எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்

யூலை 26

“எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்.” 1தெச 5:16

ஒவ்வொரு தேவபிள்ளையும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷப்பட்டு, பாக்கியவான் என்று சொல்லப்படுகிறான். அவன் எப்போதும் பாக்கியவானாய் இருக்க வேண்டியவன். எப்போதும் சந்தோஷமாய் இருங்கள் என்று வசனம் சொல்லுகிறது. சந்தோஷம் ஆவியின் கனிகளில் ஒன்று. இது விசுவாசத்தின் பலனாய் நம்பிக்கையோடு சேர்க்கிறது. ஆகவே நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள். இது தைரியம் உள்ள, சேனைத் தலைவன் அடையும் வெற்றியில் போர் சேவகன் அடையும் சந்தோஷம். கப்பலில் பிரயாணம்பண்ணும் ஒருவன், புத்திசாலியும், அனுபவசாலியுமான கப்பலோட்டியைக் குறித்து அடையும் சந்தோஷம். மன்னிப்பைப் பெற்று தேவகிபையை அடைந்தவனுடைய சந்தோஷம். அன்பும், பட்சமுள்ள தகப்பனைப்பற்றி வீடு திரும்பிய குமாரன் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷம் சொல்ல முடியாது. மகிமை நிறைந்தது. இது எப்பொழுதும் பரிசுத்தமான சந்தோஷம்.

இந்த சந்தோஷம் பாவம் செய்தால் சேதமடைந்து குறைந்துபோம். தேவ பிள்ளையே, உன் தேவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படு என்கிறார். பழங்கால தேவபக்தர்கள் துன்பத்திலும் சந்தோஷப்பட்டார்கள். தேவனுடைய பரிசுத்த வசனமும், அருடைய கிருபை நிறைந்த உடன்படிக்கையும், இயேசுவில் இருக்கும் பரிபூரணமும், தேவனுடைய மகிமையான தன்மைகளும் இந்தச் சந்தோஷத்திற்கு அஸ்திவாரம். இது நம்முடைய அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலையும் குறித்து நாம் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷத்தை அடிக்கடி கெடுத்துக்கொள்ளாமல் நாம் பத்திரப்படுத்த வேண்டும். நம்மைச் சேதப்படுத்தி தேவனை வருத்தப்படுத்துகிற நம்முடைய அவிசுவாசம், பாவம், கிறிஸ்துவைப் பற்றின எண்ணம், தகாத சிந்தை, உலகத் தொல்லைகள், தப்பான நடத்தை, தன்னயம் இவைகள் யாவும் நமது நித்தியமான சந்தோஷத்தைக் கெடுத்துப்போடுகின்றன. தேவ பிள்ளையே, நீ சந்தோஷமாய் இருக்க வேண்டும்.

கர்த்தரில் என்றும் மகிழ்ந்திரு
அவர் உன் பரம நேசர்
அவர் மகிமை அளிப்பார்
பரம ராஜ்யமும் தருவார்.

இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை

யூலை 25

“இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை” மத்.17:8

மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது. ஆனால் எது மாறினாலும் இயேசு அப்படியே இருக்கிறார். அவருடைய அன்பும் தன்மையும் மாறுவதில்லை. நம்மேல் அவர் வைத்திருக்கிற சித்தமும் மாறுகிறதில்லை. அவர் கிருபையுள்ளர். உண்மையுள்ள அவருடைய வாக்கும் மாறுகிறதில்லை. ஆசாரிய ஊழியத்திலும், மன்றாட்டு ஊழியத்திலும், இராஜ உத்தியோகத்திலும் அவர் மாறுகிறதில்லை. அவருடைய இரத்தம் எப்போதும் பலனுள்ளது. தகப்பனாகவும், சகோதரனாகவும், புருஷனாகவும், சிநேகிதனாகவும் அவரோடு நமக்கு இருக்கும் உறவில் அவர் மாறுகிறதில்லை. அவர் நேற்றும் இன்றும் ஒரே விதமாய் இருக்கிறார். இந்த வசனம் நமக்கு எப்போதும் ஞாபகக் குறியாய் இருக்க வேண்டும்.

