டிசம்பர்

முகப்பு தினதியானம் டிசம்பர்

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

டிசம்பர் 06

“நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்” வெளி 1:8

இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும் அவர் அப்படியே வெளிப்படுத்துகிறார். கிரேக்க மொழி பேசுகிறவர்கள் தங்கள் உரையாடலில் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையாக இருப்பவர். நம்முடைய இரட்சிப்புக்கும், ஆறுதலுக்கும், மேன்மைக்கும், கனத்திற்கும் அவசியமானதெல்லாமே அவரிடம் உண்டு. அவரில் ஞானமும் அறிவும், மேன்மையும் கனமும், ஐசுவரியமும் நித்தியமும் நிறைவாக அடங்கியுள்ளது. அவரே இரட்சிப்பின் முதலும் முடிவுமாக இருக்கிறார். அவரிலிருந்து கிருபையின் ஊற்று பாய்கிறது. அது நாம் அவரையே மையமாகக் கொண்டு அவரையே சூழ்ந்திருக்கச் செய்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமும், நித்தியமுமாய் இருக்கிறவர் அவரே. தேவனுக்குரிய அனைத்து கர்த்தத்துவங்களும் அவர் கொண்டவர். நன்மையும், கிருபையும் அவரிடத்தில் எப்பொழுதும் உண்டு. எனவேதான் தேவனுடைய பிள்ளைகள் அவரைப் புகழ்வதிலும், பிரசங்கிப்பதிலும் ஒய்வதே இல்லை. பாவிக்கு தேவையான சகல தயவும் அவரிடம் உண்டு. இத்தன்மையில் இயேசுவைக் காண்பது எவ்வளவு இனிமை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் இவ்வசனத்தில் நான்கு முறைகள் கூறப்பட்டுள்ளது. இதைத் தியானித்து நமது ஆன்மீன உணவைப் பெறுவோம்.

கிறிஸ்துவே ஆதியும் அந்தமுமாம்
அவரே கிருபையும் ஆனந்தமுமாம்
கிறிஸ்து தரும் நன்மைகள் யாவும்
அவர் தரும் பேரின்பங்களாம்.

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று

டிசம்பர் 13

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4)

தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை வரவிட்டபொழுது அவருடைய கோபம் காணப்பட்டது. நினிவேயின்மீது தேவகோபம் எழும்பியது. அவர் பாவத்தின்மீது கோபம் வைப்பார். சில நேரங்களில் தமது பிள்ளைகள்மீதும் அவர் தமது கோபத்தைக் காட்ட நேரிடுகிறது. ஒரு பிள்ளையின் தவறான நடத்தையினால் தகப்பன் கண்டித்துக் கோபப்படுகிறான். அதுபோல தேவனும் கோபப்படுகிறார். அவர் எவரை அதிகமாக நேசிக்கிறாரோ, அவாகளைத் திருத்துவதற்காகக் கோபம் காட்டுகிறார். அவர்கள் மீதுள்ள அன்பு அவரைக் கோபம் காட்டச் செய்கிறது.

தேவன் கோபிக்கிறபொழுது துன்பங்களை அனுமதிக்கிறார். அவருடைய கோபம் ஒரு வினாடிதான் இருக்கும். அவருடைய மக்களின் முரட்டாட்டத்தின் நேரத்தில் அவர்கள் பேரில் அவர் கோபங்கொள்கிறார். அவருடைய கோபத்திற்கு ஆளானவர்கள் மனந்திரும்பி துக்கப்பட்டு, அவருடைய காலில் விழுந்து, பாவத்தை அறிக்கையிட்டு, இரக்கத்திற்காகக் கெஞ்சும்பொழுது, அவர் தமது கோபத்தை விட்டுவிடுகிறார். இன்னும் உன்னை நேசிப்பேன் என்கிறார். திரும்பவும் உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களைத் தருவார். நீ எத்தவறையும் செய்யாதவன்போல உன்னை நேசிப்பார். உன் பாவத்தை மன்னித்து, மறப்பார். நாம் நமது பாவத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர் நம்மை நேசிக்கிறார் என்ற நினைவோடு இந்த இரவு படுக்கைக்குச் செல்வது நமக்கு இன்பமானதாக இருக்கும்.

