இனி குழந்தைகளாய் இராமல்

யூலை 16

“இனி குழந்தைகளாய் இராமல்” எபேசி. 4:14

இந்த வசனம் ஓரே நிலையையல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. நாம் எப்போதும் பிள்ளைகளைப்போல இருந்தாலும் அறிவில் பெரியவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் வளர்வதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கியிருப்பதுமல்லாமல், அவர்கள் வளர வேண்டும் என்று கற்பிக்கிறார். நாம் அறிவில் வளர வேண்டும். சிறு பிள்ளைகள் சிறிய காரியங்களில் திருப்தியடைகிறார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. நாம் பலப்பட்டு கிறிஸ்துவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும். நம் சத்துருக்களுக்கு எதிராகத் திடன் அடைந்து கர்த்தருடைய காரியத்தில் தைரியம் பெற்று திவ்வி காரியங்களில் உறுதியாய் இருக்க வேண்டும்.

நம்முடைய விசுவாசமும், நம்பிக்கையும், வைராக்கியமும் அன்பும் பெருகவேண்டும். நாம் இருக்கிறபடியே இருக்கக்கூடாது. குழந்தைகளாகவும் வளரவேண்டும். நாம் வளரும்படி ஞானத்திலும், பக்தியிலும் பெருக வேண்டும். நாம் வளரும்படிக்கு கிறிஸ்துவை உள்கொண்டு சகல கிருபைகளையும் முயற்சி செய்து தேவனோடு ஐக்கியப்பட வேண்டும். நாம் வளரும்படிக்கு தேவன் தம்முடைய வசனத்தையும், நியமங்களையும், தமது குமாரனையும் தந்திருக்கிறார். நாம் பூரணராகும்படிக்குத் தம்முடைய ஊழியக்காரரையும் தாம் செய்து முடித்த கிரியைகளையும், தம்முடைய சத்துருக்களையும்கூட பயன்படுத்துகிறார். நாம் திராட்சை செடிபோலவும், தொழுவத்தில் உள்ள கன்றுகுட்டிகளைப்போலவும் வளருவோம் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். ஆதலால் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வாக்கியத்தில் கண்டிருக்கிற எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வோமாக. நாம் குழந்தைகளாய் இருக்ககூடாது.

பிதாவே எப்போதும்
குழந்தைகள் போலிராமல்
எங்கள் ஒளி மென்மேலும்
பிரகாசிக்க செய்யும்.

உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.

யூலை 06

“உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.” சங். 103:3

கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த வியாதி வுருத்தமானதும் அருவருப்பானதும் ஆகும். இது ஞாபகத்தையும் பாசத்தையும், மனசாட்சியையும், சித்தத்தையும் முழு மனுஷனையும் கெடுக்கும். நம் எல்லாருக்கும் இந்த வியாதி உண்டு. இதனால் நாம் யாவரும் வருத்தப்படுகிறோம். கர்த்தராகிய இயேசுதான் நம்மைக் குணமாக்க முடியும். அவர் பெரிய பரிகாரி.. அவரிடத்தில் போனால் சுகமடைவோம்.

இப்படி நீங்கள் தைரியம் கொள்ளும்படி அவர் எப்படிப்பட்டவர் என்று கவனியுங்கள்.அவர் அளவற்ற ஞானமும், உருக்கமும், திறதையும் உள்ளவர். அவரைப்போல் அனுபவம் மிக்க வைத்தியர் எவருமில்லை. அவர் தொட்டால் எந்த வியாதியானாலும் சுகமாகிவிடும். அவரின் ஒளடதமோ திரு இரத்தம், திரு வசனம், பரிசுத்தாவியானவர் என்பவைகள். துன்பங்களாலும், நஷ்டங்களாலும், மெய் உணர்வினாலும், இரகசிய கிரியைகளினாலும் இவைகளை நம்மில் பெலன் செய்யப்பண்ணுகிறார். அவர் சிகிச்சை அளித்து சுகமடையாமல் இருப்பது யாருமல்ல. தாவீதின் வியாதி கொடியதாயிருந்தாலும், என் நோய்களையெல்லாம் குணமாக்கினார் என்கிறான். இதை உணர்ந்து சொல்கிறான். ஆனால் இதை நம்பலாம். நீ பாவியானால் நீ வியாதிஸ்தன். உன் வியாதி மோசமானது. நீ இயேசுவண்டை போ. சத்தியத்தைவிட்டு விலகினவனே, நீ வியாதியாய் இருக்கிறாய். நீயும் இயேசுவண்டைக்கு போ. விசுவாசியே, நீ முற்றிலும் சுகமாக வேண்டுமென்று விரும்புகிறதில்லையா? அப்படிhனால் இன்றே இரட்சகரண்டைக்குப் போ. கர்த்தாவே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொல்.

