செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர் பக்கம் 2

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்

செப்டம்பர் 25

தேவனுக்குக் கீழ்ப்படிந்து இருங்கள்” யாக். 4:7

சுபாவத்தின்படி மனிதன் எவருக்கும் கீழ்ப்படிபவன் அல்ல. ஆனால் கீழ்ப்படிதல் இல்லையெனில் மகிழ்ச்சி இருக்காது. நமது சித்தம், தேவ சித்தத்திற்கு இசைந்து அதற்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தால் தான் நமக்கு மகிழ்ச்சியும், சமாதானமும் இருக்கும். கீழ்ப்படிதலில்லாதபோது பரிசுத்தமும் இருக்காது. கீழ்ப்படியாமைக்கு முக்கிய காரணம் அகந்தையும், மேட்டிமையுமே. தேவனுக்குக் கீழ்ப்படிய நான் மனமற்றிருப்பது, அவருடைய அதிகாரத்திற்கு எதிர்த்து, அவருடைய ஞானத்தையும், மகத்துவத்தையும் மறுப்பதாகும். அவருடைய அன்பை மறுத்து அவருடைய வார்த்தையை அசட்டை செய்வதாகும். அவரால் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு அடங்கி இருக்கும்பொழுது நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம். அவருக்குக் கீழ்ப்படியும் பொழுது அவர் தரும் அனைத்தையும் நாம் நன்றியறிதலோடு பெற்றுக்கொள்வோம்.

தேவ அதிகாரம் என்று முத்திரை பெற்றுவருகிற எதற்கும் நாம் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில் நமக்கு இரட்சிப்பில்லை. இந்த நியாயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய பாதத்தில் பணிந்து தொழுது கொள்ள வேண்டும். அவருக்கு நாம் கீழ்ப்படியாவிடில், அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தேவ கிருபையால் இரட்சிக்கப்படுதலுக்கும், அவருடைய வார்த்தையில் வளருவதற்கும் கீழ்படிதலே காரணம். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கட்டும் என்று எல்லாக் காரியங்களையும் அவருக்கு ஒப்படைத்து விடுவதற்கு நம்மில் கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். ஆத்துமாவே, நீ கீழ்ப்படிந்தால் பெலவானாயிருப்பாய். பரிசுத்தவானாய் இருப்பாய். உன் வாழ்க்கையிலும், மரண நேரத்திலும் தைரியசாலியாயிருப்பாய்.

தயாளம், இரக்கம் நிறைந்தவர் கர்த்தர்
தம் மக்களை ஒருபோதும் மறந்திடார்
அவருக்கே நான் என்றும் கீழ்ப்படிந்து
அவர் நாமம் போற்றித் துதிப்பேன்.

ஆரோன் பேசாதிருந்தான்

செப்டம்பர் 29

“ஆரோன் பேசாதிருந்தான்” லேவி. 10:3

ஆரோன் மிகப்பெரிய துன்பத்தில் இருந்தான். அவனுக்கு ஏற்பட்ட சோதனை மிகப்பெரியதே. அந்தச் சோதனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்களே. அவனது இரண்டு குமாரர்களும் மடிந்துவிட்டனர். தங்கள் துணிகரமான பாவத்திற்காகத் திடீர் மரணம் அடைந்தனர். தேவன் அவர்களைக் கொன்று போட்டார். தேவனுடைய வைராக்கியம் கோபம் எப்படிப்பட்டது என்று காட்ட மக்கள் காணும்பொழுதே மரித்துப்போனார்கள். அவர்களுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் நித்திய வாழ்வைக் குறித்து அறியாதிருந்தார்கள். இதனால் தாம் மகிமைப்படுவதாகக் கர்த்தர் கூறினார். ஆரோன் பேசாதிருந்தான். தேவன் செய்தது நீதியோ, இல்லையோ, சரியோ, தவறோ, என்று முறுமுறுத்து அவன் கேள்வி கேட்கவில்லை. அத்தகைய பண்பு நமக்கு வேண்டும். இவை போன்ற காரியங்கள் தேவ சித்தத்துடன்தான் நடக்கிறன. இது அவரை யாவற்றிற்கும் மேலாக நேசிப்பதாலும் தண்டனைக்குத் தான் பாத்திரன்தான் என்று எண்ணுவதாலும் ஏற்படுகிறது.

