ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான். எத்தனை அழகு! என்ன அருமையாக உள்ளது .. என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.
ஓ! இந்த அழகிய படகை ஆற்றங்கரையில் விட்டு விளையாடினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்த ராஜூ, அதிசீக்கிரமாக ஆற்றை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடிவந்தவன் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் அதனை மிதக்க விட்டான். அந்த சின்ன படகு அசைந்து அசைந்து செல்வதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராமல் பலமாக அடித்த காற்றினால் அந்த படகு வேகமாக ஆற்றுப்போக்கிலே அடித்துச் செல்லப்பட்டது. எப்படியாவது தன் சின்ன படகை எடுக்க அவன் பெருமுயற்சி செய்தும், அது அவனுக்குக் கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு வெறுங்கையனாய் சிறுவன் ராஜூ கண்ணீரோடு வீடுவந்து சேர்ந்தான். தான் கஷ்டப்பட்டு செய்த பொருள் தன் கண் முன்னாலே போய்விட்டால் யாருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்?
இரண்டு நாட்களுக்குப் பிறகு கடைதெரு வழியாக நடந்து சென்ற ராஜூவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கடைத்தெருவில் ஒரு கடையில் விற்பனைக்காக கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சின்னப் படகை கண்டான். அந்த அழகிய படகு ராஜூ செய்து விளையாடிய அதே படகுதான். அவன் கண்களையே அவன் நம்ப இயலாமல் போனது.
ராஜூ சந்தோஷத்துடன் அந்த கடைக்குள் நுழைந்து, கடைக்காரரிடம், மிகவும் உரிமையுடன் சொன்னான், “ஐயா, அந்த அழகிய படகு என்னுடையது. நான் கஷ்டப்பட்டு செய்தது. இதை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” எனக் கேட்டான். கடைக்காரர் அவனிடம் “தம்பி, இந்த படகை நான் ஒருவரிடம் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். நீ உன்னுடையது என்று சொல்வதால் நான் வாங்கின அதே விலைக்கு வேண்டுமானால் நீ இதனைப் பெற்றுக்கொள். இது உன் படகு என்று நீ சொல்வதினால் நான் இலவசமாய் இதை உனக்குத் தர முடியாதே” என்று கூறினார்.
நான் செய்த படகுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டுமா? என்று ராஜூ சற்றும் யோசிக்கவில்லை. உடனே தன் வீட்டிற்கு ஒடினான். தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாயை பொறுக்கி எடுத்து, வேகமாக அந்த கடைக்கு வந்தான். தொலைந்து போன அப்படகை திரும்பவும் தானே விலைகொடுத்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான்.
பிரியமானவர்களே, ராஜூவின் சிறிய படகைப் போலவே நாமும் இருக்கிறோம். ஆண்டவர் இயேசுதான் நம்மை உருவாக்கினார். ராஜூவின் படகு தொலைத்துவிட்டது போலவே நாமும் பாவம் செய்து நம்மை உண்டாக்கினவரை மறந்து அவரை விட்டு தூரம் போனோம். ஆனால் இன்று நம்மை உருவாக்கினவர், நம்மை அன்புடன் தேடி வந்துள்ளார்.
ராஜூ தன் படகை மீண்டும் விலை கொடுத்து வாங்கினது போலவே, ஆண்டவராகிய இயேசுவும் தன் சொந்த இரத்தத்தையே விலைக்கிரயமாக நமக்காக சிலுவையில் சிந்தினார். ஏன்? அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவருக்கு சொந்தமாக வேண்டும் என்பதற்காகவே.
ராஜூ அந்த படகை அதிகமாக நேசித்ததாலே அந்த பணம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தன் பொருளைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அவனுக்கு பெரிதாக தெரிந்தது.
இதுபோலவே ஆண்டவராகிய இயேசுவும் நம் மேல் கொண்ட அளவற்ற அன்பினாலேயே தன் சொந்த உயிரை நமக்காகக் கொடுத்தார்.
ஓ! இறைவன் நம்மேல் வைத்த அன்பு எவ்வளவு பெரியது பார்த்தீர்களா? பாவத்தினால், அசுத்தத்தினால், இச்சையினால், அருவருப்பினால் இன்று உங்கள் வாழ்க்கையும் கூட தொலைக்கப்பட்டிருக்கலாம். கடவுளை விட்டு தூரம் போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பாவத்தில் தொலைந்து போன உங்கள் வாழ்க்கையை மீட்கவே இன்று ஆவலுடன் உங்களை அழைக்கிறார்.
நீங்கள் அவருக்கு விரோதமாக எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும், இன்று மனம்வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களைத் தள்ளிவிடாமல், உங்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் உங்களை விடுவிப்பார்.
தன் சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்கத் துணிந்த அவருக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்க நாம் தயங்கலாமா?
“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறது இல்லை” என்று கூறின இயேசு, நாம் இன்றைக்கு அவரிடத்தில் வந்தால் நம் பாவங்களை மன்னித்து, நமக்குப் பரிசுத்த வாழ்வினைத் தந்து, நம்மை ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராயிருக்கிறார்.
இன்னமும் தாமதம் ஏன் நண்பரே?
“இழந்து போனைதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.” (லூக்கா 19:10)
“எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.” (1தீமோத்தேயு 2:5,6)