நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.

உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது

நவம்பர் 09

“உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது” லூக்கா 21:28

நீங்கள் பெறப்போகிற பூரண மீட்புக்காக உங்கள் மீட்பர் பூமியில் வந்து மீட்பின் கிரயத்தை செலுத்தினார். இப்போது அவர் பிதாவின் வலது பக்கத்தில் வானத்திலும் பூமியிலும் அதிக அதிகாரமுள்ளவராக வீற்றிருக்கிறார். அவர் வெகு சீக்கிரம் மீண்டும் வந்து உலகை நியாயந்தீர்ப்பார். நீங்கள் இயேசு கிறிஸ்துவில் நித்திரையடையலாம். உங்களுக்கு அருமையானவர்கள் கல்லறைகளில் நித்திரையாக இருக்கலாம். ஆனால் கொஞ்கக் காலத்தில் இயேசு வருவார். அப்பொழுது மரித்துப்போன உங்களுக்கன்பானவர்களை உயிரோடு எழுப்புவார். நீங்களும் ஒருவேளை கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், தூசியை உதறித்தள்ளி சாவாமை என்னும் சிறப்பு ஆடையணிந்து கொண்டெழும்புவீர்கள். தேவனுடைய பிள்ளைகளாக மகிமை, வல்லமை முழுமையை அடைவீர்கள். பரம பிதாவினால் மீட்கப்பட்ட முழுக் குடும்பத்துடனும் கொண்டு சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள். அப்பொழுது உங்கள் மீட்பு முழுமையாகும்.

இப்பொழுது அம்மீட்பு சமீபித்திருக்கிறது. ஒவ்வொரு நாள் முடிய முடிய, அது நெருங்கி வருகிறது. அந்த நாளின்மேல் விருப்பம் கொள்ளுகிறோமா? அப்போஸ்தலனைப்போல ஆவியானவரின் முதற்பலனைப் பெற்ற நாமும், நம்முடைய மீட்பாகிற புத்திர சுவகாரத்தைப் பெறுகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோமா? அப்படியானால், உங்களது மீட்பு நெருங்கியிருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் விசுவாசிகளான போது, உங்கள் மீட்பு சமீபமாயிருந்ததைக் காட்டிலும், இப்போது அது மிக சமீபமாயிருக்கிறது.

மீப்பின் நாள் கண்டு மகிழ்வேன்
மீட்பரோடு பாக்கிறனாய் வாழ்வேன்
பரலோகத்தில் எல்லாருடனும் நான்
பரமனைத் துதித்து மகிழுவேன்.

இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்

நவம்பர் 16

“இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்” எபி. 13:8

தேவனுக்கிருக்கும் முக்கியமான தன்மைகளின் ஒன்று அவர் மாறாதவர் என்பது. இப்பண்பு அவருக்கு மட்டுமே பொருந்தும். இதைக் கொண்டே அவர் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால், யாக்கோப்பின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை என்கிறார். கர்த்தராகிய இயேசுவும் தெய்வத்தன்மை உடையவர். ஆகவே, அவர் என்றும் மாறாதவராகவே விளங்குகிறார். தமது மகத்துவமான தன்மையிலும், உள்ளான நோக்கங்களிலும், உபதேசங்களிலும், தமது அளவற்ற அன்பிலும், முழு வல்லமையிலும், இரக்க உருக்கத்திலும், கிருபை நிறைந்த புண்ணியத்திலும், பாவத்தை அவர் வெறுக்கும் வெறுப்பிலும், அவர் என்றும் மாறாதவர்.

