தினதியானம்

முகப்பு தினதியானம்

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25

“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)

இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.

இறைவன் மானிடனானது
இகத்திற்கு மகிழ்ச்சியாம்
இகத்தில் சமாதானமும்
இறைவன் நாட்டில் மேன்மையாம்

சத்தியத்தை வாங்கு அதை விற்காதே

டிசம்பர் 24

“சத்தியத்தை வாங்கு அதை விற்காதே” நீதி.23:23

சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தது. அதை வாங்குவதற்கு நீ செலவிடவேண்டும். அது விலையேறப்பெற்றது. பலர் இந்தச் சத்தியத்திற்காக தமது சுகத்தையும், பெலத்தையும், இனத்தையும், ஜனத்தையும், ஏன், தங்கள் உயிரையும்கூட கொடுத்திருக்கிறார்கள். சத்தியம் ஒரு பெரும் புதையல். அதன் மையம் கிறிஸ்துவே. கிறிஸ்துவையே சத்தியம் உயர்த்திக் காட்டுகிறது. அதைத் தேடி கண்டுபிடித்து வாங்கு. அதை விற்காதே.

சத்தியத்தைச் சம்பாதிக்க பிரயாசப்படு. கிறிஸ்துவைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள். சத்தியம் எங்கும் நிறைந்துள்ளது. கிறிஸ்துவின் வார்த்தையே சத்தியம். அவரை எவ்வகையிலாயினும் பெற்றுக்கொள். அவரைத் தேடிப் பெற்றுக்கொள். அவருக்காக ஜெபம் செய். சத்தியம் கிடைக்கும்வரை போராடு. அதை உனக்குக் கொடுக்கிறவர் தூயஆவியானவரே. அவரைக் கனப்படுத்து. உனக்கு அவர் சத்தியத்தைக் காட்டுவார். அவர்தான் உன்னைத் தேவனண்டை நடத்துவார். எந்தச் சூழலிலும் உன்னை நடத்த அவரால் முடியும். மனகலக்கத்தில் அவர் உன்னைத் தேற்றி, உன் நோயில் உன்னைக் குணமாக்கி, ஆறுதல்படுத்தி, உன்னைச் சத்தியத்தில் நடத்துவார். அவர் கற்றுத் தருவதனைத்தையும் கற்றுக்கொள். அதுவே உனக்கு உணவும், துணைவுமாகட்டும். ஆண்டவரின் மாட்சிமைக்காக அதைப் பிரசங்கி.

நீரே வழி இயேசுவே
நீரே சத்யம், ஜீவனும்,
நீர் என்னை நடத்தும்,
நேர் வழி நான் காண்பேன்.

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

உனக்கு விசுவாசம் இருந்தால்

டிசம்பர் 21

„உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22

விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம் இல்லைத்தான். இப்போது உனக்கு விசுவாசம் இருக்கிறதென்றால், அது தேவன் கொடுத்தது என்பதை மறக்காதே. உன்னில் அவிசுவாசம் இருக்குமானால், அதனோடு நீ போர் செய்து, ஜெபித்து, விசுவாசத்தைப் பெற்றுக்கொள். „கிறிஸ்துவின்மீது உனக்கு விசுவாசம் உண்டா? அவர் சொல்வது, செய்தனைத்தும் சரியானவைகளே என்று விசுவாசிக்கிறாயா? அவருடைய வார்த்தைகள் உண்மை. அவர் செய்த தியாகம் இவைகளின்மூலமாக, தமது கிருபையினால் உனக்கு நித்தியமான இரட்சிப்பைத் தந்தருளினார் என்று மனப்பூர்வமாக விசுவாசிக்கிறாயா? அவருடைய வேதத்தை முழுவதும் நம்புகிறாயா? அவர் செய்த அற்புதங்களை ஐயங்கொள்ளாமல் விசுவாசிக்கிறாயா? என்பதையெல்லாம் சோதனை செய்.

தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நீ, உன் ஆத்துமா அவர் கைகளில் ஒப்புக்கொடுக்கப் போதுமான விசுவாசம் உன்னில் உண்டா? அவருடைய ஊழியங்களை உனக்குச் சொந்தமாக்கி, நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று சொல்லும் தைரியம் உனக்கு உண்டா? உன்னுடைய பிதாவாகிய தேவனைமட்டும் விசுவாசிக்கிறாயா? உன்னுடைய தேவைகளைச் சந்தித்து, உன்னைப் போஷித்து, உன்னை வழிநடத்தும் கர்த்தர் உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவார் என்கிற விசுவாசம் உனக்கு உண்டா? உன் எதிர்காலத்தை அவருடைய கரத்தில் வைத்து நம்பிக்கையோடு காத்திருக்கிறாயா? அப்படியானால், மகிமையெல்லாம் தேவனுக்கே. இல்லையானால், தேவனை விசுவாசி, அவரையே நம்பு. தேவவார்த்தையினால் உன் விசுவாசத்தைப் பெலப்படுத்திக்கொள். கவனமாயிருந்து அவிசுவாசத்திற்கு இடம் கொடாதிரு.