இயேசுவால் மட்டும்தான் நம்மை கிருபாசனத்தண்டை கூட்டிக் கொண்டு போக முடியும். அவரைத்தான் நம்பி விசுவாசிக்கலாம். தேவன் நம்மை அங்கீகரிப்பாரென்று நம்ப அவர்தான் நமக்கு ஆதாரம்., மாதிரி. அவரே நம்முடைய சந்தோஷமும், கீதமும், நம்முடைய இராஜனும் நியாயப்பிரமாணிகனுமாய் இருக்கிறார். அவர் மாறாதவர். ஆகையால் எல்லாவற்றிலும் அவரையே பற்றப் பிடித்திருக்கலாம். நமது கண்களையும் சித்தத்தையும் அவர்மேல் வைப்போமாக. மோசேயும் எலியாவும் போனாலும் இயேசுவானவர் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவோமாக. மேகம் இருண்டு இருந்தாலும். பிரகாசமாய் காணப்பட்டாலும் அவர் மாறாதவர். இயேசுவானவர் சகல வருத்தங்களையும் இன்பமாக்கி, பயன்படுத் வாழ்வில் வரும் சோதனைகளுக்கு நம்மை விலக்கி காப்பார் என்று எதிர்பார்த்திருப்போமாக.

இயேசு நல்ல பெருமான்
எனக்கு முற்றிலும் ஏற்றவர்
எனக்கு வேண்டியது எல்லாம்
அவரிடம் என்றுமுள்ளது.

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24

“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4

தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில்  திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.

தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது

யூலை 23

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறதே” 2.கொரி. 1:20

சூரியனில் வெளிச்சம் எல்லாம் இருப்பதுப்போல கிருபை எல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசுவில் ஒன்று சேர்கின்றன. வாக்குத்தத்தங்கள் தேவனுடைய தன்மைகளையும் அவரின் மகத்துவங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவை கிருபையிலிருந்துத் தோன்றி அளவற்ற தயவுக்கு அத்தாட்சி ஆகின்றன. அவை அளவற்ற இரக்கத்தை வெளிப்படுத்தி நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறனது. அவை கிறிஸ்துவில் இருக்கின்றன. உண்மையான சாட்சியாக அவருடைய வாயிலும், உடன்படிக்கைக்கு அவர் கையிலும், சபையில் மணவாளனாக அவருடைய மனதிலும், சகலத்திற்கும் சுதந்தரவாளியாக அவருடைய சுதந்திரத்திலும் அவை இருக்கின்றன.

சகலமும் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரக்கமாக அவரில் அடங்கியிருக்கிறது. தீர்க்கதரிசியாக அவைகளை வெளிப்படுத்தி, ஆசாரியனாக அவைகளை உறுதிப்படுத்தி, இராஜாவாக அவைகளை இயேசு நிறைவேற்றுகிறார். இவைகளில் சில உலகத்திற்கு அடுத்தது. சில சபைக்கு மட்டும் உரியது. சில சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் அடுத்தது. எந்தக் காலத்திற்கும் உதவும், நித்தியத்திற்கும் ஏற்றது. கிறிஸ்துவில் எந்த வாக்குத்தத்தமும் கிரேக்கனுக்கு ஆம் என்றும், யூதனுக்கு ஆமென் என்றும் இருக்கிறது. அதாவது யூதனானாலும், கிரேக்கரானாலும் விசுவாசிகள் யாவருக்கு அவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அன்பர்களே, அவைகளை விசுவாசித்து, ஜெபத்தில் பயன்படுத்தி நம் ஆத்துமாக்கள் அவைகளின் மேல் இளைப்பாறும்படி செய்வோமாக. அவை நமக்காகக் கொடுக்கப்பட்டவை. அதை அவர் நமக்காக நிறைவற்றுவார். ஏனெனினில் தேவன் உண்மையுள்ளவர்.

