முகப்பு வலைப்பதிவு பக்கம் 15

உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக

அக்டோபர் 05

“உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக” பிலி. 1:9

எடுத்த எடுப்பில் எதையும் நம்பாமல், அதை வேதவசனத்துடன் ஒப்பிட்டு பரீட்சித்துப் பார்க்கவேண்டும். நலமானது எது? பயனுடையது எது? அவசியமானது எது? முக்கியமானது எது? சேதம் விளைவிப்பது எது என்று சோதித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேறுபடுகிற காரியங்களைப் பகுத்தறிந்து உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்ல கடமைகளை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். நல்ல கடமைகளை நிறைவேற்றுவதுடன், உயர்வான காரியங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். சிறந்த, ஒழுங்கான காரியங்களைத் தேடிப்பிடிக்கவேண்டும். ஒழுங்கான முறையில் வாழவேண்டும். வேதவாக்கியங்களை ஆராயவேண்டும். நற்காரியங்களுக்காக ஜெபிக்கவேண்டும். தெளிவான பார்வையுடையவனெ;றும் சத்திகரிக்கப்பட்ட இதயமுள்ளவனெ;றும் உலகம் உன்னில் காணவேண்டும்.

நியாயப்பிரமானம், சுவிசேஷம், தேவகிருபை, நல்உணர்வு, இதயமாறுதல் போன்றவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். வாய்வார்த்தைக்கும் உண்மையான உத்தமத்திற்கும், வேத சத்தியத்திற்கும் தவறுதலான உபதேசத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னெ;னவென்றறிந்து, உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்லவைகளைக் கண்டுபிடித்து அவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து nனுபவிப்பதைப் பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். தேவ ஞானத்திற்காகத் தேவ ஆவியானவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நலமான எதையும் மறக்காமல் செய்பவர் அவர். விசுவாசத்தோடு கேட்டாய் பெற்றுக் கொள்வாய்.

உமக்கூழியம் செய்வதே
என் மீதான கடமை
உமக்குக் கீழ்ப்படிந்திருப்பதே
என் பாக்கியம். சிலாக்கியம்.

நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

அக்டோபர் 04

“நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்” மத். 5:13

உலகத்தின் உப்பாயிருக்கவேண்டிய நம்மைப் பாவமானது சாரமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. தேவ கிருபையால்தான் அது சுத்திகரிக்கப்பட்டுச் சாரம் உள்ளதாக்கப்படுகிறது. இந்த நன்மைகள் கிறிஸ்துவால் உண்டாகிய அவருடைய ஜனங்களுக்குப் பயனுடையதாகப் பரவுகிறது. தம்முடைய பிள்ளைகளை இயேசு உப்பைப்போல் இருக்கு வேண்டுமென்கிறார். இவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கத்தக்கவர்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயனுடைய சாட்சிகளானவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவனாகிறான். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேதவசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும்.

பரிசுத்தவான்கள் இல்லாவிடில் இந்தப் பூமி எரியுண்டு அழிந்துபோயிருக்கும். தேவ பிள்ளைகள் இல்லாதிருக்கும் இடம் இருள் நிறைந்த இடம். பிரியமானவர்களே, நீங்கள் உப்பாக இருக்கிறீர்களா? உங்களைச் சூழ்ந்து இருப்போருக்கு உங்களால் நன்மைகள் உண்டா? உங்கள் பேச்சு, வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நீங்கள் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரங்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொள்ளுகிறார்களா? இவ்வாறெல்லாம் இருந்து நீங்கள் உப்பாக வாழ்வீர்களானால், மற்றவர்களுக்கு நீங்கள் பயனுடையவர்களாயிருப்பீர்கள். நன்மைகளையும் செய்வீர்கள். நீங்கள் பாவத்துக்கு மரித்து நீதிக்கு உயிர்த்திருப்பீர்கள். நீங்கள் உப்பென்று உண்மையானால் அதன் குணங்கள் உங்களில் விளங்கும். கிருபை பெற்றவர்களாகிய நீங்கள் உப்பாயிருப்பீர்களானால் சாரமுடையவர்களாகிய நலமானதைச் செய்வீர்கள். சாரம் உள்ள உப்பாயிருங்கள். கிறிஸ்துவே உங்களிலுள்ள சாரம்.

