ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20

“ஜெயங்கொள்ளுகிறவன்” வெளி 2:17

ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அடங்கமாட்டார்கள். கிறிஸ்தவன் அவர்களோடு சமாதானமாகக் கூடாது. முழுவதும் அவர்களை ஜெயிக்கும்வரை அவர்களோடு போராடவேண்டும். இந்த உலகத்தை மேற்கொள்ள வேண்டும். சாத்தானை ஜெயிக்க வேண்டும். தன் சொந்த இருதயத்தை அடக்கி ஆளவேண்டும்.

மோட்சம் ஜெயவீரரின் ஸ்தலம். அங்கே சொல்லிமுடியாத மேன்மைகள் அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய இரட்சிப்பின் தலைவராகிய இயேசுவானவர் ஜீவவிருட்சத்தின் கனியையும் மறைவான மன்னாவையும் அவர்களுக்குப் புசிக்க கொடுப்பார். புதிய பெயர் எழுதப்பட்ட வெள்ளைக் கல்லையும், விடி வெள்ளி நட்சத்திரத்தையும், வெள்ளை அங்கியையும், அவர்களுக்குக் கொடுப்பார். தேவனுடைய ஆலயத்தில் ஒளிசுடர்களாய் நிறுத்தப்பட்டு, ஜீவ கிரீடத்தைத் தரித்து, அவரோடு சிம்மாசனத்தில் உட்காரும் சிலாக்கியத்தையும், பெறுவர். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இப்படிப்பட்ட பாக்கியங்கள் வாக்குப்பண்ணப்பட்டுள்ளபடியால், நாம் தைரியப்பட்டு உற்சாகமடைவோமாக. அவர் கொடுக்கும் எந்தக் கனமும் அவர் அளிக்கும் எந்த மேன்மையும், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு உண்டு. ஆகவே நாம் போராடி யுத்தம் செய்வோமாக. தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்து இயேசுவின் கிருபையில் பலப்பட்டு பந்தையப் பொருளை நோக்கி போராட மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோமாக. நாம் விசுவாசத்தினால் ஜெயங்கொள்ளுவோமாக.

என் சத்துருக்கள் மூவரையும்
போராடி ஜெயிப்பேன்
உலகம் மாம்சம் பிசாசு
ஜெயித்து அவரைப் பற்றுவேன்.

அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்

யூலை 18

“அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்” யோவான் 17:10

பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் நாம் பூரணராய் நீதிமானாக்கப்படுவதனால் மகிமைப்படும். அவருடைய வல்லமை நாம் உலகத்தினின்று பிரிந்து நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுவதனால் மகிமைப்படும். நாம் உயிர்பிக்கப்பட்டு அனுபவிக்கும் எண்ணில்லா நன்மைகளால் அவர் இரக்கமும், நாம் விடுவிக்கப்பட்டு சந்தோஷப்படுவதில் அவர் வார்த்தையும், நாம் அவரோடு ஐக்கியப்பட்டு ஒன்றாவதில் அவருடைய சிந்தையும் மகிமைப்படும்.

நம்முடைய ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிடைக்கும் உத்தரவில் அவருடைய உண்மையும், நாம் தைரியமாய் நம்பிக்கையோடு கிருபாசனத்தண்டை சேருவதில் அவருடைய அன்பும், துன்பத்தில் நமக்கு வேண்டியதைத் தந்து ஆதரிப்பதில் அவருடைய தயையும் மகிமைப்படும். நம்முடைய துக்கங்களிலும் வருத்தங்களிலும் அவருடைய உருக்கமும், நம்முடைய பெலவீனங்களிலும் முரட்டாட்டத்திலும் நம்மை தாங்குகிறதில் மரணத்திலும் நம்முடைய நித்திய இரட்சிப்பிலும் அவருடைய கிருபையும் மகிமைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கிறதெல்லாம் அவரிடத்திலிருந்துதான் வரவேண்டும். அவருடைய சபை அவருடைய மகிமையானதால் அவர் அதை மகிமையுள்ளதாக்குவார். அதை அவர் மாசு திரை ஒன்றுமில்லாமல் மகிமையுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்துவார். இயேசு என்னில் மகிமைப்படுகிறார் என்பது எத்தனை அருமையான சத்தியம்.

என்னில் உம் மகிமை
தங்கிட அருளும்
உமக்காகவே பிழைப்பேன்
உமக்கென்றே சாவேன்.

இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை

யூலை 25

“இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை” மத்.17:8

மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது. ஆனால் எது மாறினாலும் இயேசு அப்படியே இருக்கிறார். அவருடைய அன்பும் தன்மையும் மாறுவதில்லை. நம்மேல் அவர் வைத்திருக்கிற சித்தமும் மாறுகிறதில்லை. அவர் கிருபையுள்ளர். உண்மையுள்ள அவருடைய வாக்கும் மாறுகிறதில்லை. ஆசாரிய ஊழியத்திலும், மன்றாட்டு ஊழியத்திலும், இராஜ உத்தியோகத்திலும் அவர் மாறுகிறதில்லை. அவருடைய இரத்தம் எப்போதும் பலனுள்ளது. தகப்பனாகவும், சகோதரனாகவும், புருஷனாகவும், சிநேகிதனாகவும் அவரோடு நமக்கு இருக்கும் உறவில் அவர் மாறுகிறதில்லை. அவர் நேற்றும் இன்றும் ஒரே விதமாய் இருக்கிறார். இந்த வசனம் நமக்கு எப்போதும் ஞாபகக் குறியாய் இருக்க வேண்டும்.

இயேசுவால் மட்டும்தான் நம்மை கிருபாசனத்தண்டை கூட்டிக் கொண்டு போக முடியும். அவரைத்தான் நம்பி விசுவாசிக்கலாம். தேவன் நம்மை அங்கீகரிப்பாரென்று நம்ப அவர்தான் நமக்கு ஆதாரம்., மாதிரி. அவரே நம்முடைய சந்தோஷமும், கீதமும், நம்முடைய இராஜனும் நியாயப்பிரமாணிகனுமாய் இருக்கிறார். அவர் மாறாதவர். ஆகையால் எல்லாவற்றிலும் அவரையே பற்றப் பிடித்திருக்கலாம். நமது கண்களையும் சித்தத்தையும் அவர்மேல் வைப்போமாக. மோசேயும் எலியாவும் போனாலும் இயேசுவானவர் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவோமாக. மேகம் இருண்டு இருந்தாலும். பிரகாசமாய் காணப்பட்டாலும் அவர் மாறாதவர். இயேசுவானவர் சகல வருத்தங்களையும் இன்பமாக்கி, பயன்படுத் வாழ்வில் வரும் சோதனைகளுக்கு நம்மை விலக்கி காப்பார் என்று எதிர்பார்த்திருப்போமாக.

இயேசு நல்ல பெருமான்
எனக்கு முற்றிலும் ஏற்றவர்
எனக்கு வேண்டியது எல்லாம்
அவரிடம் என்றுமுள்ளது.

விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்

யூலை 05

“விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்.” நியா. 8:4

கிதியோனுடைய போர்ச் சேவர்கள் அதிகம் வருத்தப்பட்டார்கள், விடாய்த்துப் போனார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தர் தெரிந்துகொண்ட சேனை. தங்கள் தலைவனின்பின் அவர்கள் உறுதியாய் சென்றார்கள். பிரயாசத்தினாலும், தங்கள் வெற்றியினாலும், உணவில்லாமையினாலும், இளைத்துப் போனார்கள்.

முற்பிதாக்களின் காலத்தில் அற்புதங்கள் செய்யப்பட்ட யோர்தான் நதிக்கு சமீபத்தில், வெற்றி முற்றுப்பெற்ற கடைசி நேரத்தில்தான் விடாய்த்துப் போனார்கள்.
கர்த்தருடைய ஜனங்களைப்பற்றியும் இப்படியே சொல்லலாம். இவர்கள் கர்த்தருக்கு அருமையானவர்களாய் இருந்தும், சிலுவையின் போர்ச்சேவகராய் இருந்தும் சுமைகளாலும், துன்பங்களாலும், யுத்தங்களாலும், ஞானாகாரக் குறைவினாலும், அடிக்கடி இளைத்து, சோர்ந்து மனமடிவாகிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின்தொடருவதை விடுகிறதும் இல்லை. மாம்ச சிந்தைக்கு இடங்கொடுக்கிறதுமில்லை. தேவன் இதைச் செய்வாரோ, மாட்டாரோ என்று யோசிக்கிறதுமில்லை. அவர் கைவிட்டாரோ இல்லையோ என்று வீணாய் கங்குகிறதுமில்லை. இவர்கள் தேவன் கொடுத்த உத்தரவு பிரகாரம் தாங்கள் மேற்கொண்ட சத்துருக்களைப் பின் தொடர்ந்தார்கள். வாக்குத்தத்தங்கள் இவர்களை உற்சாகப்படுத்தின. ஆகவே முழு நிச்சயத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தொடர்ந்து போகிறார்கள்.

