Home Blog

மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ் அவதிகள் பல பட்டு வாடி வதங்கினர். பலர் கூடித் திட்டமிட்டு அவிவரசனைக் கொலை செய்யச் சதி செய்தனர். அவ்வரசன் இதனை அறியாதிருந்த போதிலும் அதி தூரத்தில் அத்தனே என்னும் பட்டணத்தில் உள்ள அவனது ஆத்மநண்பன் இச்சதியைக் குறித்துக் கேள்வியுற்று ஒரு கடிதம் எழுதி அவனுக்கு ஒரு தூதுவன் மூலம் அவசரமாய் அனுப்பினான்.

அத்தூதுவன் வந்த தினத்தில் அரசன் தனது நண்பர்களுக்கு பெரிய விருந்தொன்று ஆயத்தப்படுத்தி முடிவில் ஏராளமான மதுவருந்திக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் அத்தூதுவன் கடிதத்தை அரசனிடம் கொடுத்து, “இதை அனுப்பியவர் இது அதிமுக்கிய காரியமானதால் நீர் இதனை உடனே படித்து ஆவன செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றார்” என்று கூறினான். அவ்வரசனோ அக்கடிதத்தில் உள்ள ஜீவன் அளிக்கும் செய்தியைப் பற்றி கிஞ்சிற்றும் உணராமல் “முக்கியமான காரியங்களை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு புசித்துக் குடித்து இன்புற்றிருப்பேன்” என்று சொல்லி அக்கடிதத்தைத் தூர எறிந்து விட்டான். அன்று இரவில் தானே அவனுடைய பகைஞர் அவன் குடித்து வெறித்திருந்த சமயம் அவன்மீது பாய்ந்து கொன்று விட்டனர். அந்தோ! அவன் ஜீவன் தப்பு அவனது நண்பனால் அருளிய எச்சரிப்பான நற்செய்தியை அல்லத் தட்டினதால் அவன் மாண்டு போனான்.

இதனை வாசிக்கும் அன்புள்ள நண்பரே, இவ்வரசனைப் போலவே நீரும்’ கிஞ்சிற்றேனும் கவலையின்றி சிற்றின்ப வாழ்வை நுகர எண்ணி உலகமே சதம் என்று அதன்பின் சென்று, பின் ஒரு நாள் நமது ஆத்மிக இரட்சிப்பைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்நாளை வீணாளாக்கிக் கொண்டு வருகின்றீரோ? சற்றே நின்று யோசித்துப் பாரும் நாளை நம்முடையதன்று. இன்றே இவ்வுலகில் நமது கடைசி நாளாக இருந்தாலும் இருக்கலாம்: யாரறிவார்? ஒரு வேளை நான் இப்படிச் சொல்வது உமக்குச் சற்று வருத்தமாய் இருக்கலாம். ஆயினும் இது உண்மையல்ல என்று சொல்ல உமது இதயம் துணியவில்லையே! ஆகவே இன்றே உமது நித்தியத்திற்கடுத்த காரியங்களைப் பற்றி நீர் சிந்திக்க வேண்டும். நித்தியத்திலே நாம் கடவுளிடம் சென்று இன்புற்றிருக்க வேண்டுமென்றால், நம்முடைய பாவங்களுடன் செல்ல முடியாது. நாம் மோட்சம் அடைய வேண்டுமென்றால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். இவ்வுலகின் கண் பாவப் பாரத்தால் சோர்ந்து அழியும் மானிடரை மீட்கவே இயேசு கிறிஸ்து மானிட அவதாரம் எடுத்து, நமது பாவங்களை தம்மீது ஏற்று, நமக்குப் பதிலாக சிலுவையில் தம்மையே தியாக பலியாக்கி, மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து, இன்றும் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் மீட்டு இரட்சித்து, பாவத்தின்மீது வெற்றி தந்து, தம்முடன் இவ்வுலகிலும் மறு உலகிலும் இனிது வாழும் பெரும் பாக்கியத்தைக் கொடுக்க வல்லவரும் நல்லவருமாய் இருக்கின்றார்.

உமது பாவங்களை அவரிடம் இன்றே அறிக்கை செய்து, அவரை உமது சொந்த தெய்வ இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரைத் தொழுது அவரையே சேவிக்க முற்படுவீராக. அப்பொழுது இம்மையில் தூயவாழ்க்கையும் பேரின்பத்தையும் மறுமையில் மோட்சானந்த பாக்கியத்தையும் அடைவீர். அவ்வரசனைப் போன்று முக்கியமானகாரியங்களை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இந்த இரட்சிப்பின் நற்செய்தியை தள்ளிவிட வேண்டாம் “ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் …………. நீங்கள் எவைகளினின்று (பாவத்திலிருந்து) விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ … அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் என்றும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமான்களாக்கப்படுகிறான். (அப்போஸ்தலர். 13:38-39) என்று சத்தியவேதம் வெளிப்படுத்துகிறது. ஆகவே இயேசு கிறிஸ்துவை இன்றை உமது இரட்சகராய் ஏற்றுக் கொள்வீராக.”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” அப்போஸ்தலர். 16:31)

ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் ‘பிரவுன்ஸ்’ என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப் போலவே படிப்பிலும், நாடகத்திலும், நகைச்சுவையிலும் ஆர்வமுள்ள ஒருவன் அவனுக்கு நண்பனாகினான். மதம் சார்ந்த காரியங்களை கேலிக்கூத்தாகக் கருதிய, தெய்வ நம்பிக்கையற்ற அந்த நாத்திக நண்பனின் செல்வாக்கினால், ஜட்சனும் மதம் சார்ந்த காரியங்களை மூட நம்பிக்கையாகக் கருதி, தெய்வம் என ஒன்று இல்லை என எல்லோரிடமும் வாதிடத்தொடங்கினாான்.

