Home Blog Page 18

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02

“தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்” அப். 27:25

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.

அவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார் என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்க் கூடியவர்களாயிருக்க வேண்டும்.

அன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா? நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.

எந்நிலையிலும் தவறாது
அன்பர் சித்தத்தையே பிடி
கண்டல்ல, காணாமல்
விசுவாசிப்பதே பாக்கியம்

ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை

டிசம்பர் 01

“ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை”  எபி. 4:16

தேவனின் கிருபைதான் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நமக்கு நன்மையும் செம்மையுமானவைகளையெல்லாம் தருகிறது. ஓவ்வொரு நாளும் நமக்குத் தேவ கிருபை தேவை. ஆனாலும் சில நேரங்களில் அது அதிகமாக தேவைப்படுகிறது. நம்மைப் பெருமையிலிருந்து துணிகரமான பாவத்திலிருந்தும் தடுத்துக் கொள்ள நமக்கு தேவனுடைய கிருபை தேவையாயிருக்கிறது. நாம் முறுமுறுத்து நமது ஆன்மீக வாழ்வில் பின்வாங்கிப் போகாமலிருக்க தேவ கிருபை நமக்குத் தேவை. சோதனைகளாகிய கண்ணிகளுக்குத் தப்புவதற்கும், மகிமையுடன் நாம் மரிப்பதற்கும் தேவ கிருபை நமக்கு வேண்டும். தேவன் எவ்விதத்திலும் கிருபை செய்வார். தகுதியற்ற நமக்குக் கிடைக்கும் அவருடைய உதவி தேவ கிருபையால்தான் கிடைக்கிறது. நமது ஜெபங்களின்மூலமாக நாம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே, நாம் இரக்கம் பெறவும், ஏற்ற நேரத்தில் சகாயம் பெறவும் கிருபையைத் தேட வேண்டும். நமது சுயபெலத்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது. நமது சொந்த ஞானமும் பயனற்றது. எல்லாவற்றிற்கும் தேவ கிருபைதான் அவசியம் என்று உணர்ந்து எப்பொழுதும் அதைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தேவ கிருபையில்லாமல் நாம் வாழ முடியாது. நமது வாழ்நாள் முழுவதும் நாம் அதை வாஞ்சையோடு தேட வேண்டும். இதை நாமும் இச்சிந்தையுடன் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நமக்குத் தந்தருளுவார். நம்மைக் காப்பாற்றி, வாழ வைத்து, நோய் நொடியிலிருந்து மீட்டு, பெலன், ஜீவன் ஈந்து நம்மை நடத்தி வருவது தேவ கிருபைதான். ஆண்டவரே, என்னை ஜெப ஜெயவீரனாக்க உமது கிருபையை எனக்குத் தாரும்.

தேவ கிருபை, ஆசீர்வாதம்
தினமும் எங்களில் தங்கிட
தேவனே அருளும் உம் ஈவை
தினமும் எங்களைக் காத்திட.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை

நவம்பர் 30

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி. 18:12

தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றிப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக நம்மை உயர்த்துவதற்கும் நாம் தாழ்மையை அனுபவிக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்குப் பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களைத் தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாயிருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.

தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப்போல வேட்டையாடப்பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னைப் பாவியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப்பேலா ஒளி வீசுவார்கள். பிரியமானவனே, நீ தாழ்ந்திருக்கிறாயென்று அஞ்சாதே. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்திருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவாய். எவ்வளவாய் துக்கிக்கிறாயோ அவ்வளவாக மகிழ்ச்சியடையலாம். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை இன்றுமென்றும்
நமக்குள்ளதே.

