முகப்பு வலைப்பதிவு பக்கம் 6

சிலுவையின் மேன்மையான சிந்தை

ஒருவன் மனந்திரும்பாமல், குணப்படாமல், பாவ மன்னிப்பின் நிச்சயத்தை உணராமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல், ‘நான் கிறிஸ்தவன்” என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது “நான் தேவனின் சாட்சி”, “பரலோக சுதந்தரவாளி” என்றோ அல்லது ஆயிரம் வருட அரசாட்சியில் பங்குண்டு என்று சொல்வாரேயாகில் அவனது விசுவாசத்தில் எந்த பயனுமில்லை என்றே சொல்ல வேண்டும். சிலுவையின் மேன்மையை உணராதவன் பரலோக வாசலுக்கே செல்ல முடியாது. ஏனெனில் சிலுவை மரணம் இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் உச்சக்கட்டமும், நமது வாழ்வின் ஆரம்பமும் ஆகும். இந்நிகழ்ச்சி கிறிஸ்தவ விசுவாசத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் உலகில் அநேக ஞானியரும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை பற்றி சந்தேகப்படுவதுடன் அவர் சிலுவையில் மரிக்கவில்லை எனவும் தர்க்கிக்கின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின்பின் நடைபெற்ற சம்பவங்கள், கண்ணால் கண்டவர்கள் அவர் உயிருடன் இருக்கின்றார் என சாட்சி கொடுத்தார்கள். அன்று மனித பகுத்தறிவிற்கும் ஞானத்திற்கும் எட்டாமல் போன உண்மை சத்தியம். உலகில் இன்று பிரபல்யமாகியது. இந்நற்செய்தியை நாம் ஆராய்வோம்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லையானால் கிறிஸ்தவ விசுவாசமே ஒரு தெளிவில்லாத புராணக்கதையாகிவிடும். முதல் மனிதனால் இவ்வுலகத்தில் உருவாகிய மானிடப்பிறவிக்கு மனிதன் என்ற உரிமை கிடைத்தது போலவே, அவனால் செய்யப்பட்ட பாவத்திற்கு கிடைத்த கூலியாகிய மரணமும் மானிடப் பிறவியாகிய மனிதனுக்கும் உரிமையாக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவும் மானிடப்பிறவியில் வந்தபடியால் அவருக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவின் மரணம் மனிதனது பாவத்தினிமித்தம் அவனுக்கு நியமிக்கப்பட்ட மரணத்தையே ஒத்திருக்காமல் துன்மார்க்கரைப்போன்று இவருடைய மரணமும் அமைந்திருக்கவேண்டும். மனிதனுக்கு நியமிக்கப்பட்ட மரணத்தில் அவனது சுபாவத்தின்படியே மரணம் நியமித்த போதிலும், இயேசு கிறிஸ்துவின் மரணமும் மரணத்தின் எல்லையைக் கடந்து விட்ட ஒன்றாக இருக்கிறது. மரணமானது தேவனைக் கட்டி ஆளமுடியாதபடிக்கு அவரது ஜீவியம், நீதி, நேர்மை, உத்தமம், போன்றவற்றால் ஆளப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இயேசுகிறிஸ்து மரணத்தை மேற்கொண்டார் என்பது தெளிவாகிறது. மரணமின்றி உயிர்த்தெழவில்லை. ஆகையால் இயேசுகிறிஸ்துவும் சுபாவத்தின்படியே மனிதனுக்கு நியமிக்கப்பட்ட மரணத்தை தழுவிக்கொண்டார். இயேசு கிறிஸ்து இவ்விதமான பாடுகள் உள்ள மரணத்தை ஏற்றுக்கொள்ளாது நீதிமான்களைப்போல அமைதியாக மரித்திருந்தால் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுதல் என்ற சம்பவம் ஒன்று நடந்து இருக்காது. இது இவ்விதம் இருக்க இயேசுகிறிஸ்து இவ்வுலகில் நீதிநெறியுடன் வாழ்ந்த முறையை பின்பற்றுதல் பிரயோஜனமற்ற செயலாகிவிடும். ஏனெனில் அவ்வாறு வாழ்ந்து மரணம், நேரிடும்பொது அவ்வாழ்க்கைக்கேற்ற பலனை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கிறிஸ்தவ விசுவாசம் என்பது நாம் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுவதால், அவர் சாவை வென்று கைப்பற்றிக்கொண்ட உயிர்த்தெழுதலின் மூலம் கிடைக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதாகும். ஆகவே இயேசுகிறிஸ்து உண்மையாகவே சிலுவை மரணத்தை தழுவிக்கொண்டார் என்பதை நாம் அவரை குறையாக அல்ல முழுமையாக, முழு உள்ளத்தோடும் அதாவது உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து விசுவாசிக்கவேண்டும். அப்பொழுது நாம் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாவோம்.

சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவன் வட ஆபிரிக்காவிலுள்ள சிரேனைக்கா மாவட்ட தலை நகரான சிரேனேயைச் சேர்ந்தவன் (மாற்கு 15:21, மத் 27:32, லூக் 2326). இவர் வட ஆபிரிக்காவில் வசித்தாலும் நீக்ரோவாக இருக்க முடியாது. ஏனெனில் இயேசுவின் காலத்தில் யூதர்கள் பலரும் அப்பகுதிகளில் குடியேறி இருந்தனர். ஒருவேளை பஸ்காவைக் கொண்டாட வந்த யூதர்களில் ஒருவராயிருக்கலாம். இவருக்கு அலெக்சாந்தர் ரூபு என்ற புதல்வர்கள் இருந்தனர் (மாற் 15:21). இந்த சீமோன் எருசலேமுக்கு யாத்திரையாக வந்தான். அவனை சிலுவையை சுமக்கும்படி பலவந்தப்படுத்தினார்கள். அதாவது என்னால் முடியாது என்ற நிலையிலும் செய்வித்தல் என்பதைக் குறிக்கின்றது. அநேக சிலுவை குறுக்காக வைத்துக்கட்டப்பட்ட 30 அல்லது 40 இறாத்தல் எடை உள்ள மரக்கட்டைகள் என ஏற்றுக்கொள்கிறார்கள். எவ்வாறெனினும் சிலுவை மரணத்திற்கு உட்பட்டவன் அவனுக்கு குறிக்கப்பட்ட ஸ்தானத்தில் இருந்து அதனை சுமந்து செல்ல வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவே இறுதிவரையும் சுமந்து செல்ல முடியாதபடி அவரது சரீரம் புண்பட்டு பெலவீனப்பட்டிருந்தது. கசையடிகளால் உன்னதமானவருடைய சரீரம் காயப்பட்டிருந்ததால் அவரது சரீரம் பெலவீனமடைந்து இருந்தது. அவர் எத்தனை தரம் வீதிகளில் தடுமாறி விழுந்திருப்பார்? ரோம சாம்ராஜ்யத்தில் குற்றுவாளிகளுக்கு கசையடி கொடுப்பதற்காக 36 அங்குலம் (3அடி) நீளமுள்ள தோல்பட்டியல்களின் முனைகளில் ஈயக்குண்டுகுள் பொருத்தப்பட்டிருக்கும் என விஞ்ஞான ஆய்வுகள் கருதுகின்றன. ஒரு மரக்கைபிடியில் 12 வார்கள் பொருத்தப்பட்டிருக்கும் வாரின் மறுமுனையில் எலும்பு அல்லது உலோகத்துண்டுகள் பொருத்தி அடியின் உபாதை கோரமடையச் செய்வார்கள். யூத முறைப்படி 40 அடிவரையிலும் அடிக்கலாம். (உபா25:3, 2கொரி 11:24). ஒரு அடிக்கு 12 வார்பதிந்தால் 27 அடிகளுக்கு 468 வார் அடிகள் இயேசுவின் மேல் பட்டிருக்கும். அத்துடன் எலும்புத்துண்டும் பட்டதினால் முதுகின் சதை கிழிந்து உழவனுடைய படைச்சால்போல கிழித்தனர் என்றார். தீர்க்கதரிசி (சங். 129:3). இவ்விதமாய் தண்டிக்கப்படும்போதே பலர் மரித்திருக்கிறார்கள். அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் உடம்பில் வலு குறைந்திருக்கும். அப்படி சக்தியற்று பலவீனம் நிலையில் இச்சிலுவையை சுமக்க சீமோன் வற்புறுத்தப்பட்டான்.