பட்டப்படிப்பு முடிந்ததும், தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை அனுபவிக்கத் துடித்தான். சிறகு முளைத்த பறவைபோல புது உலகைக் காணவும், ஒரு நாடககதாசிரியனாக மாறவும் மனக்கோட்டைகள் பல கட்டினான். இருபத்தோராவது வயதில் புதிய உலகைக் காண எண்ணி, மனதில் பல கனவுகளைச் சுமந்தவனாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை நோக்கிப் பயணமானான். ஆரம்பத்தில் அங்கே நாடகக்கம்பனியொன்றில் சேர்ந்து பணியாற்றினாான். ஆனால் அங்கு அவன் எதிர்பார்த்த திருப்தியும் சந்தோஷமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

அவன் பிரயாணம் செய்கையில் ஒரு நாள், விடுதியொன்றில் இரவு தங்க நேர்ந்தது. அந்த விடுதியில் அவன் கழித்த அந்த இரவு அவன் வாழ்விலேயே அவன் சந்தித்த அத்தனை இரவுகளிலும், மிகப் பயங்கரமானதும் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் இரவாகவும் இருக்குமென அவன் கற்பனையில் கூடச் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. அவன் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஒரு மனிதர் வேதனையில் முனகிக்கொண்டிருப்பதும், பயத்தோடு அலறிக்கொண்டிருப்பதும் அவன் காதுகளில் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ஜட்சனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மரணபயம் அவன் உள்ளத்தைக் கவ்விக்கொள்ள அவனது எண்ணங்கள் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.

‘ம் … மரணம்? மரணம்? மரணம்? இந்த மரணத்தைக் குறித்து என் தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவாரே … நான் மரித்த பின்பு எனக்கு என்ன நடக்கும் ?… ஓ! என்ன பயங்கர நினைவுகள் … , எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏனெனில் என்னுடைய நண்பன் இந்தப் பயங்கரமான அனுபவத்துக்கும் ஒரு நல்ல ஞானமான பதிலை நிச்சயமாய் வைத்திருப்பான்’ என்றவாறு தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றான். ஆனாலும், அப்பயங்கர இரவு, மரணத்தைப்பற்றிய பயத்தை அவன் மனதில் இன்னும் அதிகமதிகமாய் பதியச் செய்து, அவனைப் பதறச்செய்தது.

இவ் உண்மைச் சம்பவத்தின் அடுத்த கட்டத்தை அறியமுன்பு இதனை வாசிக்கும் உங்களிடம் நான் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். மனிதராய்ப் பிறந்த நாம் எல்லோரும் ஒருநாள் மரணத்தை சந்திக்கவே வேண்டும். மரணம் எந்த வயதில் வரும் எனச் சொல்லமுடியாது. பச்சிளம் பருவத்திலும் மரிக்கலாம், அல்லது வயதுபோய் தளர்ந்த நிலையிலும் இறக்கலாம். நேற்று இருந்த பலர் இன்று இல்லை. இன்று இருக்கும் நாமும், நாளை இருப்போமா என்ற நிச்சயமில்லை. இப்படிப்பட்ட நிலையிலே நீங்கள் மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் இறந்தால் எங்கே போவீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் இறந்ததும், நம்முடைய சரீரம் இந்த மண்ணோடு மண்ணாய் உருவழிந்து போகலாம், ஆனால் நம்முடைய ஆன்மா? அதற்கு என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏனெனில் நாம் மிருகங்களைப்போல வெறும் சரீரத்தோடு மட்டும் படைக்கப்படவில்லை. கடவுள் நம்மை ஒரு அழியாத ஆன்மாவுடன் சிருஷ்டித்திருக்கின்றார்.

இனி அக் கதையின் தொடர்ச்சியைக் கண்ணோக்குவோம். அப்பயங்கர இரவை பயத்தோடு கழித்த ஐட்சன் மறுநாள் காலையில் அந்த விடுதிக்காப்பாளரிடம், கடந்த இரவு தன்னுடைய அடுத்த அறையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த அம்மனிதனைக் குறித்து விசாரித்தபோது: “அந்த வாலிபன் இறந்துவிட்டான்” என அந்த விடுதிக்காப்பாளர் பதிலளித்தார்.

“என்ன! இறந்துபோனது ஒரு வாலிபனா?” என ஜட்சன் ஆச்சரியத்தோடு கேட்க. விடுதிக்காப்பாளர் தொடர்ந்து கூறிய காரியம் ஐட்சனை மேலும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கிட்டத்தட்ட உங்கள் வயதை ஒத்த அந்த வாலிபன், ‘பிரவுன்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பயின்று அண்மையில்தான், தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவனாம்” என விடுதிக் காப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், ஜட்சன் குறுக்கிட்டு:

“என்ன ‘பிரவுன்ஸ்’ பல்கலைக்கழகமா? அவன் பெயரென்ன?” எனக் கேட்க.

“சற்றுப் பொறுங்கள் பார்த்துச் சொல்கிறேன்” என்று அவர் அவனது பெயரைச் சொன்னதும், உலகமே ஒருகணம் இருண்டுவிட்டதுபோல ஜட்சன் அதிர்ச்சியுற்றான்.

இறந்துபோன அந்த வாலிபன் வேறுயாருமல்ல அவனோடு ஒன்றாகக் கல்வி பயின்ற அவனது கல்லூரி நண்பனே. இறைவன் இல்லையென்று இடித்துரைத்த அவன் இப்போது இறந்துபோனான். வாழ்க்கையின் எல்லாப் பிரச்சனைக்கும் எவரிடத்தில் பதில் உண்டு என்று ஜட்சன் நம்பினானோ, அந்த நண்பனே மறைந்துவிட்டான். ஒருக்காலும் மீளமுடியாத இடத்திற்கே போய்விட்டான். உண்மையில் தன் நண்பன், மரணத்திற்கு ஆயத்தமாக இருக்கவில்லை என்பதை ஐட்சன் நன்கு அறிந்திருந்தான்.

இப்போது ஜட்சனின் மனதில் மரணபயம் கவ்விக்கொள்ள, அவன் மெய்தெய்வத்தைத் தேடத்தொடங்கினான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், மரணத்தின்பின் அவர் தரும் நித்திய வாழ்வு பற்றியும் அறிந்துகொண்ட அவன், அந்த தெய்வத்தை அனுபவரீதியாக அறிந்து, தன்னுடைய பாவங்களை மன்னிக்கும் இரட்சகராக அவரை ஏற்றுக்கொண்டான். அவன் வாழ்வின் கேள்விகளுக்கு விடைகிடைத்து, பயம் நீங்கியவனாக தைரியம் கொண்டான். இனியும் மரணத்தின்பின் என்ன நடக்கும் என்று அவன் கலங்க அவசியமிருக்கவில்லை. தன் வாழ்வில் தான் செய்த அனைத்துப் பாவங்களின் தண்டனையையும் இயேசுகிறிஸ்து, சிலுவையில், தன்மேல் ஏற்றுக்கொண்டதால் இனி அவன் திரும்பவும் தன் பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்க அவசியமில்லை என்றும் ‘மரணத்திலிருந்து உயிரோடு எழும்பிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவனுக்கு, மரணத்தின் பின்பாக ஒரு சந்தோஷமான வாழ்வு உண்டு’ என்றும் அறிந்தவனாக, தான் அனுபவித்த அந்த கிறிஸ்துவை மற்றவருக்கும் அறிவிக்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பர்மா தேசத்திற்குப்போய் அங்கிருப்பவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றியும் அவர் தரும் நம்பிக்கை, புதுவாழ்வுபற்றியும் அறிவித்தான். அப்படி அறிவித்ததினால் சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளானான். ஆனாலும் மக்கள் மரணத்தின் பின்பு நரகம் என்று சொல்லப்படுகிற கொடிய வேதனையுள்ள இடத்திற்குப் போய்விடக்கூடாது, இயேசுகிறிஸ்து தரும் பாவமன்னிப்பையும் புதுவாழ்வையும் அவர்கள் அனுபவிக்கவேண்டும். மரணத்தின் பின்பு கிறிஸ்துவோடு பரலோகம் என்னுமிடத்தில் ஒரு சந்தோஷமான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக ஐட்சன் தன்னையே அர்ப்பணித்தான்.

இந்தப் பிரதியை வாசிக்கையில் உங்களில் சிலர் இது மத மாற்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்று என எண்ணலாம். அது உண்மையல்ல. ஏனெனில் கிறிஸ்து மதம் மாற்றுவதற்காக இவ்வுலகிற்குவரவில்லை. ‘பாவிகளை இரட்சிக்கவே (மீட்கவே) கிறிஸ்துஇயேசு உலகில் வந்தார்’ (1திமோத்தேயு1:15) மக்களை பாவத்திலிருந்து மனந்திரும்பச்செய்து, அப்பாவத்திலிருந்தும் அப்பாவத்தின் விளைவான நரக தண்டனையிலிருந்தும் அவர்களை விடுவித்து, புதுவாழ்வு கொடுக்கவும் தேவனோடு ஒரு புதிய உறவை ஏற்படுத்தி, மரணத்தின் பின் பரலோகம் என்னும், நித்தியமானதும் இன்பமானதுமான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார். ‘பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்’ (ரோமர் 6:23) என வேதாகமம் கூறுகிறது எனவே நம்முடைய பாவத்துக்காக, நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் தன்மேல் ஏற்று நாம் மரிக்கவேண்டிய இடத்தில் அவர் மரித்து, பின் மரணத்தை தம்முடைய உயிர்த்தெழுதலினால் ஜெயித்தார். அவரை விசுவாசிக்கிறவன் எந்த இனத்தவனாயிருந்தாலும் எந்த மதப்பின்னணியைச் சேர்ந்தவனாயிருந்தாலும் அவனுக்கு மரணத்திற்குப் பின்னான ஒரு வாழ்வைக் கொடுப்பார். அவர் கொடுக்கும் இந்த நித்திய வாழ்வை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மரணத்தின் பின்பு சந்தோஷம் இல்லாததும், வேதனை நிறைந்ததுமான நரகத்தில் தங்கள் நித்திய காலத்தைக் கழிக்க நேரிடும். அப்பொழுது புலம்பிப் பிரயோஜனமில்லை ஏனெனில் அதிலிருந்து மீளவே முடியாது. இதனை வாசிக்கும் அன்பானவர்களே! உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதனை விட்டுவிடுவதற்கான தீர்மானத்தோடு ‘ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தார்’ என விசுவாசித்து, அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு பாவமன்னிப்பும் மெய்ச்சமாதானமும் கிட்டுவதுடன், மரித்த பின்பும் பரலோகிற்குச் செல்லும் பாக்கியமும் கிடைக்கும். ஆனால் அவர் தரும் பாவமன்னிப்பையும் நித்திய வாழ்வையும் ஏற்க மறுத்தால் இவ்வுலகின் வெறுமையும், விரக்தியுமான வாழ்வு மட்டுமல்ல, மரணத்தின் பின்பு உங்கள் பாவங்களுக்கான தண்டனையாக நரகமும் உண்டு. இவை இரண்டில் எதைத் தெரிவு செய்யப்போகிறீர்கள்? தெரிவு உங்களுடையது.

தேவன் ஏன் மனிதனானார் ?

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்தார். அண்ட சராசரங்களையும் மனிதனையும் படைத்த தேவன், ஏன் மனிதனாக அவதரிக்க வேண்டும்?

முதலாவதாக, தேவன் தேவனாகவே தம்மை வெளிப்படுத்துவாரெனில் ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலிருக்கும் அந்தத் தேவனை, பாவங்களில் ஜீவித்து இருளின் அதிகாரத்திலிருக்கும் மனிதன் அணுகக் கூடாதவனாயிருப்பான். இடிமுழக்கத்தோடும் மின்னலோடும் எக்காள சத்தத்தோடும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு பேசின போது அவர்கள் நடுங்கினார்கள். மகிமையுள்ள தேவனோடு பேச அவர்களுக்குத் தைரியமில்லாதிருந்து. ஆனால் அன்புள்ள தேவன் மற்றெல்லா சிருஷ்டிகளைப் பார்க்கிலும் மனிதனை அதிகமாய் நேசித்து அவனைப் பாவங்களிலிருந்து விடுதலையாக்கி, பாவத்தின் பலனாக அவன் மேல் வந்த சாபங்கள், பிரச்சனைகள், வியாதிகள் யாவற்றிலிருந்தும் அவனை விடுதலையாக்க விரும்பினார். அதற்காக அவர் மனிதனை போல மாம்சமும் இரத்தமும் உடையவராக பாவமில்லாதவராய் அவதரித்தார். அவர் ஏறக்குறைய முப்பத்து மூன்றரை ஆண்டுகள் இவ்வுலகில் மனிதனாகவே, மனிதனைப் போல பசியுடையவராக, தாகம் உடையவராக, பெலவீனமுடையவராக வாழ்ந்தார். ஆதலால் ஜனங்கள் பயமின்றி அவரோடு பழகினார்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்க மிகவும் விரும்பினார்கள். தேவனுடைய அன்பைப் பற்றியும், அவருடைய இரக்கத்தைக் குறித்து, அவருடைய திட்டங்களைப் பற்றியும் ஜனங்கள் அறிந்து கொண்டார்கள்.