நீ சோர்ந்து போகிறாயா? அது உன் ஜெபத்தில், பிரயாசத்தில் பிரதிபலிக்கிறதா? இன்னும் தொடர்ந்து போ. பெலவீனமாய் இருந்தாலும் தொடர்ந்து போ. தேவன் உன்னோடு இருப்பதால் தொடர்ந்து போ.

சத்துருவை ஜெயிக்கும் மட்டும்
ஜெபித்து நின்று போராடு
ஜெயம் கடைசியில் வரும்
ஜீவ கிரீடமும் கிடைக்கும்.

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14

“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1

கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.

அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.

கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.

இனி குழந்தைகளாய் இராமல்

யூலை 16

“இனி குழந்தைகளாய் இராமல்” எபேசி. 4:14

இந்த வசனம் ஓரே நிலையையல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. நாம் எப்போதும் பிள்ளைகளைப்போல இருந்தாலும் அறிவில் பெரியவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் வளர்வதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கியிருப்பதுமல்லாமல், அவர்கள் வளர வேண்டும் என்று கற்பிக்கிறார். நாம் அறிவில் வளர வேண்டும். சிறு பிள்ளைகள் சிறிய காரியங்களில் திருப்தியடைகிறார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. நாம் பலப்பட்டு கிறிஸ்துவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும். நம் சத்துருக்களுக்கு எதிராகத் திடன் அடைந்து கர்த்தருடைய காரியத்தில் தைரியம் பெற்று திவ்வி காரியங்களில் உறுதியாய் இருக்க வேண்டும்.

நம்முடைய விசுவாசமும், நம்பிக்கையும், வைராக்கியமும் அன்பும் பெருகவேண்டும். நாம் இருக்கிறபடியே இருக்கக்கூடாது. குழந்தைகளாகவும் வளரவேண்டும். நாம் வளரும்படி ஞானத்திலும், பக்தியிலும் பெருக வேண்டும். நாம் வளரும்படிக்கு கிறிஸ்துவை உள்கொண்டு சகல கிருபைகளையும் முயற்சி செய்து தேவனோடு ஐக்கியப்பட வேண்டும். நாம் வளரும்படிக்கு தேவன் தம்முடைய வசனத்தையும், நியமங்களையும், தமது குமாரனையும் தந்திருக்கிறார். நாம் பூரணராகும்படிக்குத் தம்முடைய ஊழியக்காரரையும் தாம் செய்து முடித்த கிரியைகளையும், தம்முடைய சத்துருக்களையும்கூட பயன்படுத்துகிறார். நாம் திராட்சை செடிபோலவும், தொழுவத்தில் உள்ள கன்றுகுட்டிகளைப்போலவும் வளருவோம் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். ஆதலால் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வாக்கியத்தில் கண்டிருக்கிற எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வோமாக. நாம் குழந்தைகளாய் இருக்ககூடாது.

பிதாவே எப்போதும்
குழந்தைகள் போலிராமல்
எங்கள் ஒளி மென்மேலும்
பிரகாசிக்க செய்யும்.

பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்

யூலை 31

“பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” யோவான் 15:21

இயேசு நேசிக்கிற சகலரையும் தேவன் நேசிக்கிறார். அவர்கள் யார்? அவருடைய வசனத்தைப் பிடித்து, அவர் புண்ணியத்தின்மேல் சார்ந்து, அவருடைய நாமத்தை நம்பி, அவரின் நியமங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரே தங்கள் ஆத்துமாவுக்கு அருமையானவர் என்று காண்பிப்பவர்கள். இப்படிப் பட்டவர்களையே பிதாவானவர் நேசிக்கிறார். இந்த அன்பில் இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் அளவற்ற எண்ணமும், பிரியமும், அதிகம் அடங்கியிருக்கிறது. இவர்களைச் சிநேகித்து நன்மை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர் எவ்வளவோ மனதுள்ளவராயிருக்கிறார். தேவன் இப்படி நோக்கங்கொண்டு சிநேகித்து குமாரன் முடித்த மகிமையான கிரியையில் இதை நிறைவேற்றினார்.

