, பொழுதும் போயிற்று, என்று அழைத்தார்கள். ஆண்டவருடைய சமுகத்தை அனுபவித்த எவரும் இப்படிச் சொல்லக்கூடும். உண்மையான தேவ பிள்ளைகள் அவர் தங்களைவிட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தாங்கள் தேவனோடு இருக்கவும், அவர் அவர்களோடு இருப்பதையும் விரும்புவார்கள். ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார். நாம்தான் அதை உணருவதில்லை.

இந்த நாளில் அவருடைய சமுகம் உங்களோடு இல்லை என்றாலும் உடனே அதைத் தேடுங்கள். எங்களோடு தங்கும் என்று கெஞ்சுங்கள். உங்கள் உள்ளத்தில் அனல்மூட்டி எழும்பும்படி அவரைக் கெஞ்சிக்கேளுங்கள். உங்களைவிட்டு அவர் கடந்துபோக விடாதேயுங்கள். அவரும் எப்போதும் நம்மோடேயே இருக்க விரும்புகிறார். நீங்கள் அவரை விரும்புவதிலும் அதிகமாக அவர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார். அவரைத் தேடி கண்டுபிடித்து, அவரை விட்டுவிடாது பற்றிக்கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரின் சமுகத்தை அனுபவித்ததுண்டா? அதைக் கண்டு உணருகிற சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அவர் சமுகமே மோட்சம். அவருடைய பிரசன்னம் இன்பம். நமது துக்க துன்பங்களை நீக்கும் வழி அவரே. அவர் நம்மோடிருப்பின் மகிழ்வோம். களிகூருவோம். அவரை நாம் கண்டு பிடித்துப் பற்றிக்கொண்டால் மரணபரியந்தம். ஏன், மரணத்திற்குப் பின்னும் சந்தோஷம் பெறுவோம்.

இயேசுவே என்னிடம் வாரும்,
வந்தென்னை ஆசீர்வதியும்
நீங்காதிரும் மாநேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருளாயிற்றே.

அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்

அக்டோபர் 07

“அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” யோபு 23:10

யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான். குறைவுள்ளவனானாலும் அவன் உண்மையுள்ளவன். தேவன் தன் இருதயத்தையும், நடத்தையையும் விருப்பத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். தன்னுடைய சோதனையின்பின்தான் புதுபிக்கப்படுவான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

தேவன் நம்மைச் சோதிக்கும் நோக்கமே இதுதான். நம்முடைய எஜமானுக்கு நாம் தகுதியுடையவர்களாகும்படியே அவர் நமக்கு அவைகளை அனுமதிக்கிறார். நித்திய மகிமைக்கு நம்மை ஏற்றவர்களாக்கவே நம்மைச் சோதித்துத் தூய்மை ஆக்குகிறார். நமது பாவங்களும் தவறுதல்களும் இந்தச் சோதனைகளால் நம்மை விட்டு நீங்கி விடும். நமக்கு வேறெதுவும் நடக்காது. நமது பேரின்பத்தின் பலன்கள் அதிகரித்திடும். நித்திய மகிழ்ச்சிக்கு அவை வழிவகுக்கும். நமது தேவன் மாறுகிறவரல்ல. அதுதான் நமக்கு மகிழ்ச்சியும் மனஉறுதியும் தரும். நான் கர்த்தர், நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை என்கிறார். கர்த்தர், தேவன் நம்மைப் புதுப்பிக்கச் சோதனையிடும்பொழுது புடமிடும் குகையண்டை அமர்ந்து பணிமுடிந்ததும் அக்கினியை அவித்துவிடுகிறார். சோதனைக்குள் இருக்கும் கிறிஸ்தவனே, கர்த்தர் உன் சோதனையை மாற்றுவார். உன்னைப் புதிப்பிப்பார். அவர் அன்பினால் அவ்வாறு செய்கிறார். இதை நம்பியிரு. அவிசுவாசங்கொள்ளாதே. உன் விசுவாசத்தை வளர்த்துத் தைரியங்கொள். யோபைப்போல் நான் போகும்வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்.

துன்பம் எனும் சூளையிலும்
உம் வாக்கையே நம்புவேன்
நீர் என்னைத் தாங்குகையில்
பொன்னைப்போல் மிளிருவேன்.

அவர் நெறிந்த நாணலை முறியார்

அக்டோபர் 29

“அவர் நெறிந்த நாணலை முறியார்” மத்.12:20

அருள் நாதர் இயேசுவின் மனம் எத்தனை மென்மையானது. அவர் குணம் சாந்தமானது. ஆகையால் எவராயினும் அவரிடம் வர அச்சங்கொள்ள வேண்டாம். எந்தப் பெலவீனனும், எந்நேரத்திலும், எப்பிரச்சனையுடனும் அவரிடம் பயமின்றி வரலாம். நம் உள்ளத்தில் எழும்பும் ஆசைகள் சிறிய விசுவாசத்துடன் ஆரம்பிக்கும்பொழுது அவற்றை கவனித்து தேவன் ஏற்றுக்கொள்வார்.