இரண்டாவதாக, மனிதன் ஜீவிப்பதற்கான மாதிரியைக் காண்பிக்கும் பொருட்டு தேவன் மனிதனானார். மனிதன் தேவனைப் போல பூரண சற்குணம் உடையவராக வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆதலால் மாம்சமும் இரத்தமுடையவராக வெளிப்பட்ட அந்தத் தேவன், பரிசுத்தமுள்ளவராக, தாழ்மையுள்ளவராக, அன்புள்ளவராக, மற்றவர்களை மன்னிக்கிறவராக, இரக்கமுள்ளவராக இப்பாவ உலகில் ஜீவித்துக் காண்பித்தார்.

மூன்றாவதாக, மனிதனை மீட்பதற்காகத் தேவன் மனிதனானார். ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்திக்காக இளங்காளை, வெள்ளாடு போன்றவைகளின் இரத்தத்தைச் செலுத்திவந்தார்கள். ஆனால் அந்த இரத்தமோ மனிதனுடைய பாவத்தை மன்னிக்க முடியாது. சிருஷ்டிகளில் மேன்மையான சிருஷ்டியாகிய மனிதனை சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தராகிய தம்முடைய இரத்தம்தான் மனிதனின் பாவத்தைக் கழுவவும், மன்னிக்கவும் முடியுமென்பதை இவ்வுலகில் பாவமில்லாதவராய் அவதரித்து, மனிதனாக ஜீவித்து தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிலுவைமரத்தில் மனிதனுக்காக சிந்தி, அவனுக்காக மரணத்தை ருசிபார்த்தார். அவர் சிலுவையில் சிந்தின இரத்ததை விசுவாசித்து, தன் பாவங்களை மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்கிற எந்த மனுஷனுக்கும் பாவ மன்னிப்பையும் பாவங்களிலிருந்து விடுதலையையும் தந்து, பாவங்களின் பலனாக வந்த சாபங்கள், வியாதிகளிலிருந்தும் அவனை விடுதலையாக்கும் பொருட்டாக அவர் அப்படியானார்.

மனிதனாக அவதரித்து, மனிதனாக ஜீவித்து, மனிதனுக்காக முழு இரத்தமும் சிந்தி மரித்த அந்த தேவன்தான் கர்த்தராகிய இயேசு. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது (1தீமோ.1:15). அவரைக்குறித்து உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவாட்டுக்குட்டி என்று கூறப்பட்டுள்ளது. மனிதனுக்காக மனிதனாக அவதரித்து, மனிதனுடைய பாவங்களுக்காக மரித்த கர்த்தராகிய இயேசு, மெய்யான தேவனானபடியால் அவர் மூன்றாம் நாளில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் என்றும் ஜீவிக்கிறார்.

அன்பார்ந்த நண்பரே, அந்த அருமை இயேசுவை உம் இரட்சகரான ஏற்றுக்கொள்வீராக.கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் உம் பாவங்கள் நீங்க கழுவப்பட்டு, ஒரு பரிசுத்த ஜீவியம் செய்வீராகில், அவர்  இருக்கும் பரலோகத்தில் நீரும் அவரோடு கூட நித்திய நித்தியமாய் வாழலாம். நித்திய மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் பின்வரும் ஜெபத்தைச் சொல்லுங்கள்:

“கர்த்தராகிய இயேசுவே, நீர் தேவனாய் இருந்தும் பாவியான மனுஷனாகிய என்னை நேசித்து, எனக்காக மனிதனாக அவதரித்து, என் பாவங்களுக்காக மருத்து உயிர்தெழுந்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, எனக்கு சந்தோஷ சமாதானம் ஈந்து, நித்தியத்தில், மோட்ச இராஜ்யத்தில் என்னைச் சேர்த்துக் கொள்ளும் ஆமென்”.

ஏகாந்தம்

ஏகாந்தம் என்பது தனித்திருத்தல் அல்லது தனிமை எனப் பொருள் படும். ஒருவர் தனித்திருந்தால் அது அவருக்கு ஒரு பெரும் பளுவைச் சுமப்பது போன்று இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏகாந்தத் தன்மையுடையதாகவே உள்ளது. வாலிபர் தனித்து விடப்பட்டதாக எண்ணுகின்றனர். ஏழைகளும் ஏகாந்த உணர்ச்சியினால் வாடி வதைக்கப்படுகின்றனர். சில செல்வந்தருங்கூட இவ்வித உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனர்.

வயோதிகர்கள் இவ்வித ஏகாந்த உணர்ச்சியினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள்: “வாழ்வில் வாழ்ந்த பல அரிய வாய்ப்புகளைத் தவற விட்டோம், பல நண்பர்கள் நம்மைக் கைவிட்டனர், யாருக்கும் இந்தக் கிழக்கட்டை தேவை இல்லை; காடு வா, வா என்கிறது” என்று சொல்லி ஏகாந்த உணர்ச்சியினால் ஏக்கமடைகின்றனர். வியாதிப்பட்டு பலவீனமடைந்து பல கஷ்டங்களைத் தாங்களே தங்களது வயோதிபக் காலத்தில். அனுபவித்துத் தவிக்கின்றனர்.

எல்லோரும் இத்தகைய ஏகாந்தம் தகர்த்தெறியப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.