நண்பரே, இந்தக் காரியம் நம்மோடு பேசி, நமக்கு நேரிடும் பெருந்துன்பங்களில் நம்மை ஆரோனைப் போலிருக்கத் தூண்டுகிறது. நமது முறைப்பாடுகள் எல்லாவற்றிலும், தேவ அன்பு இரக்கம் பற்றி நமக்கு உண்டாகும் ஐயங்களையும் கடிந்து கொள்கிறது. பக்தர்களையும் துன்பங்கள் விடவில்லை என்பதை நமக்கு எடுத்துக்காட்டி நம்மை ஆறுதல்படுத்துகிறது. இவ்வாறு நாம் எச்சரிக்கப்படுவதால் எவ்விதத் துணிகரத்திற்கும், அசட்டைக்கும் நாம் இடங்கொடுக்கக் கூடாது. நமது தேவன் வைராக்கியமுள்ளவர். அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்கிறார். கர்த்தர் நீதியுள்ளவர். அவர் வழிகள் நீதியும் செம்மையுமானவை.

யாது நடந்திடினும் யான்
உமக்கடங்கி யிருப்பேன்
உம் சித்தம் என் பாக்கியம்
எனக் கூறி மகிழ்ந்திடுவேன்.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

செப்டம்பர் 03

“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” ஏசாயா 63:9

கர்த்தருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இருக்கும் ஐக்கியம் நெருங்கினதும் மெய்யானதுமாயிருக்கிறது. பல நேரங்களில் தேவன் தமது ஜனத்தைவிட்டு விலகினதுப்போல் காணப்படுவார். இது அவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தண்டிக்கப்படும் போது அவரும் சேர்ந்து துன்பப்படுகிறார். தேவ ஜனங்கள் துன்பங்களைத் தனிமையாய் அனுபவிப்பதில்லை. தேவன் எப்போதும் அவர்களோடிருந்து தகப்பன் பிள்ளைகளோடு துன்பத்தைச் சகிப்பதுபோல் துன்பத்தைச் சகிக்கிறார். வேதமும் இயேசுவானவர் எல்லாருடைய நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டாரென்று சொல்கிறது. அவர்களுக்கு வருகிற துன்பங்கள் அநேகம். இந்த அநேக துன்பங்கள் இவர்களைக் கொடிய வருத்தத்திற்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவர்களுடைய எல்லா வருத்தங்களிலும் அவர் நெருக்கப்படுகிறார். அவருடைய சமுகத்து தூதர்கள் இவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

அன்பான விசுவாசியே! நீ உன் மனதில் உன் சரீரத்தில் நெருக்கப்படுகிறாயா? அதைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவானவர் அறிக்கை உன்னோடு அனுதாபப்படுகிறார். உது சோதனைகள், பயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் அவைகளைப் பிதாமுன் வைத்து நீ இரக்கம் பெறவும். தகுந்த வேளையில் உதவிக்காக கிருபையைக் கண்டடையவும், உனக்காகப் பரிந்து பேசுகிறார். அருமையான இரட்சகரே நீர் என் சோதனைகளிலும் துன்பங்களிலும் பங்கடைந்து அவைகள் எல்லாவற்றினின்றும் மகிமையாய் என்னை விடுவிப்பீர் என்கிற சிந்தை எப்பொழுதும் என்னைத் தேற்றும்படி செய்யும்.

நம்முடைய ஆசாரியர் நமக்கு இரங்கத்தக்கவர்
நம்மோடென்றும் அவர் பாடுபடுபவர்
காயத்தில் எண்ணெய் ஊற்றி
தேற்றி இரட்சிப்பார்.

பேதுரு தூரத்திலே பின்சென்றான்

செப்டம்பர் 14

“பேதுரு தூரத்திலே பின்சென்றான்.” மத். 26:58

எத்தனை முறைகள் நாம் பேதுருவைப்போலப் பின் வாங்கிப் போயிருக்கிறோம்? நான் அன்பில் குளிர்ந்துபோக மாட்டேன். பற்றுறுதியில் அணைந்து போகமாட்டேன், உம் பாதையைவிட்டுச் சற்றும் விலகேன் என்று பலமுறைகள் தீர்மானம் செய்தோம். வெகு சீக்கிரம் அதை மறந்துவிட்டோம். தேவனை விட்டுப்பின் வாங்கிப்போவதைவிட, தொலைவில் அவருக்குப் பின் நடப்பது நலமே. அன்று பேதுருவுக்கு இருந்த நிலை அவனைத் தொலைவில் பின் தொடரச் செய்தது. இன்று நமக்கு அப்படிப்பட்ட நிலை இல்லையே! விசுவாசம் நம்மை அவருக்கு அண்மையில் கொண்டு சேர்க்கும். ஆனால், அவிசுவாசம் நம்மை அவரை விட்டுப்பிரிக்கிறது. நம்முடைய நன்மைகளில் நஞ்சாக அவிசுவாசம் இருக்கிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாதபடிக்கு நம்மைப் பெய்யராக்குகிறது. நம்முடைய பக்தி வைராக்கியத்தைக் குலைத்து, இயேசுவுக்கு நம்மைத் தூரமாக்கி விடுகிறது. அவருடைய வழிகளை விட்டு நம்மை விலக்கி, நம்மை அந்நியராக்குகிறது.