மன்னித்துக் கிருபை அளித்து
பாவப் பிணியை நீக்கும்
ஆத்தும சுகம் ஈந்து
பூரண சுத்தம் தாரும்.

நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்

ஜீலை 28

“நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்” யோவான் 13:18

விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும் ஊழியர்களாகவும், சாட்சிகளாகவும் இருக்கத் தெரிந்துகொண்டார். அவர் இவர்களைத் தெரிந்துகொண்டதால்தான் இவர்கள் அவரைத் தெரிந்துக்கொண்டார்கள். அவர் தாம் தெரிந்துக் கொண்டவர்களை அறிவார். ஆகவே அவர்களுடைய மனம், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, பயம், துக்கம், குறைவு இவைகளையெல்லாம் அறிந்திருக்கிறார். தேவன் இவர்களைத் தெரிந்துக்கொண்டதால் ஆறுதல் அடைகிறார்கள். இவர்களை அங்கீரித்து மற்றவர்களினின்று இவர்களை வித்தியாசப்படுத்துகிறார்.

இப்படி இயேசு தம்முடைய ஜனங்கள் எல்லாரையும் அறிந்திருக்கிறபடியால் அவர் தேவனாய் இருக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு யாரும் எண்ணமுடியாத இக்கூட்டத்தாருடைய தொகை, பேர், இருப்பிடம், எண்ணம், மனநிலை எல்லாவற்றையும் திட்டமாய் அறிந்திருக்க முடியும். அன்பர்களே நம்முடைய பெருமையைத் தாழ்த்த, விசுவாசத்தை கனம்பண்ண, குறைகளை நிறைவாக்க நம்முடைய வழிகளை உறுதிப்பண்ண, நற்கிரியைகளுக்குப் பலன் அறிக்கத்தக்கதாக அவர் நம்மை அறிவார். இயேசு நான் எங்கிருந்தாலும், வீட்டிலும் வெளியிலும், தேவாலயத்திலும் எப்படி நடக்கிறேன் என்று அறிவார். தகப்பன் தன் பிள்ளையை அறிந்திருக்கிறதுப்போலவும், கணவன் தன் மனைவியை அறிந்திருக்கிறதுபோலவும், அவர் தாம் தெரிந்துகொண்டவர்களை அறிவார். இவ்விதமாய் என்னையும் அறிவார்.

தேவன் நம்மை மீட்டது
நித்திய சந்தோஷ கிருபையே
நேசத்தால் சேர்த்தார்
இலவசமாய் மீட்டார்.

ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20

“ஜெயங்கொள்ளுகிறவன்” வெளி 2:17

ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அடங்கமாட்டார்கள். கிறிஸ்தவன் அவர்களோடு சமாதானமாகக் கூடாது. முழுவதும் அவர்களை ஜெயிக்கும்வரை அவர்களோடு போராடவேண்டும். இந்த உலகத்தை மேற்கொள்ள வேண்டும். சாத்தானை ஜெயிக்க வேண்டும். தன் சொந்த இருதயத்தை அடக்கி ஆளவேண்டும்.