குறிப்பாக கடவுளும் இதையே நமக்கு வாக்குறுதியாக அளித்துள்ளார். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று உறுதியாகக் கூறியுள்ளார். இது ஒரு மாபெரும் வாக்குறுதியன்றோ? ஒரு மனிதனும் இவ்வித வாக்குறுதியினைக் கொடுக்க இயலாது; ஏனெனில் எம்மனிதனாலும் இதைச் செய்து முடிக்க இயலாது.

தேவன் மற்றவர்களை உதவிக்கு அனுப்புவதாகச் சொல்லாமல் தாமே” “உன்னைக்காக்காமல் விடுவதில்லை”  என்கிறார். தம்மையே முழுவதுமாய் உனக்கு அர்ப்பணிப்பதாய்க் கூறுகின்றார். தேவனது பிரசன்னத்தை அளவிடக் கூடியவன் யார்? தேவன் தம்முடைய எல்லாவற்றையும் உனக்குக் கொடுப்பதாய் வாக்குறுதி கூறுகிறார்.

தேவன், நமது பெருந் தேவையைச் சந்தித்த நாளில் ஒன்றையும் தமக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. நமது பாவத்தினால்தான், நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டு ஏகாந்த உணர்ச்சி அடைகின்றோம். ஆகவே தேவன் தாமே மண்ணுக்கு வந்து சிலுவையில் தம்மையே தியாகம் செய்து நமது பாவங்களுக்கு ஒரு முடிவு கட்டினார். இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்டு தனித்திருந்தது. நாம் நித்தியத்தில் தேவனிடமிருந்து பிரிக்கப்படாதிருக்கவேயாகும்.

தேவன் தமது நட்பினையும் அன்பினையும் நமக்கு அருளுகின்றார். ஆயினும் ஒருவரிடமும் பலவந்தமாய் அவர் உட்பிரவேசிப்பதில்லை. அவர் இலவசமாய் அருளும் கிருபை நிறைந்த இரட்சிப்பினை, அவரது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தினால் அவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கே அளிக்கிறார் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன் நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கூறுகிறார்.

நமது நண்பர்களுடன் கூடி வாழ்வதாலோ, அல்லது வேதனை நீங்கி வலியின்றி சுகமுடன் வாழ்வதாலோ ஏகாந்த உணர்ச்சி நீங்கி மகிழ்வுடன் வாழ இயலாது. இவைகள் நமக்குத் தேவைதான்; ஆனால் உண்மையான ஆறுதல் நாம் தேவனது பிரசன்னத்தில் வாழ்வதாலேயே கிட்டும். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இன்றே உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீராக. “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப். 16:31)

வாய்ப்பைத் தவறவிட்டவள்!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவாள். அவள் அதிக சீக்கிரத்தில் ஒரு சிறந்த நாட்டியக்காரியாகவும் மாறினாள்.

தன் ஊரில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், குதிரைப்பந்தயம், திரைப்படங்கள், நாட்டிய அரங்கம் போன்ற பற்பல இடங்களுக்கு மெர்லின் தவறாமல் செல்வாள். அவளின் அழகிய நடனம் அந்த நாட்டில் உள்ள பலரைக் கவர்ந்தது. சற்று பிரபலமானவுடன் அவளுக்குப் பெயரும், புகழும், பணமும் பெருகிவிட்டது.

ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது சுவர்களில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டாள். தன் காரை நிறுத்தி அதை வாசித்துப் பார்த்தாள். கடவுளைப் பற்றிச் சொல்லும்படியாக ஒரு தெய்வீக மனிதர் அந்த ஊருக்கு கடந்து வருவதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்ருந்தது. மெர்லின் அந்த நபரின் பெயரை படித்ததும், இவர் பெரியமனிதர் அல்லவா! இவரைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சிந்தித்தவாறே தன் வீட்டை அடைந்தாள்.

அடுத்தநாள் அவள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணிப்பெண் தான் நேற்றைய தினம் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு கடந்து சென்றதையும், அங்கு நடைபெற்ற நிகழ்சிகளையும் பற்றி சொன்னாள்.

இதைக் கேட்ட மெர்லின் மனதிலும், ஒரு விருப்பம் வரவே, அன்று சாயங்கால கூட்டத்திற்கு அவளும் புறப்பட்டாள்.

மெர்லின் தன் காரை ஓட்டிச் செல்லும்போதே கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த மைதானத்திற்கு செல்வதைப் பார்த்தாள். தனக்கு அந்த கூட்டம் பிடிக்கவில்லையெனில் இடையில் எழுந்து வெளியே வந்துவிட வசதியான ஒரு இடத்தில் காரை நிறுத்தி, உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்த கூட்டம் ஆரம்பித்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவள், இத்தனை நாட்கள் சென்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலிருந்து இது வித்தியாசமானதாகவும், அவள் மனதிற்கு ஒரு அமைதியை கொண்டு வருவதாகவும் இருந்தது.

கூட்டம் ஆரம்பமாயிற்று. அந்த தேவமனிதர் பேசத் துவங்கினார். கூடியிருந்த எல்லாரும் மிக ஆவலாக, அவர் சொல்லும் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவத்தில் சிக்கியிருப்பவர்கள் தண்டனைக்கு எப்படி தப்ப முடியும்? என்ற வார்த்தைகளை அவர் பேசும் போது அந்தக் கூட்டத்திலிருந்த அநேகர் தங்கள் பாவங்களை உணர்ந்தார்கள். அதில் நாட்டியப் பெண்ணான மெர்லினும் ஒருத்தி.

கூட்டம் முடியும் இறுதி நேரத்தில் மக்கள் பலர் தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து, அழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் மேடையிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்காகவே பேசப்பட்டதாக உணர்ந்தாள். நீ செய்த பாவங்கள் எவ்வளவு கொடிதானாலும், இயேசுவிடம் அறிக்கையிடு, இன்றே அதை விட்டு விடு. நிச்சயம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீ சொர்க்க வாழ்வை அனுபவிப்பாய் என்று அவர் பிரசங்கித்தார்.