இயேசு எனக்காய் மரித்தார்
என்னில் சாரம் ஊட்டினார்
சாரம் உள்ள உப்பைப்போல்
என்றும் வாழ்வேன், அவருக்காய்.

விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்

அக்டோபர் 03

“விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்” ரோமர் 14:1

இந்த வார்த்தைகள் சில நேரங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தேவனுடைய ஜனங்கள் அவருடைய வார்த்தையைப் பற்றி அறிய வேண்டிய முறைப்படி சரியாக, ஆழமாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனால், அவர்களது விசுவாசம் பெலனற்றும் போகிறது. ஆண்டவர் அருளிய வாக்குகள், தேவத்துவத்தின் மகத்துவங்கள் போன்றவைகளை இவர்கள் நன்கு விளங்கிக் கொள்வதில்லை. இதனால் இவர்கள் பயம், சந்தேகம் ஆகியவற்றால் கலங்குகிறார்கள். தெளிவான, சரியான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்களானால், தேவ மகிமையைப் பற்றின நம்பிக்கையில் என்றும் மகிழ்ந்திருப்பார்கள்.

தேவன் உங்களை அங்கீகரிக்கவேண்டுமானால், லேசான விசுவாசம் போதாது. ஆழ்ந்த விசுவாசம் தேவை. தேவனுக்குள் மகிழ்ந்திருக்கவேண்டுமானால், தேவ வசன அறிவில் பலப்பட வேண்டும். அவரில் திடன் அடைய வேண்டும். அப்பொழுதுதான் விசுவாசத்தில் பெலப்படமுடியும். பெலன் கர்த்தரின் பேரில் வைக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. உங்கள் செயல்களையெல்லாம் கர்த்தருக்காகவே செய்ய வேண்டும். நீங்கள் அவருக்கே சாட்சிகளாயிருக்கவேண்டும். சந்தேகங்கள், விசுவாசத்தின் பெலன் குறைந்து விடுகிறது. தேவனுக்கு ஊழியம் செய்யாதிருக்கும்பொழுது உங்கள் திடனை இழந்து விடுகிறீர்கள். ஜெபத்தில் உறுதியாகத் தரித்திராதபொழுது உங்களுக்கு அவர் தரும் பெலன் கிட்டுவதில்லை. தேவ கிருபையை நீங்கள் சார்ந்திராதபொழுது, அவருடைய கிருபை உங்களை வந்தடைவதில்லை. எனவே, சகோதரரே, நாம் தேவனால் அங்கீகரிக்கப்படுவது தேவ கிருபையே. நமது ஆத்துமாக்கள் கிறிஸ்துவையே நோக்கியிருக்கட்டும். அவரையே நாம் என்றும் சார்ந்திருப்போம்.

நீ பெலவீனனானால் இயேசுவைப்பிடி
உன் பெலவீனம் நீங்க அவரையே பிடி
உன் பெலவீனம் நீக்க வந்திடுவார்
அவரில் விசுவாசங்கொண்டிரு.

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02

“முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்” ரோமர் 8:37

ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய சத்துரு. சாத்தான் சோதனைகளையும், நோய்களையும் மரணத்தையும் கொண்டுவரும்பொழுது தேவபிள்ளை இவைகளின்மீது ஜெயங்கொள்கிறான். இந்த வெற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்தான் கிடைக்கிறது. இயேசுவின் அன்பே இவர்களைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

இவர்களின் ஆண்டவரும் இரட்சகரும், சிநேகிதருமான இயேசு ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கிறார். இவற்றினால் விசுவாசிகள் வெற்றியடைகிறார்கள். இவ்வெற்றியை அடைவது இயேசு நாதர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே. பொறுமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் வெற்றியடையப் பெலன் தருகின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வியே காணாதது. இதுபோன்ற முழு வெற்றியை உலகில் எவரும் பெறமுடியாது. இயேசுவன்றி வேறு எவரும் வெற்றி தரவும் முடியாது. அவர் காட்டிய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால், நாம் வெறும் வெற்றிபெறுகிறவர்களாய் மட்டுமல்ல, முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவும் மாறுவோம். விசுவாசியே, இயேசுவின் ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், பாதுகாப்பின்மீதும் உன் நம்பிக்கையை வைத்திருக்க மறவாதே. அவரையே உனது முன் மாதிரியாகக் கொண்டிரு. அப்பொழுது வெற்றி உனக்கு நிச்சயம். வெற்றியடைபவன் மகுடம் பெறுவான். உன் வெற்றிக்கிரீடம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எம் தலைவர் இயேசுவே,
துன்பம் அவருக்காகப்பட்டால்
இன்ப வெற்றியைத் தருவார்
என்றும் வெற்றி வீரராவோம்.

இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்

அக்டோபர் 01

“இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்” ரோமர் 5:11

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் சகல பாடுகளையும் சகித்து, நமக்கு நீதியுண்டாகப் பாவமன்னிப்பையும், நித்திய பாக்கியத்தையும் சம்பாதித்தார். அவர் பலியானது நம்முடைய பாவங்களுக்காகவும், சர்வ லோகத்தின் பாவத்திற்காகவுமே. அவர் செய்த அனைத்தும் நற்செய்தியாகச் சுவிசேஷங்களில் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதினால் சமாதானம் பெறுகிறோம். மனுக்குலத்திற்குத் தேவையானதை எல்லாம் அவர் கல்வாரியில் செய்து முடித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழ்வில் சமாதானம் அடைய முடியாது.

ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புரவாக்குதலில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் நம்மால் அவரோடு மகிழ்ச்சியாக நடக்க முடியாது. முன்னே நாம் அதைப் பெறாமலும், நம்பாமலும் இருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் கல்வாரி இரத்தத்தினால் அதைப் பெற்று இருக்கிறோம். முன்னே நாம் அதன் தன்மையையும், அருமையையும் அறியாமலிருந்தோம். இப்பொழுது அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இரக்கமே நமக்குத் தைரியம் கொடுக்கிறது. இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு. நமது சமாதானம் அவரே. அவருடைய நீதியின் மேலும், மகத்துவத்தின் மேலும் நாம் நமது கண்களை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இதை மறந்தால் நாம் சாத்தானால் அடிமைகளாக்கப்படுவோம். நமது குற்றங்கள் நம்மைக் கலங்கடிக்கும் போதும், பயம் நம்மை ஆள்கொள்ளும்போதும், நாம் அவருடைய கல்வாரிப் பலியை விசுவாசித்தால், பற்றிப்பிடித்தால், நாம் தைரியசாலிகளாகவும், நீதிமான்களாகவும் பாக்கியமுள்ள தேவ மைந்தர்களாகவும் இருப்போம்.

இயேசுவே, உம் பிராயச்சித்தம்
எவருக்கும் அருமையானதே
சிலுவையையே நித்தம் யாம்
கண்டு பற்றிக் கொள்வோம்.

உண்மையுள்ள தேவன்

செப்டம்பர் 30

“உண்மையுள்ள தேவன்” உபா. 7:9

மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில் யாவற்றையும் மனம் திறந்து சொல்லலாம். அவர் உண்மையுள்ளவராகையால் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறார். நம்மைக் கண்டிக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்கு அறிவிக்கிறார். துன்பங்களில் நம்மை ஆதரித்து, நம்முடைய கஷ்டங்களில் நம்மை மீட்கிறார். நமது பகைவரை வென்று அடக்குகிறார். நமது இருளான நேரங்களில் நமக்கு வெளிச்சம் தருகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பது நமக்குக் கிடைக்கும் தேவ இரக்கத்திலும், நம்மைப் பாதுகாக்கும் கிருபையிலும், நமது குறைகளிலும், நாம் சுமக்கும் சிலுவையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மகத்துவங்களை நமக்குக் காண்பிக்கவும், தமது வசனத்தை அதிகாரத்துடன் செலுத்தவும், நம்முடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவும் தமது சித்தத்தைச் செயல்படுத்தவும், நமக்கு சகல நன்மைகளைப் பொழியவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏதேன் தோட்டத்திலிருந்து பாவம் செய்த ஆதாமை வெளியேற்றினதாலும், பெருவெள்ளங்கொண்டு பாவிகளான மக்களை நோவாவின் காலத்தில் அழித்ததினாலும், பாவ மக்களை மீட்கத் தமது குமாரனையே தந்ததினாலும், நமது ஆன்மீக வாழ்க்கையில் நம்மைத் தாங்கி திடப்படுத்தத் தம் ஆவியானவைர அருளினதாலும் அவருடைய நீதியும் உண்மையும் விளங்குகின்றன. அவர் நமது அடைக்கலம். கன்மலை. இளைப்பாறுதல். அவர் உண்மையுள்ளவராதலால் நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக.