மோட்சம் ஜெயவீரரின் ஸ்தலம். அங்கே சொல்லிமுடியாத மேன்மைகள் அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய இரட்சிப்பின் தலைவராகிய இயேசுவானவர் ஜீவவிருட்சத்தின் கனியையும் மறைவான மன்னாவையும் அவர்களுக்குப் புசிக்க கொடுப்பார். புதிய பெயர் எழுதப்பட்ட வெள்ளைக் கல்லையும், விடி வெள்ளி நட்சத்திரத்தையும், வெள்ளை அங்கியையும், அவர்களுக்குக் கொடுப்பார். தேவனுடைய ஆலயத்தில் ஒளிசுடர்களாய் நிறுத்தப்பட்டு, ஜீவ கிரீடத்தைத் தரித்து, அவரோடு சிம்மாசனத்தில் உட்காரும் சிலாக்கியத்தையும், பெறுவர். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இப்படிப்பட்ட பாக்கியங்கள் வாக்குப்பண்ணப்பட்டுள்ளபடியால், நாம் தைரியப்பட்டு உற்சாகமடைவோமாக. அவர் கொடுக்கும் எந்தக் கனமும் அவர் அளிக்கும் எந்த மேன்மையும், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு உண்டு. ஆகவே நாம் போராடி யுத்தம் செய்வோமாக. தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்து இயேசுவின் கிருபையில் பலப்பட்டு பந்தையப் பொருளை நோக்கி போராட மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோமாக. நாம் விசுவாசத்தினால் ஜெயங்கொள்ளுவோமாக.

என் சத்துருக்கள் மூவரையும்
போராடி ஜெயிப்பேன்
உலகம் மாம்சம் பிசாசு
ஜெயித்து அவரைப் பற்றுவேன்.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்

யூலை 12

“அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்” ஏசாயா 8:14

இது இயேசுவைப்பற்றி ஏசாயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், துன்பங்களுக்கும் நாம் தப்பி ஓடவேண்டிய அடைக்கலப் பட்டணம் அவர்தான். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தான் நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், அங்கீகாரத்தோடும் கிருபாசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நாம் ஆராதிக்கலாம். கிறிஸ்துவினாலே தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நாம் அறிய வேண்டிய காரியங்களைப்பற்றி நமக்குப் போதிப்பார். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்கு வேண்டிய சகலமும் பயத்தினின்று விடுதலையும், சத்துருக்களை எதிர்க்க பலனும் துன்பங்களின் உதவியும், துக்கங்களால் உள்ளான பரிசுத்தமும், இந்த உலகத்தில் இருக்கும் மட்டும் சுகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

நண்பரே, எவ்வகை துன்பத்திலும் நீ இயேசுவண்டை போக வேண்டும். உன் தேவை யாவையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள பார்க்க வேண்டும். தேவன் உனக்கு எண்ணளவு கிருபையுள்ளவரென்று காட்டி எல்லா மெய் விசுவாசிகளுக்கும் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று அவர் விவரிக்கிறார். அவர் உன் பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறாரா? நீ தேவனைக் கிறிஸ்துவுக்குள் எப்போதாவது சந்தித்ததுண்டா? நீ கிறிஸ்துவில் தேவனைத் துதிப்பது உண்டா? அவர் உனக்குப் பரிசுத்த ஸ்தலமானால் அவரை மகிமைப்படுத்தப் பார். எந்த ஆசீர்வாதத்தையும் அவரிலே பெற்றுக்கொள்ளத் தேடு. எந்தத் துன்பத்திலும் மோசத்திலும் அவரண்டை போய் அப்படிப்பட்ட மகிமையின் நிலை உனக்குக் கிடைத்ததற்காக அவரை ஸ்தோத்திரி. இங்கே நீ சுகபத்திரமாய் இருக்கலாம். இங்கே உனக்குச் சமாதானம் உண்டு. கிருபையும் இருக்கும்.

இயேசுவில் எனக்கு
சுகம் பெலன் யாவும் உண்டு
இரட்சகரே நீரே என்றும்
என் அடைக்கலமாய் இரும்.

