நவம்பர்

முகப்பு தினதியானம் நவம்பர்

எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்

நவம்பர் 25

“எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்” யோபு 7: 16

ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வடைந்து, நாம் மரணத்தை விரும்புகிறோம். துன்பப்படுபவர்கள்தான் ஜீவனை வெறுத்து உயிர் வாழ விரும்பவில்லை. என்பர். நாமும் இவ்வாறு கூறியிருக்கிறோம். நாம் உயிரோடிருக்குமளவும் பாவம் செய்யத் தூண்டப்படுவோம். அதனால் வருத்தம் அடைவோம்.

தன் சொந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் அந்நியனாகப் குடியிருக்க யார்த்தான் விரும்புவார்? நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுதான். இப்பூமி நமது நிரந்தர உறைவிடமில்லை. நெடுநாள்களும் நாம் வாழப்போவதில்லை. இவ்வுலகில் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்று கவலை கொள்ளாமல் பயனுள்ளவர்களாக, மகிழ்ச்சியுடள் நமது காலங்களைச் செலவிடுவோமாக. ஆத்துமாக்களுடைய நன்மைக்கென்று, சபையின் வளர்ச்சிக்கென்று, கிறிஸ்து நாதரின் மகிமைக்கென்று, நாம் பாவத்தை வெறுத்து சாத்தானை எதிர்த்து நமது வாழ்க்கையை நடத்துவோம். நித்திய ஜீவன் நமக்காகக் காத்திருக்கிறது. அப்படி நாம் வாழ்ந்தால் வாழ்க்கையின் மன நிறைவடைவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம். கிறிஸ்துவின் மேல் சார்ந்து அவருக்காக, கூடியமட்டும் அவரைப்போல வாழ்வோம். அவருடைய மகிமையில் வளர்ந்து, அவருடைய பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள அவரோடு சஞ்சரிப்போம்.

பாவம் செய்தே வாழ்ந்திடேன்
பாவம் விட்டுப் பரிசுத்தமாக வாழ
பரிசுத்தரே உம்திரு தயவால்
பாவியேன் முயல்வேன் என்றும்.

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24

“கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” ரோமர் 5:6

பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும் அவர் மரித்தார். இவ்வாறானவர்களுக்காக மரிப்பதுமான் மிகப் பெரிய தயவு. நல்லவர்களுக்காகவும், பக்திமான்களுக்காகவும் மரித்திருப்பாரானால், இப்பாவிகளாகிய நமக்காக மரிக்கவில்லையென்று நாம் சொல்லி விடலாம். ஆனால் இயேசுவோ அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் இப்படிப்பட்ட அக்கிரமக்காரரே. நாம் அவரை விசுவாசிப்போமானால், நமக்காகவேமரித்தார் என்று அறிவோம். நமக்குப் பதிலாக, நமக்கு பிணியாளியாக அவர் மரித்தார். நான் மரணத்தை அனுபவியாதிருக்க அவர் மரித்தார். நாம் அவருக்குள் நீதியாகும்படிக்குப் பாவமில்லாத அவர் பாவிகளான நமக்காக மரித்தார்.

அக்கிரமக்காரர்களும், பாவிகளுமான நாம் பிழைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை நினைத்து ஆறுதல் அடைவோமாக. நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவரே, நமது சரீரத்தில் நம் பாவங்களைச் சுமந்தார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம். இனி நாம் மரிப்பதில்லை. நமது பாவங்களுக்காகப் பிரதிபலன் செய்தாயிற்று. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தாயிற்று. அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்தார். என்னிடத்தில் விசுhசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். மாட்சிமை நிறைந்த மீட்பரே உமது அளவற்ற அன்புக்காக எவ்வாறு உம்மைத் துதிப்போம்.

சிலுவையில் என்க்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்துவே
உம் அன்பிற்காகவென்றும்
உம்மைத் துதி செய்வோம்.

