தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 33

எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.

ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்

டிசம்பர் 28

“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15

இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.

தேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தூயோர் என்றும்
தூயவர் முன்னிலையில்
துயரமேதுமின்றி
துதித்திடுவர் தேவனை

கர்த்தாவே….. என்னை நினைத்து

ஓகஸ்ட் 30

“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5

இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.

அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.

பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.

என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

நவம்பர் 27

“என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” சங். 51:7

தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும் இட்டான். ஆனாலும், தேவனுடைய மன்னிக்கும் தன்மை மிகவும் பெரிதாகையால், தன் பாவக்கறை முற்றிலும் நீங்கிவிடுமென்று நம்பினான். கர்த்தர் தன்னைத் தூய்மையாக்கினால், முழுத்தூய்மை  அடைவான் என்றும், பாவத்தின் கறை முற்றிலும் நீங்கிப்போகும் என்றும், தூதனைப்போல் தூய்மை அடைவான் என்றும் அவன் நம்பியிருந்தான். அதேபோல், அவருடைய மன்னிப்புக்கும் ஆளானான். அந்த நொடியிலிருந்தே அவன் தேவ கிருபையை அனுபவித்தான்.

அன்பானவரே, உமது பாவமும் கொடியதாக, கணக்கிலடங்காப் பெரியதாயிருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் அதை அறவே நீங்கக் கழுவிவிடும். உன் தேவன் உன்னைக் கழுவினால் உன்னில் எந்தப் பாவக்கறையும் தங்காது. உனக்கு முன்பு இப்பூவுலகில் பாவிகளாயிருந்து, இப்பொழுது பரலோக வாசிகளாயிருப்பவர்களைக் குறித்து, வேத வசனம், இப்பொழுது அவர்கள் குற்றமற்றவர்களாக தேவ ஆசனம்முன் நிற்கிறார்கள் என்று கூறுகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கிருபை நிறைந்த தமது சமுகத்தில் மிகுந்த சந்தோஷத்தோடே குற்றமற்றவர்களாக உம்மை நிறுத்தக்கூடியவர் கிறிஸ்து என்றும் கூறுகிறது. இரட்சகருடைய இரத்தத்தின் பெருமையைக் கவனியும். அதனால் வரும் நன்மைகளை நோக்குங்கள். அது சகல பாவங்களையும் கழுவி நீக்கிவிடும். விலைமதிப்பற்ற அந்த இரத்தம், மனிதருடைய பாவங்களுக்காக பிராயச்சித்தமாக சிந்தப்பட்ட தேவ இரத்தம். அது உம்மை உம் பாவங்களறக் கழுவ வேண்டுமெனக் கேள்.

பாவக் கறையைப் போக்கும்
குருதி ஊற்றுப் பாயுது கல்வாரியில்
அதென்னைத் தூய்மையாக்கும்
கறை நீங்கித் தூய்மையாவேன் நானும்.

நீ மரணபரியந்தம் உண்மையாயிரு

நவம்பர் 06

“நீ மரணபரியந்தம் உண்மையாயிரு” வெளி 2:10

தேவன் தமது ஜனத்திற்கு அதிகம் நல்லவர். தமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுபவர். தமது மக்களின் வேண்டுதல்கள் வீணென்று ஒருபோதும் நினைப்பதேயில்லை. தமது மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களைத் தூண்டுகிறார். இந்த வசனம் எபேசு சபையிலுள்ளவர்களுக்குள் கூறப்பட்டது. அவர்கள் வசனத்தைப் பிரசங்கிப்பதிலும், ஆத்துமாக்களுக்காக விழித்திருப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும், பரிசுத்தத்தையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களாக இருக்க வேண்டும்.

சபையின் போதகர்கள் சபையில் எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகள் சத்தியத்தைப் பிடித்துக்கொண்டு அதன்படி நடந்து எப்போதும் அதையே பிரசங்கிக்க வேண்டும். தங்களது மனசாட்சிக்கு உண்மையாயிருந்து அதற்குக் கீழ்ப்படிந்து, நீதியாய் உத்தமமாய் நடக்க வேண்டும்.

தன்னுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தையை நம்பி, தேவ சித்தத்தின்படி நடந்து, தேவனுக்கா துன்பத்தையும் சகிக்க வேண்டும். உலகத்தாரிடத்தில் உண்மையாக வாழ்ந்து, பாவத்தைக் குறித்து, அவர்களை எச்சரித்து, கிருபையால் கிடைத்த நற்செய்தியைக் கூறி அவர்களை இயேசுவண்டை வழி நடத்தவேண்டும். பரிசுத்தவான்களிடத்திலும் உண்மையைக் காட்டி, அவர்களை நேசித்து, துன்பத்தில் அவர்களைத் தேற்றி அவர்களின் கஷ்டத்தில் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நீ மரணபரியந்தம் உண்மையாயிரு என்றால், மரணம் வந்தாலும் உண்மையாயிருப்பதைத் தவறவிடாதே என்று பொருள். அப்படி நீ இருந்தால் ஜீவ கிரீடத்தைப் பெறுவாய்.