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்

நவம்பர் 28

“அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” யோபு 13:15

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பதைத்தவிர நாம் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. இவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பதே நலமாகும். நம்பியிருப்பதையன்றி நாம் வேறு ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் என் சொத்துக்களை என்னைவிட்டு அகற்றி, என் சுகத்தை நோயாகமாற்றி, என் நண்பர்களை எனக்கு பகைஞராக்கிக் கர்த்தர் தமது முகத்தை எனக்கு மறைத்துக் கொண்டால், நான் என்ன செய்வது? ஆம் அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும். இவைகள் போதாதன்றி பட்டயம் கரத்திற்கொண்டு அவர் என்னைக் கொல்லு முயற்சித்தால் என்ன செய்வது? அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும்

உனக்கு அவருடைய வாக்குகள் இருக்கிறன. அவ்வாக்குகளை அவர் மாற்றார். நிறைவேற்றாது போகார். அவர் உண்மையுள்ளவர். அன்புள்ளவர். அழுகிற குழந்தையைத் தாய் அணைப்பதுபோல், உன்னை அவர் அணைத்துக் கொள்வார். அவருடைய சிம்மாசனத்தின்முன் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி கேட்கும்போது, அவர் தமது வாக்குகளை நிறைவேற்றியே தீருவார். அவரை நம்பியிரு. அவர் உன் விசுவாசத்தை சோதிக்கிறார். இனி அவர் உனக்குத் தரவிருக்கும் பாக்கியங்களை எண்ணி மகிழ்ந்திரு. அவர் அனுப்பிய சோதனைக்காக நீ ஒரு நாள் அவரைத் துதிப்பாய். அவர் உன்னை சோதித்தபின் நீ பொன்னாக விளங்குவாய். எப்பொழுதும் கர்த்தரையே நம்பியிரு. என்ன நேரிட்டாலும் அவர்மீது கொண்ட நம்பிக்கையை விடாதே.

தேவனே, உம் கரம் என்னை
எவ்வழி நடத்தினாலும் நலமே
உம் அன்பே எனை நடத்துவதால்
உம்மை நம்பி நிற்பேன்.

என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

நவம்பர் 27

“என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” சங். 51:7

தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும் இட்டான். ஆனாலும், தேவனுடைய மன்னிக்கும் தன்மை மிகவும் பெரிதாகையால், தன் பாவக்கறை முற்றிலும் நீங்கிவிடுமென்று நம்பினான். கர்த்தர் தன்னைத் தூய்மையாக்கினால், முழுத்தூய்மை  அடைவான் என்றும், பாவத்தின் கறை முற்றிலும் நீங்கிப்போகும் என்றும், தூதனைப்போல் தூய்மை அடைவான் என்றும் அவன் நம்பியிருந்தான். அதேபோல், அவருடைய மன்னிப்புக்கும் ஆளானான். அந்த நொடியிலிருந்தே அவன் தேவ கிருபையை அனுபவித்தான்.

அன்பானவரே, உமது பாவமும் கொடியதாக, கணக்கிலடங்காப் பெரியதாயிருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் அதை அறவே நீங்கக் கழுவிவிடும். உன் தேவன் உன்னைக் கழுவினால் உன்னில் எந்தப் பாவக்கறையும் தங்காது. உனக்கு முன்பு இப்பூவுலகில் பாவிகளாயிருந்து, இப்பொழுது பரலோக வாசிகளாயிருப்பவர்களைக் குறித்து, வேத வசனம், இப்பொழுது அவர்கள் குற்றமற்றவர்களாக தேவ ஆசனம்முன் நிற்கிறார்கள் என்று கூறுகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கிருபை நிறைந்த தமது சமுகத்தில் மிகுந்த சந்தோஷத்தோடே குற்றமற்றவர்களாக உம்மை நிறுத்தக்கூடியவர் கிறிஸ்து என்றும் கூறுகிறது. இரட்சகருடைய இரத்தத்தின் பெருமையைக் கவனியும். அதனால் வரும் நன்மைகளை நோக்குங்கள். அது சகல பாவங்களையும் கழுவி நீக்கிவிடும். விலைமதிப்பற்ற அந்த இரத்தம், மனிதருடைய பாவங்களுக்காக பிராயச்சித்தமாக சிந்தப்பட்ட தேவ இரத்தம். அது உம்மை உம் பாவங்களறக் கழுவ வேண்டுமெனக் கேள்.

பாவக் கறையைப் போக்கும்
குருதி ஊற்றுப் பாயுது கல்வாரியில்
அதென்னைத் தூய்மையாக்கும்
கறை நீங்கித் தூய்மையாவேன் நானும்.

