முகப்பு வலைப்பதிவு பக்கம் 31

நீ என்னை மகிமைப்படுத்துவாய்

ஏப்ரல் 10

“நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங். 50:15

துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம் அவரைத் துதித்துப் போற்றுவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். அபாத்திரராகிய நமக்கு அவர் காட்டும் தயவைத் துதிக்கும்போது அவர் வார்த்தைகள் உண்மையாகிறது. ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரைக்குறித்து அவர் சிங்காசனத்தண்டைக்குப் போகிற யாவருக்கும் இதை நாம் சொல்லும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம். வேத வசனத்தை நம்பி, அவர் பிள்ளைகள்போல் வாழந்து, அவர் சொன்னபடியே செய்வாரென்று எதிர்பார்த்து, சோதனையிலும், வேதனையிலும் அவர் பாதத்தண்டையில் சேர்ந்து அமர்ந்து அவரைத் தொழும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.

நஷ்டங்களில் அவருக்குக் கீழ்ப்படிந்து, சோதனைகளில் அவருக்கு நம்மை அர்ப்பணித்து, தினமும் நமது இருதயத்தை அவருக்குப் பலியாக சமர்ப்பித்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று ஆசைக்கொண்டு, அவர் ஊழியத்தை கருத்தாய் செய்து, அவரின் ஜனங்களை மனமார நேசித்து, நம் விருப்பப்படியல்ல, அவர் சித்தப்படி என்று நடக்கும்போது அவரை உண்மையாய் மகிமைப்படுத்துகிறோம். இது ஒன்Nறு நமது தலையான கடமையாகட்டும். ஒவ்வொரு காலையிலும் நாம் நமது ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே, நீ இன்றைக்கு உன் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று திட்டமாய் கற்பித்து ஒவ்வொரு மாலையிலும் அந்நாள் முழுவதும் கர்த்தருடைய மகிமையையே முக்கியமாகக் கருதி வாழந்தோமா என்று நம்மையே சோதித்துப் பார்ப்போமாக.

தேவ நாமத்தைப் போற்று
அவர் துதியை என்றும் சாற்று
அவர் சொல்லையே தியானித்து
உன் நடையைச் சீர்ப்படுத்து.

உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது

ஏப்ரல் 09

“உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது” 2.தெச. 1:3

இந்தப் பாக்கியம் தெசலோனிக்கேய சபையாருக்குக் கிடைத்த சிலாக்கியம். அவர்களின் விசுவாசம் அதிக அதிகமாய் பெருகிற்று. விதை செடியாகி செடி விருட்சமாயிற்று. குழந்தை வாலிபனாகி, வாலிபன் கிறிஸ்துவுக்குள் பெரியவனாவான். விசுவாசம் சத்தியத்தில் வேர் விடுகிறது. அது கன்மலைய உறுதியாய் பிடித்திக்கிறபடியால் என்ன புயல் அடித்தாலும் அறுந்துவிட முடியாது. அது உடன்படிக்கையின்மேலும், மாறாக தேவ சத்தியத்தின்மேலும் பலமாய் நிற்கிறது. முயற்சித்து அது வளருகிறது. சுவிசேஷம் செம்மையாய்ச் செய்வதனால் அது வளருகிறது. நமது விசுவாசம் வளருமேயானால் கிறிஸ்து நமக்கு அதிக அருமையானவராய் இருப்பார். அப்போது அவரைப்போலிருக்க அதிக வாஞ்சை கொள்ளுவோம். விசுவாசத்திற்கும் உணர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இன்னதென்று அறிவோம்.

கர்த்தர் வாக்கு தந்தார் என்று பிரசித்தப்படுத்தி நம்புவோம். பரிசுத்தவான்களின் மேலிருக்கிற வாஞ்சை பலப்பட்டு உறுதியாகும். தேவனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நமக்கிருக்கும் வைராக்கியம் பெரியதாகும். தேவ வசனத்தின்மேல் அதிக வாஞ்சையும் ஆசையும் உண்டாகும். தேவ வசனத்தின்மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். பரம சிந்தை நம்விசுவாசத்திற்குத்தக்கதாய் வளரும். விசுவாசம் வளர வேண்டியது மிக முக்கியம். உங்கள் விசுவாசம் வளருகிற விசுவாசமாய் இருக்கும்படி பாருங்கள்.

