ஏப்ரல்

முகப்பு தினதியானம் ஏப்ரல்

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்

ஏப்ரல் 19

“ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்” மத். 15:25

இந்த வார்த்தை ஒர் ஏழை ஸ்திரீயினுடைய இருதயத்திலிருந்துப் பிறந்த ஜெபம் இது. கிறிஸ்துவின் இதயத்துக்குள் சென்றது. இது சுருக்க ஜெபமானாலும் சகலத்தையும் அடங்கிய ஜெபம். எந்த வேளைக்கும் இது ஏற்றதானாலும் சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஏற்றது. நமது பெலவீனத்தை அறிந்து உணருகிறது பெரிய இரக்கம். அப்போதுதான் கர்த்தரின் பெலனுக்காய் இருதயத்திலிருந்து கெஞ்சுவோம். நாம் செய்ய வேண்டிய எந்தக் காரியத்திலும், சகிக்க வேண்டிய எந்தச் சோதனையிலும், நாம் படவேண்டிய எத்துன்பத்திலும், ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபிக்கலாம். நமக்கு தேவ ஒத்தாசை தேவை. அதைக் கொடுப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அதைத் தேடிப் பெற்றுக்கொள்வது நமது கடமை.

முழு மனதோடு இயேசுவுடன் இருக்க உதவி செய்யும். எப்போதும் சந்தோஷமாய் உமது சித்தம் நிறைவேற்ற உதவி செய்யும். எல்லா வருத்தங்களையும் கடந்து பரம அழைப்பிற்குரிய பந்தயப் பொருளை இலக்காக வைத்து ஓடும்படி கிருபை செய்யும். வாழ்வில் நன்றி நிறைந்த உள்ளத்தோடு உம்மைப் போற்றி தாழ்வில் பொறுமையாய் உமது சித்தம் தேட உதவி செய்யும். என் சத்துருக்களை ஜெயிக்க உதவி செய்யும். சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்யும். என் மரண நாள் மட்டும் உம் பாதத்தில் அமைதியோடு காத்திருக்க உதவி செய்யும் என்று தினந்தோறும் ஜெபிப்போமாக. இப்படி விசுவாசத்தோடு உணர்ந்து ஜெபிப்போமானால், கர்த்தர் எனக்குச் சகாயர், மனிதன் எனக்கு என்ன செய்வான். நான் பயப்படேன் என்று அனுதினமும் சொல்லலாம்.

கர்த்தாவே கிருபை புரியும்
நான் ஏதுமற்ற பாவி
உமக்காக உழைத்து மரிக்க
உமதாவி அளியும்.

நீ என்னை மகிமைப்படுத்துவாய்

ஏப்ரல் 10

“நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங். 50:15

துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம் அவரைத் துதித்துப் போற்றுவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். அபாத்திரராகிய நமக்கு அவர் காட்டும் தயவைத் துதிக்கும்போது அவர் வார்த்தைகள் உண்மையாகிறது. ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரைக்குறித்து அவர் சிங்காசனத்தண்டைக்குப் போகிற யாவருக்கும் இதை நாம் சொல்லும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம். வேத வசனத்தை நம்பி, அவர் பிள்ளைகள்போல் வாழந்து, அவர் சொன்னபடியே செய்வாரென்று எதிர்பார்த்து, சோதனையிலும், வேதனையிலும் அவர் பாதத்தண்டையில் சேர்ந்து அமர்ந்து அவரைத் தொழும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.

நஷ்டங்களில் அவருக்குக் கீழ்ப்படிந்து, சோதனைகளில் அவருக்கு நம்மை அர்ப்பணித்து, தினமும் நமது இருதயத்தை அவருக்குப் பலியாக சமர்ப்பித்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று ஆசைக்கொண்டு, அவர் ஊழியத்தை கருத்தாய் செய்து, அவரின் ஜனங்களை மனமார நேசித்து, நம் விருப்பப்படியல்ல, அவர் சித்தப்படி என்று நடக்கும்போது அவரை உண்மையாய் மகிமைப்படுத்துகிறோம். இது ஒன்Nறு நமது தலையான கடமையாகட்டும். ஒவ்வொரு காலையிலும் நாம் நமது ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே, நீ இன்றைக்கு உன் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று திட்டமாய் கற்பித்து ஒவ்வொரு மாலையிலும் அந்நாள் முழுவதும் கர்த்தருடைய மகிமையையே முக்கியமாகக் கருதி வாழந்தோமா என்று நம்மையே சோதித்துப் பார்ப்போமாக.