என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்

யூலை 22

“என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” நீதி. 8:32

கர்த்தருடைய வழிகள் பலவகையானவை. அவை எல்லாம் மகிமைக்கும், கனத்திற்கும், சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் நம்மை நடத்தும். இரட்சிப்பின் வழி குற்றத்தினின்றும் பாவத்தின் வல்லமையிலிருந்தும், தண்டனையினின்றும் நம்மைத் தப்புவிக்கும். சமாதான வழி சமாதானத்தை அடையவும் அதைக் காத்துக் கொள்ளவும் ஏற்ற பரிசுத்த வழி ஆகும். அதிலே சமாதானத்தை அடைந்து அதில் விருத்தியடைவோம். சத்திய வழியும் உண்டு. சத்தியத்தை அறிந்து, அனுபவம் பெற்று அதில் நடந்து வளருவோம். இன்னும் மேலான வழி அன்பின் வழியாகும். அதனால் நமது விசுவாச மார்க்கத்தை அலங்கரித்து பிறர்க்கு நம்மை செய்கிறோம். தங்கள் கண்களை அந்த வழிகளின்மேலும், இருதயத்தை அவ்வழிகளிலும், தங்கள் பாதங்களை அவைகளிலும் விசுவாசிகள் வைக்கிறார்கள்.திடமாய்ப் பார்த்து, செம்மையானதைத் தெரிந்து, பயபக்தியாய் நடந்து, விழிப்பாய் ஜீவனம்பண்ணி, விருத்தி அடைந்து, மேன்மையாய் நடந்து, மகிமையாய் முடிக்கிறார்கள். இதை வாசிக்கும் நண்பரே, நீவிர் கர்த்தருடைய வழிகளில் நடக்கிறீரா? மற்ற எல்லாவற்றையும்விட அவருடைய வழிகளையே நேசித்து அவைகளை நல்லது என்று எண்ணுகிறீரா?

விசுவாசத்தால் மட்டுமே இவ்வழிகளில் பிரவேசிக்க முடியும். அவற்றிலே நடக்கவும் முடியும். விசுவாசத்தினாலே கிருபையைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். விசுவாசத்தினாலே தேவனோடு சமாதானம் பெறுகிறாம். விசுவாசத்தினால் இதயம் சுத்தமாகிறது. தேவ சத்தியத்தை விசுவாசத்தால் மட்டுமே அறிகிறோம். விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது. என் வழிகளைக் காப்பார்கள் என்று வேத வசனம் புகழ்ந்துக் கூறுகிறது.

அலைந்து திரியும் என்னை
உம்மிடம் வைத்துக்கொள்ளும்
நீர எனக்குப் போதியும்
என் நாவு உம்மைப்பாடும்.

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14

“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1

கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.

அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.

கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்

யூலை 13

“இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.” எபேசியர் 2:4

பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிறார். அது துன்பப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் காட்டும் தயவு. அதைக் கொண்டுதான் நம்முடைய துன்பங்களை அவர் சரியாய் அறிந்து உணருகிறார். பழைய ஏற்பாட்டில் அவருடைய ஜனங்களைப்ற்றி, அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார். அவர் தமது அன்பின் நிமித்தம் அவர்களுடைய பரிதாபத்தின் நிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாள்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது.

தேவ இரக்கம் அளவற்றது. அது இரட்சகர்மூலமாய்ப் பாய்கிறது. நம்முடைய துக்கத்தை ஆற்றுகிறதினாலும் நம்முடைய குறைவுகளை நீக்குகிறதினாலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறதினாலும் நம்முடைய வருத்தங்களை அகற்றுகிறதினாலும் அலைந்து திரிகிற நம்மைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதினாலும் அது மகிமைப்படுகிறது. அன்பர்களே, இந்த நாளில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் உனக்க இரக்கம் வைத்திருக்கிறார். உனக்கு தேவையான இரக்கம் அவரிடத்தில் உண்டு. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார். அவர் வாக்கை நம்பு. அவர் சமுகத்தில் இரக்கத்திற்காக கெஞ்சு. தமது இரக்கத்தை உன்னிடத்தில் மகிமைப்படுத்த வேண்டுமென்று கேள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னர் என்பதே உனக்கு போதுமான தைரியம். ஆகவே இன்று அவர் வார்த்தையை நம்பி அவரைக் கனப்படுத்து.

பூமிக்கு வானம் எப்படி
உயர்ந்து இருக்கிறதோ,
அவர் இரக்கம் அப்படி
நமது பாவம் மூடாதோ?

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24

“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4

தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில்  திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.

தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.

Exit mobile version