விசுவாசித்து நடப்பேன்
கர்த்தர்மேல் பாரம் வைப்பேன்
அவர் சொல்வதை நம்புவேன்
அதுவே போதுமென்றிருப்பேன்.

நம்மை இரட்சித்தார்

ஏப்ரல் 08

“நம்மை இரட்சித்தார்” 2.தீமோ. 1:9

இரட்சிப்பு இம்மையிலும் கிடைக்கும் நன்மை. நாம் கிறிஸ்துவுக்குள் வந்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கி நம்முடைய பாவத்தை மாற்றி நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். இப்போதும் விசுவாசத்தின் பலனாக ஆத்தும இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் பொல்லாப்பினின்றும், சத்துருக்களினின்றும், பயங்களினின்றும் முற்றிலும், நீங்கலானவர்களல்ல. என்றாலும் நமது இரட்சிப்பு நிச்சயந்தான். நாம் இப்பொழுது பூரணமாய் கிறிஸ்துவைப்போல் இல்லை. ஆனால் அவர் இருக்கிற வண்ணமாய் அவரைப் பார்ப்போம். ஆதலால் அவரைப் போலிருப்போம்.

ஒவ்வொரு விசுவாசியும் நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறபடியால், தேவனோடு நடந்து தேவனுக்காக வேலை செய்து, தேவ சித்தத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டும். கிறி;ஸ்து நம்முடையவர். அவருடையதெல்லாம் நமக்குச் சொந்தம். தேவன் நம்முடையவர். அவருடைய குணாதிசயங்களுக்கும், ஆளுகைக்கும் குறைவுவராமல் அவர் நமக்காகச் செய்யக்கூடியதையெல்லாம் செய்வார். இந்த நிச்சயத்தை அறிந்தவர்ப்போல நாம் வாழ வேண்டும். அப்போஸ்தனாகிய பவுல் அப்படித்தான் ஜீவித்தான். இந்த நிச்சயம்தான் வேலைக்கு நம்மைப் பலப்படுத்தி, போராட்டத்தில் நம்மைத் தைரியப்படுத்தி, அடிமைக்குரிய பயத்தையெல்லாம் நீக்கி, கர்த்தருக்கென்று முற்றிலும் நம்மை அர்ப்பணிக்க உதவும். நமக்கு உறக்கம் வரும் வரையிலும் படுக்கையிலே இதைப்பற்றியே தியானிப்போம். தேவன் என்னை இரட்சித்திருக்கிறவர். எனக்கு அவர் சுகத்தையும், ஐசுவரியத்தையும் பட்சமுள்ள உறவினர்களையும், வீட்டு வசதிகளையும் ஓருவேளை கொடாதிருப்பினும், நித்திய இரட்சிப்பினால் என்னை இரட்சித்துள்ளார்.

கிறிஸ்துவால் மீட்கப்பட்டேன்
மேலானதையே நாடுவேன்,
ஸ்தோத்தரித்துப் போற்றுவேன்
அன்பின் சிந்தையில் நடப்பேன்.