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23

“அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து” எசேக். 7:16

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விசுவாசி தன்னை நேசிக்கிற தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது பரிசுத்தமும், நீதியும் நன்மையுமான தேவனுடைய கட்டளையை மீறினேனே என்று துக்கித்துப் புலம்புவான். அவன் தனக்குள்ளே இருக்கும் பாவத்தைக் குறித்து துக்கிப்பான். அந்தப் பாவம் அவனுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கும். தன் பாவத்திற்காக அவன் விசனப்படுவான். அவன் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறானோ அப்பொழுதெல்லாம் விசனமடைவான். அந்நேரங்களில் அவன் சந்தோஷத்தைக் காண முடியாது. ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனல்ல.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று அவன் அறிவான். தன்னை நேசிக்கும் தேவன் மனந்திரும்பும் பாவியை அங்கிகரிப்பாரென்று அவனுக்குத் தெரியும். ஒருவன் தேவனை எவ்வளவாய் நம்புகிறானோ, எவ்வளவாய் அவரின் அன்பை ருசிக்கிறானோ, அவ்வளவாக அவன் பாவம் செய்தபொழுதெல்லாம் அவனுடைய துக்கம் அதிகரிக்கும். தான் அவரோடு சஞ்சரித்த நாள்களையெல்லாம் நினைத்து, நினைத்துச் சஞ்சலப்படுவான். அவன் படும் துக்கம் அவனுக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் கொண்டு வரும்.

நண்பரே, நீர் உமது பாவங்களுக்காக துக்கப்படுகிறதுண்டா? பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு, அதன் சந்தோஷத்தை அடைந்த அனுபவம் உமக்கு உண்டா? அப்படி துக்கிக்கவில்லையென்றால், இப்பொழுது உம் பாவத்திற்காய் கண்ணீர் சிந்தும், அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.

என் பாவங்களுக்காகவே
நான் துக்கித் தழுவேனாக
துயரப்படுவோர் யாவரும்
பாக்கியராவார் பின் நாளில்.

உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

நவம்பர் 22

“உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” நீதி. 3:6

எங்கே போவது, என்ன செய்கிறது என்று திகைக்கிறாயோ? தேவனுடைய செயல்கள் உனது போக்கிற்கும், எண்ணங்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகின்றனவோ? எரேமியா தீர்க்கனுக்குக் கர்த்தர் போதித்தபடியே உனக்கும் போதிக்கிறார். கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல என்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறது அல்ல என்றும் அறிவேன் என்று எரேமியா சொன்னான். கிருபைக்காகக் கர்த்தரிடத்தில் கேட்டதுபோல, ஞானம் வேண்டும் என்றும் அவரிடத்தில் கேட்க வேண்டும். இரட்சிப்புக்காக அவரிடத்தில் பணிந்து வேண்டிக் கொள்வதுபோல இவர் உன்னை நடத்த வேண்டும் என்றும் அவரைப் பார்த்து வேண்டிக்கொள்ள வேண்டும். அவர் உன் பாதையை முன் கூட்டியே தெரிந்தெடுத்து உள்ளார். அவர் தெரிந்தெடுத்ததைத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், குழந்தையைப்போல அவரண்டைச் சென்று, வழியைத் தெளிவாகக் காட்ட வேண்டும் என மன்றாடு. அப்பொழுது தேவன் தமது செம்மையான வழிகள உனக்குத் தெளிவாகக் காட்டுவார்.

எதையும் செய்ய துவங்குமுன் தேவன் உன்னை நடத்த வேண்டும் என்று ஜெபி. எவ்வேலையைச் செய்யும்பொழுதும், தேவனே என்னோடு வாரும் என்று வேண்டிக்கொள். உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர், உன் பாதையைச் செம்மைப்படுத்துவார். உனக்கு நன்மை செய்ய அவருடைய கண் உன்மேல் நோக்கமாயிருக்கிறது. உன் ஜெபத்தைக் கேட் அவர் காத்திருக்கிறார். உன் குரல் கேட்டுக் கிருபையளிப்பார். உன் விண்ணப்பத்திற்குப் பதில் கிடைக்கும். அவருடைய வசனத்தின்மூலம் அவர் தரும் ஆசீர்வாதங்களைக் கண்டுபிடி. அவரைப் புகழ்ந்து மேன்மைப்படுத்து. அப்போது உன் பாதைகள் சீராகும். அவரால் நீ செம்மையான வழியில் நடத்தப்படுவாய்.

கர்த்தருக்கு உன்னை ஒப்புவி
கர்த்தரை நம்பிக் காத்திரு
அவர் உன்னை நடத்துவார்
அவர் யாவையும் செய்து முடிப்பார்.

உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா

நவம்பர் 21

“உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா” 2.இராஜா. 10:15

இக்கேள்வி மிகவும் அவசியமாகக் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. சில மனிதர் மிகவும் ஞானமாகவும் நன்றாகவும் பேசுவார்கள். அவர்களுக்கு கிறிஸ்தவ உபதேசம்பற்றிய தெளிந்த அறிவும் உண்டு. கிறிஸ்தவ வழிகளைச் சரியாக அறிந்தவர்கள். ஆனால் அவர்களுடைய இதயங்கள் நேர்மையானவையல்ல. இதை வாசிப்பவரே, உமது இதயம் சீரானதாயுள்ளதா? செய்த பாவத்திற்காக அது நொறுக்கப்பட்டுள்ளதா? அது தீமையை வெறுக்கிறதா? இயேசு கிறிஸ்துவை உறுதியாகப்பற்றிக் கொண்டிருக்கிறதா? கர்த்தருடைய வசனத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளதா? வசனத்தில் கூறப்பட்டபடி தேவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிக்கிறதா? உம் இருதயம் பரிசுத்தவான்கள் மேலும் அன்பு காட்டுகிறதா? கர்த்தருடைய ஊழியத்தில் பக்தி வைராக்கியம் கொண்டுள்ளதா?

அல்லது, அது தேவனை விட்டுத் தூர விலகி வாழ்கிறதா? கிறிஸ்துவில் ஐக்கியங் கொள்ளவில்லையா? உலகக் காரியங்களிலேயே திருப்தி கொள்கிறதா? வேதாகமத்தை ஏற்காமல் அவமதிக்கிறதா? தேவ கிருபையைக் குறித்து அசட்டையாயிருக்கிறதா? பாவத்தால் ஏற்படும் குற்ற உணர்வால் கலங்குகிறதா? உம் இதயத்தின் நிலையைச் சோதித்துப் பாரும்.

கிறிஸ்துவினண்டைக்கு உம் இதயம் வராமற்போனால் அது செம்மையாய் இருக்காது. ஆகையால் அது அடிக்கடி கெத்செமனே, கல்வாரி காட்சிகளைத் தியானிக்க வேண்டும். உம் இருதயம் செம்மையாக இல்லை என உணர்ந்து நீர் துக்கப்பட்டதுண்டா? நீர் உமது இருதயத்தை இயேசுவின் இரத்தத்தால் கழுவவேண்டும். அதை ஆண்டவருடைய சந்நிதியில் படைக்க வேண்டும். அப்பொழுது அவர் அதை செம்மை ஆக்குவார்.

என் மனம் செம்மையானதானால்,
பாவத்தை ஒரு நாளும் அது விரும்பாது
என் மனதில் கிறிஸ்து வருவாரானால்
அது தூய்மையாகி நலம் பெறும்.

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.

எபெனேசர்

நவம்பர் 19

எபெனேசர்” 1.சாமு.7:12

சிருஷ்டிகளாகிய நாம் மோசத்தில் விழக்கூடியவர்கள். வலிமையில்லாதவர்கள். அறிவீனர். நமக்கு எந்த நேரத்திலும் நமது பகைவனான சாத்தானாலும்,  அவன் வைக்கும் கண்ணிகளாலும் ஆபத்து எந்நேரமும் ஏற்படும். நாம் சிறுக சிறுகத் தவறிப்போகிறவர்கள். அச்சத்தால் பீடிக்கப்படுகிறவர்கள். இவ்வாறான நேரங்களில் நமக்கு உதவி செய்திடவே எபெனேசராக தேவன் இருக்கிறார். அவர் நம்மோடே இருந்து, தேவைப்படும்பொழுதெல்லாம் நமக்கு உதவி செய்கிறார். தேவனுடைய ஒத்தாசையினால்தான் நாம் நமது அவிசுவாசத்தையும், பாவ வாழ்க்கையையும் மேற்கொண்டோம். நமது சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்கிறோம். துன்பமும், சோதனையும் வந்தபோதும், எத்தகைய புயலுக்கும் அஞ்சாதிருந்தோம். தேவ ஒத்தாசையாலேயே இம்மட்டும் காக்கப்படுகிறோம்.