நாம் பெலவீனர், எளிதில் சோர்ந்துவிடுவோம் என்று அவர் அறிந்திருக்கிறபடியால் நசுங்கிப்போகும் நாணலைப்போல் நம்மை முறித்துவிடாமல் மென்மையாக நடத்துவார். அவர் நொறுங்கினதைக் கட்டி பெலப்படுத்துவார். சீராக்குவார். நமது நல்விருப்பங்களை உற்சாகப்படுத்தி, நாம் எவ்வளவு எளியவராயிருப்பினும் நம்மை அங்கீகரிப்பார். தகுதியற்ற நம்மை தகுதியுள்ளவர்களாக்குவார். நமது ஜெபங்கள் குறையுள்ளவைகளாயிருப்பினும் அவர் ஏற்பார்.

நமது ஆத்துமா துவளும்போது அவர் நம்மை ஆற்றித்தேற்றி பெலன் தருவார். அச்சம் நீக்கி உற்சாகம் தருவார். நம்மை மேய்த்து நடத்தும் மேய்ப்பராயிருக்கிறார். தமது அரியணைக்கு அழைத்துச் செல்லும் மன்னரும் அவரே. தாமும் நெரிந்த நாணலை முறியார். பிறரும் அதை முறிக்கவிடார்.

அன்பானவர்களே, சாத்தானாலும் உலகத்தினாலும் நீர் நொறுக்கப்பட்டிருக்கிறீரா? உங்கள் பெலவீனத்தையும், தகுதியின்மையையும் உணருகிறீர்களா? பயப்படாதேயுங்கள். இயேசு கிறிஸ்து சாந்தமுள்ளவர். அன்பு நிறைந்தவர், கிருபை உள்ளவர், எவரையும் அவர் புறக்கணியார். எவரிடமும் அசட்டையாயிரார். காயத்தைக் கழுவி சுத்தம் செய்து தம்மிடமல் சேர்த்துக்கொள்ளுவார்.

மங்கின திரியை அனணயார்
எங்குமவர் அன்பு தருவார்
தங்குவார் என்னருகில் இயேசு
தாங்குவார் இன்பதுன்பத்திலும்.

நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

அக்டோபர் 04

“நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்” மத். 5:13

உலகத்தின் உப்பாயிருக்கவேண்டிய நம்மைப் பாவமானது சாரமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. தேவ கிருபையால்தான் அது சுத்திகரிக்கப்பட்டுச் சாரம் உள்ளதாக்கப்படுகிறது. இந்த நன்மைகள் கிறிஸ்துவால் உண்டாகிய அவருடைய ஜனங்களுக்குப் பயனுடையதாகப் பரவுகிறது. தம்முடைய பிள்ளைகளை இயேசு உப்பைப்போல் இருக்கு வேண்டுமென்கிறார். இவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கத்தக்கவர்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயனுடைய சாட்சிகளானவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவனாகிறான். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேதவசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும்.

பரிசுத்தவான்கள் இல்லாவிடில் இந்தப் பூமி எரியுண்டு அழிந்துபோயிருக்கும். தேவ பிள்ளைகள் இல்லாதிருக்கும் இடம் இருள் நிறைந்த இடம். பிரியமானவர்களே, நீங்கள் உப்பாக இருக்கிறீர்களா? உங்களைச் சூழ்ந்து இருப்போருக்கு உங்களால் நன்மைகள் உண்டா? உங்கள் பேச்சு, வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நீங்கள் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரங்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொள்ளுகிறார்களா? இவ்வாறெல்லாம் இருந்து நீங்கள் உப்பாக வாழ்வீர்களானால், மற்றவர்களுக்கு நீங்கள் பயனுடையவர்களாயிருப்பீர்கள். நன்மைகளையும் செய்வீர்கள். நீங்கள் பாவத்துக்கு மரித்து நீதிக்கு உயிர்த்திருப்பீர்கள். நீங்கள் உப்பென்று உண்மையானால் அதன் குணங்கள் உங்களில் விளங்கும். கிருபை பெற்றவர்களாகிய நீங்கள் உப்பாயிருப்பீர்களானால் சாரமுடையவர்களாகிய நலமானதைச் செய்வீர்கள். சாரம் உள்ள உப்பாயிருங்கள். கிறிஸ்துவே உங்களிலுள்ள சாரம்.

இயேசு எனக்காய் மரித்தார்
என்னில் சாரம் ஊட்டினார்
சாரம் உள்ள உப்பைப்போல்
என்றும் வாழ்வேன், அவருக்காய்.