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

நவம்பர் 26

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து” எரேமி. 48:11

தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது இரட்சகராகிய தேவனை நாம் மறந்து நமது பாதுகாப்பான கன்மலையை அற்பமாக எண்ணுவோம். தேவனை மறந்து விடுவோம். நம்மைப்பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருப்போம். சோம்பேறிகளாகி விடுவோம். நமது ஜெபங்கள் உயிரற்றுப்போம். பரம காரியங்களில் நாம் சலிப்படைந்து விடுவோம். ஆண்டவருக்கடுத்தவைகளை அசட்டை செய்வோம். அவரோடு நமக்கிருந்த ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. ஆவிக்குரிய காரியங்களைப்பற்றிய உரையாடல்கள் இல்லை. நாம் உயிரற்றுப்போகிறோம். நாம் உத்தம கிறிஸ்தவர்களானால், இந்நிலையை நாம் அடையும்பொழுது துன்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.

துன்பங்கள் நமக்கு எவ்விதத்திலும் வரும். கழுகு தன் கூட்டைக் கலைப்பதுபோல நாமும் துன்பங்களால் கலங்கடிக்கப்படுவோம். கண்ணீரோடும் ஜெபத்தோடும் நாம் அவரண்டை வரும்வரை ஒரு சோதனைக்குப்பின் மற்றொன்று, ஒரு துக்கத்தையடுத்துப் பிறிதொன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆண்டவரைப் பின்பற்றாத மோவாப் வண்டல்களின்மேல் அசையாமல் தங்கியிருக்கலாம். ஆனால், தேவ மக்களாகிய இஸ்ரவேலர் அவ்வாறிருக்கலாகாது. இத்தகைய நிலையை நாம் அடையாதபடி எச்சரிக்கையாயிருப்போம். கவனமாக கர்த்தருக்கென்று உழைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் இது. உறங்காமல் ஆண்டவருக்காக உழைத்திடுவோம்.

பாவத்தால் சோர்வடையாமல்
பாவியின் நேசா, எனைக் காரும்,
காலமும் கர்த்தருக்காயுழைத்து,
காலமும் வாழும் பேறடைவோம்.

எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்

நவம்பர் 25

“எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்” யோபு 7: 16

ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வடைந்து, நாம் மரணத்தை விரும்புகிறோம். துன்பப்படுபவர்கள்தான் ஜீவனை வெறுத்து உயிர் வாழ விரும்பவில்லை. என்பர். நாமும் இவ்வாறு கூறியிருக்கிறோம். நாம் உயிரோடிருக்குமளவும் பாவம் செய்யத் தூண்டப்படுவோம். அதனால் வருத்தம் அடைவோம்.

தன் சொந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் அந்நியனாகப் குடியிருக்க யார்த்தான் விரும்புவார்? நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுதான். இப்பூமி நமது நிரந்தர உறைவிடமில்லை. நெடுநாள்களும் நாம் வாழப்போவதில்லை. இவ்வுலகில் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்று கவலை கொள்ளாமல் பயனுள்ளவர்களாக, மகிழ்ச்சியுடள் நமது காலங்களைச் செலவிடுவோமாக. ஆத்துமாக்களுடைய நன்மைக்கென்று, சபையின் வளர்ச்சிக்கென்று, கிறிஸ்து நாதரின் மகிமைக்கென்று, நாம் பாவத்தை வெறுத்து சாத்தானை எதிர்த்து நமது வாழ்க்கையை நடத்துவோம். நித்திய ஜீவன் நமக்காகக் காத்திருக்கிறது. அப்படி நாம் வாழ்ந்தால் வாழ்க்கையின் மன நிறைவடைவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம். கிறிஸ்துவின் மேல் சார்ந்து அவருக்காக, கூடியமட்டும் அவரைப்போல வாழ்வோம். அவருடைய மகிமையில் வளர்ந்து, அவருடைய பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள அவரோடு சஞ்சரிப்போம்.

பாவம் செய்தே வாழ்ந்திடேன்
பாவம் விட்டுப் பரிசுத்தமாக வாழ
பரிசுத்தரே உம்திரு தயவால்
பாவியேன் முயல்வேன் என்றும்.

