முகப்பு வலைப்பதிவு பக்கம் 12

என் தேவன் என் பெலனாய் இருப்பார்

நவம்பர் 04

“என் தேவன் என் பெலனாய் இருப்பார்” ஏசாயா 49:5

தேவகுமாரனாகவும், நமக்கு நல்முன்மாதிரியாகவும், தலைவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குத் தேவன் பெலனாயிருந்தார். தமது பிதாவின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்து அவர் வாழ்ந்தார். சத்துருவாகிய சாத்தானால் அதிகமாய் சோதிக்கப்பட்டார். எனினும் பிதாவால் பிழைத்திருந்தார். அப்படியே நாமும் பிழைத்திருப்போம். தமது அளிவில்லாத அன்பினால் நம்மை நேசிக்கிறார். தமது உடன்படிக்கையை நமக்கு நன்மையாகவே செய்து முடித்தார்.

அவரின் வாக்குத்தத்தங்கள் நமக்கெனவே ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால் பெரிய சோதனைகள், போராட்டங்கள், மாறுதல்கள் வரும்போதும், கடைசி சத்துருவான மரணம் வரும்போதும் என் தேவன் என் பெலனாய் இருப்பார் என்று சொல்லும்படியாக இருப்போமாக.

நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று அவர் கூறியிருப்பதால், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் இருப்போம். நமது பெலவீனத்தை நாம் உணரும்போது விசுவாசத்தில் பெருகுவோம். என் பெலன் உன் பலவீனத்தில் பூரணமாய் விளங்கும் என்று அவர் கூறியிருக்கிறாரே. அப்படியே அவருடைய பெலன் நமக்கிருக்கிறது. அவருடைய ஒத்தாசையால் இந்நாள்வரைக்கும் வாழ்கிறோம்.

எனவே, வருங்காலத்திலும், அவரை நம்பி கடமையை நாம் நிறைவேற்றும்பொழுது எந்தச் சத்துருவையும் நாம் எதிர்க்கும்பொழுதும், ஆண்டவரின் வல்லமையால் நடப்பேன். உம்முடைய நீதியைப் போற்றுவேன் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். கர்த்தருடைய பெலத்தால் நான் கடைசி மட்டும் நிற்பேன். சுபீட்சத்தோடு பரலோகம் போவேன். அவர் கொடுத்த சிலாக்கியத்திற்காக மகிழ்வேன். என் தேவன் எனது பெலனாய் இருப்பார் என்பதை தியானித்து அவரிடத்தில் இன்றிரவு வேண்டிக்கொள்வோம்.

என் தேகம் மாண்டு போனாலும்
என் தேவன் என் பெலனாவார்
இதனால் நான் பெலனடைவேன்
என் விசுவாசம் வளர்ப்பேன்.

நீர் உண்மையாய் நடப்பித்தீர்

நவம்பர் 03

“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33

தேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.

ஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.

தானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.

கர்த்தர் செய்வதெல்லாம் நலமே
முடிவை நாமறியோம் அவர் அறிவார்
அவர் செய்வதெல்லாம் நமக்கு
முடிவில் பாக்கியமாகவே நிகழும்.

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02

“ஏன் சஞ்சலப்படுகிறாய்” 1.சாமு. 1:8

அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று வேதம் கூறுகிறது.

நம்முடைய பாவஙகளை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று கூறுகிறது. அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இனி மேல் அவரின் பிரசன்னம் எனக்குக் கிடையாது என்றெல்லாம் சஞ்சலப்படுகிறாயோ?  அவர் திரும்பவும் வந்து நம்மேல் மனதுருகுவார். அவரின் உடன்படிக்கைகள் உண்மையானவைகள். மாறாதவைகள். அவரது முகம் நமக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் அவர் தமது வாக்கை மாற்றமாட்டார்.

நான் கனி கொடுக்க முடியவில்லையே என்று சஞ்சலப்படுகிறாயோ? அவர் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல இருப்பார். தானிய விளைச்சலைப்போல் செழித்து திராட்சைச் செடியைப்போல் அவர்கள் படருவார்கள். உன்னையும் அதிகக் கனிகளைக் கொடுப்பதற்காகச் சுத்தம் செய்வார். வறுமையால் கஷ்டப்படுகிறாயோ? வெள்ளியும் பொன்னும் எல்லாம் அவருடைய அதிகாரத்துக்குள் இருக்கிறது. தமக்கு விருப்பமானபோது அவர் நமது தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். உனக்கருமையானவர்களை இழந்து விட்டதால் சஞ்சலமோ? அவர் உன்னைத் தாங்குவார். உன்னைத் தூய்மையாக்குவார். அவரின் அன்பு உனக்கு அமைதியும் பாதுகாப்பும் தந்திடும்.

