மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6

“மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” லூக்கா 10:41

இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார். அவளோ கவலைப்பட்டு படபடப்பாய்த் திரிந்தாள். அதினின்று அவளைத் தப்புவிக்க வேண்டுமென்பதுதான் நேசருடைய நோக்கம். மார்த்தாள் மிகுந்த கவலைக்குள்ளாகி கலங்கினபடியால், அவரோடு சம்பாஷிக்கவும் அவர் சொல்வதைச் சாந்தமாய்க் கேட்கவும் கூடாமற்போயிற்று.

கிறிஸ்தவர்களுக்குள் இது சாதாரணமாய் காணப்படும் குறை. சபையிலும் இன்று மார்த்தாளைப்போல் எத்தனையோ போர் இருக்கிறார்கள். மரியாளைப் போன்றவர்கள் வெகு சிலரே. நாமும் மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து, அவர் சொல்பதைக் கேட்டு, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார் என்று உணர்ந்து, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மேல்வைப்போமாக. நமது காரியங்களை எல்லாம் அவர் கரத்தில் இருக்கின்றன. சகலத்தையும் அவரே நடத்துகிறார். முதலாவது அவருடைய இராஜ்யத்தை நாம் தேடவேண்டுமென்றும், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். நடக்கிறதெல்லாம் உங்கள் நன்மைக்காக மாற்றப்படும். இவ்வுலகத்தைவிட்டு சீக்கிரத்தில் பிரிந்து, நீங்கள் வெகுவாய்க் கவலைப்படுகிற சகலத்தையும் பின்னால் எறிந்து, நீங்கள் மறுமைக்குட்படுவீர்கள். ஜெப சிந்தையுள்ளவர்களாய் இருங்கள். வீண் கவலைக்கு இடங்கொடாதேயுங்கள். மார்த்தாள் செய்த வேலையை மரியாளுடைய சிந்தையோடு செய்யுங்கள். இந்த நாளில் இரட்சகர் உங்களை இப்படிக் கண்டிக்கிறார் என்று அறிந்து, உங்கள் கவலைகளை, அவர் உங்கள் பாவங்களைப் புதைத்த இடத்தில் புதைத்துப்போடப் பார்ப்பீர்களாக.

நான் மார்த்தாளைப்போல
வீண் கவலை கொள்வனே?
ஒன்றே தேவை என்றாரே
அதனையே நாடாதிருப்பது ஏன்?

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

எல்லாம் உங்களுடையதே

ஜனவரி 4

“எல்லாம் உங்களுடையதே”  1.கொரி. 3:21

என் பிரிய சகோதரரே, கேளுங்கள். ‘தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?” இது என்ன விசித்திரம்! ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடைய உபயோகத்துக்கும் நம்முடைய பிரயோஜனத்துக்கென்றிருக்கிறது. நமது கரங்களில் அது இல்லாவிட்டாலும் இன்னும் அவைகள் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இவைகளை விசுவாசத்தினால் அறிந்து அனுபவிக்கவும், நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு வாக்குத்ததத்ங்களில் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தத வேளையில் நமக்குக் கொடுக்கப்படும். கிறிஸ்துவானவர் இரண்டாந்தரம் பாவமன்றி இரட்சிப்பளிக்கவரும்போது சகலம் நமக்குக் கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர். இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், பரமகாரியங்களைப் பார்த்தாலும், இனிவரும் காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், பூமிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும், சகலமும் நம்முடையதென்றே திட்டமாய்ச் சொல்லலாம்.

தேவன் நம்முடைய பங்கு, இயேசு நம்முடைய மணவாளன், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன், பூமி நம்முடைய நித்திய வீடு. நாம் இதை விசுவாசிக்கிறோமா? இவைகள் எல்லாம் உண்மையென்று எண்ணி வாழ்ந்து வருகிறோமா? சகலமும் என்னுடையதென்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ? அப்படியானால் ‘நான் உன் தரித்திரத்தை அறிவேன். ஆனாலும், நீ ஐசுவரியவான்” என்று அவர் நம்மைப் பார்த்துத் திட்டமாய்ச் சொல்லலாம்.

உலகப் பொருள் போகினும்
அவர் உன் பங்காமே
ஒன்றுமற்றவனாயினும்
அவர் உன் சொந்தமாமே.

தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்

ஜனவரி 10

“தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” பிலி. 2:9

இயேசு கிறிஸ்துவைப்போல் அவ்வளவாய் தன்னைத் தாழ்த்தியவர்கள் ஒருவருமில்லை. அவரைப்போல் அவ்வளவாய் உயர்த்தப்பட்டவரும் இனி உயர்த்தப்பட போகிறவருமில்லை. உலக பாத்திரத்திற்கு அபாத்திரராக நினைக்கப்பட்டு, தாழ்ந்த புழுவைப்போல் எண்ணப்பட்டார். ஆனால் தேவனோ அவரை அதிகமாக உயர்த்தினார். உன்னதங்களில் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார். தேவகுமாரனுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராஜாதி இராஜனின் தலை மகுடத்திலுள்ள இரத்தினக் கற்கள், காலை பொழுதின் கதிரவ பிரகாசத்திலும் அதிக பிரகாசமாயிருக்கின்றன. அவரின் செங்கோல் பூமியெங்கும் செல்லும்படி நீட்டப்பட்டிருக்கிறது. அவருடைய இராஜ்யம் நித்திய இராஜ்யம். அவரின் ஆளுகை தலைமுறை தலைமுறையாய் உள்ளது. தேவதூதர்கள் அடிபணிந்து அவரை வணங்குகிறார்கள். இவர்களின் ஆரவாரப் பாடல்களெல்லாம் அவரைப் பற்றினதே.

கிறிஸ்துவானவர் துன்பத்திலும் தாழ்த்தப்பட்டபடியால் மிகவும் கெம்பீரமாக உயர்த்தப்பட்டார். தமது பிள்ளைகளின் நன்மைக்காக இயேசு உயர்த்தப்பட்டாரென்பதை நினைக்கும்போது எவ்வளவு இன்பமாயிருக்கிறது. உலகிலுள்ள மக்கள் யாவரும் மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்று ஜீவிக்கவும்,உலகை ஜெயித்து பரிசுத்தமாக வாழவும், கடைசியில் தம்மோடு அவர் பிள்ளைகள் ஜெயித்து என்றென்றுமாய் இருக்கவும், அவரைச் சுற்றி வாழ்த்து பாடவுமே இவர் சிங்காசனத்திற்கு மேலாய் உயர்த்தப்பட்டார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே! உம்மை அறிந்து, உமது உயிர்த்தெழுதலின் மகிமையை அடைந்து, உம்மோடே மகிமையில் உட்காரும்படி எனக்கு கிருபைத் தாருமே.

மனிதர் இகழும் இயேசு
மகிமைக்கு பாத்திரரே,
நித்திய கிரீடமும் மோட்சமும்
அவருடைய தாகுமே

 

Popular Posts

My Favorites

ஒன்று செய்கிறேன்

ஏப்ரல் 07 "ஒன்று செய்கிறேன்." பிலி. 3:13 உலகத்தில் நாம் வைக்கப்பட்டிருக்கிற விசேஷித்த நோக்கத்தின் மேல், நமது விருப்பங்கைளயும், நினைவுகளையும், எண்ணங்களையும் வைப்பது மிகவும் முக்கியம். தாவீது கர்த்தருடைய வீட்டில் வாசம்பண்ணவேண்டுமென்கிற ஒரே ஒரு காரியத்தையே...