இவ்வாறு அவர் மாறாதவராய் இருப்பதினால்தான், அவரை நாம் மாறாத தேவனாகப் போற்றுகிறோம். அவரையே நாம் நம்ப வேண்டும். அவருடைய சுவிசேஷத்திலுள்ள அருமையான சத்தியங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இம்மைக்குரியவற்றை வெறுத்து, மேலான வாழ்வுக்கரியவைகளை நாடவேண்டும். மாறாத நமது தேவன் ஒளியில் இருக்கிறபடியே இருளிலும் இருக்கிறார். அவர் நமது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்பதுபோலத்தான் நமது துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறார். நம்மையாயினும் தீமையாயினும் இயேசு மாறாதவர். அவர் என்றும் அன்பும் கிருபையும் நிறைந்த கிறிஸ்துதான். முதன் முதல் அவருடைய அன்பை நாம் ருசித்தபடியே இன்றும் நாம் ருசிக்கலாம். அன்று அவரில் களிகூர்ந்தவாறே இன்றும், இனிமேலும் நாம் களிகூரலாம். மாறாத இயேசு உன் ஆண்டவராயிருப்பதற்காக நன்றித் துதி அவருக்கு ஏறெடு.

யாவும் மாறிடினும்
இயேசு என்றும் மாறார்
என்றும் மாறா இயேசுவாதலால்
என்றும் அவரை நம்பிடுவேன்.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை

நவம்பர் 30

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி. 18:12

தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றிப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக நம்மை உயர்த்துவதற்கும் நாம் தாழ்மையை அனுபவிக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்குப் பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களைத் தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாயிருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.

தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப்போல வேட்டையாடப்பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னைப் பாவியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப்பேலா ஒளி வீசுவார்கள். பிரியமானவனே, நீ தாழ்ந்திருக்கிறாயென்று அஞ்சாதே. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்திருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவாய். எவ்வளவாய் துக்கிக்கிறாயோ அவ்வளவாக மகிழ்ச்சியடையலாம். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை இன்றுமென்றும்
நமக்குள்ளதே.

நீர் உண்மையாய் நடப்பித்தீர்

நவம்பர் 03

“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33

தேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.

ஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.

தானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.

கர்த்தர் செய்வதெல்லாம் நலமே
முடிவை நாமறியோம் அவர் அறிவார்
அவர் செய்வதெல்லாம் நமக்கு
முடிவில் பாக்கியமாகவே நிகழும்.

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23

“அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து” எசேக். 7:16

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விசுவாசி தன்னை நேசிக்கிற தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது பரிசுத்தமும், நீதியும் நன்மையுமான தேவனுடைய கட்டளையை மீறினேனே என்று துக்கித்துப் புலம்புவான். அவன் தனக்குள்ளே இருக்கும் பாவத்தைக் குறித்து துக்கிப்பான். அந்தப் பாவம் அவனுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கும். தன் பாவத்திற்காக அவன் விசனப்படுவான். அவன் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறானோ அப்பொழுதெல்லாம் விசனமடைவான். அந்நேரங்களில் அவன் சந்தோஷத்தைக் காண முடியாது. ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனல்ல.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று அவன் அறிவான். தன்னை நேசிக்கும் தேவன் மனந்திரும்பும் பாவியை அங்கிகரிப்பாரென்று அவனுக்குத் தெரியும். ஒருவன் தேவனை எவ்வளவாய் நம்புகிறானோ, எவ்வளவாய் அவரின் அன்பை ருசிக்கிறானோ, அவ்வளவாக அவன் பாவம் செய்தபொழுதெல்லாம் அவனுடைய துக்கம் அதிகரிக்கும். தான் அவரோடு சஞ்சரித்த நாள்களையெல்லாம் நினைத்து, நினைத்துச் சஞ்சலப்படுவான். அவன் படும் துக்கம் அவனுக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் கொண்டு வரும்.

நண்பரே, நீர் உமது பாவங்களுக்காக துக்கப்படுகிறதுண்டா? பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு, அதன் சந்தோஷத்தை அடைந்த அனுபவம் உமக்கு உண்டா? அப்படி துக்கிக்கவில்லையென்றால், இப்பொழுது உம் பாவத்திற்காய் கண்ணீர் சிந்தும், அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.

என் பாவங்களுக்காகவே
நான் துக்கித் தழுவேனாக
துயரப்படுவோர் யாவரும்
பாக்கியராவார் பின் நாளில்.

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.

தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்

நவம்பர் 07

“தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்” அப். 28:15

பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும் நாம் நன்றி கூற வேண்டும். நன்மையான எதுவானாலும் தேவனிடத்தில் இருந்துதான் வருகிறது. சகல நன்மைகளுக்கும் அவர்தான் காரணர். ஆகவே, ஒவ்வொரு நாளும் அவருக்கு துதிகளைச் செலுத்த வேண்டும். அவர் நம்மை மோசங்களிலிருந்து காத்து, துன்பங்களிலிருந்து விடுவித்து, தயவாக நன்மைகளைக் செய்கிறார். ஆகவே இப்போது நாம் அவருக்கு நன்றி சொல்லுவோம்.

இனிமேல் நமக்கு நேரிடும் குறைவுகளில் நமக்குத் தேவையானதைத் தருவார். நமக்காக சிறப்பான வாக்குகளைக் கொடுத்திருக்கிறார். சகலமும் நமது நன்மைக்காக கிரியை செய்ய நிச்சயம் செய்திருக்கிறார். தேவன் நம்மைக் கைவிடுவதில்லை என்று வாக்களித்திருக்கிறார். ஆகவே, தைரியமடைந்து துதி செலுத்தி, நன்றியுள்ளவர்களரிருப்போம். நமது வழி கரடு முரடானதாக இருக்கலாம். சத்துருக்கள் நிறைந்ததாக இருக்கலாம். துன்பங்கள் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும், நம்முடைய பெலன் அதைத் தாங்க போதுமானதாக இருக்கலாம். நமக்குத் தேவையானது கட்டாயம் கிடைக்கும். நமது காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார். இனி சாத்தான் சொல்வதைக் கேளாதே. அவிசுவாசத்திற்கு இடங்கொடாதே. நமக்கு இனி என்ன நடக்கும் என்று பயப்படாதே. இதுவரையில் நம்மை விடுவித்தவர் இன்னும் நம்மை விடுவிப்பார். இதுவரை கர்த்தர் செய்தவைகளை எண்ணிப்பார். உனக்கு அவர் காட்டின இரக்கத்தை சிந்தி. அவர் வாக்குகளை நினை. அதற்காக நன்றி கூறு.

இயேசுவே மீட்டு வழிநடத்தும்,
உம்மை நம்பி நடப்பேன் உம்மோடு
உம் நடத்துதலுக்காக நன்றி
உம் வாக்குகளுக்காக நன்றி.

உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா

நவம்பர் 21

“உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா” 2.இராஜா. 10:15

இக்கேள்வி மிகவும் அவசியமாகக் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. சில மனிதர் மிகவும் ஞானமாகவும் நன்றாகவும் பேசுவார்கள். அவர்களுக்கு கிறிஸ்தவ உபதேசம்பற்றிய தெளிந்த அறிவும் உண்டு. கிறிஸ்தவ வழிகளைச் சரியாக அறிந்தவர்கள். ஆனால் அவர்களுடைய இதயங்கள் நேர்மையானவையல்ல. இதை வாசிப்பவரே, உமது இதயம் சீரானதாயுள்ளதா? செய்த பாவத்திற்காக அது நொறுக்கப்பட்டுள்ளதா? அது தீமையை வெறுக்கிறதா? இயேசு கிறிஸ்துவை உறுதியாகப்பற்றிக் கொண்டிருக்கிறதா? கர்த்தருடைய வசனத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளதா? வசனத்தில் கூறப்பட்டபடி தேவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிக்கிறதா? உம் இருதயம் பரிசுத்தவான்கள் மேலும் அன்பு காட்டுகிறதா? கர்த்தருடைய ஊழியத்தில் பக்தி வைராக்கியம் கொண்டுள்ளதா?

அல்லது, அது தேவனை விட்டுத் தூர விலகி வாழ்கிறதா? கிறிஸ்துவில் ஐக்கியங் கொள்ளவில்லையா? உலகக் காரியங்களிலேயே திருப்தி கொள்கிறதா? வேதாகமத்தை ஏற்காமல் அவமதிக்கிறதா? தேவ கிருபையைக் குறித்து அசட்டையாயிருக்கிறதா? பாவத்தால் ஏற்படும் குற்ற உணர்வால் கலங்குகிறதா? உம் இதயத்தின் நிலையைச் சோதித்துப் பாரும்.

