ஒகஸ்ட்

முகப்பு தினதியானம் ஒகஸ்ட்

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்

ஓகஸ்ட் 20

“என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்” ஏசாயா 51:5

இந்த நம்பிக்கை நல்லது. ஏனென்றால், அந்தப் புயம் சர்வ வல்லமையில் பலப்பட்டு, சர்வ ஞானத்தால் நடத்தப்பட்டு, உருக்கமான அன்பினால் பிரயோகிக்கப்படுகிறது. நாம் சாயும்படி நம்மை ஆதரிக்க அப்புயம் உள்ளது. நமக்காக கிரியை செய்யவும், நமக்கு வேண்டியதை சேர்த்து வைக்கவும், அது நீட்டப்பட்டிருக்கிறது. நமக்காகப் போராடவும், சத்துருவின் கையிலிருந்து விடுவிக்கவும், பெலவீனத்தின்போது நம்மை ஆதரிக்கவும், வியாதியிலும், கண்ணீரிலும் இருந்து நம்மைத் தூக்கி விடவும், இந்தக் கரம் நமக்கு நீட்டப்பட்டிருக்கிறது. இது பிதாவின் சர்வ வல்லமையான கரம். இந்தப் புயம் வானத்தையும், பூமியையும் தாங்கும் புயம்.

நம்முடைய சகோதரனுடைய புயமானாலும், பாதாளத்தின் வாசல்களை அடைத்து, துஷ்ட ஆவிகளைப் பிடித்து அடக்குகிற புயம். இந்தப் புயத்தின்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது கரத்தின்மேல் நம்பிக்கை வைப்பது வீண். மற்று எதிலும் நமது நம்பிக்கை வளர்ந்துவிட கூடாது. எப்போதும் எதிலும் கர்த்தரின் புயத்திலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தேவ வசனம் இப்படிச் சொல்கிறது. தேவன் அதுதான் சரி என்று கட்டளையிட்டிருக்கிறார். அவர்கள் அந்தகாரத்திலும், வருத்தத்திலும் என்னை நம்புவார்கள். என்னுடைய வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும். அது அவர்களுக்குத் தேவையென்று அறிவார். மற்றவை எல்லாம் அவர்களை மோசப்படுத்திவிடும். தேவன் கூறியுள்ளார். அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தேவனுடைய வல்லமையான கரத்தில் நம்பிக்கை வைத்து அவருடைய மகத்துவமான செயலைப் பின்பற்றி, அவரின் கரத்தின் கிரியையை நம்பியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பாக்கியராய் இருக்கமாட்டோம்.

சகலத்தையும் சிருஷ்டித்த
தேவனுடைய கரமே
எங்கள் பெலன் அடைக்கலம்
என்றும் எங்கள் துணையே.

உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்

ஓகஸ்ட் 22

“உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்”  வெளி 3:8

பாவிகள் பெலன் இல்லாதவர்கள். பரிசுத்தவான்கள் பெலவீனராய் இருந்தாலும் பெலன் அவர்களுக்கு உண்டு. இந்தப் பெலன் இயேசுவின் நாமத்தில் கிடைக்கிறது. அவர் பெலவீனருக்கு பெலன். வேதத்தில் தேவன் நான் உன்னைப் பெலப்படுத்துகிறேன் என்று வாக்களித்திருக்கிறார். கர்த்தரிலும் அவரின் சத்துவத்திலும் பெலப்படுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் பிரவேசித்து நமக்கு உள்ளதை இயேசுவோடு ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்த ஐக்கியப்படுகிறதினால், பெலவான்களாகிறோம். நமக்கு குறைந்த பெலன்தானுண்டு. அதிக பெலனுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவை இறுகப்பிடித்து முன்னேறி செல்லவேண்டும். நமக்குள் இருக்கும் பெலனைக் கொண்டு சாத்தானுக்கும். பாவத்துக்கும் உலகத்துக்கும் விரோதமாயும், தேவனுக்கும் அவருடைய காரியத்துக்கம் அனுகூலமாயும் போர் செய்ய வேண்டும்.