அவர் அன்பு நித்தியமானது. மாறாதது. சுயாதீனமுள்ளது. அதற்கு சாட்சியே அவர் செய்த உடன்படிக்கை. தமது குமாரனைத் தந்த ஈவு, ஆவியானவரைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தம், ஆவிக்குரிய நன்மையான வேதவசனம், மகிமையின் நாம் ஜெபிக்கும்போது இதை மறக்காது நம்புவோமா. அவர் சித்தம்படி செய்யவும், சகிக்கவும் மனதாயிருப்போமா, கர்த்தர் சிநேகிக்கிற சகலத்தையும் நாடி, பாவிகள்மேல் மனதுருகி, அவர்களோடும், அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோமாக. தேவனை தேடுகிற ஒவ்வொருவரையும் பார்த்து அவர் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லி உற்சாகப்படுத்துவோமாக. தேவன் நம்மை நேசிக்கிறபடியால் சபையில் விருத்தியையும் ஐக்கியத்தையும் பரம சித்தத்தையும் நாடித் தேடுவோமாக.

நாம் கெட்டுப்போய் இருக்கையில்
சுதனைக் தந்தவர் பிதா
ஆவியும் அவர் ஈந்ததால்
அவரை என்றும் போற்றுவோம்.

அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது

யூலை 17

“அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது” சங். 65:3

தேவபிள்ளை யுத்தம் செய்கிறவன். பாவம் அவனில் வாசம் பண்ணி அவனில் கிரியை செய்து சில நேரங்களில் அவனை மேற்கொள்கிறது. அவன் பாவத்திற்கு முற்றும் நீங்கலானவன் அல்ல. ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு எதிராக விழித்திருந்து போர் செய்ய வேண்டியவன். அக்கிரம கிரியைகள் சில சமயங்களில் நமதுமேல் வல்லமை கொள்ளலாம். அப்பொழுது நமது சமாதானம் குறைந்து அவிசுவாசம் பலத்துப்போம். தேவன் மேலுள்ள பாசம் விலகி, ஜெபம் பண்ணமுடியாமல் வாய் அடைப்பட்டுத் துதியின் சத்தம் ஓய்ந்துபோம். அப்போது நமது ஆத்துமா பெலவீனப்பட்டுத் தீட்டாகி நமக்கும், தேவனுக்கும் நடுவே மந்தாரம் உண்டாகி, அவர் முகத்தைப் பார்க்கவும், அவன் அன்பை ருசிக்கவும் கூடாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

நாம் பாவத்திற்கு இணங்கி அது நம்மை மேற்கொள்ளும்போது நமக்குள் பரிசுத்தாவியானவர் நம்மை கடிந்துக்கொள்வார். கலக்கமும் வருத்தமும் தேவ சமுகத்தில் நம்மைப் பிடிக்கும். நாம் நம்மைத் தாழ்த்தி பாவத்தை அறிக்கையிட்டு தேவனண்டைக்குத் திரும்ப அவசியம் ஏற்படும். இப்படிப்பட்ட சம்பவத்தைத் தேவன் நமக்கு நன்மையாக பலிக்கச் செய்தால் நாம் பாவத்தை அதிகமாய்ப் பகைத்து தேவனுக்குமுன் நம்மை அருவருப்போம். அதிக விழிப்பும் ஜெப சிந்தையும் உள்ளவர்களாகுவோம். நம்மைக் குறித்து வைராக்கியம் கொண்டு பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகப் பார்ப்போம். தேவன் நம்மை அப்படிப்பட்ட நிலைமையிலிருந்து விடுவிக்கும்போது நாம் தேவனுடைய நீடிய சாந்தத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பருளும் நேசத்தையும் பெறுவதால் ஸ்தோத்திரித்து அவரை வணங்குவோம். தாழ்மையை அணிந்து தேவனுக்கு முன்பாக பணிந்த சிந்தையோடு நடப்போம்.

என் அக்கிரமம் பெருகி,
என் ஆத்துமா தொய்யுது
என் இச்சை அடக்கும் தேவா
என்னை முற்றும் புதுப்பியும்.

தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்

யூலை 21

“தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” எபி. 12:24

பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது பாவிகளுக்குச் சமாதானத்தை உண்டாக்கிற்று. சமாதானத்தைக் கூறுகிறது. அது சகல பாவத்தினின்றும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இது நமக்குத் தவறாமல் புண்ணியமாய்ப் பலிக்கத்தக்கதாய் நடப்பிக்கிறது. அது காயப்பட்ட மனச்சாட்சியை ஆற்றி, நம்முடைய ஊழியத்தைச் சுகந்த வாசனையாக்கி உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறது. பஸ்காவின் இரத்தம் இஸ்ரவேலரைக் காத்ததுப்போல இயேசுவின் இரத்தம் நம்மை பத்திரப்படுத்தி, நித்திய நீதிக்குத் திருப்தி உண்டாக்குகிறது.