இதுவே என் நம்பிக்கை
இதன்மேல் நிற்பேன்
உமது வாக்கு உண்மை
உமது வார்த்தை சத்தியம்.

என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்

யூலை 22

“என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” நீதி. 8:32

கர்த்தருடைய வழிகள் பலவகையானவை. அவை எல்லாம் மகிமைக்கும், கனத்திற்கும், சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் நம்மை நடத்தும். இரட்சிப்பின் வழி குற்றத்தினின்றும் பாவத்தின் வல்லமையிலிருந்தும், தண்டனையினின்றும் நம்மைத் தப்புவிக்கும். சமாதான வழி சமாதானத்தை அடையவும் அதைக் காத்துக் கொள்ளவும் ஏற்ற பரிசுத்த வழி ஆகும். அதிலே சமாதானத்தை அடைந்து அதில் விருத்தியடைவோம். சத்திய வழியும் உண்டு. சத்தியத்தை அறிந்து, அனுபவம் பெற்று அதில் நடந்து வளருவோம். இன்னும் மேலான வழி அன்பின் வழியாகும். அதனால் நமது விசுவாச மார்க்கத்தை அலங்கரித்து பிறர்க்கு நம்மை செய்கிறோம். தங்கள் கண்களை அந்த வழிகளின்மேலும், இருதயத்தை அவ்வழிகளிலும், தங்கள் பாதங்களை அவைகளிலும் விசுவாசிகள் வைக்கிறார்கள்.திடமாய்ப் பார்த்து, செம்மையானதைத் தெரிந்து, பயபக்தியாய் நடந்து, விழிப்பாய் ஜீவனம்பண்ணி, விருத்தி அடைந்து, மேன்மையாய் நடந்து, மகிமையாய் முடிக்கிறார்கள். இதை வாசிக்கும் நண்பரே, நீவிர் கர்த்தருடைய வழிகளில் நடக்கிறீரா? மற்ற எல்லாவற்றையும்விட அவருடைய வழிகளையே நேசித்து அவைகளை நல்லது என்று எண்ணுகிறீரா?

விசுவாசத்தால் மட்டுமே இவ்வழிகளில் பிரவேசிக்க முடியும். அவற்றிலே நடக்கவும் முடியும். விசுவாசத்தினாலே கிருபையைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். விசுவாசத்தினாலே தேவனோடு சமாதானம் பெறுகிறாம். விசுவாசத்தினால் இதயம் சுத்தமாகிறது. தேவ சத்தியத்தை விசுவாசத்தால் மட்டுமே அறிகிறோம். விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது. என் வழிகளைக் காப்பார்கள் என்று வேத வசனம் புகழ்ந்துக் கூறுகிறது.

அலைந்து திரியும் என்னை
உம்மிடம் வைத்துக்கொள்ளும்
நீர எனக்குப் போதியும்
என் நாவு உம்மைப்பாடும்.

தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்

யூலை 21

“தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” எபி. 12:24

பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது பாவிகளுக்குச் சமாதானத்தை உண்டாக்கிற்று. சமாதானத்தைக் கூறுகிறது. அது சகல பாவத்தினின்றும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இது நமக்குத் தவறாமல் புண்ணியமாய்ப் பலிக்கத்தக்கதாய் நடப்பிக்கிறது. அது காயப்பட்ட மனச்சாட்சியை ஆற்றி, நம்முடைய ஊழியத்தைச் சுகந்த வாசனையாக்கி உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறது. பஸ்காவின் இரத்தம் இஸ்ரவேலரைக் காத்ததுப்போல இயேசுவின் இரத்தம் நம்மை பத்திரப்படுத்தி, நித்திய நீதிக்குத் திருப்தி உண்டாக்குகிறது.