கர்த்தர் மேல் வைத்திடு
உன் பாரமனைத்தையும்
உண்மையுள்ள அவர் தாம்
உன் பளு நீக்கிக்காப்பார்.

ஆரோன் பேசாதிருந்தான்

செப்டம்பர் 29

“ஆரோன் பேசாதிருந்தான்” லேவி. 10:3

ஆரோன் மிகப்பெரிய துன்பத்தில் இருந்தான். அவனுக்கு ஏற்பட்ட சோதனை மிகப்பெரியதே. அந்தச் சோதனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்களே. அவனது இரண்டு குமாரர்களும் மடிந்துவிட்டனர். தங்கள் துணிகரமான பாவத்திற்காகத் திடீர் மரணம் அடைந்தனர். தேவன் அவர்களைக் கொன்று போட்டார். தேவனுடைய வைராக்கியம் கோபம் எப்படிப்பட்டது என்று காட்ட மக்கள் காணும்பொழுதே மரித்துப்போனார்கள். அவர்களுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் நித்திய வாழ்வைக் குறித்து அறியாதிருந்தார்கள். இதனால் தாம் மகிமைப்படுவதாகக் கர்த்தர் கூறினார். ஆரோன் பேசாதிருந்தான். தேவன் செய்தது நீதியோ, இல்லையோ, சரியோ, தவறோ, என்று முறுமுறுத்து அவன் கேள்வி கேட்கவில்லை. அத்தகைய பண்பு நமக்கு வேண்டும். இவை போன்ற காரியங்கள் தேவ சித்தத்துடன்தான் நடக்கிறன. இது அவரை யாவற்றிற்கும் மேலாக நேசிப்பதாலும் தண்டனைக்குத் தான் பாத்திரன்தான் என்று எண்ணுவதாலும் ஏற்படுகிறது.

நண்பரே, இந்தக் காரியம் நம்மோடு பேசி, நமக்கு நேரிடும் பெருந்துன்பங்களில் நம்மை ஆரோனைப் போலிருக்கத் தூண்டுகிறது. நமது முறைப்பாடுகள் எல்லாவற்றிலும், தேவ அன்பு இரக்கம் பற்றி நமக்கு உண்டாகும் ஐயங்களையும் கடிந்து கொள்கிறது. பக்தர்களையும் துன்பங்கள் விடவில்லை என்பதை நமக்கு எடுத்துக்காட்டி நம்மை ஆறுதல்படுத்துகிறது. இவ்வாறு நாம் எச்சரிக்கப்படுவதால் எவ்விதத் துணிகரத்திற்கும், அசட்டைக்கும் நாம் இடங்கொடுக்கக் கூடாது. நமது தேவன் வைராக்கியமுள்ளவர். அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்கிறார். கர்த்தர் நீதியுள்ளவர். அவர் வழிகள் நீதியும் செம்மையுமானவை.

யாது நடந்திடினும் யான்
உமக்கடங்கி யிருப்பேன்
உம் சித்தம் என் பாக்கியம்
எனக் கூறி மகிழ்ந்திடுவேன்.

கர்த்தர் யோசேப்போடே இருந்தார்

செப்டம்பர் 28

“கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” ஆதி. 39:21

யோசேப்பு, தன் தகப்பனைவிட்டுப் பிரிக்கப்பட்டு, தன் வீட்டையும் விட்டு, அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான குற்றம் சாட்டப்பட்டுக் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் கர்த்தர் அவனோடு இருந்தார். நம்முடைய வாழ்வில்கூட சோதனைகள் பெருகியிருக்கும்போதுதான் தேவ தயவு காணப்படும். நாம் நீதியினிமித்தம் துன்பப்படும்பொழுதுதான் சிறப்பு ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். யோசேப்புக்கும்கூட அவனுக்கு வந்த கஷ்டங்கள் எல்லாவற்றையும் தேவன் நன்மையாக மாற்றினார். கர்த்தர் நம்முடன் இருந்தால், சிறைச்சாலையும் அரண்மனையாகும். துயரங்களிலும் பண்டிகை ஆசரிக்க முடியும். யோசேப்போடு தேவன் இருந்ததால் அவனை ஆதரிக்க, ஆறுதல்படுத்த, அவனோடு பேச சிறைச்சாலை தலைவனிடத்தில் தயவு கிடைக்கப்பண்ணினார். அவனுக்குச் சிறப்பு வரங்களைக் கொடுத்தார்.

