செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர் பக்கம் 2

எனக்கு எதிரே உத்தரவு சொல்

செப்டம்பர் 08

“எனக்கு எதிரே உத்தரவு சொல்” மீகா 6:3

நம்முடைய நடத்தை பல நேரங்களில் மாறக்கூடியதாய் இருக்கிறது. தேவனைவிட பெரியதாக உலகத்திலும், உலகத்தில் உள்ளவற்றிலும் அன்பு கூர்ந்தால் தேவன் அங்கு அசட்டை செய்யப்படுகிறார். நாம் அவரைக் குறைவுபடுத்துகிறோம். அவரை நேசிக்காமல் இருக்கும்போது, அவருக்கு மிகுந்த விசனமளிக்கிறோம். இதைக் கண்டு, அவர் மனம் நொந்து, என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? எதினால் உன்னைத் துக்கப்படுத்தினேன் எனக்கு எதிரே பதில் சொல் என்கிறார்.
நீ தனி ஜெபத்தை அசட்டை செய்கிறாயா? கிருபையின் வசதிகளைக் குறித்து கவலையற்றிருக்கிறாயா? வேதாகமத்தை வாசியாமல் அசட்டையாயிருந்து அதை ஒதுக்கி வைத்து விட்டாயா? தேவனே நேசிக்க வேண்டிய நீ உலகத்தின்மேல் அன்பு செலுத்துகிறாயா? ஏன் அவரை விட்டுப் பின்வாங்கினாய்? இதனாலேயே அவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்.

மேலும் அவர், என்னில் நீ கண்ட குறை யாது? என் அன்பில் குறை கண்டாயா? என் வாக்குகளை நான் நிறைவேற்றவில்லையா? தேவனுக்குரிய மகத்துவமான காரியங்களை நான் செய்யவில்லையா? ஏன் என்னை அசட்டை செய்தாய்? என்னைவிட உலகத்தையும், சத்துருவையும் ஏன் அதிகம் நேசித்தாய்? எனக்கு எதிரே உத்தரவு சொல். என்று கேட்கிறார். விசுவாசியே உன்னிடம் தவறுகள் இல்லையா? உன் ஆண்டவரை நீ துயரப்படுத்தவில்லையா? உன் பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி, ஆண்டவரின் அன்பினுள் வந்து சேர். அவருடைய சமுகத்திற்குள் வா. அவருடைய அன்புக்குள் உன்னை மறைத்துக்கொள்.

நான் நிர்பந்தன், தேவா
என்னைத் தள்ளாதிரும்.
உமது சமுகத்திலேயேதான்
நான் என்றும் மகிழட்டும்.

நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்

செப்டம்பர் 12

“நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” ஆதி. 6:9

நோவா தேவனோடு வாழ்ந்து வந்தான். தேவனோடு ஒன்றித்திருந்தான். தேவன் பேசுகிற குரலைக்கேட்டு அவருடைய வழியைத் தெரிந்துகொண்டு, அவருடைய நினைவிலே மூழ்கி அவருடைய சித்தமே சரி என்று ஒப்புக்கொண்டான். தேவனோடு உரையாடுவதென்றால் அவனுக்கு மிகப்பிரியம். ஆலோசனைக்காக அவரண்டை அவன் செல்வான். அவரிடத்தல் அன்புடன் பழகுவான். தேவனே அவருடைய சிறந்த நண்பர். அவன் அவருடைய சமுகத்தை விரும்பி, அவருடன் நடந்து, அவருடைய நட்பில் மகிழ்ந்தான். பூவுலகில் இருந்து கொண்டே, குமாரரையும் பெற்று வாழ்ந்து கொண்டே நோவா தேவனோடு சஞ்சரித்தான். அவருடைய வழியில் நடந்தான். ஒவ்வொரு நாளும் பல நன்மைகளைப் பெற்றான்.

அவனுக்குப் பக்தி இருந்ததுடன் கவனமும் இருந்தது. தேவ சமுகத்தையே அவன் பாக்கியமாகவும், மேன்மையாகவும், பெரியதாகவும் எண்ணினான். இந்த மனிதனைப்போலவே நாமும் தேவனுடன் பழகும் சிலாக்கியம் உள்ளவர்களே. நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த ஐக்கியத்தைப்பெற்று, அவரோடு சஞ்சரிக்கலாம். தேவன் நம்மோடுகூட இருக்கிறார். நாம் அவரோடு கூட இருக்கிறோமா? அவரோடுகூட நடக்கிறோமா? அன்பானவரே, நீர் தேவனோடு வாழ்கிறீரா? இன்று அவரோடே நடந்ததுண்டா? தேவ சமுகத்தினாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றீரா? அவருடைய சமுகத்தில் நீங்கள் இருந்து உற்சாகமடைந்தீர்களா? தேவனோடு சஞ்சரிப்பது பெரும் பாக்கியம். இது அவருடைய பெரிதான இரக்கம். கிருபை. நீங்கள் தேவனோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.

லோகம் ஆளும் ஆண்டவர்தாம்
என் உயிர் நண்பராம்.
அவரோடு சஞ்சரிப்பேன்
என்றும் பெரும் பேறு பெறுவேன்.

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?