தேவ நாமத்தைப் போற்று
அவர் துதியை என்றும் சாற்று
அவர் சொல்லையே தியானித்து
உன் நடையைச் சீர்ப்படுத்து.

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு

ஏப்ரல் 21

“கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு” 1.பேதுரு 3:18

கிறிஸ்து செய்து முடித்த சகல கிரியைகளிலும் பிரயாசங்களிலும் அவர் சகித்த சகல பாடுகளிலும் அவர் கொண்ட நோக்கம் இதுதான். சுபாவத்தின்படி நாம் தேவனுக்கு தூரமானவர்கள்: அவருக்கு விரோதிகள். அவரைக்கண்டால் பயப்படுகிறவர்கள். ஆகவே நாம் பாக்கியத்துக்கும், சமாதானத்திற்கும் தூரமானவர்கள். தேவனோடிருக்கிறது, தேவனைப்போல் இருக்கிறது பாக்கியமாதென்று இயேசுவுக்குத் தெரியும். அவர் தம்முடைய மக்களை நேசித்தபடியால் இந்தப் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்படியே விரும்புகிறார். அவரின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யவும், எதையும் சகிக்கவும் அவர் அதிகம் விரும்பினார். ஆதலால் அவர் மனதார நம்முடைய பாவங்களுக்காகப் பாடனுபவித்து, தம்மை பலியாகத் தந்து பாவங்களை நிவிர்த்தி செய்தார். மகிமையோடு நம்மைத் தேவனோடு சேர்க்கும்பபடிக்கு அவர் நோக்கம் கொண்டார்.

கிருபாசனத்தின்மேல்  வீற்றிருக்கும் பிதாவின் அருகே நம்மைக் கொண்டு வருகிறார். இங்கே நாம் மன்னிப்பைப் பெற்று, சமாதானம் அடைந்து, தேவன்பை ருசிக்கிறோம். கிருபாசனத்தண்டையில் நமக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறோம். பெரிய வாக்குத்தத்தங்கள் அங்கே நிறைவேறுகின்றன. இங்கே நம்மை ஏற்றுக்கெர்டு தயவு காட்டினார் என்பது அங்கே விளங்கும். பரிபூரணராயும், பாக்கியவான்களாயும் அங்கே இருப்போம். அவரும் மகிழ்ச்சி அடைவார். நாமும் திருப்தியடைவோம். நாம் தேவனிடம் சேருவது, அவர் மரணத்தால் உண்டான பலன். தேவனோடிருப்பது அவர் பட்டபாடுகளின் பிரதிபலன்.

நம்மை தேவனண்டை
இழுத்து சேர்க்கும்படி
பாடுபட்டு உத்தரித்து
இரத்தம் சிந்தி மரித்தார்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்

ஏப்ரல் 02

“நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்.” லூக்கா 19:13

நமது நேசர் நமக்கு தேவையானதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் பயப்படாதே என்கிறார். தாலந்துகளை நமக்குத் தந்து தமது திரவியத்தை நமக்கு ஒப்புவித்திருக்கிறார். தமது பிதாவினிடமிருந்து சீக்கிரம் திரும்பி வருவார். அவர் வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்கிறார். நாம் தேவனுடைய கரத்தில் அதிக ஜாக்கிரரையாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் காரியத்தில் சுறுசுறுப்பாயிருக்கவேண்டும். தமது வேலையை எப்படி செய்தோம, எந்த நோக்கத்தோடு அதைச் செய்தோம் என்று விசாரிக்க திரும்பவருவார். அவர் வந்து நமது செய்கைகளுக்குத் தக்கபடி நம்மீது கோபப்படுவார், அல்லது மகிழ்ச்சியடைவார். கடிந்துக் கொள்ளவும், புகழ்ந்துக் கொள்ளவும் செய்வார். ஒவ்வொருவனுக்கும் அவனவனுக்குத் தக்கப் பலன் அளிப்பார். இதை நாம் விசுவாசிக்கிறோமா? இதை நம்பினவர்கள் போல் வாழ்ந்து வருகிறோமா?