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24

“கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” ரோமர் 5:6

பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும் அவர் மரித்தார். இவ்வாறானவர்களுக்காக மரிப்பதுமான் மிகப் பெரிய தயவு. நல்லவர்களுக்காகவும், பக்திமான்களுக்காகவும் மரித்திருப்பாரானால், இப்பாவிகளாகிய நமக்காக மரிக்கவில்லையென்று நாம் சொல்லி விடலாம். ஆனால் இயேசுவோ அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் இப்படிப்பட்ட அக்கிரமக்காரரே. நாம் அவரை விசுவாசிப்போமானால், நமக்காகவேமரித்தார் என்று அறிவோம். நமக்குப் பதிலாக, நமக்கு பிணியாளியாக அவர் மரித்தார். நான் மரணத்தை அனுபவியாதிருக்க அவர் மரித்தார். நாம் அவருக்குள் நீதியாகும்படிக்குப் பாவமில்லாத அவர் பாவிகளான நமக்காக மரித்தார்.

அக்கிரமக்காரர்களும், பாவிகளுமான நாம் பிழைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை நினைத்து ஆறுதல் அடைவோமாக. நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவரே, நமது சரீரத்தில் நம் பாவங்களைச் சுமந்தார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம். இனி நாம் மரிப்பதில்லை. நமது பாவங்களுக்காகப் பிரதிபலன் செய்தாயிற்று. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தாயிற்று. அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்தார். என்னிடத்தில் விசுhசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். மாட்சிமை நிறைந்த மீட்பரே உமது அளவற்ற அன்புக்காக எவ்வாறு உம்மைத் துதிப்போம்.

சிலுவையில் என்க்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்துவே
உம் அன்பிற்காகவென்றும்
உம்மைத் துதி செய்வோம்.

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23

“அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து” எசேக். 7:16

கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விசுவாசி தன்னை நேசிக்கிற தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது பரிசுத்தமும், நீதியும் நன்மையுமான தேவனுடைய கட்டளையை மீறினேனே என்று துக்கித்துப் புலம்புவான். அவன் தனக்குள்ளே இருக்கும் பாவத்தைக் குறித்து துக்கிப்பான். அந்தப் பாவம் அவனுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கும். தன் பாவத்திற்காக அவன் விசனப்படுவான். அவன் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறானோ அப்பொழுதெல்லாம் விசனமடைவான். அந்நேரங்களில் அவன் சந்தோஷத்தைக் காண முடியாது. ஆனால் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றவனல்ல.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று அவன் அறிவான். தன்னை நேசிக்கும் தேவன் மனந்திரும்பும் பாவியை அங்கிகரிப்பாரென்று அவனுக்குத் தெரியும். ஒருவன் தேவனை எவ்வளவாய் நம்புகிறானோ, எவ்வளவாய் அவரின் அன்பை ருசிக்கிறானோ, அவ்வளவாக அவன் பாவம் செய்தபொழுதெல்லாம் அவனுடைய துக்கம் அதிகரிக்கும். தான் அவரோடு சஞ்சரித்த நாள்களையெல்லாம் நினைத்து, நினைத்துச் சஞ்சலப்படுவான். அவன் படும் துக்கம் அவனுக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் கொண்டு வரும்.

நண்பரே, நீர் உமது பாவங்களுக்காக துக்கப்படுகிறதுண்டா? பாவத்தை அறிக்கை செய்து, இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு, அதன் சந்தோஷத்தை அடைந்த அனுபவம் உமக்கு உண்டா? அப்படி துக்கிக்கவில்லையென்றால், இப்பொழுது உம் பாவத்திற்காய் கண்ணீர் சிந்தும், அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்.

என் பாவங்களுக்காகவே
நான் துக்கித் தழுவேனாக
துயரப்படுவோர் யாவரும்
பாக்கியராவார் பின் நாளில்.

Popular Posts

My Favorites

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்

செப்டம்பர் 18 "அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்" கலா. 5:13 தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய எக்காரியமானாலும் அதன் வேர் அன்புதான். அன்பு விசுவாசத்திலிருந்து ஆரம்பமாவதால், எல்லா நற்கிரியைகளையும், பிறருக்கு நாம் செய்கிற எச்செயலையும் அன்பில்லாமல் நாம் செய்தால் அதில்...