இன்னும் அதிகமான பெலனுக்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். தேவன் கொடுப்பதில்லை என்று சொல்கிறதில்லை. அவர் தம்முடைய வாக்குக்கு விரோதமாக நடப்பதில்லை. நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. இப்போதிருப்பதைக் காட்டிலும் நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. அந்தப் பெலனை தேவன் நமக்குச் சம்பூரணமாய்த் தருகிறார். இது பெரிய தேவனுடைய இரக்கம். முன்னே நாம் பெலவீனர்கள். இப்போதோ கொஞ்சம் பெலன் உண்டு. போதுமான அளவு கிடைக்கும் என்று வாக்களித்துள்ளார்.. தேவன் சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவத்தைக் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சந்தோஷமானக் காரியம். அவர் பாதத்தில் காத்திரு. அவர் உன் ஆத்துமாவில் பெலனைத் தந்து உன்னைப் பெலப்படுத்துவார்.

கிறிஸ்துவில் பெலன்படு
போர் செய்து எதிர்த்து நில்
சர்வாயுத வர்க்கம் அணிந்து
பேய், பாவம் யாவும் வெல்.

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06

“தேவனையே நோக்கி அமர்ந்திரு” சங். 62:5

தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது. அவரைநோக்கி காத்திருக்கச் செய்கிறது. ஆவிக்குரிய எந்த செய்கைக்கும் ஏது செய்கிறது. அவரை நோக்கி அமர்ந்திருப்பதென்பது நமது விருப்பத்திற்கு அடையாளம். அவரிடத்திலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் நாம் அவரை நோக்கி பார்க்க மாட்டோம். அவர்முன் காத்திருக்கவும் மாட்டோம். இதில் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கிறது. இந்தக் கடமையை அசட்டை செய்வது பாவம்.

இப்படி தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதில் அடங்கியிருப்பது என்ன? அவருடைய வசனத்தின்மேல் விசுவாசம். அருடைய ஆசனத்தண்டையில் செய்யும் விண்ணப்பம். அவரின் நற்கிரியைகளை செய்தல். ஜெபத்திற்குப் பதில் கிடைக்குமென்று காத்திருத்தல். நம்முடைய விஷயத்தில் தேவன் உதவி செய்வாரென்று எதிர்பார்த்தல். எல்லா இடத்திலும் தேவன் இருக்கிறார் என்று உணர்ந்து அவருக்குப் பயப்படுதல். அவரே நன்மைகளுக்கு காரணமும் ஊற்றுமானவர் என்று அவருக்குப் பயப்படுதல் போன்ற பல்வேறு செய்திகள் அடங்கியிருக்கிறது. கர்த்தரிடம் அமர்ந்திருந்தால் நாம் சுகபத்திரராகவும், பரிசுத்தமாகவும், ஜசுவரியர்களாகவும், திருப்தியுள்ளவர்களாகவும், பாக்கியசாலிகளாகவும் இருப்போம். நீ செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்காகக் காத்திரு. அதிலும் துன்பப்படும்போதும், கலங்கும்போதும், அவருக்குக் காத்திரு. அதிலும் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதம் கிடைப்பது நிச்சயம். கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கமடையார் என்று அவர் சொல்லுகிறார்.

உமது சமுகம் தரிசிக்க
ஆவலோடு காத்திருப்பேன்
கர்த்தரைத் தேடிய
இஸ்ரவேலர் வெட்கப்பட்டதில்லை.

நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?

