தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 4

அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

மார்ச் 19

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.” சங். 23:3

காணாமற் போன ஆட்டைப்போல் விழி தப்பினோன். நாம் எப்போதும் அலைந்து திரிய ஏதுவானவர்கள். அப்படி அலைந்துதிரியும்போது அந்த நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி கண்டுபிடிக்குகும் வரையில், நாம் சரியான பாதைக்குத் திரும்புகிறதேயில்லை. அவருடைய பார்வையோ, அலைந்து தரிகிற ஆட்டின்மேல்தான் இருக்கிறது. அவருடைய உள்ளமோ காணாமற்போன ஆட்டின்மேலே இருக்கிறது. அதைக் கண்டு அதன்மேல் அன்புகாட்ட தகுந்த நேரம் வரும் என்றே காத்திருக்கிறார். நயமாயும், பயமாயும், கண்டித்தும், போபித்தும் அதைப்பின் தொடர்ந்து போய் கண்டுபிடித்து வருகிறார்.

தொழுவத்தைவிட்டு அலைந்து திரிவது, புத்தியீனமென்று அந்த ஆத்துமா உணரும்போது, அலைந்து திரிகிறதினால் மனவருத்தமடைந்து, உள்ளுக்குள்ளே ஜெபித்து, எப்போது திரும்பலாமென்று கவலைப்பட்டு மேய்ப்பனின் அடிகளைத் தேடி வந்து, தன் பாவத்தையும், அறியாமையையும் அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி, உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் திரும்ப கட்டளையிடும் என்று சத்தமிடும். மேய்ப்பனோ தன் கரத்தினால் அதைத் தூக்கி, தோளின்மேல் போட்டு அன்பாய்க் கண்டித்து தொழுவத்திற்குக் கொண்டு போகிறான். கிருபையால்தான் இப்படி திருப்ப ஏதுவுண்டு.

மேய்ப்பனுடைய கரிசனையில்தான் அலைந்து திரிகிற ஆத்துமா சீரடையும். சீர்ப்பட்டவன் மேய்ப்பனால் சுத்தமாக்கப்படுகிறார். அவன் மனம் மிருதுவாகிறது. பாவத்தின்மேல் பகை ஏற்படுகிறது. தன்னைத்தான் வெறுத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறான். மேய்ப்பனின் இரக்கமே நம்மை இப்படி நடத்துகிறது. நம்மை மீட்டு மேய்ப்பனின் இரக்கத்தை அனுதினமும் நினைப்போமாக.

வழி தப்பி திரிய
என் இருதயம் பார்க்கிறது
உமக்கே அதைப் படைக்கிறேன்
அதை நீரே திருத்துமேன்.

நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்

மார்ச் 16

“நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்.” 1.நாளா. 4:10

இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன் அறிவான். கர்த்தர் ஆசீர்வதித்தால் அது பலிக்கும். அவர் கிறிஸ்துவில் எல்லா ஞான நன்மைகளாலும் பரமண்டலங்களில் இருந்து ஆசீர்வதிக்கிறார். சகலமும் நமக்கு இயேசுவில் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபைமேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.  அவர் இன்னும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். உன் அப்பத்தையும் தண்ணீரையும் அவருடைய அன்பால் சாரம் ஏற்றப்படும்போது வெகு இனிமையாய் இருக்கும். புதியதாக்கும் கிருபையினாலும், சீர்ப்படுத்தும் கிருபையினாலும் முன் செல்லும் கிருபையினாலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நம்முடைய ஆத்துமாவைப்போல் என்றும் உள்ளதுமான விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்குச் சந்தோஷம். நம்மை  மகிமையாய், நித்தியமாய் ஆசீர்வதிக்கும்படி, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனைக் கொடுத்தார். நம்மை ஆசீர்வதித்து ஆசீர்வாதமாக்குவேன் என்றே வாக்களித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று உணருவதே ஓர் ஆசீர்வாதம். அதை உணருகிற ஒவ்வொருவனும் அதைக் கருத்தாய் தேடுகிறான். ஆகவே நாமும்கூட அவர் வசனத்தை வாசித்து, அவர் அன்பை விசுவாசித்து, அவர் ஆசீர்வாதத்திற்காகக் கெஞ்சி யாபேசைப்போல் நல்வாக்கைப் பெற்றுக்கொள்வோமாக.