ஆண்டவர் கொள்ளும் கோபம்
இருப்பது ஒரே கணம்தான்
ஆண்டவர் இரக்கம் நிறைந்தவர்
இது நமக்குக் கிடைத்த பேறுதான்.

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29

“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” மத்தேயு 15:8

இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம்.

அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிறீர். „அவர் எனக்கு இரங்குவார், காப்பாற்றுவார், நன்மைசெய்வார், விடுவிப்பார் என்று அவரையே நம்பியிருப்பீரானால், உமது இருதயம் அவருக்கு அருகிலேயே இருக்கிறது. மனிதருக்குமுன் வசனத்தின்படி நடந்து, ஆண்டவர் சொன்னபடியே செய்து, சற்றும் மாறாமல் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீரானால், உமது இருதயம் அவருக்கு சமீபமாகவே இருக்கும். மாய்மாலத்தைத் தேவன் வெறுக்கிறார், நாமும் வெறுப்போமாக. அவருக்கருகிலேயே வாழ்ந்து, அவரோடே நடந்து, அவர்மேல் அன்பு வைத்து நடப்போமாக. வேஷமாகப் பெயருக்கென்று நாம் இவ்வாறு நடந்தால் பரிதாபத்திற்குரியவர்களாவோம்.

ஆண்டவர் அன்பைப்போல்
இனியது ஏதும் உண்டோ
இதைவிட்டு வேறெதையும்
உனதாவி விரும்பலாமோ, பாவி.

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11

இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.

நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02

“தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்” அப். 27:25

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.

அவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார் என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்க் கூடியவர்களாயிருக்க வேண்டும்.

அன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா? நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.

எந்நிலையிலும் தவறாது
அன்பர் சித்தத்தையே பிடி
கண்டல்ல, காணாமல்
விசுவாசிப்பதே பாக்கியம்

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19

“கிறிஸ்துவினுடைய அடிமை” 1.கொரி.7:22

கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதால் கிறிஸ்துவின் அடிமைதான். அவன் தனக்கு இருக்கும் தாலந்துகளை ஆண்டவருக்கென்று பயன்படுத்தவேண்டும்.

இந்த இரவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்வென்றால், „நான் கிறிஸ்துவினுடைய அடிமையா? அவர் எனக்கு எஜமானா? எப்பொழுதும் நான் அவரை அவ்வாறு ஏற்றிருக்கிறேனா? என்னைத் தேவன் பார்க்கிறார் என்று நினைத்து, தெயவ்பயத்துடன் நடக்கிறேனா? நான் செய்கிறது எதுவானாலும், இது என் எஜமானுடைய சித்தமா? அவருக்குப் பிரியமானதா? நான் அவருடைய பணியாள். அவருடைய கட்டளைகளுக்கேற்ப யாவற்றையும் செய்கிறேனா? என்பதே.

பரிசுத்த ஆவியானவர் தினமும் „நீ கிறிஸ்துவின் அடிமை. அவர் உனக்கு ஞானமும் புத்தியும் தயாள குணமுமுள்ள எஜமான்“ என்று சொல்லுகிறார். இதை நீ கேட்கிறாயா? அவருக்குப் பிரியமாக நடப்பதே எனது வேலை. உலகம் எனக்கு வேண்டாம். சாத்தானுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை“ என்று நீ சொல்லக்கூடுமா? அவருடைய அடிமையாக அவருடைய வார்த்தையைக்கேள். அவருடைய கிருபையைத் தேடு.

உம்மைக் கர்த்தர் என்பேன்,
உள்ளத்தாலும் நேசிப்பேன்.
உம் சித்தமே செய்வேன்
உம்மிலேயே இளைப்பாறுவேன்.

Popular Posts

My Favorites

அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01 "அதிபதியாகவும் இரட்சகராகவும்" அப். 5:31 இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு...