அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01

“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.

அவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

எந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.

இரட்சகரான இயேசுவே
உயிரோடெழுப்பி பரத்தில்
வீற்றிருப்போரே, பாவியாம்
என்னையும் இரட்சித்தருளும்.

என் தேவன் என் பெலனாய் இருப்பார்

நவம்பர் 04

“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5

தேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.

அவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.

நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.

எனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.

என் தேகம் மாண்டு போனாலும்
என் தேவன் என் பெலனாவார்
இதனால் நான் பெலனடைவேன்
என் விசுவாசம் வளர்ப்பேன்.

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23

“அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து” எசேக். 7:16

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விசுவாசி தன்னை நேசிக்கிற தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது பரிசுத்தமும், நீதியும் நன்மையுமான தேவனுடைய கட்டளையை மீறினேனே என்று துக்கித்துப் புலம்புவான். அவன் தனக்குள்ளே இருக்கும் பாவத்தைக் குறித்து துக்கிப்பான். அந்தப் பாவம் அவனுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கும். தன் பாவத்திற்காக அவன் விசனப்படுவான். அவன் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறானோ அப்பொழுதெல்லாம் விசனமடைவான். அந்நேரங்களில் அவன் சந்தோஷத்தைக் காண முடியாது. ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனல்ல.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று அவன் அறிவான். தன்னை நேசிக்கும் தேவன் மனந்திரும்பும் பாவியை அங்கிகரிப்பாரென்று அவனுக்குத் தெரியும். ஒருவன் தேவனை எவ்வளவாய் நம்புகிறானோ, எவ்வளவாய் அவரின் அன்பை ருசிக்கிறானோ, அவ்வளவாக அவன் பாவம் செய்தபொழுதெல்லாம் அவனுடைய துக்கம் அதிகரிக்கும். தான் அவரோடு சஞ்சரித்த நாள்களையெல்லாம் நினைத்து, நினைத்துச் சஞ்சலப்படுவான். அவன் படும் துக்கம் அவனுக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் கொண்டு வரும்.

நண்பரே, நீர் உமது பாவங்களுக்காக துக்கப்படுகிறதுண்டா? பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு, அதன் சந்தோஷத்தை அடைந்த அனுபவம் உமக்கு உண்டா? அப்படி துக்கிக்கவில்லையென்றால், இப்பொழுது உம் பாவத்திற்காய் கண்ணீர் சிந்தும், அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.

என் பாவங்களுக்காகவே
நான் துக்கித் தழுவேனாக
துயரப்படுவோர் யாவரும்
பாக்கியராவார் பின் நாளில்.

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்

நவம்பர் 11

“அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்” மல். 3:3

புடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்ணுகிறார். சுத்தமாக்குகிற வேலையைத் தாமே செய்கிறார். துன்பத்தை அதிகமாக்கி தம் பணியைக் கவனமாகச் செய்கிறார். நோக்கம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய விருப்பம் வீணாகாது. ஒரு சோதனையால் அவருடைய நோக்கம் நிறைவேறாவிடில் வேறு சோதனைகளைத் தருவார். தமது நோக்கம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் துன்பங்கள் ஏன் தொடர்ந்து வருகின்றன என்று கேட்கலாம். அதற்குப் பதில் இதுதான் உங்களிலுள்ள களிம்பு இன்னும் நீங்கவில்லை. நேரிடும் பெரும் துன்பங்களனைத்தும், பெரிய இரக்கங்களே. நீ பிற்காலத்தில் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களைப்போல் அனுபவிக்கும் சுதந்தரத்திற்கு உன்னை ஆயத்தமாக்கும் கருவிகள்தான் அவை. உங்கள் துன்ப நேரங்களில் நீங்கள் கைவிடப்பட்டவர்களென்று நினைக்க வேண்டாம். உன்னைத் தூய்மையாக்கும் வேலையைக் கர்த்தர்தாமே உடனிருந்து செய்கிறார். உங்கள் பெருமை, கோபம், தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகிய களிப்புகள் உங்களிலிருந்து நீங்க வேண்டும். நீக்கியவுடன் துன்பங்கள் முடிந்துபோகும். ஒருமுறை அவர் அனுமதியார். போதுமான நேரத்திற்கு மேலாக ஒருகணம்கூட நீங்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இவ்வாறுதான் அவர் உங்களை மகிமைப்படுத்துகிறார். அன்பனே, உன்னைப் புடமிடுகிறவர் உன் கர்த்தர். தம் வேலை முடியும்வரை உன்னுடன் அவர் இருக்கிறார். உனக்கு ஒரு தீங்கும் வராது.

பொன்போல் ஜோதி வீசுமட்டும்
என்னோடிரும் புடமிடுகையில்
சோதனை முடிந்த பின்னர் உம்
முகம் என்னில் காண்பீரே.

நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.

My Favorites

எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்

மார்ச் 12 "எப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்." 1.தெச. 4:17 தேவன் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துவது போலில்லாமல், தமது ஜனத்திற்கு வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார். இப்படி அவர் தமது ஜனங்களைச் சந்திப்பது எத்தனை இனிமையாயிருக்கிறது. அப்படி அவர்...
Exit mobile version