நாம், நமது இருதயத்தில் விசுவாசத்தை வளர்த்து நம்மைத் தைரியப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது நடையை வேகமாக்கும். ஆண்டவரை நெருங்கி இருக்கச் செய்யும். நமது இருதயத்தைப் பெலப்படுத்தி, நமது இரட்சகரில் மகிழச்செய்யும். எனது நண்பா, நீ கர்த்தருடன் செல்பவனா? அல்லது பேதுருவைப்போல தூரத்தில் செல்பவனா? எச்சரிக்கையுடனிரு. தூரத்தில் பின்செல்லாமல், அருகிலேயே இரு. அவருடனே நடந்து அவரையே நினைத்து உன் பாரத்தை அவர்மேல் வைத்து, அவரையே சார்ந்திரு. தாயின் மார்பில் ஒட்டியிருக்கும் குழந்தையைப்போலவே அவரில் ஒட்டிக்கொண்டிரு.

இயேசுவோடு ஐக்கியப்பட்டு
அவர் குரலைக் கேட்டிருப்பவன்
தன்னை முற்றிலும் துறந்து
அவரிலேயே ஒளிந்திருப்பான்.

என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்

செப்டம்பர் 09

“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7

வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.

இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.

உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

செப்டம்பர் 18

“அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்” கலா. 5:13

தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எக்காரியமானாலும் அதன் வேர் அன்புதான். அன்பு விசுவாசத்திலிருந்து ஆரம்பமாவதால், எல்லா நற்கிரியைகளையும், பிறருக்கு நாம் செய்கிற எச்செயலையும் அன்பில்லாமல் நாம் செய்தால் அதில் பலன் இருக்காது. கிறிஸ்தவத்தில் அதிமுக்கியமான காரியம் அன்புதான். வரங்கள் மேன்மைகள், புகழ், தியாகம் இவை யாவுமே இருக்கலாம். ஆனால் அன்பு இல்லாவிடில் வெறும் கைத்தாளம்போலவே இருப்போம். சப்தமிடுகிற வெண்கலம் போலத்தானிருப்போம். மனித இயற்கை பிறர்மேல் அதிகாரம் செலுத்தவே விரும்புகிறது. உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எத்தனையோ பேருக்கு நன்மை செய்திருக்கக்கூடும். பிறருக்கு உதவி செய்ய உங்களுக்கு மனம் வந்ததா? அவர்கள் உயர்ந்து விடுவார்களோ என்று நீங்கள் நினைக்கவில்லையா? எங்கே உங்கள் அன்பு? அன்பு காட்டாத நீங்கள் கிறிஸ்தவர்களா?

அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது. இதுதான் நற்செய்தியின் சிறப்பு. தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பு அவரைப் போன்றது. அன்பு நோயாளிகளை குணமாக்கும். துயரத்தில் ஆறுதல் தரும். ஆடையற்றோருக்கு ஆடையளிக்கும். பசித்தவர்களைப் போஷிக்கும். வறியவர்களை வசதியுள்ளவர்களாக்கும். வனாந்தரமான இவ்வுலகம் அன்பினால் செழிக்கும். அன்பினால் ஏவப்பட்டுக் கைமாறு கருதாது நன்மைகளைக் செய்யுங்கள். தூய்மையான மனதுடன் ஓருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? அன்பில் வளருகிறீர்களா? அல்லது பெருமை, பொறாமையில் வளருகிறீர்களா? தூய அன்போடு அன்புகூருங்கள். கிறிஸ்துவின் மக்களிடம் அன்புகூர்ந்து, அவர் தம்மைப் பகைத்தவர்களிடம் அன்புகூர்ந்ததுபோல் நடவுங்கள். அப்பொழுது பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

ஓர் இடம் போய்ச்சேருவோர்
ஒரே நம்பிக்கையுள்ளவர்கள்
அன்பின் கட்டால் ஒருமித்து,
மகிழ்ந்து வாழ்வார் சுகித்து.

உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்

செப்டெம்பர் 24

“உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்” சங்.86:4

தேவ ஊழியனாக இருப்பது, உலகின் ஒரு பெரிய நாட்டின் ஜனாதிபதியாயிருப்பதைக் காட்டிலும் மிகப் பெருமையான நிலையாகும். தேவனுடைய உண்மையான ஊழியர்கள் அனைவரும் அவருடைய மக்களே. அவருடைய சித்தத்தின்படி தமது ஊழியத்தின் மக்களாகிய அவர்களை அவர் இன்னும் அதிகமாக நேசிக்கிறார். உழைப்பவர்கள், அவருக்கு உழைக்கத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்கள் எஜமானாகிய ஆண்டவரையும், தங்கள் ஊழியத்தையும் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஆனால், கர்த்தருக்காகவே எப்பொழுதும் ஊழியம் செய்தாலும் எப்பொழுதும் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில்லை. தங்களுடைய உயர்வான நிலை, மேலான உறவு, மகிமையான வெளிப்பாடுகள், கிருபையாகப் பெற்ற சிலாக்கியங்கள் ஆகியவற்றை மறந்துவிடுகிறார்கள். சில சோதனை வேளைகளில் தாங்கள் தேவ ஊழியர் என்பதையும் மறந்துவிடுகின்றனர். அச்சமயங்களில் தேவனுடைய செயல் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. மனசோர்வு அடைகிறார்கள். தேவன் தங்களைக் கடிந்து கொள்கிறார் என்றெண்னி வேதனையடைகிறார்கள்.

இவைகளெல்லாம் நம்மை மனமடிவாக்குகின்றவை. ஆகவேதான் தாவீதரசன் உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் என்றான். உன் வேதனைகளை நீயும் அவரிடம் கூறு. உன் மனநோவை அவர் அறியச்சொல். கதிரவனொளியைப்போல அவர் தமது கிருபையை உன்மேல் பிரகாசிக்க் செய்வார். உனக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளுவார். சோர்வுற்ற நேரத்தில் ஊக்கமும், துயரத்தில் ஆறுதலும் ஈவார். மனம் கலங்காதே. கர்த்தர் உன் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்.

உம்மில் நான் களி கூர்ந்ததால்
என் பயங்கள் நீங்கிடும்
என் துன்ப நேரத்திலும்
வீழ்ந்திடுவேன் உம்பாதத்தில்.

எனக்கு எதிரே உத்தரவு சொல்

செப்டம்பர் 08

“எனக்கு எதிரே உத்தரவு சொல்” மீகா 6:3

நம்முடைய நடத்தை பல நேரங்களில் மாறக்கூடியதாய் இருக்கிறது. தேவனைவிட பெரியதாக உலகத்திலும், உலகத்தில் உள்ளவற்றிலும் அன்பு கூர்ந்தால் தேவன் அங்கு அசட்டை செய்யப்படுகிறார். நாம் அவரைக் குறைவுபடுத்துகிறோம். அவரை நேசிக்காமல் இருக்கும்போது, அவருக்கு மிகுந்த விசனமளிக்கிறோம். இதைக் கண்டு, அவர் மனம் நொந்து, என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? எதினால் உன்னைத் துக்கப்படுத்தினேன் எனக்கு எதிரே பதில் சொல் என்கிறார்.
நீ தனி ஜெபத்தை அசட்டை செய்கிறாயா? கிருபையின் வசதிகளைக் குறித்து கவலையற்றிருக்கிறாயா? வேதாகமத்தை வாசியாமல் அசட்டையாயிருந்து அதை ஒதுக்கி வைத்து விட்டாயா? தேவனே நேசிக்க வேண்டிய நீ உலகத்தின்மேல் அன்பு செலுத்துகிறாயா? ஏன் அவரை விட்டுப் பின்வாங்கினாய்? இதனாலேயே அவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்.

மேலும் அவர், என்னில் நீ கண்ட குறை யாது? என் அன்பில் குறை கண்டாயா? என் வாக்குகளை நான் நிறைவேற்றவில்லையா? தேவனுக்குரிய மகத்துவமான காரியங்களை நான் செய்யவில்லையா? ஏன் என்னை அசட்டை செய்தாய்? என்னைவிட உலகத்தையும், சத்துருவையும் ஏன் அதிகம் நேசித்தாய்? எனக்கு எதிரே உத்தரவு சொல். என்று கேட்கிறார். விசுவாசியே உன்னிடம் தவறுகள் இல்லையா? உன் ஆண்டவரை நீ துயரப்படுத்தவில்லையா? உன் பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி, ஆண்டவரின் அன்பினுள் வந்து சேர். அவருடைய சமுகத்திற்குள் வா. அவருடைய அன்புக்குள் உன்னை மறைத்துக்கொள்.

நான் நிர்பந்தன், தேவா
என்னைத் தள்ளாதிரும்.
உமது சமுகத்திலேயேதான்
நான் என்றும் மகிழட்டும்.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

Popular Posts

My Favorites

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07 "அவனைக் கனப்படுத்துவேன்"  சங். 91:15 என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து...