உண்மையாயிருக்க உதவி செய்யும்
விசுவாசத்தால் எமது இடைகட்டும்
உயிர் மெய்யிலென்றும் நிலைத்து
உயிர் மகுடம் பெற்றிடச் செய்யும்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02

“முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்” ரோமர் 8:37

ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய சத்துரு. சாத்தான் சோதனைகளையும், நோய்களையும் மரணத்தையும் கொண்டுவரும்பொழுது தேவபிள்ளை இவைகளின்மீது ஜெயங்கொள்கிறான். இந்த வெற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்தான் கிடைக்கிறது. இயேசுவின் அன்பே இவர்களைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

இவர்களின் ஆண்டவரும் இரட்சகரும், சிநேகிதருமான இயேசு ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கிறார். இவற்றினால் விசுவாசிகள் வெற்றியடைகிறார்கள். இவ்வெற்றியை அடைவது இயேசு நாதர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே. பொறுமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் வெற்றியடையப் பெலன் தருகின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வியே காணாதது. இதுபோன்ற முழு வெற்றியை உலகில் எவரும் பெறமுடியாது. இயேசுவன்றி வேறு எவரும் வெற்றி தரவும் முடியாது. அவர் காட்டிய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால், நாம் வெறும் வெற்றிபெறுகிறவர்களாய் மட்டுமல்ல, முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவும் மாறுவோம். விசுவாசியே, இயேசுவின் ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், பாதுகாப்பின்மீதும் உன் நம்பிக்கையை வைத்திருக்க மறவாதே. அவரையே உனது முன் மாதிரியாகக் கொண்டிரு. அப்பொழுது வெற்றி உனக்கு நிச்சயம். வெற்றியடைபவன் மகுடம் பெறுவான். உன் வெற்றிக்கிரீடம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எம் தலைவர் இயேசுவே,
துன்பம் அவருக்காகப்பட்டால்
இன்ப வெற்றியைத் தருவார்
என்றும் வெற்றி வீரராவோம்.

தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

மார்ச் 05

“இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” ஓசியா 12:16

உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி அவர் வார்த்தையில் விசுவாசம் தந்து, அவர் இரத்தத்தை நம்ப வைத்து அவரின் சித்தத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவருக்குப் பிரியமானதை செய்ய நமது மனம் நினைக்கும். காத்திருக்கும் ஆத்துமாதான் சகலத்திலும் தேவனைக் காண்கிறது. எவ்விடத்திலும் தேவன் இருக்கிறார் என்றே உணருகிறது. எந்தக் காரியத்தையும் தேவன் நடத்துகிறார் என்று ஒத்துக்கொள்கிறது. உன் தேவனிடத்தில் எப்போதும் காத்திரு. அப்போதூன் எக்காலத்திலும் மோசத்திற்குத் தப்பி சுகித்திருப்பாய். எந்தச் சோதனையிலும் வெற்றிப் பெறுவாய். கர்த்தர் தம்முடைய நியமங்களின்மூலம் உன்னை மேன்மைப் படுத்துகிறதைக் காண்பாய்.

ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரன் தன் பட்சமுள்ள எஜமானிடத்திலும், உத்தம வேலைக்கரி தன் எஜமாட்டியிடத்திலும் பட்சமுள்ள பிள்ளை தன் பிரிய தகப்பனிடத்திலும் காத்திருப்பது போல காத்திரு. நீ காத்திருப்பது அவருக்குப் பிரியமானபடியால் அவரிடத்தில் காத்திரு. காத்திரு என்று உன்னிடம் அவர் சொன்னதால் காத்திரு. அவர் இரக்கம் காண்பிக்கும் நேரத்திற்காக காத்திரு. அவருக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்படமாட்டார்கள். கர்த்தரிடம் காத்திரு. திடமனதாயிரு. அதுவே பெலன். இனி ஆத்துமாவே, இன்று தேவனிடத்தில் காத்திருந்தாயா? இந்த இராத்திரியிலே அவரோடு அமர்ந்து காத்திருக்கிற சிந்தை உன்னிடத்தில் உண்டா? கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் என்று தைரியமாய் உன்னால் சொல்ல முடியுமா? இல்லையென்றால் இனிமேலாவது காத்திருக்க தீர்மானி.

விசுவாசித்து காத்திரு
திடமாய் நிலைத்திரு
அவர் வார்த்தை உண்மையே
அவர் பெலன் அளிப்பாரே.

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.

My Favorites

விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்

பெப்ரவரி 06 "விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்." புல. 4:2 இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு...
Exit mobile version