அவனை எகிப்தை ஆளத்தகுதிப்படுத்தித் தம்முடைய நாமத்தில் துன்பப்படுகிற யாவருக்கும் ஆறுதல்படுத்தும் பாத்திரமாகவும் ஆக்கினார். விசேஷித்த மகத்துவத்தோடு கர்த்தர் யோசேப்போடே இருந்தார். மேன்மையடையும்முன் அவன் தாழ்த்தப்பட்டான். சிறைச்சாலைதான் அரண்மனைக்குப் போகும் நேர்வழியாகும். சிலுவையின் வழியாகத்தான் மகுடம் பெறமுடியும். கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆளவேண்டுமானால், அவரோடு பூலோகத்தில் துன்பத்தை அனுபவிக்கவேண்டும். பிரியமானவரே, கடமை உம்மை எங்கு வேண்டுமானாலும், துன்பம் உம்மை எங்கு துரத்திடினும் கர்த்தர் உம்மோடு இருப்பார். கர்த்தராகிய சூரியன் நமது வாழ்விலிருக்கும்பொழுது, எந்தத் துன்பமாகிய மேகம் நம்மை மூடினாலும் நாம் அஞ்சத் தேவையில்லை. தேவ சமுகம் நமக்கு இன்பமாக இருக்கும். எவ்வளவு அருமையான உண்மை இது.

நீர் என்னோடிருப்பதே
எந்நாளும் என் வாஞ்சை
எத்துன்பம் வந்திடினும்
முறுமுறுக்காது ஏற்பேன்.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

என்னைச் சோதித்துப் பாரும்

செப்டம்பர் 26

“என்னைச் சோதித்துப் பாரும்” மல்.3:10

தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது அவரைச் சோதிப்பது போலாகும். நாம் எவ்வாறு அவரைச் சோதிக்கலாம்? அவருடைய வார்த்தையை நம்பி, அதை ஜெபத்தில் வைத்து, விழித்திருந்து, அவர் கட்டளையிட்டபடிச் செய்து, அவர் தாம் சொன்னபடிச் செய்கிறாரா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். எப்பொழுது சோதிக்கலாம்? நாம் பாவப்பாரத்தோடு சஞ்சலப்படுக்கையில் அவர் நம்மை மன்னிக்கிறாராவென்றும், நாம் துன்பப்படுக்கையில் அவர் இரக்கம் காட்டி நம்மை விடுவிக்கிறாராவென்றும், நாம் மனம் கலங்கி நிற்கையில் நம் கண்ணீரைத் துடைக்கிறாராவென்றும், வறுமை வேதனையால் நாம் வாடும் பொழுது, நமக்கு ஆதரவளித்து நம்மை மீட்கிறாராவென்றும் நாம் அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

அவருடைய ஊழியத்தை நாம் செய்யும்பொழுது நம்மை தெய்வபக்திக்கும், உயிருள்ள வாக்குத்தத்தங்களுக்கும் பங்குள்ளவர்களாக நம்மை மாற்றுகிறாரா என்று அவரைச் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு முன்னே கோடானகோடிப்பேர் அவரைச் சோதித்து, அவர் உண்மையுள்ளவர் என்று கண்டுகொண்டார்கள். அவரைச் சோதிக்குமளவுக்கு நாம் என்ன செய்யக்கூடும் என்று நம்மையே முதலில் சோதித்துப்பார்ப்போம். முதலில் விசுவாசத்தில் பெலப்படுவோம். தேவையான பொழுதெல்லாம் அவருடைய உண்மைக்குச் சாட்சிகளாக விளங்குவோம். என்றைக்கும் அவர் தமது வாக்கில் உண்மையுள்ளவர் என்று சான்று பகர்வோம். அவரை நாம் நம்பினால் பாக்கியவான்களாயிருப்போம்.

பொய் சொல்ல தேவன் மனிதரல்ல
அவர் என்றும் வாக்கு மாறாதவர்
சத்தியபரன் அவரையே என்றும்
நம்பி நாம் பேறு அடைவோம்.

Exit mobile version