முடிந்தது என்று சொன்னாரே
அவ்வாக்கைக் கேள்
அது கடைசி வார்த்தை ஆனதே
அதனால் திடன் கொள்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்

செப்டம்பர் 25

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7

சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.

தேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.

தயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்
தம் மக்களை ஒருபோதும் மறந்திடார்
அவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து
அவர் நாமம் போற்றித் துதிப்பேன்.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்

ஓகஸ்ட் 13

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்” உபா. 14:1

என்ன ஒர் ஆச்சரியமான உறவிது. தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! இவர்கள் யார்? அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். இது இவர்களுக்குள்ளே புது சுபாவத்தையும், புது விருப்பங்களையும், புது ஆசைகளையும், புது எண்ணங்களையும், புது செய்கைகளையும் உண்டுபண்ணும். இவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள். இவர்கள் புத்திரசுவிகார ஆவியைப் பெற்றவர்கள். இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. ஒரு பிள்ளை தகப்பன் சொன்னதை நம்பி தகப்பன் கற்பிப்பதைச் செய்து தகப்பன் அனுப்பும் இடத்துக்கும் சென்று, அவர் வாக்குமாறாதவர் என்றும், அவர் கொடுப்பார் என்றும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது. உன்னைச் சிநேகிதனற்றவனென்று சொல்லாதே. நீ அநாதை பிள்ளை அல்ல. அவர் உன் தகப்பன். ஒப்பற்ற தகப்பன். மாறாத தகப்பன். மனம் கலங்காதே.

உன் வறுமையில் பிதாவின் சம்பத்தையும், நிந்தையில் உனது கனமான உறவையும் உன் வியாதியில் பரம வீட்டையும் மரணத்தில் முடிவில்லா நித்திய வாழ்வையும் நினைத்துக்கொள். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள். நாம் எல்லாரும் இப்பொழுது பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாய் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை. ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.

இந்தக் கிருபைத் தாரும்
அது என்னை நடத்தட்டும்
என் நா உம்மைத் துதிக்கும்
என் இதயம் உம்மை நேசிக்கும்.

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.

என் தேவன் என் பெலனாய் இருப்பார்

நவம்பர் 04

“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5

தேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.

அவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.

நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.

எனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.

என் தேகம் மாண்டு போனாலும்
என் தேவன் என் பெலனாவார்
இதனால் நான் பெலனடைவேன்
என் விசுவாசம் வளர்ப்பேன்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

திட அஸ்திபாரம்

மே 30

“திட அஸ்திபாரம்.” ஏசாயா 28:16

மகிமை நிறைந்த இயேசு இரட்சகர் நிறைவேற்றின பூரண கிருபையானது பாவிகளின் நம்பிக்கைக்கு அஸ்திபாரம். மற்ற வேறு ஏதாவது ஒன்றின் பேரில் கட்டுவோமானால் நாம் நாசம் அடைந்துவிடுவோம். நமது நம்பிக்கைக்கு ஆதாரமாக கிறிஸ்துவோடு வேறெதையாவது சேர்ப்போமானால், அவரால் நமக்கு எவ்வித பயனும் இராது. கிறிஸ்து மட்டும்போதும். அவர் நமக்காக் கீழ்ப்படிந்து சம்பாதித்த புண்ணியம், அவர் பிராயச்சித்த பலி, காரிய சித்தியான அவர் மன்றாட்டு ஆகியவைகள்மேல் நித்தியத்திற்காக நாம் கட்ட வேண்டும். இவைகள் எல்லாம் ஒரே அஸ்திபாரம். இவைகளின்மேல் கட்டுவோமானால் பயம் இல்லை. இதுதான் உறுதியான அஸ்திபாரம்.