விசுவாச இருதயத்தை
வன்மையுள்ளதாய்க் காத்திடும்
உமது சுவிசேஷத்தைப் பற்றியே
உறுதியாய் நிற்க உதவி செய்யும்.

எல்லாம் புதிதாயின

டிசம்பர் 20

“எல்லாம் புதிதாயின” 2.கொரி.5:17

புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை அவர்கள் புசிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் புதிதானவை. பரிசுத்தமான நடக்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். புது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பினால் அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். புதிய நோக்கங்களை அவர்கள் பெறுகிறார்கள். தேவமகிமையைக் கண்டு அதில் வளருகிறார்கள். புதிய புதியதான நண்பர்களோடு ஐக்கியம் கொள்ளுகிறார்கள். காரணம் என்வென்றால், எல்லாம் புதிதாயின“.

அப்படிப்பட்டவர்களுக்கு தலையாயிருப்பவர் கிறிஸ்து. இரண்டாம் ஆதாம் அவரே. அவர்தாமே இவர்களைத் தேவனோடு ஒப்புரவாக்கிப் புதிய பரதீசிக்குள் அழைத்துச் செல்கிறார். இவர்கள் எல்லாரும் புது உடன்படிக்கையின்கீழ் இருக்கிறார்கள். இது கிருபையின் உடன்படிக்கை கிரியையின் உடன்படிக்கையல்ல. தேவனே இவர்களுக்குப் பிதா, தேவதூதர்கள் பணிவிடையாள்கள். கிறிஸ்து இவர்களுக்கு மூத்த சகோதரர். தூய ஆவியானவர் இவர்களுக்குத் தேற்றரவாளர். தேவனுடன் இவர்களுக்கு உண்டாயிருக்கும் உறவு புதியது. இவர்கள் உலகத்துக்குச் சாட்சிகளாய் இருப்பவர்கள். கிறிஸ்துவின் ஊழியர்கள். இவர்கள் ஆவியானவர் தங்கும் ஆலயம். இவர்களுடைய ஆசைகள், நம்பிக்கை, நோக்கம் எல்லாம் புதியவைகள். புதிய வானம் புதிய பூமியின் சிருஷ்டிகள் இவர்கள். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின.

நான் உம்முடையவன், மற்றும்
நான் உம்மால் புதிதாக்கப்பட்டேன்.
புது வானம் பூமியின் புது சிருஷ்டி
புதுப் பரதீசின் புதுக் குடிமகனே.

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19

“கிறிஸ்துவினுடைய அடிமை” 1.கொரி.7:22

கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதால் கிறிஸ்துவின் அடிமைதான். அவன் தனக்கு இருக்கும் தாலந்துகளை ஆண்டவருக்கென்று பயன்படுத்தவேண்டும்.

இந்த இரவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்வென்றால், „நான் கிறிஸ்துவினுடைய அடிமையா? அவர் எனக்கு எஜமானா? எப்பொழுதும் நான் அவரை அவ்வாறு ஏற்றிருக்கிறேனா? என்னைத் தேவன் பார்க்கிறார் என்று நினைத்து, தெயவ்பயத்துடன் நடக்கிறேனா? நான் செய்கிறது எதுவானாலும், இது என் எஜமானுடைய சித்தமா? அவருக்குப் பிரியமானதா? நான் அவருடைய பணியாள். அவருடைய கட்டளைகளுக்கேற்ப யாவற்றையும் செய்கிறேனா? என்பதே.

பரிசுத்த ஆவியானவர் தினமும் „நீ கிறிஸ்துவின் அடிமை. அவர் உனக்கு ஞானமும் புத்தியும் தயாள குணமுமுள்ள எஜமான்“ என்று சொல்லுகிறார். இதை நீ கேட்கிறாயா? அவருக்குப் பிரியமாக நடப்பதே எனது வேலை. உலகம் எனக்கு வேண்டாம். சாத்தானுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை“ என்று நீ சொல்லக்கூடுமா? அவருடைய அடிமையாக அவருடைய வார்த்தையைக்கேள். அவருடைய கிருபையைத் தேடு.

உம்மைக் கர்த்தர் என்பேன்,
உள்ளத்தாலும் நேசிப்பேன்.
உம் சித்தமே செய்வேன்
உம்மிலேயே இளைப்பாறுவேன்.