சஞ்சத்தால் தவிக்கும்போது
இரட்சகரிடம் போய்ச் சேர்
இரட்சகரை நீ நம்பினால் உன்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

அதிபதியாகவும் இரட்சகராகவும்

நவம்பர் 01

“அதிபதியாகவும் இரட்சகராகவும்” அப். 5:31

இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர், துக்கம் நிறைந்த மனுஷன் என்பது. அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் வல்லமைநிறைந்தவராக வீற்றிருக்கிறார். பரலோகத்திலும் பூலோகத்திலும் முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும். அவர் யாவற்றுக்கும் யாவருக்கும் தலைவர். இராஜாதி இராஜா. உயிரளிக்கும் கர்த்தர். எல்லா அதிகாரங்களும் அவருக்குக் கீழ்ப்பட்டதே. பிரபுவைப்போலவும், மீட்பராகவும் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமது சொந்தக் கிருபையினால் நம்மை இரட்சிக்கிறார். பாவிகளெல்லாரையும் அவர் இரட்சிக்கிறார். அவருடைய இரட்சிப்பு இலவசமானது. நாம் நமது பாவங்களைவிட்டு மனந்திரும்பினால் அவர் இரட்சிப்பார். இரட்சிப்பு அவருக்கு விருப்பமான செயல்.

அவருடைய இரட்சிப்பின் செயல் உலகத்தின் முடிவு பரியந்தம் நடக்கும். தம்மிடம் வருபவர்களை அவர் இரட்சித்து ஆண்டு கொள்ளுகிறார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். மரித்தார். உயிர்த்தார். இப்போது அவர் இஸ்ரவேலுக்கு மகிமையாகப் பாவிகளுக்கு மன்னிப்பருள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் அவர் தம்முடன் வருகிறவர்கள் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளுகிறார்.

எந்தப் பாவியாயினும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. சாந்தமும் இரக்கமும் நிறைந்த இந்த இரட்சகராகிய பிரபுவிடம் நீ வந்தால் அவர் உன்னையும் ஏற்றுக்கொள்ளுவார். நீ இரட்சிப்படைய வேண்டுமென்றால் அவரிடம் போய் சேர்ந்துகொள். அவர் உன்னை இரட்சிப்பார். அதுவே உனது வேலை. அவரை மகிமைப்படுத்தி அவர் தரும் மீட்பைப் பெற்றுக்கொள்.

இரட்சகரான இயேசுவே
உயிரோடெழுப்பி பரத்தில்
வீற்றிருப்போரே, பாவியாம்
என்னையும் இரட்சித்தருளும்.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

அக்டோபர் 31

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3

மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.

இந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.

இதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.

காயப்பட்ட இருதயத்தைக்
கழுவி சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சை அது
மயக்கமின்றி விடுவிக்கும்.

அவர் பெரியவராய் இருப்பார்

அக்டோபர் 30

“அவர் பெரியவராய் இருப்பார்” லூக்கா 1:32

இயேசு நாதருடைய பிறப்பைக் குறித்துச் சொன்ன தேவதூதன் இவ்விதமாக அவரைப்பற்றி கூறினான். இது முழுமையாக நிறைவேறியது. இயேசு நாதர் எவ்வளவு பெரியவரென்று கூற முடியாது. அவருடைய மகத்துவமான தன்மை, இரத்தம் சிந்துதல் ஆகியவற்றில் அவர் பெரியவராயிருந்தார். அவரைக் குறித்த வேத வசனங்கள் அவருடைய சீடர்களின் எண்ணிக்கை, அவரின் வல்லமையான ஊழியம், இவையாவற்றிலும், அவர் பெரியவராயிருந்தார். அவர் காட்டின பரலோக இராஜ்யமும், அவருடைய உருக்கமான இரக்கமும் அவரைப் பெரியவராகக் காட்டின.

அவருடைய கிரியைகளிலும், அன்பிலும் அவர் பெரியவர். நமது எதிரிகளின்மீது அவரின் வெற்றியினாலும், அவர் பெரியவர். தமக்கு விரோதமானவர்களுக்கு அவர் அளிக்கும் தண்டனைகளைப் பார்க்கும்போது அவர் பெரியவர். அவருடைய வாக்குத் தத்தங்களினாலும், அவர் தரும் மன்னிப்பு, ஆசீர்வாதங்களினாலும் அவர் பெரியவர். அவருடைய பரிந்துபேசும் ஜெபமும் நமக்காக அவர் செய்த தியாகமும் அவரே பெரியவர் என சாட்சிக்கூறுகின்றன.