கொல்கொதா என்று சொல்லுப்படும் கபாலஸ்தலம், மனித மண்டை ஓட்டுக்கு ஒப்பான உருவத்தை உடைய ஒரு சிறு மலைப்பாறையாகும். இவ்விடம் பற்றி வேதாகமம் சரியான விளக்கத்தினைக் கொடுக்காவிடினும் யோவான் 19:20 இல் இவ்விடமானது நகரத்திற்கு சமீபமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகத்தில் கல்வாரி என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த இடத்தில் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கசப்பான காடி என்பது தரம் குறைந்த திராட்சைரசமாகும். காயங்களுக்கு போடுவதற்காக அவர்கள் நாட்டில் செய்யப்பட் மருந்தில் திராட்சைரசமும் கலக்கப்பட்டிருக்கும். இது தான் சிலவேளை இயேசுகிறிஸ்துதுவிற்கு கொடுக்கப்படடதென்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் ரோமப் போர்ச்சேவகர்கள் தாகந்தீர்த்துக் கொள்வதற்காகவும், தங்கள் சரீரக் களைப்பைக் போக்கிக் கொள்வதற்காகவும் ஒருவிதமான பாணத்தை தங்களிடம் வைத்திருப்பார்கள். அதுதான் இயேசு கிறிஸ்துவிற்கு கொடுக்கப்பட்ட கசப்பான காடி என்கின்றனர். ஆனால் அந்த நாட்களில் கொடிய தண்டனையாக சிலுவையின் சித்திரவதைக்குள்ளாகும் குற்றவாளிகளுக்கு சிலர் வெள்ளைப்போளம் கலந்த கசப்பான காடியை கொடுப்பார்களாம். அதனைக் குடித்தால் தொடர்ந்து அனுபவிக்கப்போதும் பயங்கர வேதனைகளை அதிகமாக உணராதிருக்க அது ஓரளவு உதவுமாம். ஆனால் அத்தனை வேதனைகளையும் அதன் உண்மையான அளவில் முழுமையான அனுபவிக்க முடிவுசெய்த இயேசு, அந்த வேதனையைக் குறைக்கும் காடியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் (மாற்கு 15:24 நிலையான அன்பு புதிய ஏற்பாடு வேதாகமம்).