இந்த இரத்தம் குற்றவாளிக்கு மன்னிப்பையும், செத்தவனுக்கு ஜீவனையும் சிறைப்பட்டவனுக்கு விடுதலையையும், கிருபையற்றவனுக்கு கிருபையையும் கொடுக்கிறது. இந்தத் தெளிக்கப்பட்ட இரத்தத்தண்டைக்குத்தான் விசுவாசிகளாக வருகிறோம். இந்த இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதைக் கேட்க வருகிறோம். ஆபேலின் இரத்தத்தைவிட அது மேலான காரியங்களைச் சொல்கிறது. தேவனண்டைக்கு நம்மை ஒப்புரவாக்குகிறதினால் அதன்மேல் நம்பிக்கை வைக்க வருகிறோம். அதை ருசிக்கவும், அதனால் ஏற்படும் பாக்கியத்தை அனுபவிக்கவும் வருகிறோம். இரக்கத்தையும் அவசியமான வேலைக்கு வேண்டிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும், அவர் இரத்தமூலமே வருகிறோம். இதில் நாம் சந்தோஷப்பட வருகிறோம். ஏனெனில் அது ஆறுதலுக்கும், சந்தோஷத்திற்கும் ஊற்று. குற்றத்தால் வருத்தப்பட்டு, பயத்தால் கலங்கி, சாத்தானால் பிடிபட்டு, குறைவால் வருத்தப்பட்டு மரணம் நம்மை சமீபித்து வரும்போது நாம் அதனண்டையில்தான் போகவேண்டும்.

கிறிஸ்து சிலுவையில்
தன் குருதி சிந்தினார்
அவர் தேகம் பட்ட காயம்
எனக்களிக்கும் ஆதாயம்.

உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.

யூலை 06

“உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.” சங். 103:3

கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த வியாதி வுருத்தமானதும் அருவருப்பானதும் ஆகும். இது ஞாபகத்தையும் பாசத்தையும், மனசாட்சியையும், சித்தத்தையும் முழு மனுஷனையும் கெடுக்கும். நம் எல்லாருக்கும் இந்த வியாதி உண்டு. இதனால் நாம் யாவரும் வருத்தப்படுகிறோம். கர்த்தராகிய இயேசுதான் நம்மைக் குணமாக்க முடியும். அவர் பெரிய பரிகாரி.. அவரிடத்தில் போனால் சுகமடைவோம்.

இப்படி நீங்கள் தைரியம் கொள்ளும்படி அவர் எப்படிப்பட்டவர் என்று கவனியுங்கள்.அவர் அளவற்ற ஞானமும், உருக்கமும், திறதையும் உள்ளவர். அவரைப்போல் அனுபவம் மிக்க வைத்தியர் எவருமில்லை. அவர் தொட்டால் எந்த வியாதியானாலும் சுகமாகிவிடும். அவரின் ஒளடதமோ திரு இரத்தம், திரு வசனம், பரிசுத்தாவியானவர் என்பவைகள். துன்பங்களாலும், நஷ்டங்களாலும், மெய் உணர்வினாலும், இரகசிய கிரியைகளினாலும் இவைகளை நம்மில் பெலன் செய்யப்பண்ணுகிறார். அவர் சிகிச்சை அளித்து சுகமடையாமல் இருப்பது யாருமல்ல. தாவீதின் வியாதி கொடியதாயிருந்தாலும், என் நோய்களையெல்லாம் குணமாக்கினார் என்கிறான். இதை உணர்ந்து சொல்கிறான். ஆனால் இதை நம்பலாம். நீ பாவியானால் நீ வியாதிஸ்தன். உன் வியாதி மோசமானது. நீ இயேசுவண்டை போ. சத்தியத்தைவிட்டு விலகினவனே, நீ வியாதியாய் இருக்கிறாய். நீயும் இயேசுவண்டைக்கு போ. விசுவாசியே, நீ முற்றிலும் சுகமாக வேண்டுமென்று விரும்புகிறதில்லையா? அப்படிhனால் இன்றே இரட்சகரண்டைக்குப் போ. கர்த்தாவே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொல்.

மன்னித்துக் கிருபை அளித்து
பாவப் பிணியை நீக்கும்
ஆத்தும சுகம் ஈந்து
பூரண சுத்தம் தாரும்.

Popular Posts

My Favorites

நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்

ஜனவரி 15 "நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்."  ஏசாயா 64:6 மாறாத நித்திய தேவனுக்கும், இலையைப்போல வாடிவிடுகிற பாவிக்கும் எவ்வளவு வித்தியாசமிருகஇகிறது. நமது இம்மைக்குரிய வாழ்நாள் இப்படித்தான் பசுமையாய்ச் செழிப்பாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்தில்...