செப்டம்பர் 16

“மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?” மல். 3:8

இந்த கேள்வி மிகக் கேவலமானது. மனிதன் தேவனை வஞ்சிப்பதென்பது எத்தனை துணிகரமான செயல்! நாம் தேவனை எவ்வாறு வஞ்சிக்கிறோம். அவருக்குச் சொந்தமானவைகளை நாம் எடுத்துக்கொள்ளாமற்போனாலும், நாம் அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தாமலிருந்து அவரை வஞ்சிக்கிறோம். ஆதலால், அவர் நம்மைப் பார்த்து, நீங்கள் என்னை வஞ்சித்தீர்கள் என்கிறார். அவருடையவைகள் யாவற்றிலும் நாம் அவரை வஞ்சிக்கிறோம். அவருக்காகச் செலவிட வேண்டிய அவருடைய நேரத்தை எடுத்துக்கொண்டோம். அவருடைய பொருளைத் திருடிக்கொண்டோம். பிறருக்குக் கொடுக்க வேண்டியவைகளை நமக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டோம். அவருடைய ஊழியத்தை நாம் செய்வதில்லை.

நம் இருதயம் அவருக்குச் சொந்தம். நாம் அதைக் கொடுக்கவில்லை. மாறாகச் சிலுவைகளுக்குக் கொடுத்தோம். உலகத்தையே அதிகம் நாடி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நேசித்தோம். அவர் தந்த திறமைகளை அவருக்கென நாம் பயன்படுத்தவில்லை. அவருடைய பணிகளை விட்டு நமது பணிகளையே செய்தோம். இப்படி நடப்பது பாவம். அவரை வஞ்சிப்பது கொடுஞ்செயல். நம்மால் அவருடைய கோபத்திற்குமுன் இமைப்பொழுதுகூட நிற்கமுடியாது.

பிரியமானவர்களே, தேவனை நாம் வஞ்சித்துக்கொண்டிருக்கிறோமா? இவ்வாறானால் உடனே நமது குற்றத்தை அறிக்கை செய்துவிட்டு விடுவோம். நமது மீறுதல்களை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்வோம். முதலாவது தேவனுக்குரியவைகளை அவருக்குச் செலுத்துவோம். நமது உள்ளத்தில் உண்மையும், நடக்கையில் உத்தமமும் இருந்தால் எத்தனை நலமாயிருக்கும்.

நான் உம்மை வஞ்சித்தேன்
நாதா என்னை மன்னியும்
கிறிஸ்துவின் இரத்தம் மீட்டதால்,
என்னைக் கடாட்சித்தருளும்.

என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்

செப்டம்பர் 09

“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7

வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.

இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.

உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

செப்டம்பர் 18

“அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்” கலா. 5:13

தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எக்காரியமானாலும் அதன் வேர் அன்புதான். அன்பு விசுவாசத்திலிருந்து ஆரம்பமாவதால், எல்லா நற்கிரியைகளையும், பிறருக்கு நாம் செய்கிற எச்செயலையும் அன்பில்லாமல் நாம் செய்தால் அதில் பலன் இருக்காது. கிறிஸ்தவத்தில் அதிமுக்கியமான காரியம் அன்புதான். வரங்கள் மேன்மைகள், புகழ், தியாகம் இவை யாவுமே இருக்கலாம். ஆனால் அன்பு இல்லாவிடில் வெறும் கைத்தாளம்போலவே இருப்போம். சப்தமிடுகிற வெண்கலம் போலத்தானிருப்போம். மனித இயற்கை பிறர்மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறது. உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எத்தனையோ பேருக்கு நன்மை செய்திருக்கக்கூடும். பிறருக்கு உதவி செய்ய உங்களுக்கு மனம் வந்ததா? அவர்கள் உயர்ந்து விடுவார்களோ என்று நீங்கள் நினைக்கவில்லையா? எங்கே உங்கள் அன்பு? அன்பு காட்டாத நீங்கள் கிறிஸ்தவர்களா?

அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது. இதுதான் நற்செய்தியின் சிறப்பு. தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பு அவரைப் போன்றது. அன்பு நோயாளிகளை குணமாக்கும். துயரத்தில் ஆறுதல் தரும். ஆடையற்றோருக்கு ஆடையளிக்கும். பசித்தவர்களைப் போஷிக்கும். வறியவர்களை வசதியுள்ளவர்களாக்கும். வனாந்தரமான இவ்வுலகம் அன்பினால் செழிக்கும். அன்பினால் ஏவப்பட்டுக் கைமாறு கருதாது நன்மைகளைக் செய்யுங்கள். தூய்மையான மனதுடன் ஓருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? அன்பில் வளருகிறீர்களா? அல்லது பெருமை, பொறாமையில் வளருகிறீர்களா? தூய அன்போடு அன்புகூருங்கள். கிறிஸ்துவின் மக்களிடம் அன்புகூர்ந்து, அவர் தம்மைப் பகைத்தவர்களிடம் அன்புகூர்ந்ததுபோல் நடவுங்கள். அப்பொழுது பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

ஓர் இடம் போய்ச்சேருவோர்
ஒரே நம்பிக்கையுள்ளவர்கள்
அன்பின் கட்டால் ஒருமித்து,
மகிழ்ந்து வாழ்வார் சுகித்து.

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.

Exit mobile version