நாம் ஒருநாள் கிறிஸ்துவின் நியாயசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும். அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமா? அன்பரே, நமது நேரமும், நமது தாலந்தும், ஏன் நாமும்கூட கர்த்தருடையவர்கள். அவருக்கென்றே அவைகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அவருக்காகவே எல்லாவற்றையும் உபயோகிக்க வேண்டும். இந்த நாளை கிறிஸ்துவுக்கென்று செலவிட்டோமா? இன்று நமது வேலைகளை கர்த்தருக்குமுன் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற நோக்கோடு செய்திருக்கிறோமா? நாம் மற்றவர்களைப்போல தூங்கச் கூடாது. நமக்கென்று வாழாமல் அவருக்கென்று மட்டும் தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கி ஜீவனம்பண்ணி அவருக்காக மாத்திரம் பிழைப்போமாக.

என் தாலந்தை உபயோகித்து
இயேசுவில் நான் பிழைத்து
அவர் சித்தப்படி செய்து
அவரைச் சேர்வதே நலம்.

உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது

ஏப்ரல் 13

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது” லூக்கா 10:20

எத்தனை பெரிய பரம சிலாக்கியம் இது. தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுதலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டு ஜீவபுத்தகத்தில் பேர் எழுதப்பட்டிருத்தலும், எருசலேமில் உயிருள்ளோருடன் சேர்க்கப்படுவதும்தான் எத்தனை பெரிய பாக்கியம். தெரிந்துக் கொள்ளப்படுதலே கிருபையின் முதல் காரியம். நாம் கிறிஸ்துவில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். நாம் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டோம். நமது இரட்சிப்பு அவர் கையில் ஒப்புவிக்கப்பட்டது. நமது செயல்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறது. நமது பெயர்களும் தேவனுடையவர்களோடு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவன் நம்மீதும் நினைவுக்கொண்டிருக்கிறாரென்று நாம் சந்தோஷப்பட வேண்டியவர்கள். தேவன் நம்மை நினைத்தார். நித்திய ஜீவனுக்கென்று நம்மை நியமித்தார். நமது குறைகளுக்காக உடன்படிக்கையில் நிறைவுகளை சேர்த்து வைத்திருக்கிறார். விலையேறப் பெற்றதும், பெரியதுமான வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார்.

அவருடைய பட்டயம் நமது பாதுகாப்பிற்கு நீட்டப்பட்டிருக்குpறது. அவருடைய நாமம் நமது ஞாபகத்தில் எப்போதும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவருடன் எப்போதும் இருக்க வேண்டியதால் பரிசுத்தமே நமது வாழ்க்கையின் கடமையென்றிருப்போம். எவரும் தான் தெரிந்துக்கொள்ளப்பட்டவர் என்றால், அதினால் உண்டாகும் கனியினால்தான் அறிந்துக்கொள்ள முடியும். அந்தக் கனிகளில் பரிசுத்தம் மிக விசேஷித்தது. நாம் பரிசுத்தமாய் இல்லாவிட்டால் நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு பொருள் இராது. நமது மனமும், நம்பிக்கையும், விருப்பமும் பரலோகத்தைப்பற்றி இல்லாது இருக்குமானால், நம் பெயர் அங்கு இருப்புதைப்பற்றி சந்தேகப்பட வேண்டும்.

அநாதி சிநேகத்தால் என்னை
மீட்டு முற்றும் இரட்சித்தீர்
ஜீவ புத்தகத்தில் என் பெயரை
எழுதி முத்திரையிட்டீர்.

சகல கிருபையும் பொருந்திய தேவன்

ஏப்ரல் 01

“சகல கிருபையும் பொருந்திய தேவன்.” 1. பேது.5:10

யேகோவா தேவன் தம்மைக் குறித்துச் சொல்வது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் தேவனது மேலான குணநலன்களையும் தகுதிகளையும் பார்த்துவிட்டு, அவருக்கு எதிராக தகாத பல காரியங்களையும் செய்து விடுகிறோம். அவர் சகல கிருபை பொருந்தின தேவனாயிருக்கிறதுமல்லாமல் நீதியுள்ள தேவனாயும் இருக்கிறார். அளவற்ற நித்திய கிருபையுள்ள தேவன். இரக்கத்தின் ஐசுவரியமும் அவரிடத்தில் உண்டு. குற்றவாளியை மன்னிக்கிறதும், மரித்தோரை உயிர்ப்பிக்கிறதும், ஆறுதல் அள்ளவர்களுக்கு ஆறுதல் தருபவரும், பெலவீனரைப் பெலப்படுத்துகிறதும், வழி தப்பி திரிகிறவர்களைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதும், கெட்டுப்போனவர்களை இரட்சிக்கிறதுமான கிருபை அவரிடத்தில் உண்டு.