ஆகவே, நம்முடைய எபெனேசராகிய தேவனை நம்முன் நிறுத்தி நமக்கு அவர் செய்த உதவியை அறிக்கை செய்வது நமது கடமை. எல்லா உதவிகளையும் நமக்குச் செய்பவர் நமது கர்த்தரே. அவரே ஏற்ற நேரங்களில் உதவியவர். எப்போதும் அவர் நமக்கு உதவி செய்பவராயிருக்கிறபடியால், அவரைத் துதிப்போம். அவரிடத்திலிருந்து நாம் உதவிகளைப் பெற்றதால், நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவை? அவரைத் துதித்து, ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்துவோம். இவ்வாறு செய்யும்பொழுது நாம் முழு இருதயத்தோடு செய்ய வேண்டும். அவருடைய உதவியும் பிரசன்னமும், என்றும் நம்மோடிருக்கும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். நன்றி செலுத்தும் ஜெபங்களைத் தவறாது ஏறெடுக்க வேண்டும். எபெனேசர் இம்மட்டும் தேவன் நமக்கு உதவி செய்தார். இனிமேலும் செய்வார் என்று அவருடைய உதவிக்காகப் பொறுமையோடு காத்திருப்போம். அவர் செய்த உதவிக்கு சாட்சி சொல்லுவோம்.

இம்மட்டும் காத்தார் தேவன்
எபெனேசர் ஆதலால் போற்றுவேன்
இம்மையிலெல்லாம் நம்புவேன்
இம்மை விட்டவரில்லம் சேருவேன்.

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு

நவம்பர் 18

“தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு” உன். 8:5

ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக் கொண்டு இந்த உலகில் அவன் பயணம் செய்கிறான். இந்த வசனம் தன் நேசர்மேல் சாய்ந்து கொண்டு இருக்கும் மணவாட்டியைப்போல விசுவாசியைக் குறிப்பிடுகிறது. இது மணவாட்டிக்கு இருக்கும் பலவீனத்தையும், நேசருக்கு இருக்கும் பலத்தையும், அவர் மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர் மவாட்டிக்கு துணையாகவும், பெலனாகவும் இருக்கிறார். திருச்சபை கிறிஸ்துவின் மணவாட்டி. சொரிந்து ஆறுதலளிக்கிறார். திருச்சபை தம்மேல் சார்ந்திருப்பதையே அவர் விரும்புகிறார்.

பிரியமான விசுவாசியே, உன் நேசரோடு நெருங்கியிரு. இக்கொடிய வனாந்தரமான உலகில் அவரை விட்டுப் பிரியாதே. எப்பொழுதும் அவர்மேல் சார்ந்திரு. உன் பெலவீனத்தை உணர்ந்துகொள். அவருடைய வலிமையான கரம் உனக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறது. உன்னைத் தூக்கி எடுத்து நடத்துவார். அவர்மேல் நீ எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உன்மேல் அன்பு செலுத்துகிறார். அவரை நேசிக்கும் அளவுக்கு அவருடன் ஐக்கியமாவாய். அவரே உன்னை நடத்தட்டும். அவரையே நம்பு. வல்லமையுள்ள அவரைப் பற்றிக்கொள். என்றும் அவரோடேயே நடந்து அவரையே போற்று. நீ அவரோடிருக்கும் மட்டும் எனக்குப் பமில்லை. அவருடைய சமுகத்தில் உன் இருதயம் கொழுந்து விட்டெரியும் அனுபவத்தைப் பெறுவாய். உன் நேசரை விசுவாசித்து, அவரை அறிந்து, எப்பாழுதும் அவர் பேரில் சார்ந்துகொள்.

எச்சோதனையிலும் நீ
உன் நேசர்மேல் சார்ந்திரு
அவரே உன் மீட்பர், இரட்சகர்
அவரே உன்னைக் காப்பார்.

என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்

நவம்பர் 17

“என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்” யோபு 29:18

யோபு தனக்கிருந்த கூடாகிய வீட்டை சௌகரியமுள்ளதாகவும் ஆறுதல் தருவதாகவும் நினைத்திருந்தான். அது நிரந்தரமானது என்றும் எண்ணினான். ஆனால் இம்மண்ணுலகில் எங்கு நம் வீட்டை நாம் அமைத்தாலும் அது இயற்கையின் உபாதைகளான புயல், வெள்ளம், நெருப்பு, பூகம்பம் இவற்றிற்குத் தப்பாது. நிலையான நரகம் நமக்கு இங்கு இல்லை. நாம் இங்கு நிரந்தரமாக வாழ முடியாது. யோபு வாழ்வில் பழுதில்லாதவன். நேமையான, தூய வாழ்க்கையுடையவன். அவனும் இவ்வாழ்க்கையை வெறுத்து மேலான தேவனுடைய இடத்தையே நாடினான். இப்பூமியில், அந்தப் பரம வீட்டிற்கு இணையானது எதுவும் கிடையாது. இம்மைக்குரிய நன்மைகள் நமக்குத் தற்காலிகமாகத் தரப்பட்டவைதான்.

இவ்வுலகில் எங்கு நமது கூட்டை ஏற்படுத்தினாலும் அது அழிந்துபோகும். நமக்கு நிரந்தரமான வீடு பரலோகம். எனவே நம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் தேவனுடைய கரத்தில் நாம் ஒப்புக்கொடுப்போம் என்று இருந்தாலும், ஒரு நாள் நாம் இவ்வுலகை விட்டுப்போ வேண்டியவர்களே. மரணத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். படுக்கையில் மரிப்போமா. விபத்தில் மாள்வோமா. ஏழையாக மரிப்போமா. ஐசுவரியவனாக மரிப்போமா என்பது முக்கியமல்ல. நாம் கிறிஸ்துவின் மகனாக, மகளாக மரிக்கிறோமா என்பதே முக்கியம். அவ்வாறு நாம் மரித்தோமானால், நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். அங்கு மரணம் இல்லை. அவ்விடம் ஒன்ற நமக்கு நிரந்தரமாக வீடு. அதையே நாடித் தேடி, அதைப் பெற உழைப்போம். வாழ்வோம்.

இவ்வுலகம் சதமல்ல
என் வீடு பரத்திலேயேதான்
என் மீட்பர் இருக்குமிடமே
என் வீடாக என்றுமிருந்திடும்.

இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்

நவம்பர் 16

“இயேசு கிறிஸ்து… மாறாதவராய் இருக்கிறார்” எபி. 13:8

தேவனுக்கிருக்கும் முக்கியமான தன்மைகளின் ஒன்று அவர் மாறாதவர் என்பது. இப்பண்பு அவருக்கு மட்டுமே பொருந்தும். இதைக் கொண்டே அவர் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால், யாக்கோப்பின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை என்கிறார். கர்த்தராகிய இயேசுவும் தெய்வத்தன்மை உடையவர். ஆகவே, அவர் என்றும் மாறாதவராகவே விளங்குகிறார். தமது மகத்துவமான தன்மையிலும், உள்ளான நோக்கங்களிலும், உபதேசங்களிலும், தமது அளவற்ற அன்பிலும், முழு வல்லமையிலும், இரக்க உருக்கத்திலும், கிருபை நிறைந்த புண்ணியத்திலும், பாவத்தை அவர் வெறுக்கும் வெறுப்பிலும், அவர் என்றும் மாறாதவர்.

இவ்வாறு அவர் மாறாதவராய் இருப்பதினால்தான், அவரை நாம் மாறாத தேவனாகப் போற்றுகிறோம். அவரையே நாம் நம்ப வேண்டும். அவருடைய சுவிசேஷத்திலுள்ள அருமையான சத்தியங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இம்மைக்குரியவற்றை வெறுத்து, மேலான வாழ்வுக்கரியவைகளை நாடவேண்டும். மாறாத நமது தேவன் ஒளியில் இருக்கிறபடியே இருளிலும் இருக்கிறார். அவர் நமது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்பதுபோலத்தான் நமது துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறார். நம்மையாயினும் தீமையாயினும் இயேசு மாறாதவர். அவர் என்றும் அன்பும் கிருபையும் நிறைந்த கிறிஸ்துதான். முதன் முதல் அவருடைய அன்பை நாம் ருசித்தபடியே இன்றும் நாம் ருசிக்கலாம். அன்று அவரில் களிகூர்ந்தவாறே இன்றும், இனிமேலும் நாம் களிகூரலாம். மாறாத இயேசு உன் ஆண்டவராயிருப்பதற்காக நன்றித் துதி அவருக்கு ஏறெடு.

யாவும் மாறிடினும்
இயேசு என்றும் மாறார்
என்றும் மாறா இயேசுவாதலால்
என்றும் அவரை நம்பிடுவேன்.

Popular Posts

My Favorites

விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்

யூன் 07 "விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்." 1.தெச.5:8 எப்பொழுதுமே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். சத்துருக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தார்கள். இரட்சிப்பின் அதிபதி நமக்கு ஆயுதங்களைச் சவதரித்து தந்திருக்கிறார். அந்த ஆயுதங்கள் முழுவதையும் எடுத்து அதைக் கொண்டு நம்மைத் தற்காக்க...