விசுவாசியே, உன் இரட்சகர் பெரியவராயிருப்பதால்தான் பாவிகளை இரட்சிக்கிறார். தமது தயவு கிருபை இரக்கம், மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அவர் பெரிய அளவில் தருகிறார். அவருடைய மக்கள் ஒன்று சேர்ந்து உலகம், பாவம், சாத்தான் ஆகியவற்றை ஜெயிக்கிற வல்லமையை அவரிடமிருந்து பெறுகிறபடியால் அவர் பெரியவர். தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி, யாவற்றிலும் வெற்றி சிறந்தபடியால் அவர் பெரியவர். மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த பெரியவர் அவர். எல்லாவற்றிலும் மேலான நாமம் உடையவராயிருப்பதால் அவர் பெரியவர்.

இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் வல்லவர்
இயேசுவே நீர் மீட்பர்
இயேசுவே என்றும் என்னோடிரும்.

அவர் நெறிந்த நாணலை முறியார்

அக்டோபர் 29

“அவர் நெறிந்த நாணலை முறியார்” மத்.12:20

அருள் நாதர் இயேசுவின் மனம் எத்தனை மென்மையானது. அவர் குணம் சாந்தமானது. ஆகையால் எவராயினும் அவரிடம் வர அச்சங்கொள்ள வேண்டாம். எந்தப் பெலவீனனும், எந்நேரத்திலும், எப்பிரச்சனையுடனும் அவரிடம் பயமின்றி வரலாம். நம் உள்ளத்தில் எழும்பும் ஆசைகள் சிறிய விசுவாசத்துடன் ஆரம்பிக்கும்பொழுது அவற்றை கவனித்து தேவன் ஏற்றுக்கொள்வார்.

நாம் பெலவீனர், எளிதில் சோர்ந்துவிடுவோம் என்று அவர் அறிந்திருக்கிறபடியால் நசுங்கிப்போகும் நாணலைப்போல் நம்மை முறித்துவிடாமல் மென்மையாக நடத்துவார். அவர் நொறுங்கினதைக் கட்டி பெலப்படுத்துவார். சீராக்குவார். நமது நல்விருப்பங்களை உற்சாகப்படுத்தி, நாம் எவ்வளவு எளியவராயிருப்பினும் நம்மை அங்கீகரிப்பார். தகுதியற்ற நம்மை தகுதியுள்ளவர்களாக்குவார். நமது ஜெபங்கள் குறையுள்ளவைகளாயிருப்பினும் அவர் ஏற்பார்.

நமது ஆத்துமா துவளும்போது அவர் நம்மை ஆற்றித்தேற்றி பெலன் தருவார். அச்சம் நீக்கி உற்சாகம் தருவார். நம்மை மேய்த்து நடத்தும் மேய்ப்பராயிருக்கிறார். தமது அரியணைக்கு அழைத்துச் செல்லும் மன்னரும் அவரே. தாமும் நெரிந்த நாணலை முறியார். பிறரும் அதை முறிக்கவிடார்.

அன்பானவர்களே, சாத்தானாலும் உலகத்தினாலும் நீர் நொறுக்கப்பட்டிருக்கிறீரா? உங்கள் பெலவீனத்தையும், தகுதியின்மையையும் உணருகிறீர்களா? பயப்படாதேயுங்கள். இயேசு கிறிஸ்து சாந்தமுள்ளவர். அன்பு நிறைந்தவர், கிருபை உள்ளவர், எவரையும் அவர் புறக்கணியார். எவரிடமும் அசட்டையாயிரார். காயத்தைக் கழுவி சுத்தம் செய்து தம்மிடமல் சேர்த்துக்கொள்ளுவார்.

மங்கின திரியை அனணயார்
எங்குமவர் அன்பு தருவார்
தங்குவார் என்னருகில் இயேசு
தாங்குவார் இன்பதுன்பத்திலும்.

இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து

அக்டோபர் 28

“இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து” லூக்கா 8:35

வசனத்தில் குறிப்பிட்டபடி ஆண்டவரின் பாதத்தருகே உட்கார்ந்திருந்த ஏழை மனிதன் சிறிது நேரத்திற்குமுன்தான் சாத்தானுடைய கட்டுகளிலிருந்து விடுதலையானான். அவர் தேவனுடைய வல்லமையைக் கண்டு அவரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, அவருடைய பாதத்தருகே நன்றியுள்ளவனாக அமர்ந்திருந்தான். நாமும் ஜீவனுள்ளவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டுமானால், தேவனுடைய பாதத்தருகேதான் இருக்க வேண்டும். இந்த இடத்தை எவரும் பெறலாம். இப்போதும் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் அவர் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு, அவரின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவோம். அவர் நம் எஜமானாக இருக்க நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளுவோம்.