இதைக் கேட்ட மெர்லின், தான் கடவுளை விட்டு தூரம் போன பாவி என்று உணர்ந்தாள். ஆனால் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது. மறுவிநாடி அவள் எண்ணம் சற்று மாறியது. ஐயோ! நாளை ஒரு முக்கிய நடன நிகழ்ச்சி உள்ளதே. ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நான் ஆட வேண்டுமே, இன்று என் வாழ்வை நான் இயேசுவுக்கு கொடுத்தால், நாளை எப்படி நடனமாட முடியும்? என்று யோசித்தாள். அன்று மேடையிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் பலர் தொடப்பட்டனர். ஆனால் மெர்லின் தன் டைரியில், ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வேன்’ என எழுதிக் கொண்டவளாய் அந்தக் கூட்டம் முடியும் முன்னரே மனப் போராட்டத்துடன், காரை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

மெர்லினுடைய உள்மனதில் திரும்பத் திரும்ப அந்த தேவமனிதரின் வார்த்தைகள் ஓடினாலும், அவள் “இன்று அல்ல, இன்னும் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பின் நாளை மனம் மாறுவேன்” என்று நினைத்தவாறே நான்கு வழி ரோட்டில் காரை ஒட்டினாள். அப்போது எதிர்புறமாக இருந்து வந்த ஒரு லாரி மின்னல் வேகத்தில் அவள் காரை மோதியது. கார் சுக்கு நூறாக உடைந்தது. இரத்த வெள்ளத்தில் மெர்லின் அந்த இடத்திலே பிணமாக கிடந்தாள். அவள் எழுதி வைத்திருந்த டைரியும் அங்கு திறந்து கிடந்தது. ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வேன்’ என்ற வரிகளுடன் …

பிரியமானவர்களே, நாளையை சந்திப்பதற்கு முன் அவள் இருளுக்குள் சென்றுவிட்டாளே! நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. நல்ல தீர்மானங்களை எடுக்க காலந் தாழ்த்துவது நல்லதல்ல. அதினால் நாம் அவற்றை இழந்துபோக நேரிடலாம் – மெர்லினைப் போல.

நாம் இந்த பூமியில் வாழும் வாழ்க்கை நிலையற்றது. நிச்சயம் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும். அதற்குப் பின்னர் தான் நமக்கு என்றும் அழிவில்லாத ஒரு வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இந்த பூமியில் நாம் செய்யும் தவறுகளுக்கு பின்னர் நாம் அனுபவிக்கும் தண்டனை முடிவில்லாத நரக வாழ்க்கையே. நித்திய வாழ்வைப் பெற இயேசுவிடம் திரும்புங்கள். இன்றே தீர்மானம் எடுங்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13)

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

காணாமல் போன படகு

ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான். எத்தனை அழகு! என்ன அருமையாக உள்ளது .. என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.

ஓ! இந்த அழகிய படகை ஆற்றங்கரையில் விட்டு விளையாடினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்த ராஜூ, அதிசீக்கிரமாக ஆற்றை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடிவந்தவன் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் அதனை மிதக்க விட்டான். அந்த சின்ன படகு அசைந்து அசைந்து செல்வதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராமல் பலமாக அடித்த காற்றினால் அந்த படகு வேகமாக ஆற்றுப்போக்கிலே அடித்துச் செல்லப்பட்டது. எப்படியாவது தன் சின்ன படகை எடுக்க அவன் பெருமுயற்சி செய்தும், அது அவனுக்குக் கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு வெறுங்கையனாய் சிறுவன் ராஜூ கண்ணீரோடு வீடுவந்து சேர்ந்தான். தான் கஷ்டப்பட்டு செய்த பொருள் தன் கண் முன்னாலே போய்விட்டால் யாருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்?

இரண்டு நாட்களுக்குப் பிறகு கடைதெரு வழியாக நடந்து சென்ற ராஜூவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கடைத்தெருவில் ஒரு கடையில் விற்பனைக்காக கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சின்னப் படகை கண்டான். அந்த அழகிய படகு ராஜூ செய்து விளையாடிய அதே படகுதான். அவன் கண்களையே அவன் நம்ப இயலாமல் போனது.

ராஜூ சந்தோஷத்துடன் அந்த கடைக்குள் நுழைந்து, கடைக்காரரிடம், மிகவும் உரிமையுடன் சொன்னான், “ஐயா, அந்த அழகிய படகு என்னுடையது. நான் கஷ்டப்பட்டு செய்தது. இதை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” எனக் கேட்டான். கடைக்காரர் அவனிடம் “தம்பி, இந்த படகை நான் ஒருவரிடம் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். நீ உன்னுடையது என்று சொல்வதால் நான் வாங்கின அதே விலைக்கு வேண்டுமானால் நீ இதனைப் பெற்றுக்கொள். இது உன் படகு என்று நீ சொல்வதினால் நான் இலவசமாய் இதை உனக்குத் தர முடியாதே” என்று கூறினார்.

நான் செய்த படகுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டுமா? என்று ராஜூ சற்றும் யோசிக்கவில்லை. உடனே தன் வீட்டிற்கு ஒடினான். தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாயை பொறுக்கி எடுத்து, வேகமாக அந்த கடைக்கு வந்தான். தொலைந்து போன அப்படகை திரும்பவும் தானே விலைகொடுத்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான்.

பிரியமானவர்களே, ராஜூவின் சிறிய படகைப் போலவே நாமும் இருக்கிறோம். ஆண்டவர் இயேசுதான் நம்மை உருவாக்கினார். ராஜூவின் படகு தொலைத்துவிட்டது போலவே நாமும் பாவம் செய்து நம்மை உண்டாக்கினவரை மறந்து அவரை விட்டு தூரம் போனோம். ஆனால் இன்று நம்மை உருவாக்கினவர், நம்மை அன்புடன் தேடி வந்துள்ளார்.

ராஜூ தன் படகை மீண்டும் விலை கொடுத்து வாங்கினது போலவே, ஆண்டவராகிய இயேசுவும் தன் சொந்த இரத்தத்தையே விலைக்கிரயமாக நமக்காக சிலுவையில் சிந்தினார். ஏன்? அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவருக்கு சொந்தமாக வேண்டும் என்பதற்காகவே.