கிறிஸ்துவினண்டைக்கு உம் இதயம் வராமற்போனால் அது செம்மையாய் இருக்காது. ஆகையால் அது அடிக்கடி கெத்செமனே, கல்வாரி காட்சிகளைத் தியானிக்க வேண்டும். உம் இருதயம் செம்மையாக இல்லை என உணர்ந்து நீர் துக்கப்பட்டதுண்டா? நீர் உமது இருதயத்தை இயேசுவின் இரத்தத்தால் கழுவவேண்டும். அதை ஆண்டவருடைய சந்நிதியில் படைக்க வேண்டும். அப்பொழுது அவர் அதை செம்மை ஆக்குவார்.

என் மனம் செம்மையானதானால்,
பாவத்தை ஒரு நாளும் அது விரும்பாது
என் மனதில் கிறிஸ்து வருவாரானால்
அது தூய்மையாகி நலம் பெறும்.

உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

நவம்பர் 22

“உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” நீதி. 3:6

எங்கே போவது, என்ன செய்கிறது என்று திகைக்கிறாயோ? தேவனுடைய செயல்கள் உனது போக்கிற்கும், எண்ணங்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகின்றனவோ? எரேமியா தீர்க்கனுக்குக் கர்த்தர் போதித்தபடியே உனக்கும் போதிக்கிறார். கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல என்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறது அல்ல என்றும் அறிவேன் என்று எரேமியா சொன்னான். கிருபைக்காகக் கர்த்தரிடத்தில் கேட்டதுபோல, ஞானம் வேண்டும் என்றும் அவரிடத்தில் கேட்க வேண்டும். இரட்சிப்புக்காக அவரிடத்தில் பணிந்து வேண்டிக் கொள்வதுபோல இவர் உன்னை நடத்த வேண்டும் என்றும் அவரைப் பார்த்து வேண்டிக்கொள்ள வேண்டும். அவர் உன் பாதையை முன் கூட்டியே தெரிந்தெடுத்து உள்ளார். அவர் தெரிந்தெடுத்ததைத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், குழந்தையைப்போல அவரண்டைச் சென்று, வழியைத் தெளிவாகக் காட்ட வேண்டும் என மன்றாடு. அப்பொழுது தேவன் தமது செம்மையான வழிகள உனக்குத் தெளிவாகக் காட்டுவார்.

எதையும் செய்ய துவங்குமுன் தேவன் உன்னை நடத்த வேண்டும் என்று ஜெபி. எவ்வேலையைச் செய்யும்பொழுதும், தேவனே என்னோடு வாரும் என்று வேண்டிக்கொள். உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர், உன் பாதையைச் செம்மைப்படுத்துவார். உனக்கு நன்மை செய்ய அவருடைய கண் உன்மேல் நோக்கமாயிருக்கிறது. உன் ஜெபத்தைக் கேட் அவர் காத்திருக்கிறார். உன் குரல் கேட்டுக் கிருபையளிப்பார். உன் விண்ணப்பத்திற்குப் பதில் கிடைக்கும். அவருடைய வசனத்தின்மூலம் அவர் தரும் ஆசீர்வாதங்களைக் கண்டுபிடி. அவரைப் புகழ்ந்து மேன்மைப்படுத்து. அப்போது உன் பாதைகள் சீராகும். அவரால் நீ செம்மையான வழியில் நடத்தப்படுவாய்.

கர்த்தருக்கு உன்னை ஒப்புவி
கர்த்தரை நம்பிக் காத்திரு
அவர் உன்னை நடத்துவார்
அவர் யாவையும் செய்து முடிப்பார்.

My Favorites

உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்

ஏப்ரல் 23 "உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்" எபி. 10:22 அவிசுவாசத்தினால்தான் நாம் தேவனுக்குத் தூரமாய் இருக்கிறோம். அப்போது ஆவியில் குளிர்ந்துப்போய் ஆறுதலற்றவர்களாகிறோம். தேவன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் இரக்க சிம்மாசத்தில் வீற்றிருக்குpறார். தன்னைப்...
Exit mobile version