முகப்பு தினதியானம் ஏப்ரல் கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்

கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்

ஏப்ரல் 20

“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்” 1.நாளா.28:9

இது பயங்கரமான காரியம்! என் இருதயத்தை அவர் ஆராய்கிறார். அதில் எதைக் காண்கிறார்? பொல்லாத நினைவுகள், அசுத்தங்கள், பயங்கரமான நிர்ப்பந்தம், இவைகள்மட்டும்தானா காண்கிறார்? இல்லையென்று நினைக்கிறேன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப்ப்றி அதில் நல்ல எண்ணங்களும் உண்டு. என் நினைவுகள் எல்லாம் பொல்லாதவைகள் அல்ல. பொல்லாத நினைவுகளை நான் பகைக்கிறேன். எல்லாம் கேடானதல்ல. சீர்த்திருத்துகிற சத்தியம் உண்டு. எல்லாம் நிர்ப்பந்தம் அல்ல. அதில் நல்லெண்ணங்களும் உண்டு. நம்பிக்கையும் விசுவாசமும் உண்டு. தேவன் என் இருதயத்தை ஆராய்கிறது நிஜமானால் நான் அப்படி செய்வது எத்தனை அவசியம்.

உங்கள் இருதயம் மோசம் போகாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றாரே. கூடுமானால் சாத்தான் நம்மை மோசம் போக்குவான். நாம் துணிகரத்திற்கு இடங்கொடுக்கும்படி நமது சாட்சிகளைக் கெடுப்பான். இருதயங்களையெல்லாம் கர்த்தர் ஆராய்கிறதினால் நாம் மாய்மாலம் செய்கிறது மகா புத்தியீனம். அவரை ஏமாற்ற நம்மால் முடியாது. அவருக்கு நாம் கோபமூட்டலாம். ஆனால் அவருடைய இரக்கத்தை மட்டுப்படுத்த கூடாது. தினமும் தேவனுக்கு முன்பாக நம்முடைய இருதயத்தைத் திறந்து கொடுத்து பரிசுத்த ஆவியானவர் சுத்தம்பண்ண வேண்டிக்கொள்ள வேண்டும். திறக்கப்பட்ட ஊற்றாகிய இரட்சகரண்டையில் ஓடி பரிசுத்த தேவ வசனமாகிய தொட்டியில் நித்தம் கழுவிக்கொள்ளப் பார்ப்போமாக. எப்போதும் சங்கீதக்காரனைப்போல் கர்த்தாவே என் இருதயத்தை சோதித்தறியும் என்று அடிக்கடி கெஞ்சுவோமாக. நாம் சொல்கிறதிலும், செய்கிறதிலும் சகலத்திலும் உத்தமமாய் விளங்குவோமாக.

நீர் என்னைப் பார்க்கிறீர்
எங்கே ஓடி ஒளிவேன்
உள்ளத்தை ஆராய்கிறீர்
இதை உணர்ந்து நடப்பேன்.