இரட்சகருடைய மகத்துவமும், அவருடைய குறைவற்ற குணாதிசயங்களும், அவர் செய்த புண்ணியமும், அவர் வாக்கின் உண்மையும் அஸ்திபாரத்தை இன்னும் பலமுள்ளதாக்குகிறது. கடந்த காலத்தில் அது உறுதியாய் நின்றது. இப்போதும் உறுதியாய் நிற்கிறது எப்போதும் அப்படியே நிற்கும். இயேசுவே அஸ்திபாரம். அவர்மேல் கட்டின எந்தப் பாவியும், எந்தக் குறையையும் கண்டதில்லை. எந்தப் புயலும் அதை அழிக்காது. எந்த வெள்ளமும் அதைக் கரைக்காது. பூமியதிர்ச்சியும் அதைச் சேதப்படுத்தாது. தேவனைப்போன்று அது உறுதியானது. நித்தியத்தைப்போல் நிலையுள்ளது. அதன்பேரில் மட்டும் கட்டுவோமாக. அப்படிக் கட்டி நம்முடைய அஸ்திபாரத்தைப் பார்த்து மகிழக்கடவோம். தீயமனிதரும் கேடு செய்கிறவர்களும் திரும்பத் திரும்ப தாக்கலாம். சாத்தான் அதை இடிக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவன்மேல் கட்டிய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கும். கர்த்தர் தம்முடையவர்களை அறிவார் என்பதற்கு இது முத்திரையாகிறது. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவையல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

எல்லாம் ஒழிந்துப் போனாலும்
இயேசு கன்மலை நிற்கும்
இதன்மேல் நிற்போம் எல்லோரும்
வாழ்வதென்றும் நிலைக்கும்.

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08

“தேவன் பிரியமானவர்” கலா. 1:15-16

அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய சித்தத்தினால் ஆனது என்கிறார். சவுலைப் பவுலாக்கி அவன் காரியத்தில் கிருபையைக் காண்பித்தது தேவ தயவு தான். இந்தத் தயவுக்கு அவன் பாத்திரன் அல்ல. தேவன் இப்படிச் செய்ய தேவனை ஏவிவிடத்தக்கது அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் தேவனுக்குப் பிரியமானபடியால், அவர் சித்தங்கொண்டிபடியால் அப்படி செய்தார். மற்றவர்களைக் காட்டிலும் நாம் வித்தியாசமானவர்களா? முன் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் வித்தியாசம் உண்டா? அப்படியானால் மற்றவர்களுக்குக் கிடைக்காதவைகள் நமக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. தேவனுடைய சுத்த கிருபையே அவரின் சுயசித்தமே இதற்குக் காரணம் ஆகும்.

அவர் யார்மேல் இரக்கமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார். யார்மேல் பிரியமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் பிரியமாயிருக்கிறார். தகுதியே இல்லாத நம்மை தேவன் நேசித்து தகுதிப்படுத்தி பிரியமாயிருக்கிறார். தங்கள் பாத்திர தன்மைக்கு அதிகமாகவே எல்லாருக்கும் கிடைத்திருப்பதால் முறுமுறுக்க எவருக்கும் நியாயமில்லை. சிலருக்கு அதிக தயவு கிடைத்திருக்குமென்றால் அதற்கு நன்றியுள்ளவர்களர் இருப்பது அவர்களது கடமை. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைத்திருக்கிறார். சாந்தகுணம் உள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார். கர்த்தர் உங்களையும் தமது ஜனமாக்கிக் கொண்டார். அவர் தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

கர்த்தருக்கே மகிமை
எனக்கு வேண்டாம் பெருமை
அவர் பாதம் தாழ்ந்து பணிந்து
கிருபைக்கு நன்றி கூறுவேன்.

My Favorites

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்

ஓகஸ்ட் 03 "எப்பொழுது என்னிடத்தில் வருவீர்." சங். 101:2 தேவனுடைய சமுகம்தான் தேவ பிள்ளைக்குப் பரவசம். இதை விட அவர்களுக்குப் பெரிய சந்தோஷம் கிடையாது. அவர்கள் விரும்புகிறபொருள் அவர்தான். இதுவே அவர்களின் சந்தோஷத்தின் ஊற்று. அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு...

மீட்பு

நீதிபரன்

Exit mobile version