சிலுவை என்பது இன்று உலகமெங்கிலும் ஆசீர்வாதத்தின் சின்னமாக விளங்குகின்றது. ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் நாட்களில் அது சாபத்தின் சின்னமாகவும் அவமானத்தின் சின்னமாகவும் விளங்கியது. மரத்தில் தொங்கி மரிப்பது என்பது யூதர்களின் நியாயப்பிரமாணப்படி சாபமான ஒரு மரணமாகும். ஆகவே அவர்கள் சிலுவை மரணத்தை வெறுக்கத்தகுந்த சாபத்தின் சின்னமாகக் கருதினர். குற்றவாளிகளை சிலுவையில் அறையும் முறை இஸ்ரவேலிய வழக்கமல்ல. அது ரோமருடைய வழக்கமாகும். இஸ்ரேலிய பிரமாணம் சிறிய குற்றங்களுக்கு பிரம்பினாலும் சவுக்கினாலும் அடிப்பதும் பெரிய குற்றங்களுக்கு கல்லெறிந்து கொல்லுவதுமாகும். இயேசுவுக்கு ஒரு புறஜாதி வழக்கமான ஈன மரணத்தையே வழங்கினர். கொடிய குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து சாகடிப்பதினால் அது ரோம பார்வையில் இழிவானதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் விளங்கியது. சிலுவையின் தண்டனை என்பது சமுதாயத்தின் பார்வையில் மிகவும் இழிவான ஒன்றாகக் கருதப்பட்டதால் பெரும்பாலும் தண்டனை அனுபவிக்கும் குற்றுவாளிகளின் அருகில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள்கூடச் செல்லமாட்டார்கள். அவ்விதமான சிலுவையைக் கீழே கிடத்தி மனிதனது உள்ளங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடையில் இரும்பாணியால் அறைவார்கள். கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு கல்லறையின் சிதைவுகளில் இருந்து பல செய்திகள் அறியக்கிடக்கின்றன. சிலுவையில் அறையப்பட்டவர்கள் இரு கால்களும் ஒரே ஆணியால் ஊடுருவப்பட்டு, ஒரு சிறிய ஒலிவப் பலகையில் அறையப்பட்டன. இது கால்களை இணைத்து வைப்பதற்கு உதவியது. ஆகவே இயேசுவை ஆணிகளினால் அறைந்தார்கள் என்பது புலனாகிறது. ரோம ஆட்சியில் சேவைசெய்யும் ஒவ்வொருவனும் திறமையுள்ளன். அகவே இயேசுவை சிலுவையில் அறைந்தவன் கூட நன்கு அனுபவமுள்ள ஒருவனாக இருந்திருக்கலாம். மரணதண்டனையாக சிலுவையில் அறைதல் இருவகைக் கொடுமையைக் கொண்டிருந்தது. (பகிரங்க அவமானம், உடல் சார்ந்த வேதனை) சிலுவை மரணத்திற்கு உள்ளாகும் ஒருவனது தனிப்பட்ட சொத்துக்கள் உரிமைகள் யாவும் மரண தண்டனை கொடுக்கும் குழுவிற்கு உரியது என்று ஒருவர் கூறுகிறார். ஆனால் அவரை ராஜா என்று இழிவுபடுத்தியே இயேசு கிறிஸ்துவின் வஸ்திரங்களை எடுத்துக் கொள்ளும்படியாக ஒவ்வொருவனும் சீட்டுப்போட்டும் பங்கிட்டுக்கொண்டார்கள்.

இவ்வசனத்தில் சீட்டுப்போட்ட குழுவினர் அவரைக் காவல் காத்தனர். இந்த நேரத்தை மாற்கு நற்செய்தி நூல் எழுத்தாளன் மூனறாம் மணிவேளை என்று கூறகிறார். மூலத்தில் யூதர்களின் நேரம் கணக்கின்படி காலை ஒன்பது மணியாகும். ரோம நீதியின்படி மரண தண்டனைக்கு உள்ளான ஒருவனுடைய குற்றத்தை ஒரு பலகையில் எழுதி அதனை சிலுவையை சுமந்து செல்பவனுக் முன் எடுத்துச் சென்று அந்த சிலுவையின் மேல் கட்டித் தொங்கவிடுவார்கள். அவ்வாறே இயேசுவுக்கும் செய்தனர். யூதர்களின் அரசன் என்பதிலிருந்து இயேசு உரோமர்களின் ஆட்சியை எதிர்த்து புரட்சிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்று தெரிகிறது. மேலும் ரோம அதிகாரிகளுக்கு யூதர்களின் மேல் இருந்த அவமதிப்பையும் வெறுப்பையும் இது காட்டுகிறது. யோவான் 19:19-22 இன்படி இப்பலகையில் எபிரேய, லத்தீன், கிரேக்க பாஷைகளில் எழுதப்பட்டிருந்தது. அதில் யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா நான் என்று எழுதும்படிகேட்டனர். ஆனால் பிலாத்துவோ மறுத்துவிட்டான். இக்காலச் சிலுவைகளின்மேல் இக்குற்றம் (I.N.R.I) என்று அழகாக பொறிக்கப்பட்டிருக்கும். இதன் I(esus) N (azareneus) R(ex) I (udaeorum) (நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்) என்பதன் சுருக்கவடிவாகும். எவ்விதம்தான் எழுதினாலும் எப்படி முறைப்பாட செய்தாலும் சிலுவை தேவனுடைய திட்டத்தில் எப்போதும் இருந்தது. ஆகவேதான் யூதர்களின் முறைப்பாடு பலன் தரவில்லை.