ஆண்டவரின் பாதமே தயவும், அன்பும் நிறைந்த இடம். இங்கு நமக்கு எவ்வித பயமும் இல்லை. இங்குதான் ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். புதுப்புது காரியங்கள் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளலாம். நமக்கும் தேவனுக்குமுள்ள ஐக்கியத்தை இது காட்டுகிறது. நாம் கிறிஸ்துவோடு சேர்ந்திருக்கிறோம் என்பதற்கு இது சாட்சி. அவர் பாதத்தருகே இருக்கும் நாம் எண்ணிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நமது வாழ்வின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய இடம் இதுவே. அவருடைய பாதத்தருகே அமர்ந்து, அவருடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்வோம். என்னவாயினும் இவ்விடத்தை விட்டு அகலவேண்டாம். சாத்தானின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்விடத்தில்தான் நாம் தேவனோடு வாழும் வாய்ப்பைப் பெறுகிறோம். இவ்விடத்திலிருக்கும் பொழுதுதான் நமது வாழ்க்கை பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கையாகும்.

இயேசுவின் பாதத்தில் அமர்வேன்
இகத்திலும் பரத்திலும் பெறுவேன்
எண்ணற்ற ஆசீர்வாதங்கள்தனை
என்றுமவரைப் போற்றிப் பாடுவேன்.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23

இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.

நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.

எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.

அவர் மரணத்தைப் பரிகரித்தார்

அக்டோபர் 26

“அவர் மரணத்தைப் பரிகரித்தார்” 2.தீமோ.1:10

நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது நண்பர்களையும், பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நாம் அன்பாக நேசிக்கிறவர்களையும் அது நம்மிடமிருந்து அது பிரித்துவிடும். மரணம் மகா கொடிய பகைவன். நம்மைப் பயத்தால் நிரப்பி எப்பொழுதும் நம்மை நடுங்கச் செய்கிற நமது விரோதி. ஆனாலும் இந்த மரணச்சத்துருவுக்கு மேலான ஒரு பெரிய நண்பர் உண்டு. இந்த தயவுள்ள நண்பர் நம்மை நன்றாகத் தெரிந்தவர். அளவில்லாமல் நம்மை நேசிக்கிறார். நமக்கு இரக்கம் காட்டி, மனுக்குலத்தின் மீட்புக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். நம்மைத் தப்புவிக்க வேண்டுமென்று சந்தோஷமாகப் பூமிக்கு இறங்கி வந்தார்.

நமக்காகப் பெருந்துன்பத்தைச் சகித்தார். சொல்லிமுடியாத வண்ணமாகப் பாடுகள்பட்டார். இப்பாடுகளினால் நமது கடைசிச் சத்துருவாகிய மரணத்தை ஜெயித்தார். சாவின் கூரை ஒடித்தார். அவர் மரணத்தை ஜெயித்ததால், நாம் மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. மரணம் இப்பொழுது உறங்கிக்கிடக்கிறது. அதை அவர் மாற்றிப் போட்டதினால், அதைச் சிறையாக்கி, அதனால் சிறைப்படுத்தப்பட்டோரை விடுதலை செய்தார். அதன் பயங்கரத்தை நீக்கினார். இப்பொழுது அது திவ்விய மகிமை நிறைந்து அவர் சாவின் கூரை ஒடித்ததினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். நீதி திருப்தியடைந்தது. துரைத்தனங்களையும் வல்லமைகளையும் அழித்தார். சாத்தானுடைய கரங்களிலுள்ள திறவுகோலைப் பறித்து விட்டார். நித்திய இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசு நமக்குள் இருந்தால் நமக்குச் சாவு இல்லை.

நம் பரமநேசரை நம்பி
அவர் வாழ்க்கையைப் பின்பற்றினால்
மரணத்தின் பயம் நமக்கில்லை
கல்லறையும் அச்சுறுத்தாதே.

Popular Posts

My Favorites

அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்

ஏப்ரல் 22 "அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்" சங்கீதம் 116:12 ஒவ்வொரு நாளும் முடியும்போது இப்படி கேட்பது நல்லதல்லோ? இன்று மாலை துதி செலுத்த வேண்டியதாயிருந்தாலும் இந்த நாளில் கடந்த காரியங்களை மட்டும் நினைக்கக் கூடாது. கர்த்தர்...