தம்முடைய மக்களுக்கு அவர் செய்கிற கிரியைகளில் தமது கிருபையை வெளிப்படுத்துவதில் எவ்வளவு தாராளமாய் அந்தக் கிருபையைக் காட்டினார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளனை இரட்சித்ததில் ஏற்ற காலத்தில் கிருபையைக் காட்டினார். காட்டத்தி மரத்தினின்று சகேயுவை இறங்கி வரச் சொன்னபோது, அவன் எதிர்பாராதவிதமாய் இந்தக் கிருபையை வெளிப்படுத்தினார். இவைகளெல்லாம் கிருபை நிறைந்த தேவன் நமக்கு காட்டும் இரக்கமாகும். தேவனை நாம் அளவற்ற கிருபை நிறைந்தவராய்ப் பார்ப்போமாக. அபாத்திரரும் பாவிகளுமான நம்மிடத்தில் தான் அவர் மாட்சிமையும், கிருபையும் மகிமையும் அதகமாய் விளங்குகிறது. இது நமது ஐயங்களை நீக்கி ஜாக்கரதையுள்ளவர்கள் ஆக்க வேண்டும். நம்பிக்கையோடும் நன்றி உணர்வோடும் அவருக்கு ஒப்புவிக்க இது நம்மை ஏவ வேண்டும். நமது தேவன் சகல கிருபையினாலும் நிறைந்தவர் என்ற சிந்தையினால் உண்டாகும் மகிழ்ச்சியோடு இன்று இரவு நித்திரைக்குச் செல்வோமாக.

தேவனே நான் உம்மைவிட்டு
கெட்டு அலையாமல்
மன்னித்து மகிழ்ச்சியாக்கும்
உம் சமுகம் என்னைக் காக்கும்.

சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

ஏப்ரல் 24

“சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?” எரேமி. 23:23

தேவபிள்ளை ஒரு சிநேகிதனைத் தேடி தூரமாய்ப் போகவேண்டியதில்லை. கர்த்தர் எப்போதும் அவனுக்குச் சமீபமாயிருக்கிறார். அவர் சமீபத்திலிருக்கிற தேவன். தேவன் நம்மைக் கவனிக்க தயாராயிருக்கிறார். உதவி செய்யவும் ஆயத்தமாயிருக்கிறார். இதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாம் கலங்கி இருக்கும்போது இதுவே நம்மைச் சந்தோஷப்படுத்தும். சோதனையில் இது நம்மை ஆறுதல்படுத்தும், பயத்தில் தைரியம் சொல்லும். பாவம் செய்யாதபடி தடுக்கும். கடமைகளை முடிக்க உற்சாகத்தைக் கொடுக்கும். சோர்ந்துப்போன சமயத்தில் எழுப்பிவிடும். நமது நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். இனஜன பந்துக்கள் நமது கஷ்டத்தில் அதிகம் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தேவனோ நமது சமீபத்தில் இருக்கிறார். நமக்கு இரக்கங்காட்டி நம்மைக் கண்டிதஇது புத்தி சொல்லி ஆதரிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார்.

நமக்கு அவர் சமீபத்திலிருக்கிறது மட்டுமல்லாமல் எங்கும் இருக்கிறார். தூரத்திலிருக்கிற நம்முடைய சிநேகிதர்களோடு இருக்கிறார். மறைவிடங்களில் ஒளித்திருக்கிற நம்முடைய சத்துருக்களோடு இருக்கிறார். அவர்களுடைய யோசனைகளை அழித்து அவர்களுடைய விரோதங்களை நமக்கு நன்மையாக  நடத்துவார். தேவன் சமீபமாயிருக்கிறார். தூங்கும்போது அவர் விழித்திருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவர் சித்தமின்றி ஒன்றும் நம் வாழ்வில் நடப்பதில்லை. தேவனுக்குத் திடீரென்று ஒன்றும்  சம்பவிக்கிறதில்லை. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பார்க்கிறார். சகலத்தையும் நன்மைக்காக முடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதால் அந்த எண்ணத்தோடு இருப்போமாக. ஆத்துமாவே! நீ ஒருபோதும், உன் தேவன் சமீபத்திலிருக்கிறார் என்பதை மறவாதபடிக்குப் பார்.

தேவனே எனக்கு
உமது மகிமையைக் காண்பியும்
உமது வல்லமையே
என் இதயம் உணரட்டும்.

சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

Popular Posts

My Favorites