ஒன்று செய்கிறேன்

ஏப்ரல் 07

“ஒன்று செய்கிறேன்.” பிலி. 3:13

உலகத்தில் நாம் வைக்கப்பட்டிருக்கிற விசேஷித்த நோக்கத்தின் மேல், நமது விருப்பங்கைளயும், நினைவுகளையும், எண்ணங்களையும் வைப்பது மிகவும் முக்கியம். தாவீது கர்த்தருடைய வீட்டில் வாசம்பண்ணவேண்டுமென்கிற ஒரே ஒரு காரியத்தையே விரும்பினான். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள். பவுல் பரம அழைப்பின் பந்தயப்பொருளின்மேல் நோக்கமுள்ளவனாயிருந்தான். கடந்து போனதை மறந்து மேலானவைகளை, இனிமையான பரம காரியங்களை, அதிக பயனுள்ளவைகளை நாடினான். கடந்து போனதும் நிகழ் காலத்திலுள்ளதும் போதுமென்று நினைக்கவில்லை. அவர் விருப்பம், விரிவானது. அவன் நம்பிக்கை மேலானது. தேவனுக்காக செய்ய வேண்டியதெல்லாம் செய்ய வேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிதெல்லாம் பெற்றுக் கொள்ள Nவுண்டும். கூடியமட்டும் இயேசுவைப்போல மாறவேண்டும். இதுவே அவனுடைய பெரிய விருப்பமாய் இருந்தது.

அன்பானவர்களே, இது எவ்வளவாய் நம்மைக் கடிந்துக்கொள்ள வேண்டும்? தீர்மானித்தவைகளினின்று நமது மனம் எத்தனை முறை பின்வாங்கி போயிருக்கிறது? நமது இருதயம் முன்னானவைகளை மறந்துவிட்டிருக்கிறது? இயேசுவானவர் தமக்கு முன்வைக்கப்பட்ட சந்தோஷத்தின் மேலேயே நோக்கமாயிருந்தார். மோசே இனிவரும் பலனின்மேல் நோக்கமாயிருந்தான். பவுல் உலகின் காரியங்களைப் பாராமல் நித்திய காரியங்களைNயு நாடினான். அந்த ஒரே காரியத்தின்மேல் நமது மனதையும் குறியையும் உறுதியாய் வைக்கவேண்டியது அவசியம். தம்முடைய மக்களை உற்சாகப்படுத்த இயேசு கிறிஸ்து காப்பிக்கிறதும், அந்த நாளில் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறதுமான காரியந்தான் அது.

பந்தயத்தை இலக்காக
வைப்பதொன்றே தேவை
பின்னானதை மறந்து
இயேசுவில் மோட்சம் காண்பேன்.

நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

ஏப்ரல் 06

“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்.” லூக்கா 14:14

கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து, அவருடைய வல்லமை அவர்களை எழுப்பும். அவரின் மகிமை அவர்களைச் சூழ அலங்காரமாயிருக்கும். அவர்கள் அவரைப்போலவே இருப்பார்கள். காரணம் அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைப் பார்ப்பார்கள். அந்த உயிர்த்தெழுதலின் வேளை எவ்வளவு ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும்.

நாமும் அதோடு சம்மந்தப்பட்டவர்களாயிருந்தும் அதைப்பற்றி அதிகம் நினைக்கிறதில்லை. அந்த நேரத்தை ஆவலாய் எதிர்ப்பார்க்கிறதில்லை. ஒருவேளை தூக்கத்தில் நாம் மரித்து அடுத்த காலை உயிர்த்தெழுதலின் காலையாய் இருக்கலாம். அல்லது இருக்கிறோமா? நீதிமான்களுடைய உயிர்த்தெழுதல் மகிமை நிறைந்தவர்களாய்ப் புறப்பட்டு வருவார்கள். ‘இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவர் மகிமையில் பங்கடைந்து, அவர் இருக்கும் இடத்தில் அவரோடுகூட தியானிக்க வேண்டும். தினந்தோறும் அதற்கு ஆயத்தமாக வேண்டும். அவர் சமீபித்திருக்கிறதாக அறிந்து நடக்க வேண்டும். உயிர்த்தெழுதல் அடையும்படி, பிரயாசப்பட்டு துன்பத்தை சகித்து ஜெபித்த பவுலைப்போல் நாமும் இருக்கவேண்டும். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குடையவன் பாக்கியவான்.

விண்மண்ணிலுள்ளோர் யாவரும்
மகா கர்த்தாவைப் போற்றுங்கள்
இயேசு இராஜன் தோன்றுவார்
இரட்சிப்பளிக்க வருவார்.

சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு

ஏப்ரல் 03

“விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு.” ரோமர் 16:25

நமது மனதும் அறிவும் நடத்தையும், தேவனுக்கு மழுவதும் கீழ்ப்படிய வேண்டுமென்று விசுவாசம் விரும்புகிறது. சுவிசேஷம் விசுவாசம் வைக்கும் சட்டம். தேவன் அன்பாகவே இருக்குpறார் என்று பாவிகளாகிய நமக்குப் பதிலாக கிறிஸ்து மரித்தார் என்றும் விசுவாசப் பிரமாணம் நம்மை நம்பச் செய்கிறது. நமக்கு இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடுக்கிற ஈவாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. கிறிஸ்துவின் புண்ணியங்களை ஏற்றுக்கொண்டு அதையே நம்பி, நமக்குத் தேவையான யாவற்றிற்கும் அதையே சொல்லி கேட்கவேண்டும் என்கிறது. நமது தேவைகளை இயேசுவில் தினந்தோறும் கேட்கவும், அவர் வாக்களித்த யாவையும் அவரிடத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவும் வேண்டுமென்றும், தேவனுக்காய், தேவனுக்கென்று, தேவனைப்போல் ஜீவிக்கவேண்டுமென்று கற்பிக்கிறது.

ஓரே வார்த்தையில் தேவன்தான் பெரியவர். மனிதன் ஒன்றுமில்லை என்று ஜீவிக்க கற்பிக்கிறது. நமது இதயம் விசுவாசித்து கீழ்ப்படியவேண்டுமென்று தேவன் கேட்குpறார். அவர் சொல்வதை நம்பி, அவர் வாக்குகளை எதிர்ப்பார்த்து, அவர் சொன்னபடி செய்வது நமது கடமை. இது நாம் விசுவாசித்து வாழ உதவுகிறது. சாத்தான் இதற்கு விரோதமாக செய்வான். பரம சிந்தை பலவிதமாய் இதைத் தடுக்கப் பார்க்கும். உலக சிநேகம் தன்னால் ஆனதை செய்யும். ஆனால் நானோ போராடி யுத்தம் செய்து அதை மேற்கொண்டு என் தேவன் சொல்வதை நம்புவேன். என் கர்த்தருக்குக் கீழ்ப்படிவேன். என் இரட்சகரைப்போல் இருக்கப் பார்ப்பேன். விசுவாசத்தால் பொறுமையுடன் வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக்கொள்கிறவர்களைப் பின் செல்லுவேன் என்று தீர்மானிக்க வேண்டும்.

ஆவியானவரே என்னை உயிர்ப்பியும்,
என் இதயத்தை நிரப்பும்
என் மனதில் தேவசட்டம்
எழுதி கீழ்ப்படியப்பண்ணும்.

நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்

ஏப்ரல் 02

“நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்.” லூக்கா 19:13

நமது நேசர் நமக்கு தேவையானதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் பயப்படாதே என்கிறார். தாலந்துகளை நமக்குத் தந்து தமது திரவியத்தை நமக்கு ஒப்புவித்திருக்கிறார். தமது பிதாவினிடமிருந்து சீக்கிரம் திரும்பி வருவார். அவர் வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்கிறார். நாம் தேவனுடைய கரத்தில் அதிக ஜாக்கிரரையாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் காரியத்தில் சுறுசுறுப்பாயிருக்கவேண்டும். தமது வேலையை எப்படி செய்தோம, எந்த நோக்கத்தோடு அதைச் செய்தோம் என்று விசாரிக்க திரும்பவருவார். அவர் வந்து நமது செய்கைகளுக்குத் தக்கபடி நம்மீது கோபப்படுவார், அல்லது மகிழ்ச்சியடைவார். கடிந்துக் கொள்ளவும், புகழ்ந்துக் கொள்ளவும் செய்வார். ஒவ்வொருவனுக்கும் அவனவனுக்குத் தக்கப் பலன் அளிப்பார். இதை நாம் விசுவாசிக்கிறோமா? இதை நம்பினவர்கள் போல் வாழ்ந்து வருகிறோமா?