இந்த இரத்தம் குற்றவாளிக்கு மன்னிப்பையும், செத்தவனுக்கு ஜீவனையும் சிறைப்பட்டவனுக்கு விடுதலையையும், கிருபையற்றவனுக்கு கிருபையையும் கொடுக்கிறது. இந்தத் தெளிக்கப்பட்ட இரத்தத்தண்டைக்குத்தான் விசுவாசிகளாக வருகிறோம். இந்த இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதைக் கேட்க வருகிறோம். ஆபேலின் இரத்தத்தைவிட அது மேலான காரியங்களைச் சொல்கிறது. தேவனண்டைக்கு நம்மை ஒப்புரவாக்குகிறதினால் அதன்மேல் நம்பிக்கை வைக்க வருகிறோம். அதை ருசிக்கவும், அதனால் ஏற்படும் பாக்கியத்தை அனுபவிக்கவும் வருகிறோம். இரக்கத்தையும் அவசியமான வேலைக்கு வேண்டிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும், அவர் இரத்தமூலமே வருகிறோம். இதில் நாம் சந்தோஷப்பட வருகிறோம். ஏனெனில் அது ஆறுதலுக்கும், சந்தோஷத்திற்கும் ஊற்று. குற்றத்தால் வருத்தப்பட்டு, பயத்தால் கலங்கி, சாத்தானால் பிடிபட்டு, குறைவால் வருத்தப்பட்டு மரணம் நம்மை சமீபித்து வரும்போது நாம் அதனண்டையில்தான் போகவேண்டும்.

கிறிஸ்து சிலுவையில்
தன் குருதி சிந்தினார்
அவர் தேகம் பட்ட காயம்
எனக்களிக்கும் ஆதாயம்.

ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20

“ஜெயங்கொள்ளுகிறவன்” வெளி 2:17

ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அடங்கமாட்டார்கள். கிறிஸ்தவன் அவர்களோடு சமாதானமாகக் கூடாது. முழுவதும் அவர்களை ஜெயிக்கும்வரை அவர்களோடு போராடவேண்டும். இந்த உலகத்தை மேற்கொள்ள வேண்டும். சாத்தானை ஜெயிக்க வேண்டும். தன் சொந்த இருதயத்தை அடக்கி ஆளவேண்டும்.

மோட்சம் ஜெயவீரரின் ஸ்தலம். அங்கே சொல்லிமுடியாத மேன்மைகள் அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய இரட்சிப்பின் தலைவராகிய இயேசுவானவர் ஜீவவிருட்சத்தின் கனியையும் மறைவான மன்னாவையும் அவர்களுக்குப் புசிக்க கொடுப்பார். புதிய பெயர் எழுதப்பட்ட வெள்ளைக் கல்லையும், விடி வெள்ளி நட்சத்திரத்தையும், வெள்ளை அங்கியையும், அவர்களுக்குக் கொடுப்பார். தேவனுடைய ஆலயத்தில் ஒளிசுடர்களாய் நிறுத்தப்பட்டு, ஜீவ கிரீடத்தைத் தரித்து, அவரோடு சிம்மாசனத்தில் உட்காரும் சிலாக்கியத்தையும், பெறுவர். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இப்படிப்பட்ட பாக்கியங்கள் வாக்குப்பண்ணப்பட்டுள்ளபடியால், நாம் தைரியப்பட்டு உற்சாகமடைவோமாக. அவர் கொடுக்கும் எந்தக் கனமும் அவர் அளிக்கும் எந்த மேன்மையும், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு உண்டு. ஆகவே நாம் போராடி யுத்தம் செய்வோமாக. தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்து இயேசுவின் கிருபையில் பலப்பட்டு பந்தையப் பொருளை நோக்கி போராட மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோமாக. நாம் விசுவாசத்தினால் ஜெயங்கொள்ளுவோமாக.