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்

டிசம்பர் 31

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11

இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.

நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.

இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.

மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.

டிசம்பர் 30

மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். (சங்.19:12)

ஓர் உண்மை கிறிஸ்தவன்தான் இப்படி ஜெபம் செய்வான். தேவனால் அறிவுறுத்தப்பட்டவர்களே, தங்கள் இருதயத்தைச் சரியாய் அறிந்துகொள்ள முடிந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் பரிசுத்தத்தையே விரும்புவார்கள். சிலர் பாவத்தினின்று விடுதலையாவதை விரும்புவார்கள். ஆனால், அவர்கள் பரிசுத்தம் ஆகவேண்டுமென்ற ஆசையில்லாதவர்களாதலால், தங்கள் பாவத்தை தேவனுக்கு முன்பாகத் தெளிவாய், வெளியரங்கமாக அறிக்கைசெய்வதில்லை. ஆனால், அறிக்கை செய்பவரோ பாவத்தினின்றும், அசுத்தத்தினின்றும் விடுதலை பெற்றுவிடுகிறார்கள். தேவன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அவர்களுடைய பாவக்கறைகளையெல்லாம் நீக்குகிறார். அப்பொழுது மறைவான குற்றங்களும் மறைந்துவிடுகின்றன.

நம்மில் உள்ள பாவங்கள் நமக்குக் கவலையை உண்டாக்கி சுயவிருப்பங்களை நம்மில் வளர்த்து, பரம சிந்தையே இல்லாமல் செய்துவிடுகின்றன. ஆனால், குற்றங்கள் நீங்கலாகிவிடும்போது, இரட்சகரின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரித்து விடுகிறது. திரும்பவும் குற்றத்தில் விழாதபடி தூயஆவியானவர் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகிறார். நம்முடைய இருதயத்தை நாம் பாவங்களிலிருந்து காத்துக்கொள்ளவேண்டுமானால், நாம் தூய ஆவியானவரால் நிரப்பப்படவேண்டும். உள்ளும் புறமும் நாம் சுத்தமாயிருக்கவேண்டுமானால் தூயஆவியானவர் நம்மில் நிறைந்து நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியம். கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டுமே இந்த அனுபவத்தைப் பெறமுடியம். இந்த அனுபவத்தை நாமும் அடைக்கூடும் என்று வேதம் கூறுகிறது. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல் ஆவியில் நிறைந்திருங்கள்“ தேவன் தரும் ஈவுகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

என் பாவம் அதிகம், ஆண்டவா,
என் குற்றங்கள் அனந்தம்,
எல்லா பாவங்களையும் நீக்கும்,
என் அந்தரங்க பாவங்களையும்.

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29

“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” மத்தேயு 15:8

இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம்.

அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிறீர். „அவர் எனக்கு இரங்குவார், காப்பாற்றுவார், நன்மைசெய்வார், விடுவிப்பார் என்று அவரையே நம்பியிருப்பீரானால், உமது இருதயம் அவருக்கு அருகிலேயே இருக்கிறது. மனிதருக்குமுன் வசனத்தின்படி நடந்து, ஆண்டவர் சொன்னபடியே செய்து, சற்றும் மாறாமல் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீரானால், உமது இருதயம் அவருக்கு சமீபமாகவே இருக்கும். மாய்மாலத்தைத் தேவன் வெறுக்கிறார், நாமும் வெறுப்போமாக. அவருக்கருகிலேயே வாழ்ந்து, அவரோடே நடந்து, அவர்மேல் அன்பு வைத்து நடப்போமாக. வேஷமாகப் பெயருக்கென்று நாம் இவ்வாறு நடந்தால் பரிதாபத்திற்குரியவர்களாவோம்.

ஆண்டவர் அன்பைப்போல்
இனியது ஏதும் உண்டோ
இதைவிட்டு வேறெதையும்
உனதாவி விரும்பலாமோ, பாவி.

ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்

டிசம்பர் 28

“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15

இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.

தேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தூயோர் என்றும்
தூயவர் முன்னிலையில்
துயரமேதுமின்றி
துதித்திடுவர் தேவனை

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது

டிசம்பர் 27

“ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” (சங்.36:9)

தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான். அவருடைய சுத்தக் கிருபையினால்தான் நாம் வாழ்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவன் வருவது அவரிடத்திலிருந்துதான். இந்த ஜீவனே நமக்கு உயிர்கொடுக்கும் மருந்து. நாம் தேவனால் பிறந்ததனால்தான் வல்லமையோடு வாழ்கிறோம். அவர்தான் நமது ஆத்துமாக்களை உயிரோடு காப்பவர். அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார். நம்மை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வைக் கொடுப்பவர் அவர்தான்.

நண்பனே, நீ ஆண்டவர்மீது வைத்த அன்பு குறைந்திருக்கிறதா? ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைந்துவிட்டாயா? அவருடைய சமுகத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறாயா? ஒன்றைமட்டும் மறவாதே. தேவனுடைய ஊற்று உன்னிடம்தான் இருக்கிறதென்பதை மறவாதே. அந்த ஊற்று உன் ஆத்துமாவுக்குள் பாயும் ஊற்று. ஒருகணப்பொழுதில் அது உங்களுக்கு உயிரைக் கொடுக்க வல்லது. அந்த ஊற்று தேவ திருமுகப் பிரகாசத்தை உங்கள்மேல் வீசப்பண்ணுகிறது. அவருடைய மன்னிப்பையும், சமாதானத்தையும் உனக்குக் கொண்டு வருகிறது. தூய ஆவியானவரை அளவில்லாமல் கொண்டுவருகிறது. இந்த ஊற்றில் பருகுவோருக்கு மறுபடியும் தாகம் ஏற்படாது. இது ஆத்தும தாகத்தைத் தீர்க்கக்கூடியது. இந்த ஊற்று வேண்டுமென்று ஜெபி. அப்பொழுது நீ பெற்றுக்கொள்ளுவாய். தாகம் தீருமட்டும் அதில் பருகு. அவர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் ஆத்துமாவும் அவரைத் துதிக்கும்.

ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என் ஆத்ம தாகம் தீருமே
நீரே ஜீவ அப்பமுமாதலால்
என் பசியையும் தீர்த்திடும்.

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25

“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)

இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.

இறைவன் மானிடனானது
இகத்திற்கு மகிழ்ச்சியாம்
இகத்தில் சமாதானமும்
இறைவன் நாட்டில் மேன்மையாம்

Popular Posts

My Favorites

அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற

நவம்பர் 15 "அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற" ரோமர் 4:6 இந்த வசனம் வேதத்தில் மறைந்து கிடக்கிற இரகசியங்களில் ஒன்று. மனிதன் சொந்த நீதியற்றன். கிருபையினாலே தேவன் மனுஷனை அங்கீகரிக்கிறார். இயேசு நாதர் பூமிக்கு வந்து...