உங்கள் இருதயம் துவள வேண்டாம்

அக்டோபர் 15

“உங்கள் இருதயம் துவள வேண்டாம்” உபா. 20:3

உன் நாள்களைப்போலவே உன் பெலனும் இருக்கும் என்னும் வசனத்தை நினைத்துக்கொள். என் கிருபை உனக்குப் போதும் என்று கூறிய ஆண்டவரை நினைத்துப்பார். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய், என்று சொன்ன தேவனின் வல்லமையைப் பார். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவெட்டார் என்ற கர்த்தருடைய வாக்குறுதியை மறவாதே. நான் ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று தாவீதரசனைப் போல் உணர்ச்சியுடன் கூறு.

துவண்ட உன் ஆத்துமா தேவனின் செயலை நம்பட்டும். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பென் கொடுத்து, சத்துவம் இல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்றும் கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையால் பெலன்படு என்றும் பவுலடியார் கூறியதைச் செய். நீ கலங்க வேண்டாம். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. சத்துருக்களுக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. உனது பரமவீடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதுது. உனக்குத் தேவையானவை எல்லாம் உறுதியாக உனக்குக் கிடைக்கும். ஆண்டவர் உனக்காக அக்கறை கொள்கிறார். உன் பரமபிதா உன்மீது கரிசனை கொண்டவர். நடப்பவை அனைத்தும் உன் நன்மைக்காகவே நடக்கிறது. எதற்கும் நீ அஞ்சத்தேவையில்லை. மனம் துவண்டு போகத் தேவையில்லை. விசுவாசத்துடனிரு. அவர் உன்னை எல்லாத் தீங்கினின்றும் காப்பார். உனக்குத் தெரியாத பலத்த காரியங்களை அவர் உனக்காகச் செய்வார். நீ மனம் துவள வேண்டாம்.

என் வல்லமையுள்ள நேசர் இயேசு
என் நேசர் உண்மையுள்ளோர்,
என்னைக் கடைசி மட்டும் காப்பார்
எனக்குத் தம் வீட்டைத் தருவார்.

முடிந்தது

அக்டோபர் 14

“முடிந்தது” யோவான் 19:30

எவைகள் முடிந்தன? ஆண்டவருடைய பாடுகள் முடிந்தன அவருக்கு முன்கூட்டியே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் முடிந்தன. அவருடைய துன்பங்கள் முடிந்தன. பூலோகத்தில் அவர் செய்ய வேண்டியிருந்த ஊழியம் முடிந்தன. மக்களுக்கு அவர் செய்ய வேண்டியிருந்த பணிகள் முடிந்தது. பாவிகளை நீதிமான்களாக்ககச் செய்ய வேண்டிய கிரியைகள் முடிந்தன. நியாயப்பிரமாணம் நிறைவேறி முடிந்தது. பாவத்திற்கு நிவாரண பலியாய்ச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன.

சாத்தான் முறியடிக்கப்பட்டான். சாபங்கள் நீக்கப்பட்டன. மேய்ப்பனின் இரத்தத்தால் ஆடுகள் பாவமறக் கழுவப்பட்டாயிற்று. சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்கும் இரட்சிப்புக்கும் நித்திய அஸ்திபாரம் போடப்பட்டது. சகல பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பமாயிற்று. நமக்காகப் பரிந்து பேசும் பிரதான ஊழியம் கிடைக்கப்பெற்றது. மரணத்தின்மீது வெற்றி ஏற்பட்டது. உலகம் நித்திய ஜீவனை அடைய ஜீவ நதி ஊற்றாகப் புறப்பட்டது. அனைத்தையும் சேர்த்துக் கூறவேண்டுமானால், பிதாவே எல்லாப் பணிகளையும் செய்து முடித்தார். சமாதான உடன்படிக்கையைச் செய்தார். நமக்குப் பெரிய இரட்சிப்பை உண்டுபண்ணினார். பிதாவின் காரியங்களைத் தேவ குமாரன் பூமியில் செய்து முடித்தார். பிதாவை மகிமைப்படுத்தினார். எனவே அவர் முடிந்தது என்கிறார். நமக்கிட்ட கட்டளைகளைச் சரியாக நாமும் செய்து முடிப்போமாக.

முடிந்த தெனக்கூறியே
ஆண்டவர் இயேசு மரித்தார்
மீட்பை நிறைவேற்றியே
சாத்தானை வென்றார்.

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.

Popular Posts

My Favorites

நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்

அக்டோபர் 21 "நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்" ரோமர் 14:8 கர்த்தர் தமக்கென்று சொந்தமான ஒரு ஜனத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மற்றெல்லாரையும்விட மாறுபட்டவர்கள். கர்த்தரே அவர்களைத் தெரிந்து கொண்டு, தமது இரத்தத்தால் அவர்களக் கழுவித் தூய்மைப்படுத்தினபடியால், அவர்கள் எல்லாரிலும்...