ஒகஸ்ட் 09

“நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?”  மத். 5: 47

மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ன? சிறைச்சாலை, மருத்துவமனை, தர்மசாலை, வியாதியஸ்தர் அறை, நிர்பந்தமான வீடுகள் இவைகளைப் போய் பார்த்திருக்கிறீர்களா? குருடர், சப்பாணிகள், மனநிம்மதியற்றவர், தொழு நோயுள்ளவர் இவர்களைச் சந்தித்துள்ளீர்களா? பரிசுத்தவான்கள் சகித்தது என்ன? ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு, சிறைச்சாலையில் தேவனுக்காய்த் துன்பப்பட்டவர்கள் கொலைகளத்தில் உயிரைக் கொடுத்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். அடிகளைகளை வாங்கிக் கொண்டும் ஜெபித்த இவர்களைப் பார். உன் வாழ்க்கையையும் பார். வேதத்தையும் பார். பரலோகத்தையும் பார். நரகத்தையும் பார். உனக்குக் கிடைத்த பாக்கியங்களை நினை. உனக்கு அதிகம் அதிகம் கிடைக்கவில்லையா? மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன?

உலகத்தானைவிட, அஞ்ஞானியைவிட, புறமதஸ்தனைவிட, அநேக பெயர் கிறிஸ்தவனைவிட எனக்கு நல்ல சட்டதிட்டங்கள் உண்டு என்கிறாய். உன் இதயத்தையும், பணத்தையும், நேரத்தையும் சகலத்தையும் அவருக்குக் கொடுத்தேன் என்கிறாய். ஆனால் மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன? கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ ஊழியத்துக்காக, சபைக்காக, ஏழைகளுக்காக, தேவ மகிமைக்காக, நீ செய்தது என்ன? மற்றவர்களைவிட உனக்கு அதிகம் தெரியுமே, அதிகம் பேசுகிறாயே? ஆகவே, மற்றவர்களைவிட உன்னிடத்தில் அதிகம் எதிர்ப்பார்ப்பது நியாயந்தானே மற்றவர்களைவிட அதிகம் செய்யப்பார். இல்லாவிட்டால் நீ சொல்வதை குறித்துச் சந்தேகம் கொள்ளுகிறது நியாயந்தானே.

நமது பெயருக்கேற்ற
நல் நடத்கை எங்கே?
மாறினோம் என்று காட்ட
நற்கனிகள் எங்கே?

கர்த்தாவே….. என்னை நினைத்து

ஓகஸ்ட் 30

“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5

இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.

அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.

பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.

இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே

ஓகஸ்ட் 26

“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11

நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.

கிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.
இவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.

தேவ ஞானம் நடத்தும்
தேவ கிருபை தாங்கும்
ஒன்றும் அறியா பாவி நான்
தேவ சித்தம் என் பாக்கியம்.

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

ஓகஸ்ட் 27

“தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்”. நீதி. 2:8

விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது. விசுவாசியின் பெலவீனம் அதிக வருத்தத்தைக் கூட்டுகிறது. உள்ளான போராட்டமும் அவன் வழியைக் கடினப்படுத்துகிறது. ஆகிலும் நாம் சேர வேண்டிய நகரத்திற்கு அந்த ஒரு பாதைதான் உண்டு. இந்தப் பாதை இளைப்பாறுதலுக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சுதந்திரத்திற்கும் நடத்துகிறது. இந்தப் பாதையில் கர்த்தரும் தம்முடைய பரிசுத்தவான்களுடன்கூட நடக்கிறார். அவர்களின் குறைவுகளைப் போக்கி அவர்களுடைய நிலைமைக்குத்தக்கதாக இரக்கம் பாராட்டுகிறார்.

