Home துண்டு பிரதிகள் வாய்ப்பைத் தவறவிட்டவள்!

வாய்ப்பைத் தவறவிட்டவள்!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவாள். அவள் அதிக சீக்கிரத்தில் ஒரு சிறந்த நாட்டியக்காரியாகவும் மாறினாள்.

தன் ஊரில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், குதிரைப்பந்தயம், திரைப்படங்கள், நாட்டிய அரங்கம் போன்ற பற்பல இடங்களுக்கு மெர்லின் தவறாமல் செல்வாள். அவளின் அழகிய நடனம் அந்த நாட்டில் உள்ள பலரைக் கவர்ந்தது. சற்று பிரபலமானவுடன் அவளுக்குப் பெயரும், புகழும், பணமும் பெருகிவிட்டது.

ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது சுவர்களில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டாள். தன் காரை நிறுத்தி அதை வாசித்துப் பார்த்தாள். கடவுளைப் பற்றிச் சொல்லும்படியாக ஒரு தெய்வீக மனிதர் அந்த ஊருக்கு கடந்து வருவதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்ருந்தது. மெர்லின் அந்த நபரின் பெயரை படித்ததும், இவர் பெரியமனிதர் அல்லவா! இவரைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சிந்தித்தவாறே தன் வீட்டை அடைந்தாள்.

அடுத்தநாள் அவள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணிப்பெண் தான் நேற்றைய தினம் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு கடந்து சென்றதையும், அங்கு நடைபெற்ற நிகழ்சிகளையும் பற்றி சொன்னாள்.

இதைக் கேட்ட மெர்லின் மனதிலும், ஒரு விருப்பம் வரவே, அன்று சாயங்கால கூட்டத்திற்கு அவளும் புறப்பட்டாள்.

மெர்லின் தன் காரை ஓட்டிச் செல்லும்போதே கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த மைதானத்திற்கு செல்வதைப் பார்த்தாள். தனக்கு அந்த கூட்டம் பிடிக்கவில்லையெனில் இடையில் எழுந்து வெளியே வந்துவிட வசதியான ஒரு இடத்தில் காரை நிறுத்தி, உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்த கூட்டம் ஆரம்பித்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவள், இத்தனை நாட்கள் சென்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலிருந்து இது வித்தியாசமானதாகவும், அவள் மனதிற்கு ஒரு அமைதியை கொண்டு வருவதாகவும் இருந்தது.

கூட்டம் ஆரம்பமாயிற்று. அந்த தேவமனிதர் பேசத் துவங்கினார். கூடியிருந்த எல்லாரும் மிக ஆவலாக, அவர் சொல்லும் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவத்தில் சிக்கியிருப்பவர்கள் தண்டனைக்கு எப்படி தப்ப முடியும்? என்ற வார்த்தைகளை அவர் பேசும் போது அந்தக் கூட்டத்திலிருந்த அநேகர் தங்கள் பாவங்களை உணர்ந்தார்கள். அதில் நாட்டியப் பெண்ணான மெர்லினும் ஒருத்தி.

கூட்டம் முடியும் இறுதி நேரத்தில் மக்கள் பலர் தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து, அழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் மேடையிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்காகவே பேசப்பட்டதாக உணர்ந்தாள். நீ செய்த பாவங்கள் எவ்வளவு கொடிதானாலும், இயேசுவிடம் அறிக்கையிடு, இன்றே அதை விட்டு விடு. நிச்சயம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீ சொர்க்க வாழ்வை அனுபவிப்பாய் என்று அவர் பிரசங்கித்தார்.

இதைக் கேட்ட மெர்லின், தான் கடவுளை விட்டு தூரம் போன பாவி என்று உணர்ந்தாள். ஆனால் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது. மறுவிநாடி அவள் எண்ணம் சற்று மாறியது. ஐயோ! நாளை ஒரு முக்கிய நடன நிகழ்ச்சி உள்ளதே. ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நான் ஆட வேண்டுமே, இன்று என் வாழ்வை நான் இயேசுவுக்கு கொடுத்தால், நாளை எப்படி நடனமாட முடியும்? என்று யோசித்தாள். அன்று மேடையிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் பலர் தொடப்பட்டனர். ஆனால் மெர்லின் தன் டைரியில், ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வேன்’ என எழுதிக் கொண்டவளாய் அந்தக் கூட்டம் முடியும் முன்னரே மனப் போராட்டத்துடன், காரை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

மெர்லினுடைய உள்மனதில் திரும்பத் திரும்ப அந்த தேவமனிதரின் வார்த்தைகள் ஓடினாலும், அவள் “இன்று அல்ல, இன்னும் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பின் நாளை மனம் மாறுவேன்” என்று நினைத்தவாறே நான்கு வழி ரோட்டில் காரை ஒட்டினாள். அப்போது எதிர்புறமாக இருந்து வந்த ஒரு லாரி மின்னல் வேகத்தில் அவள் காரை மோதியது. கார் சுக்கு நூறாக உடைந்தது. இரத்த வெள்ளத்தில் மெர்லின் அந்த இடத்திலே பிணமாக கிடந்தாள். அவள் எழுதி வைத்திருந்த டைரியும் அங்கு திறந்து கிடந்தது. ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வேன்’ என்ற வரிகளுடன் …

பிரியமானவர்களே, நாளையை சந்திப்பதற்கு முன் அவள் இருளுக்குள் சென்றுவிட்டாளே! நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. நல்ல தீர்மானங்களை எடுக்க காலந் தாழ்த்துவது நல்லதல்ல. அதினால் நாம் அவற்றை இழந்துபோக நேரிடலாம் – மெர்லினைப் போல.

நாம் இந்த பூமியில் வாழும் வாழ்க்கை நிலையற்றது. நிச்சயம் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும். அதற்குப் பின்னர் தான் நமக்கு என்றும் அழிவில்லாத ஒரு வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இந்த பூமியில் நாம் செய்யும் தவறுகளுக்கு பின்னர் நாம் அனுபவிக்கும் தண்டனை முடிவில்லாத நரக வாழ்க்கையே. நித்திய வாழ்வைப் பெற இயேசுவிடம் திரும்புங்கள். இன்றே தீர்மானம் எடுங்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13)