என் சத்துருக்கள் மூவரையும்
போராடி ஜெயிப்பேன்
உலகம் மாம்சம் பிசாசு
ஜெயித்து அவரைப் பற்றுவேன்.

நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்

யூலை 19

“நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்” சங். 41:11

எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில் செத்துக்கிடப்போம். அல்லது குற்றமுள்ள மனட்சாட்சியோடே வாழுவோம். அல்லது அவநம்பிக்கைக்கு இடங்கொடுத்து கெட்டழிவோம். நம்முடைய சத்துருவும் நமதுமேல் ஜெயம் அடைவான். சாத்தான் நம்மைவிட அதிக ஞானமும், வல்லமையும் திறமையும் அனுபவமும் உள்ளவன். நம்முடைய பெலவீனத்திலும், பயத்திலும் அவன் நம்மை மேற்கொள்வான். நம்முடைய உள்ளான பலம் அவனுக்குத் தெரிந்திருப்பதனாலும் நம்மை அவன் வசப்படுத்துவான். நம்மைப் பாவத்திற்கு இழுத்து விழுவதற்கு முயற்சிகள் செய்து, நம்மை அவநம்பிக்கைக்கொள்ள செய்வான். ஆயினும் அவன் மேற்கொள்வதில்லை.

கர்த்தர் நம்மேல் பிரியமாய் இல்லாதிருந்தால் அவன் நிச்சயமாக நம்மை மேற்கொள்வான். இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். பரிசுத்தாவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய பரம பிதாவும் தம்முடைய உண்மையான வாக்கை நிறைவேற்றி சாத்தானை தடுத்து மட்டுப்படுத்தியுள்ளார். போராட்ட வேளையில் அவர் தமது கேடகத்தால் நம்மை மறைத்து யுத்தத்தின் அகோரத்தில் நம்மைப் பாதுகாக்கிறார். நம்முடைய வேலைக்குத் தேவையான பெலனை அளித்து, அவர் கிருபை நமக்குப் போதும் என்று காட்டுகிறார். அநேகர் விழுந்தாலும் நாம் நிற்கிறோம். அநேகர் பின்வாங்கிப்போனாலும் நாம் உறுதியாய் இருக்கிறோம். இந்த இரவு அவருடைய இரக்கத்திற்கு ஞாபகக் குறிகளாய் இருக்கிறோம். நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளையென்று நாம் ஒவ்வொருவரும் சொல்லலாம்.

கர்த்தர் விடுவிப்பார் என்று
அவரை நம்பி இருப்பேன்
அப்போ அவர் பக்தரோடு
என்றும் களித்து நிற்பேன்.

அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்

யூலை 18

“அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்” யோவான் 17:10

பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் நாம் பூரணராய் நீதிமானாக்கப்படுவதனால் மகிமைப்படும். அவருடைய வல்லமை நாம் உலகத்தினின்று பிரிந்து நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுவதனால் மகிமைப்படும். நாம் உயிர்பிக்கப்பட்டு அனுபவிக்கும் எண்ணில்லா நன்மைகளால் அவர் இரக்கமும், நாம் விடுவிக்கப்பட்டு சந்தோஷப்படுவதில் அவர் வார்த்தையும், நாம் அவரோடு ஐக்கியப்பட்டு ஒன்றாவதில் அவருடைய சிந்தையும் மகிமைப்படும்.