சத்துருக்கள் இவர்களை மேற்கொள்ள முடியாமல் தற்காக்கிறார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை அவர்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்று எக்கொடிய சோதனையைப்பற்றியும் சொல்லலாம். சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தும்போது பின்வாங்கிப் போகாமலும், பாதுகாக்கிறார். அவர்களுடைய பெலவீனத்தில் தம்முடைய பெலனைப் பூரணப்படுத்தி தம்முடைய கிருபை அவர்களுக்குப் போதும் என்று ரூபிக்கிறார். விழிப்பாய் அவர்களைக் கவனித்து பலத்த கையால் தாங்கி, அன்பான மனதால் அவர்களைத் தாங்குகிறார். அன்பரே, இன்றுவரை அவர் உங்களைப் பாதுகாத்து வந்ததை கவனித்துப் பாருங்கள். இனிமேலும் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்புங்கள். பரிசுத்தவான்களைப் பராமரிப்பதும் அவர்களின் பாதைகளைப் பாதுகாப்பதுமே அவருடைய வேலை.

இயேசுவின் கரத்தில் பக்தர்
என்றும் சுகமாய் இருப்பர்
அவரால் துன்பங்களைக்
கடந்து என்றும் சுகித்திருப்பர்.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்

ஓகஸ்ட் 01

“கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.” 2.சாமு. 12:13

தாவீது இராஜா உரியாவின் மனைவியிடம் பாவம் செய்தது பெரிய பாவம். உரியாவைக் குடிக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்து இது தேவனால் நடந்தது என்று காட்டி கவலையற்றவனாய் நாள்களைக் கழித்தான். பிறகு பாவ மயக்கத்தை விட்டெழுந்து தான் செய்த அக்கிரமத்தைத் தாழ்மையோடு கர்த்தரிடம் அறிக்கையிட்டான். அவன் உணர்ந்து அறிக்கையிட்டபடியினாலும், மனவேதனையோடு ஜெபித்தபடியினாலும் அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். பாவமானது தேவனுக்கு முன்பாக பாவியைக் குற்றம் சாட்டுகிறது. பாவத்திற்கு விரோதமாக நமக்காகப் பரிந்து பேசும் ஒருவர் வருகிறார். அவரே இயேசுவானவர்.

இயேசு கிறிஸ்துவே கொடிய பாவங்களுக்கு மன்னிப்பளிக்கிறார். பாவத்தை மன்னித்தும் மறந்து விடுகிறார். நம் தேவனைப் போல் மன்னிக்கிறதற்கு அவருக்கு இணையாக ஒருவருமில்லை. தன் பாவங்களைத் தாராளமாய் அறிக்கையிடுகிற மனிதனுக்குத் தேவன் மனப்பூர்வமாய் இலவசமாய் மன்னிக்கிறார் என்பதை நினையில் கொள்ள வேண்டும். தேவனானவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது நமது சத்துருக்கள் அதைத் தேடியும் கண்டுபிடிக்க மாட்டார்கள். உன்னுடைய பாவங்களைத் தேவனுடைய முதுகிற்குபின் எறிந்துவிட வேண்டுமானால் நீ அடிக்கடி அவற்றை அறிக்கையிட்டு சரிசெய்துக் கொள்ள வேண்டும். அவருக்குமுன் உன்னைத் தாழ்த்தி உன்னை சரிசெய்து கொள். உன் ஆத்துமாவில் அன்பையும் நன்றியறிதலையும் தேவ மன்னிப்பு ஊற்றிவிடும். தாவீதும் இப்படியே ஜெபித்தான். என் பாவம் எப்போதும் எனக்கு முன் நிற்கிறது என்றான். மன்னிப்பு தேவையானால் ஒரு பாவி பாவத்திற்காகத் துக்கப்பட்டு மனஸ்தாபப்பட வேண்டும். நீயும்கூட பாவத்திற்கு விரோதமாய் விழித்திரு. அப்போது பாவம் செய்யமாட்டாய்.

மன்னிப்புத் தரும் இயேசுவே
என் பாவம் மன்னியுமே
நீர் என் பரிகாரியே
காயம் கட்டி ஆற்றுமே.

My Favorites

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23 "எங்களை எப்படிச் சிநேகித்தீர்" மல். 1:2 இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச்...
Exit mobile version