ராஜூ அந்த படகை அதிகமாக நேசித்ததாலே அந்த பணம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தன் பொருளைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அவனுக்கு பெரிதாக தெரிந்தது.

இதுபோலவே ஆண்டவராகிய இயேசுவும் நம் மேல் கொண்ட அளவற்ற அன்பினாலேயே தன் சொந்த உயிரை நமக்காகக் கொடுத்தார்.

ஓ! இறைவன் நம்மேல் வைத்த அன்பு எவ்வளவு பெரியது பார்த்தீர்களா? பாவத்தினால், அசுத்தத்தினால், இச்சையினால், அருவருப்பினால் இன்று உங்கள் வாழ்க்கையும் கூட தொலைக்கப்பட்டிருக்கலாம். கடவுளை விட்டு தூரம் போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பாவத்தில் தொலைந்து போன உங்கள் வாழ்க்கையை மீட்கவே இன்று ஆவலுடன் உங்களை அழைக்கிறார்.

நீங்கள் அவருக்கு விரோதமாக எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும், இன்று மனம்வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களைத் தள்ளிவிடாமல், உங்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் உங்களை விடுவிப்பார்.

தன் சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்கத் துணிந்த அவருக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்க நாம் தயங்கலாமா?

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறது இல்லை” என்று கூறின இயேசு, நாம் இன்றைக்கு அவரிடத்தில் வந்தால் நம் பாவங்களை மன்னித்து, நமக்குப் பரிசுத்த வாழ்வினைத் தந்து, நம்மை ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராயிருக்கிறார்.

இன்னமும் தாமதம் ஏன் நண்பரே?

“இழந்து போனைதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.” (லூக்கா 19:10)

“எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.” (1தீமோத்தேயு 2:5,6)

அண்ணா ஆதரியுங்கள் !!!

பல்லாண்டுகளுக்கு  முன்பு தமிழகத்தில் இரட்டைச் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். வெளித்தோற்றத்திற்கு இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் குணத்தினாலே அவ்விருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. மூத்தவன் உத்தமனாய் வாழ்ந்து வந்தான். இளையவனோ பஞ்சமாப் பாதகனாய் பல தீய செயல்கள் புரிந்து, தூயவாழ்க்கையற்றும் தனது தனையனுக்குத் தாங்க முடியாத தவிப்பைத் தந்தான்.

ஒருநாள் இளையவன் ஒரு சண்டையில் ஈடுபட்டுக் கொடுங்கொலை புரிந்துவிட்டான். அங்கிருந்த மக்கள் கூச்சலிடவே அவன் மிக்க பீதிகொண்டு வீடு நோக்கி ஓடினான். அதைக் கண்ட ஒரு காவற் சேவகனும் சில பொதுமக்களும் அவனைத் துரத்திச் சென்றனர். அவனோ அதிவேகமாய் வீட்டிற்கு ஓடி அண்ணா என்னை ஆதரியுங்கள். நான் ஒரு கொலை புரிந்துவிட்டேன் என்று சொல்லி அவன் கால்களில் வீழ்ந்து கதறினான். தன் தம்பியின் அவல நிலையை ஒரு கணத்தில் உணர்ந்த அண்ணன், தம்பியின் இரத்தக் கறை படிந்த துணிகளைக் கழற்றி தான் அணிந்துகொண்டு, தன்னுடைய உடைகளைத் தம்பிக்குத் தரித்து அவன் கையிலிருந்த கத்தியைத் தன் கையில் எடுத்துத் தெருவில் வந்து காவற்சேவகனிடத்தில் சரண்புகுந்தான். அங்கிருந்தோர் அவன் தான் கொலைபாதகன் என்று எண்ணி, அவனை நையப்புடைத்தனர். பின் அவன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்படத் தீர்ப்பு அளிக்கப்பட்டான். அவன் மரிப்பதற்குமுன் தன் தம்பிக்கு, உனக்குப் பதிலாய் நான் மரிக்கிறேன். இதை நினைத்து ஆவது உத்தமனாய் நடந்துகொள் என்று ஒரு கடிதம் எழுதி இரகசியமாய் அனுப்பி வைத்தான். இதைக் கண்ட தம்பி ஓவென்று கதறி அழுது, மனம் மாறினான்.

அத்தம்பியைப் போலவே மண்ணில் தோன்றிய மக்கள் யாவரும் பல தீய பாவச் செயல்களைப் புரிந்து, நரகத் தண்டனையை அடைய வேண்டியவராயினர். ஆயினும் கடவுள் தமது திவ்ய கிருபையினாலும், அளவற்ற அன்பினாலும் நம்மீது இரக்கம்கொண்டு, இயேசு என்ற நாமத்தில் மண்ணில் தோன்றி, ஒரு பாவமும் அற்றவராய் வாழ்ந்து, அரிய பல அற்புதங்களை ஆற்றி, உன்னத உபதேசங்களை அன்புடன் அருளிச் செய்து, முடிவில் நம்மை மீட்கும் கிருபாதாரப் பலியாகத் தம்மையே சிலுவையில் பலிகொடுத்தார். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2.கொரி.5:21) என்றும் நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படி அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1.பேது.2:24) என்றும் சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ளன.

ஆகவே, நீரும் அத்தம்பியைப் போன்று உமது பாவங்களுக்காகவும், தீய செயல்களுக்காகவும் உண்மையில் மனம் வருந்தி, எல்லாம் வல்ல இறைவனுடைய பாதக்கமலங்களை தழுவி, அவரிடம் உமது பாவங்களை அறிக்கையிட்டு, அவரை உமது உள்ளத்தில் உறையும் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராகில், அவர் உமது பாவம் யாவையும் மன்னித்து, உமக்கு இரட்சிப்பையும், சாந்தியையும் பேரின்பத்தையும் இறுதியில் மோட்சத்தையும் தருவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர் கள் (அப்.16:31).

இன்றே. நீர் இறைவன் இயேசு இரட்சகரை உமது சொந்தத் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராக.

ஏன் எனக்கு அமைதியில்லை

நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு, சரீர் வேதனை என பல பிரச்சினைகளை சரீரத்தில் உணரமுடியும். இவைகள் உண்மையான நோய்கள் அல்ல. உள்ளே மறைந்திருக்கும் கான்சர் நோயின் வெளிப்படையான அறிகுறிகளே இவைகள். எனவே மேற்கண்ட நோய்களுக்கு நாம் மருத்துவம் செய்தால் அதனால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். மறைந்திருக்கும் கான்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சை உரிய நேரத்தில் செய்யப்பட்டால்தான் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பலருக்கு பயம், அமைதியின்மை, பதட்டம், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவைகளை அவர்கள் தங்களின் பிரச்சினைகளாக எண்ணிக்கொண்டு அவைகளைச் சரி செய்ய பலவிதமானக் காரியங்களைச் செய்கின்றனர். சிலர் கோயில்களுக்கு செல்கின்றனர். சிலர் பக்தி ரீதியாக சில காரியங்களை செய்கின்றனர். சிலர் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்றனர். சிலர் புனிதத்தலங்கள் போய்வருகின்றனர். சிலர் மனதை இலகுவாக்கும் சில ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் அவர்களுக்கு நிரந்தரமானத் தீர்வுகள் அவைகளால் கிடைப்பதில்லை. எல்லாம் சற்று நேரம் மட்டுமே செயல்படுகின்றன.

காரணம் என்ன? மேற்கண்ட மனப்பிரச்சினைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோயின் வெளிப்புறமான அறிகுறிகளே அந்த நோயின் பெயர் என்ன? அதன் பெயர்தான் பாவம். பாவம் என்றால் என்ன? தன்னைப் படைத்த தேவனோடு தனிப்பட்ட உறவுடன் வாழாமையின் பெயர்தான் பாவம். மனிதன் கடவுளின் உறவில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். மனிதன் கடவுளின் உறவினால் மட்டுமே முழுமையான வாழ்வினை அடைகின்ற இயற்கையுடன் படைக்கப்பட்டவன். கடவுளை நாம் நம்பலாம். கடவுளை நாம் வணங்கலாம். கடவுளை நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்யலாம். ஆயினும் கடவுளின் உறவுடன் வாழ்வது என்பது வித்தியாசமான ஒரு அனுபவம். கடவுளின் உறவினை மனிதன் தனக்குள் அனுபவிக்கும் போதுதான் அவனைவிட்டு தனிமை உணர்வு போகின்றது. தனிமை உணர்வு போகின்ற போதுதான் பயம், சோர்வு, பீதி, கவலை ஆகியவைகளும் போகின்றது.

கடவுளின் உறவு இல்லாத உள்ளான ஒரு நிலைமை தான் பாவம். அந்த பாவத்தின் அறிகுறிகள்தான் அகலாத பயங்களும், நீங்காத நிம்மதியின்மைகளும், மறையாத வேதனைகளும், விலகாத மனச்சோர்வுகளும், உள்ளான இருதயத்தில் கடவுளின் உறவினை அடைந்து உணரும்வரை மனரீதியான பலவிதத் துயர்தரும் விஷயங்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.

கடவுளின் உறவினைப் பெறுவது எப்படி? கடவுளின் உறவை மனிதன் பெறுவதற்காக பாவநிவாரணம் செய்யப்பட வேண்டியத் தேவை உண்டு. அந்தப் பாவநிவாரணத்தை செய்திடவே தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமியில் மானிடனாக வந்து பாவநிவாரணப் பலியாக தம்மையேக் கொடுத்தார். சிலுவையில் இயேசு கிறிஸ்து பாவநிவாரண பலியாக அடிக்கப்பட்டார். அதன் விளைவாக மனிதன் தேவ உறவுடன் வாழ்வதற்கான வாசல் திறக்கப்பட்டது. இந்த இரட்சகராகிய இயேசுவை
நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறை உறவுடன் வாழ விரும்பும்போது பாவம் ஒழிகிறது. அதாவது தேவ உறவற்ற நிலை போய், தேவ உறவுடன் வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டுகிறது. அதன் விளைவாக நாம் உண்மையான இதய அமைதி, நம்பிக்கை. சந்தோஷம், மனத்தூய்மை ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழிதிறக்கின்றது. பலவிதமான வாழ்க்கை சுமைகளினால் வருத்தப்பட்ட மக்களைப் பார்த்து இயேசு ‘என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருகிறேன்’ என்றார். அதாவது அவரோடு ஒரு நெருங்கிய உறவுடன் வாழவரும்போது, அவரால் நமக்கு உண்மையான அமைதி கிடைக்கிறது (மத்தேயு 11:28).

ஆண்டவராகிய இயேசு இன்றும் உங்களை அன்புடன் அழைக்கின்றார். தேவ உறவின்மை என்ற பாவ வாழ்வை விட்டு விலகி, தேவ உறவுடன் வாழ்தலாகிய தூய்மையான வாழ்விற்கு வரும்போது அங்கே பயமும், கவலையும், சோர்வும் நீங்கி உண்மையான தேவ அமைதியை இருதயத்தில் உணரலாம்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவர் இயேசுவே.
தேவ உறவில்லாத என் பாவ
வாழ்வை மன்னியும். எனக்குள் நீர்
வந்து உம்முடைய உறவை
அனுபவிக்கச் செய்யும்,
கவலைகள், பயங்கள், சோர்வுகள்,
சஞ்சலங்கள், பதட்டங்கள்
யாவற்றையும் நீக்கி என்னை
அமைதியுடன் வாழச் செய்யும். உமக்கு
பிரியமாக வாழ்வதற்கு உதவி செய்யும். இயேசுவின்
நாமத்தில் ஆமென்.

Popular Posts

My Favorites

யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே

ஜனவரி 23 "யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே."  ஏசாயா 41:14 மற்றவர்களின் பார்வையில் நாம் சிறியவரும் அற்பமுமாய்க் காணப்பட்டாலும், நாமே நம்மைக் குறித்து பலவீனர்களென்று அறிந்தாலும் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதே என்கிறார். நாம் ஒரு...