நம்முடைய ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிடைக்கும் உத்தரவில் அவருடைய உண்மையும், நாம் தைரியமாய் நம்பிக்கையோடு கிருபாசனத்தண்டை சேருவதில் அவருடைய அன்பும், துன்பத்தில் நமக்கு வேண்டியதைத் தந்து ஆதரிப்பதில் அவருடைய தயையும் மகிமைப்படும். நம்முடைய துக்கங்களிலும் வருத்தங்களிலும் அவருடைய உருக்கமும், நம்முடைய பெலவீனங்களிலும் முரட்டாட்டத்திலும் நம்மை தாங்குகிறதில் மரணத்திலும் நம்முடைய நித்திய இரட்சிப்பிலும் அவருடைய கிருபையும் மகிமைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கிறதெல்லாம் அவரிடத்திலிருந்துதான் வரவேண்டும். அவருடைய சபை அவருடைய மகிமையானதால் அவர் அதை மகிமையுள்ளதாக்குவார். அதை அவர் மாசு திரை ஒன்றுமில்லாமல் மகிமையுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்துவார். இயேசு என்னில் மகிமைப்படுகிறார் என்பது எத்தனை அருமையான சத்தியம்.

என்னில் உம் மகிமை
தங்கிட அருளும்
உமக்காகவே பிழைப்பேன்
உமக்கென்றே சாவேன்.

அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது

யூலை 17

“அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது” சங். 65:3

தேவபிள்ளை யுத்தம் செய்கிறவன். பாவம் அவனில் வாசம் பண்ணி அவனில் கிரியை செய்து சில நேரங்களில் அவனை மேற்கொள்கிறது. அவன் பாவத்திற்கு முற்றும் நீங்கலானவன் அல்ல. ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு எதிராக விழித்திருந்து போர் செய்ய வேண்டியவன். அக்கிரம கிரியைகள் சில சமயங்களில் நமதுமேல் வல்லமை கொள்ளலாம். அப்பொழுது நமது சமாதானம் குறைந்து அவிசுவாசம் பலத்துப்போம். தேவன் மேலுள்ள பாசம் விலகி, ஜெபம் பண்ணமுடியாமல் வாய் அடைப்பட்டுத் துதியின் சத்தம் ஓய்ந்துபோம். அப்போது நமது ஆத்துமா பெலவீனப்பட்டுத் தீட்டாகி நமக்கும், தேவனுக்கும் நடுவே மந்தாரம் உண்டாகி, அவர் முகத்தைப் பார்க்கவும், அவன் அன்பை ருசிக்கவும் கூடாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

நாம் பாவத்திற்கு இணங்கி அது நம்மை மேற்கொள்ளும்போது நமக்குள் பரிசுத்தாவியானவர் நம்மை கடிந்துக்கொள்வார். கலக்கமும் வருத்தமும் தேவ சமுகத்தில் நம்மைப் பிடிக்கும். நாம் நம்மைத் தாழ்த்தி பாவத்தை அறிக்கையிட்டு தேவனண்டைக்குத் திரும்ப அவசியம் ஏற்படும். இப்படிப்பட்ட சம்பவத்தைத் தேவன் நமக்கு நன்மையாக பலிக்கச் செய்தால் நாம் பாவத்தை அதிகமாய்ப் பகைத்து தேவனுக்குமுன் நம்மை அருவருப்போம். அதிக விழிப்பும் ஜெப சிந்தையும் உள்ளவர்களாகுவோம். நம்மைக் குறித்து வைராக்கியம் கொண்டு பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகப் பார்ப்போம். தேவன் நம்மை அப்படிப்பட்ட நிலைமையிலிருந்து விடுவிக்கும்போது நாம் தேவனுடைய நீடிய சாந்தத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பருளும் நேசத்தையும் பெறுவதால் ஸ்தோத்திரித்து அவரை வணங்குவோம். தாழ்மையை அணிந்து தேவனுக்கு முன்பாக பணிந்த சிந்தையோடு நடப்போம்.

என் அக்கிரமம் பெருகி,
என் ஆத்துமா தொய்யுது
என் இச்சை அடக்கும் தேவா
என்னை முற்றும் புதுப்பியும்.

Popular Posts

My Favorites

அவர் மரணத்தைப் பரிகரித்தார்

அக்டோபர் 26 "அவர் மரணத்தைப் பரிகரித்தார்" 2.தீமோ.1:10 நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது...