Home Blog Page 17

நீதியின் சூரியன்

டிசம்பர் 23

நீதியின் சூரியன் (மல்.4:2)

நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.

வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.

மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22

“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15

இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.

அவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.

கிறிஸ்துவே என் முன்மாதிரி,
கிறிஸ்துவின் சாயல் ஏற்பேன்,
அவரது அடிகளைப் பின்பற்றி,
அவரைப்போலாக முயற்சிப்பேன்.

உனக்கு விசுவாசம் இருந்தால்

டிசம்பர் 21

„உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22

விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம் இல்லைத்தான். இப்போது உனக்கு விசுவாசம் இருக்கிறதென்றால், அது தேவன் கொடுத்தது என்பதை மறக்காதே. உன்னில் அவிசுவாசம் இருக்குமானால், அதனோடு நீ போர் செய்து, ஜெபித்து, விசுவாசத்தைப் பெற்றுக்கொள். „கிறிஸ்துவின்மீது உனக்கு விசுவாசம் உண்டா? அவர் சொல்வது, செய்தனைத்தும் சரியானவைகளே என்று விசுவாசிக்கிறாயா? அவருடைய வார்த்தைகள் உண்மை. அவர் செய்த தியாகம் இவைகளின்மூலமாக, தமது கிருபையினால் உனக்கு நித்தியமான இரட்சிப்பைத் தந்தருளினார் என்று மனப்பூர்வமாக விசுவாசிக்கிறாயா? அவருடைய வேதத்தை முழுவதும் நம்புகிறாயா? அவர் செய்த அற்புதங்களை ஐயங்கொள்ளாமல் விசுவாசிக்கிறாயா? என்பதையெல்லாம் சோதனை செய்.

தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நீ, உன் ஆத்துமா அவர் கைகளில் ஒப்புக்கொடுக்கப் போதுமான விசுவாசம் உன்னில் உண்டா? அவருடைய ஊழியங்களை உனக்குச் சொந்தமாக்கி, நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று சொல்லும் தைரியம் உனக்கு உண்டா? உன்னுடைய பிதாவாகிய தேவனைமட்டும் விசுவாசிக்கிறாயா? உன்னுடைய தேவைகளைச் சந்தித்து, உன்னைப் போஷித்து, உன்னை வழிநடத்தும் கர்த்தர் உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவார் என்கிற விசுவாசம் உனக்கு உண்டா? உன் எதிர்காலத்தை அவருடைய கரத்தில் வைத்து நம்பிக்கையோடு காத்திருக்கிறாயா? அப்படியானால், மகிமையெல்லாம் தேவனுக்கே. இல்லையானால், தேவனை விசுவாசி, அவரையே நம்பு. தேவவார்த்தையினால் உன் விசுவாசத்தைப் பெலப்படுத்திக்கொள். கவனமாயிருந்து அவிசுவாசத்திற்கு இடம் கொடாதிரு.

விசுவாச இருதயத்தை
வன்மையுள்ளதாய்க் காத்திடும்
உமது சுவிசேஷத்தைப் பற்றியே
உறுதியாய் நிற்க உதவி செய்யும்.

எல்லாம் புதிதாயின

டிசம்பர் 20

“எல்லாம் புதிதாயின” 2.கொரி.5:17

புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை அவர்கள் புசிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் புதிதானவை. பரிசுத்தமான நடக்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். புது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பினால் அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். புதிய நோக்கங்களை அவர்கள் பெறுகிறார்கள். தேவமகிமையைக் கண்டு அதில் வளருகிறார்கள். புதிய புதியதான நண்பர்களோடு ஐக்கியம் கொள்ளுகிறார்கள். காரணம் என்வென்றால், எல்லாம் புதிதாயின“.

அப்படிப்பட்டவர்களுக்கு தலையாயிருப்பவர் கிறிஸ்து. இரண்டாம் ஆதாம் அவரே. அவர்தாமே இவர்களைத் தேவனோடு ஒப்புரவாக்கிப் புதிய பரதீசிக்குள் அழைத்துச் செல்கிறார். இவர்கள் எல்லாரும் புது உடன்படிக்கையின்கீழ் இருக்கிறார்கள். இது கிருபையின் உடன்படிக்கை கிரியையின் உடன்படிக்கையல்ல. தேவனே இவர்களுக்குப் பிதா, தேவதூதர்கள் பணிவிடையாள்கள். கிறிஸ்து இவர்களுக்கு மூத்த சகோதரர். தூய ஆவியானவர் இவர்களுக்குத் தேற்றரவாளர். தேவனுடன் இவர்களுக்கு உண்டாயிருக்கும் உறவு புதியது. இவர்கள் உலகத்துக்குச் சாட்சிகளாய் இருப்பவர்கள். கிறிஸ்துவின் ஊழியர்கள். இவர்கள் ஆவியானவர் தங்கும் ஆலயம். இவர்களுடைய ஆசைகள், நம்பிக்கை, நோக்கம் எல்லாம் புதியவைகள். புதிய வானம் புதிய பூமியின் சிருஷ்டிகள் இவர்கள். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின.

நான் உம்முடையவன், மற்றும்
நான் உம்மால் புதிதாக்கப்பட்டேன்.
புது வானம் பூமியின் புது சிருஷ்டி
புதுப் பரதீசின் புதுக் குடிமகனே.

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19

“கிறிஸ்துவினுடைய அடிமை” 1.கொரி.7:22

கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டதால் கிறிஸ்துவின் அடிமைதான். அவன் தனக்கு இருக்கும் தாலந்துகளை ஆண்டவருக்கென்று பயன்படுத்தவேண்டும்.

இந்த இரவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்வென்றால், „நான் கிறிஸ்துவினுடைய அடிமையா? அவர் எனக்கு எஜமானா? எப்பொழுதும் நான் அவரை அவ்வாறு ஏற்றிருக்கிறேனா? என்னைத் தேவன் பார்க்கிறார் என்று நினைத்து, தெயவ்பயத்துடன் நடக்கிறேனா? நான் செய்கிறது எதுவானாலும், இது என் எஜமானுடைய சித்தமா? அவருக்குப் பிரியமானதா? நான் அவருடைய பணியாள். அவருடைய கட்டளைகளுக்கேற்ப யாவற்றையும் செய்கிறேனா? என்பதே.

பரிசுத்த ஆவியானவர் தினமும் „நீ கிறிஸ்துவின் அடிமை. அவர் உனக்கு ஞானமும் புத்தியும் தயாள குணமுமுள்ள எஜமான்“ என்று சொல்லுகிறார். இதை நீ கேட்கிறாயா? அவருக்குப் பிரியமாக நடப்பதே எனது வேலை. உலகம் எனக்கு வேண்டாம். சாத்தானுக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை“ என்று நீ சொல்லக்கூடுமா? அவருடைய அடிமையாக அவருடைய வார்த்தையைக்கேள். அவருடைய கிருபையைத் தேடு.

உம்மைக் கர்த்தர் என்பேன்,
உள்ளத்தாலும் நேசிப்பேன்.
உம் சித்தமே செய்வேன்
உம்மிலேயே இளைப்பாறுவேன்.

பரிசுத்த ஜனம்

டிசம்பர் 18

பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12

கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது ஜனத்தைத் தெரிந்துகொண்டபடியால், அவர்கள் பாவம் செய்வதைவிட்டுவிடுகிறார்கள். இந்த ஜனங்கள் பரிசுத்தமாகவேண்டுமென்றே இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஓளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்குபெற அவர்கள் தகுதியாகும்படி தேவஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணுகிறார். பரிசுத்தம்தான் அவர்களுடைய ஜீவன். அவர்களுடைய இன்பம் அவர்கள் பரிசுத்தத்தின்மீது வாஞ்சை கொண்டு நாடித் தேடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரதத்ததினால் மீட்கப்பட்டு, அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவராலே நீதிமான்களாக்கப்படுகின்றனர். நீதிமான்களாக்கப்படுவதுதான் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு அடிப்படை. ஒருவன் நீதிமானாக்கப்பட்டால், அவன் பரிசுத்தமாக்கப்படுவான். பரிசுத்தமாக்கப்படுவதால், தான் நீதிமானாக்கப்பட்டதை நிரூபிப்பான். பாவம் வெறுக்கப்பட்டு, அது கீழ்ப்படுத்தப்படாவிட்டால், அது மன்னிக்கப்படுவதில்லை. பாவம் செய்கிற எவனும் நீதிமானல்ல, பரிசுத்தவானுமல்ல. இயேசுவைத் தன் சொந்தம் என்றோ, தான் பரிசுத்தஆவியைப் பெற்றவன் என்றோ சொல்லுவது தவறு. பரிசுத்தவான்கள் யாவரும் பாவத்திற்காகத் துக்கப்பட்டு, அதனோடு போராடி வெல்லுகிறார்கள். தங்கள் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாக நிற்கிறார்கள். இவர்கள்தான் மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள். உனது நிலை என்ன? பரிசுத்தர் கூட்டத்தில் நீ இருக்கிறாயா ?

கர்த்தாதி கர்த்தர் பரிசுத்தர்
கிறிஸ்துவும் பரிசுத்தர்
தூய ஆவியானவரும் பரிசுத்தர்
அவர் பரிசுத்தராதலால் நாமும் பரிசுத்தராவோம்

அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக

டிசம்பர் 17

“அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக” (மத்.1:21)

இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவர் யாவரையும் இரட்சிக்க வல்லவர். எல்லாரையும் இரட்சிக்க மனதுள்ளவர். இயேசுவின் மூலமாக தேவனிடம் வரும் யாவரையும் அவர் இரட்சிக்கிறார். எல்லாப் பாவங்களையும் நீக்கி அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்படியாய் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். தம்முடைய மக்கள் ஒருக்காலும் கெட்டுபோகாதபடிக்கு அவர்களை மீட்டுக் கொள்கிறார். தேவனுடைய வல்லமைக்கு எல்லாம் கூடும் என்பதால் எல்லாரையும் இரட்சிக்கிறார். தேவ ஆளுகைக்கு குறை ஏற்படாவண்ணம் அவர் அப்படிச் செய்கிறார்.

தேவன் தம் இரட்சிப்பின் செய்கையில் பட்சபாதம் காட்டுவதில்லை. பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படியாமல், வழி தப்பித்திரிந்த தமது ஜனங்கள் எல்லாரையுமே அவர் இரட்சிக்கிறார். பூமியில் தேவன் தமது மகிமைக்காக, தமது அன்பினால், இரட்சிக்கும் பணியைச் செய்கிறார். ஆகவே, ஆத்துமாவே இயேசு இரட்சகர் என்று அழை. இயேசு சகலரையும் இரட்சிக்கக்கூடியவர் என்று கூறு. இரட்சிப்பதே அவருடைய முக்கிய வேலை, இதுவே அவருக்கு மகிழ்ச்சி. அவர் ஒருவரே இரட்சகர். அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர். நரகத்தின் எதிர்ப்பையும் அவர் பொருட்படுத்தாது இரட்சிக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார். அப்பணியில் அவர் தொடர்ந்து செயல்ப்படுகிறார். நமக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் அளிக்க இப்போது தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

அவரை நம்பி நீ இருந்தால்,
உன் பாவம் நீங்கிப்போகும்.
அதுவே இகத்தில் மோட்சம்,
அதுவே இன்ப வாழ்வாம்.

தன் காலத்தை மனுஷன் அறியான்

டிசம்பர் 16

“தன் காலத்தை மனுஷன் அறியான்” (பிர.9:12)

வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது எதிர்காலம் நமக்கு மறைக்கப்பட்டுள்ளதால், நாம் அது குறித்து யாதும் செய்ய முடியாது. சாத்தான் நம்மிடம் வரும் நேரத்தையும், நமக்குச் சோதனைகள் வரும் காலத்தையும் நாம் அறியோம். நமது வீழ்ச்சியும், எதிரிகளின் வெற்றியும், எதிரியின் திட்டமும் நமக்குத் தெரியாதவை. நமது மரண நாளும் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான். வெகு அண்மையிலேயே நமது மரணம் இருப்பினும் நாம் அதை அறிய மாட்டோம்.

இதனால் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். அவருடைய காரியங்களை அறிய நாம் இன்னும் தாழ்மையைக் கற்கவேண்டும். அவரையே முழு மனதோடு நேசிக்க வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், எதிர்த்து நிற்கக் கூடாது. நாமிருக்கும் இந்நிலை நமக்கு எச்சரிப்பையும், பயத்தையும் கொடுக்கிறபடியால், நாம் மனமேட்டிமை அடையாமல் அவருக்குப் பயந்து இருக்கவேண்டும். அவருடைய பணிகளைக் கருத்தாகச் செய்ய வேண்டும். நமது வாழ்க்கையில் அவரது நோக்கங்கள் நிறைவேறுமாறு ஜெபிக்கவேண்டும். தேவனுடைய திட்டத்தை நாம் அறிந்துகொள்ள நாம் துதிகளோடும், ஜெபங்களேயாடும் எப்போதும் கருத்தாயிருக்க வேண்டும். பயம், கவலை, வெறுப்பு, ஆகிய பெலவீனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நம் கால்கள் சாத்தானின் கண்களில் அகப்பட்டிருந்தாலும், சீக்கிரம் அவர் வந்து விடுவிப்பார். நம்மை நித்திய காலத்திற்குமாகத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, சீக்கிரம் இரண்டாம் முறை வரப்போகிறார். அதுமட்டும் வழித்திருந்து ஜெபம் செய்வோம்.

எங்கள் நாமம் உமது கரங்களில்
எங்கள் நாட்களை நாங்கள்
அறியோமாதலால் எங்கள் நாட்களை
அறியும் அறிவைத் தாரும், கர்த்தாவே.

நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்

டிசம்பர் 15

“நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்” (எரேமி.3:19)

கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்பார். எப்படிப்பட்டவராயினும் பிதாவை நேசிக்க முடியும். எந்த இனத்தவராயினும், எப்பேர்ப்பட்ட பாவியாயினும் பிதா ஏற்றுக்கொள்ளுவார். அவர்களின்மேல் தேவன் தயவைக் காட்டுகிறார். அவர் பொறுமையாய் இருக்கிறார். அவர் நமக்குத் தம்மிடம் சேர்த்துக் கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கிறார். அதனால் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

தேவன் சர்வ வல்லவராயிருந்து பெலவீனராகிய நாமெல்லாம் அவரைப் பிதாவே என்று அழைக்க வேண்டுமென்று விரும்புகிறார். இது தேவன் நம்மேல் வைத்திருக்கும் பாசத்தைக் குறிக்கிறது. ஆகவே, நம் தகப்பனாக அவரை நினைத்து, அவரை நோக்கி ஜெபிப்போமாக. தகப்பனுக்குப் பணி செய்வதுபோல அவருக்கு உழைப்போமாக. தகப்பனிடம் நன்மையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பபோல அவரையே நாம் எதிர்பார்திருப்போம். நமது நம்பிக்கை முழுவதுமாக அவர்மேலேயே இருக்கட்டும் நாம் அவரையே நேசிப்போம். நம்மைப் புத்திரராக அவர் எற்றுக்கொண்டதை எண்ணி அவரைப் போற்றுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று சாட்சி கூறுவதற்காக, அவர் நமக்கு அப்பா, பிதாவே என்று அவரை அழைக்கக்கூடிய உறவையும் உரிமையையும் தந்திருக்கிறார். அவருடைய உறவில்லாமல், நாம் அவருடைய பிள்ளைகளாக முடியாது. பிரியமானவனே, தேவனைப்பற்றி இவ்வெண்ணத்திற்காக மகிழ்வோம். அவரைப் பிதாவே என்றழைத்துப் போற்றுவோம். என்றும் இவ்வுரிமைக்குப் பாத்திரராயிருக்கப் பாடுபடுவோம்.

அப்பா, பிதாவே, என்று
உம்மை அழைக்கும்பேறு
உம்மாலே எங்கட்குக் கிடைத்ததால்
உம்மைப் போற்றுகிறோம், பிதாவே.

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.

Popular Posts

My Favorites