பரிசுத்த ஜனம்

டிசம்பர் 18

பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12

கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது ஜனத்தைத் தெரிந்துகொண்டபடியால், அவர்கள் பாவம் செய்வதைவிட்டுவிடுகிறார்கள். இந்த ஜனங்கள் பரிசுத்தமாகவேண்டுமென்றே இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஓளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்குபெற அவர்கள் தகுதியாகும்படி தேவஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணுகிறார். பரிசுத்தம்தான் அவர்களுடைய ஜீவன். அவர்களுடைய இன்பம் அவர்கள் பரிசுத்தத்தின்மீது வாஞ்சை கொண்டு நாடித் தேடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரதத்ததினால் மீட்கப்பட்டு, அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவராலே நீதிமான்களாக்கப்படுகின்றனர். நீதிமான்களாக்கப்படுவதுதான் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு அடிப்படை. ஒருவன் நீதிமானாக்கப்பட்டால், அவன் பரிசுத்தமாக்கப்படுவான். பரிசுத்தமாக்கப்படுவதால், தான் நீதிமானாக்கப்பட்டதை நிரூபிப்பான். பாவம் வெறுக்கப்பட்டு, அது கீழ்ப்படுத்தப்படாவிட்டால், அது மன்னிக்கப்படுவதில்லை. பாவம் செய்கிற எவனும் நீதிமானல்ல, பரிசுத்தவானுமல்ல. இயேசுவைத் தன் சொந்தம் என்றோ, தான் பரிசுத்தஆவியைப் பெற்றவன் என்றோ சொல்லுவது தவறு. பரிசுத்தவான்கள் யாவரும் பாவத்திற்காகத் துக்கப்பட்டு, அதனோடு போராடி வெல்லுகிறார்கள். தங்கள் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாக நிற்கிறார்கள். இவர்கள்தான் மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள். உனது நிலை என்ன? பரிசுத்தர் கூட்டத்தில் நீ இருக்கிறாயா ?

கர்த்தாதி கர்த்தர் பரிசுத்தர்
கிறிஸ்துவும் பரிசுத்தர்
தூய ஆவியானவரும் பரிசுத்தர்
அவர் பரிசுத்தராதலால் நாமும் பரிசுத்தராவோம்

அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக

டிசம்பர் 17

“அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக” (மத்.1:21)

இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவர் யாவரையும் இரட்சிக்க வல்லவர். எல்லாரையும் இரட்சிக்க மனதுள்ளவர். இயேசுவின் மூலமாக தேவனிடம் வரும் யாவரையும் அவர் இரட்சிக்கிறார். எல்லாப் பாவங்களையும் நீக்கி அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்படியாய் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். தம்முடைய மக்கள் ஒருக்காலும் கெட்டுபோகாதபடிக்கு அவர்களை மீட்டுக் கொள்கிறார். தேவனுடைய வல்லமைக்கு எல்லாம் கூடும் என்பதால் எல்லாரையும் இரட்சிக்கிறார். தேவ ஆளுகைக்கு குறை ஏற்படாவண்ணம் அவர் அப்படிச் செய்கிறார்.

தேவன் தம் இரட்சிப்பின் செய்கையில் பட்சபாதம் காட்டுவதில்லை. பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படியாமல், வழி தப்பித்திரிந்த தமது ஜனங்கள் எல்லாரையுமே அவர் இரட்சிக்கிறார். பூமியில் தேவன் தமது மகிமைக்காக, தமது அன்பினால், இரட்சிக்கும் பணியைச் செய்கிறார். ஆகவே, ஆத்துமாவே இயேசு இரட்சகர் என்று அழை. இயேசு சகலரையும் இரட்சிக்கக்கூடியவர் என்று கூறு. இரட்சிப்பதே அவருடைய முக்கிய வேலை, இதுவே அவருக்கு மகிழ்ச்சி. அவர் ஒருவரே இரட்சகர். அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர். நரகத்தின் எதிர்ப்பையும் அவர் பொருட்படுத்தாது இரட்சிக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார். அப்பணியில் அவர் தொடர்ந்து செயல்ப்படுகிறார். நமக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் அளிக்க இப்போது தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

அவரை நம்பி நீ இருந்தால்,
உன் பாவம் நீங்கிப்போகும்.
அதுவே இகத்தில் மோட்சம்,
அதுவே இன்ப வாழ்வாம்.

Popular Posts

My Favorites

தேவனே எங்களைச் சோதித்தீர்

டிசம்பர் 03 "தேவனே எங்களைச் சோதித்தீர்" சங். 66:10 நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம்...