நாம் ஒருநாள் கிறிஸ்துவின் நியாயசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும். அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமா? அன்பரே, நமது நேரமும், நமது தாலந்தும், ஏன் நாமும்கூட கர்த்தருடையவர்கள். அவருக்கென்றே அவைகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அவருக்காகவே எல்லாவற்றையும் உபயோகிக்க வேண்டும். இந்த நாளை கிறிஸ்துவுக்கென்று செலவிட்டோமா? இன்று நமது வேலைகளை கர்த்தருக்குமுன் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற நோக்கோடு செய்திருக்கிறோமா? நாம் மற்றவர்களைப்போல தூங்கச் கூடாது. நமக்கென்று வாழாமல் அவருக்கென்று மட்டும் தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கி ஜீவனம்பண்ணி அவருக்காக மாத்திரம் பிழைப்போமாக.

என் தாலந்தை உபயோகித்து
இயேசுவில் நான் பிழைத்து
அவர் சித்தப்படி செய்து
அவரைச் சேர்வதே நலம்.

சகல கிருபையும் பொருந்திய தேவன்

ஏப்ரல் 01

“சகல கிருபையும் பொருந்திய தேவன்.” 1. பேது.5:10

யேகோவா தேவன் தம்மைக் குறித்துச் சொல்வது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் தேவனது மேலான குணநலன்களையும் தகுதிகளையும் பார்த்துவிட்டு, அவருக்கு எதிராக தகாத பல காரியங்களையும் செய்து விடுகிறோம். அவர் சகல கிருபை பொருந்தின தேவனாயிருக்கிறதுமல்லாமல் நீதியுள்ள தேவனாயும் இருக்கிறார். அளவற்ற நித்திய கிருபையுள்ள தேவன். இரக்கத்தின் ஐசுவரியமும் அவரிடத்தில் உண்டு. குற்றவாளியை மன்னிக்கிறதும், மரித்தோரை உயிர்ப்பிக்கிறதும், ஆறுதல் அள்ளவர்களுக்கு ஆறுதல் தருபவரும், பெலவீனரைப் பெலப்படுத்துகிறதும், வழி தப்பி திரிகிறவர்களைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதும், கெட்டுப்போனவர்களை இரட்சிக்கிறதுமான கிருபை அவரிடத்தில் உண்டு.

தம்முடைய மக்களுக்கு அவர் செய்கிற கிரியைகளில் தமது கிருபையை வெளிப்படுத்துவதில் எவ்வளவு தாராளமாய் அந்தக் கிருபையைக் காட்டினார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளனை இரட்சித்ததில் ஏற்ற காலத்தில் கிருபையைக் காட்டினார். காட்டத்தி மரத்தினின்று சகேயுவை இறங்கி வரச் சொன்னபோது, அவன் எதிர்பாராதவிதமாய் இந்தக் கிருபையை வெளிப்படுத்தினார். இவைகளெல்லாம் கிருபை நிறைந்த தேவன் நமக்கு காட்டும் இரக்கமாகும். தேவனை நாம் அளவற்ற கிருபை நிறைந்தவராய்ப் பார்ப்போமாக. அபாத்திரரும் பாவிகளுமான நம்மிடத்தில் தான் அவர் மாட்சிமையும், கிருபையும் மகிமையும் அதகமாய் விளங்குகிறது. இது நமது ஐயங்களை நீக்கி ஜாக்கரதையுள்ளவர்கள் ஆக்க வேண்டும். நம்பிக்கையோடும் நன்றி உணர்வோடும் அவருக்கு ஒப்புவிக்க இது நம்மை ஏவ வேண்டும். நமது தேவன் சகல கிருபையினாலும் நிறைந்தவர் என்ற சிந்தையினால் உண்டாகும் மகிழ்ச்சியோடு இன்று இரவு நித்திரைக்குச் செல்வோமாக.

தேவனே நான் உம்மைவிட்டு
கெட்டு அலையாமல்
மன்னித்து மகிழ்ச்சியாக்கும்
உம் சமுகம் என்னைக் காக்கும்.

My Favorites

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07 "அவருக்குக் காத்துக்கொண்டிரு." யோபு 35:14 உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான...

எபெனேசர்

Exit mobile version